Followers

Sunday, April 21, 2013

மஹாத்மா காந்தி ஒரு சாதி வெறியரா?

காந்தியின் காலகட்டத்தில் அறிவுஜீவிகள் சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவில் இருந்ததுபோல வர்க்க அமைப்பை கொண்டுவரலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். நேருகூட சாதி அமைப்பு பழையது, வர்க்க அமைப்பே நவீனமானது தவிர்க்கமுடியாதது என்று எண்ணினார். ஆனால் காந்தி அதை ஏற்கவில்லை. வர்க்க அமைப்புக்குச் சாதியமைப்பு எவ்வளவோ மேல் என்றார்.



காந்தியின் நோக்கில், வர்க்க அமைப்பு மக்களை தனியர்களாக்குகிறது. சாதியமைப்பு மனிதர்களுக்கு அளிக்கும் இயல்பான குழுத்தன்மையும் அதன் பாதுகாப்பும் இல்லாமல் ஆகிறது. பொருளாதார அளவீடு மட்டுமே மனிதர்களை மதிப்பிட பயன்படுவதனால் செல்வத்துக்கான கழுத்தறுக்கும் போட்டியே வாழ்க்கையாக ஆகிவிடும். அதன்மூலம் நெறிகள் இல்லாமலாகி மானுட உறவுகள் சீரழியும் என்றார் காந்தி. ஐரோப்பிய வர்க்கப்பிரிவினை சாதிப்பிரிவினையை விட சுரண்டல் மிக்கது என நேரில் கண்டவர் அவர்.

இன்றும் இந்த நிலை உள்ளதை நாம் காணலாம். நமது நகரங்களில் வர்க்க அடிப்படையில் பகுக்கப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். கிராமங்களில் சாதியடிப்படையில் பகுக்கப்பட்ட மனிதர்கள். நமது நகர மனிதனுக்கு இல்லாத சமூகப்பாதுகாப்பும் நாம் என்ற தன்னம்பிக்கையும் கிராமத்து மனிதனுக்கு இருக்கிறது.

மேலும் காந்தி உருவகித்த கிராமராஜ்யத்தில் பெரும் தொழில்நகரங்கள் இல்லை. ஆகவே அங்கே வர்க்க அடிபப்டையில் பிரிக்கப்பட்ட மக்களுக்கு இடமில்லை. மக்களுக்கிடையேயான பிரிவினை சாதியாகவே இருக்க இயலும்.

தான் உருவகித்த கிராமசுயராஜ்யத்தில் காந்தி ஏற்றதாழ்வு இல்லாத சாதியமைப்பு இருக்கலாம் என்று எண்ணினார். சாதி அந்தக் கிராம அமைப்பில் மக்கள் இயல்பான குழுக்களாக இயங்க உதவும் என நினைத்தார். இந்தியாவின் புராதனமான வளர்ச்சிப்போக்கு சாதியால் ஆனது என்பதனாலேயே அவர் அந்த முடிவுக்கு வந்தார்.

காந்தியின் அந்த முதல் நூல் எழுதப்பட்டு நூறுவருடம் ஆகிறது. ஆனால் அவரை அவர் சொல்வதென்ன என்று நோக்கி ஆராயும் போக்கு நம் நாட்டில் உருவாகவில்லை. அவரை ஐரோப்பியர்களின் கண்ணால் நோக்கி சாதிவெறியன் என்றோ மதவெறியன் என்றோ முத்திரை குத்தவே நாம் முயந்றிருக்கிறோம். நமது சாதிப்பற்றை அப்போது சட்டைப்பைக்குள் உள்ளே தள்ளிக்கொள்கிறோம்

இன்று, அவர் சொன்னதென்ன என்று அவரது நூல்கள் வழியாக ஆராய்ந்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் எழுதும்போது அந்த நூல்களை வாசித்துவிட்டு நம்மில் சிலர் ‘ஆமாம், காந்தி பழமைவாதியல்ல பின் நவீனத்துவர், அவர் சொன்னது ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வின் ஒரு முடிவையே’ என்று அங்கீகரிக்கிறோம். நம் தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவர இன்னும் நம்மால் இன்னும் முடியவில்லை

*

காந்திய ஆய்வாளரான மார்க் லிண்ட்லே [Prof. Dr. Mark Lindley ] காந்தியைப்பற்றிய ஆய்வுகளைச் செய்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர். இசைஆய்வாளரும் இந்திய வரலாற்றாசிரியருமான மார்க் லிண்ட்லே அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சியில் 1937ல் பிறந்தார். ஹார்வார்ட் பல்கலையில் சமூகவியல் கற்றார். கொலம்பியா பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். பல்வேறு பல்கலைகளில் ஆய்வுப்பேராசிரியராக பணியாற்றினார்.

லிண்ட்லே காந்தியின் எழுத்துக்களை முழுமையாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். காந்தி, நாம் அறிந்த வகையிலேயே [ Gandhi as We Have Known Him] என்ற நூல் முக்கியமானது. ஜெ.சி.குமரப்பாவின் வாழ்க்கை வரலாற்றையும், கோராவின் வாழ்க்கை வரலாற்றையும் நூல்களாக எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரையில் லிண்ட்லே காந்தி சாதியைப்பற்றி கொண்டிருந்த கருத்துக்களை தொகுத்து முன்வைக்கிறார்.

1920ல் காந்தி எழுதினார் :”சாதியமைப்பு இந்துமதத்தை அழிவிலிருந்து காப்பாற்றியது என நான் நினைக்கிறேன். ஆனால் எல்லா நிறுவனங்களையும்போல அதுவும் சீரழிந்துவிட்டது. நால்வருணம் என்ற பிரிவினை அடிபப்டையானது இயல்பானது தேவையானது என்றே எண்ணுகிறேன். எண்ணிக்கையிலடங்காத துணைச்சாதிகள் சிலசமயம் வசதியானவை சிலசமயம் தடையாக ஆகின்றவை. அவை எந்த அளவு சீக்கிரம் இணையுமோ அந்த அளவுக்கு நல்லது.

ஒருமுறை என்னைப் பேட்டிகண்ட ஒருவர் கேட்டார் நாம் இந்திய சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவின் வர்க்க அமைப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று “அதன்மூலம் சாதியமைப்பில் உள்ள பிறப்பு அடிப்படையை களையலாமென அவர் எண்ணுகிறார் என்று நான் ஊகிக்கிறேன் பிறப்பின் அடிபப்டையிலான அடையாளம் என்பது எப்போதைக்கும் உரியது என்றும் அதை மாற்ற நினைப்பதென்பது பெரும் குழப்பத்துக்கே இட்டுச்செல்லும் என்றும் எனக்குப் படுகிறது.”

1920ல் காந்தி மேலும் எழுதினார். ”சாதியமைப்பின் அழகு என்னவென்றால் அது செல்வத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை என்பதே. வரலாறு காட்டுவதைப்போல பணம் என்பது மிகப்பெரிய ஓர் அழிவுச்சக்திதான். சாதி என்பது குடும்பம் என்ற விதியின் நீட்சிதான். பாரம்பரியம் ரத்தஉறவு ஆகியவற்றின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்படுகின்றன. மேலைநாட்டு அறிவியலறிஞர்கள் பாரம்பரியம் என்பது ஒரு பிரமைதான் என்றும் சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றும் காட்ட கடுமையாக முயன்றுவருகிறார்கள். ஆனால் பலநாடுகளில் உள்ள அனுபவம் என்பது அந்த முடிவுகளுக்கு நேர் எதிரானதாகவே செல்கிறது. ஆனால் சூழலே எல்லாம் என்ற அவர்களின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் கூட வர்க்க அமைப்பைவிட சாதியமைப்பில்தான் சூழலை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் எளிது என்று சொல்லலாம்.

சமூக வாழ்க்கையில் மாற்றம் என்பது மிகமிக மெல்லத்தான் வரமுடியும் என நாம் அறிவோம். ஆகவே இன்றைய சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சாதியானது புதிய குழுவமைப்புகளாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் மேகங்களின் வடிவம் மாறுவதுபோல எளிதாகவும் இயல்பாகவும் நடைபெறுகின்றன. இதைவிட மேலான மானுட பரிணாமத்தை கற்பனை செய்வது கடினம்

சாதியமைப்பு மேல் கீழ் என்ற பேதத்தைச் சுட்டுவதில்லை. அது வாழ்க்கைநோக்கில் உள்ள வேறுபாடுகளையும் அதற்குச் சமானமான வாழ்க்கை அமைப்புகளையும் அடையாளம் காட்டுகிறது அவ்வளவுதான். ஆனால் சாதியமைப்பில் ஒரு சமூக அடுக்குமுறை உருவாகி வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அது பிராமணர்களின் உருவாக்கம் என எவரும் சொல்லிவிட முடியாது. அனைவருக்கும் ஒரே வாழ்க்கை லட்சியம் உருவாகி வரும்போது ஒரு சமூகஅடுக்கு உருவாவது தடுக்கமுடியாத ஒன்று. காரணம் அந்த இலட்சியத்தை எல்லா சாதியும் ஒரே அளவில் உள்வாங்கிக்கொள்ள முடியாது”

இவ்வாறு காந்தி தன்னுடைய ஆரம்பகாலத்தில் சாதியை விளக்குகிறார். அதற்கு எதிரான கருத்துக்களுடன் வாதிடுகிறார். ஆனால் காந்தியின் குரல் மெல்ல மெல்ல மாறுபடுவதை மேற்கோள்கள் வழியாகவே மார்க் லிண்ட்லே காட்டுகிறார்.

1925ல் காந்தி எழுதினார் ” ஒருவர் பிற வருணத்தவர்களால் அவர்களின் பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட அறிவியல் கலை ஆகிய துறைகளின் அறிவை கற்றறிவதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் ஒருவன் அவனுடைய உயிர்வாழ்தலுக்கான தொழிலாக அவனது பெற்றோர் பாரம்பரியமாகச் செய்த அவனது வருணத்தின் அதே தொழிலையே செய்வதே நல்லது”

1925ல் காந்தி மேலும் எழுதினார் ”என்னைப்பொறுத்தவரை மேல் கீழ் என்ற பேச்சுக்கே இடமில்லை. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு பிற வருணத்தவரை குனிந்து நோக்கும் ஒரு பிராமணன் பிராமணனே அல்ல. அவன் முதலிடத்தில் இருக்கிறான் என்றால் ஆன்மீகமான சேவைக்கான உரிமை அவனுக்கு அதிகமாக இருக்கிறது என்பதனாலேயே”

இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன? காந்தி இந்தியாவுக்கு திரும்பிவந்தது இக்காலத்திலேயே. ரயிலில் இந்தியாவெங்கும் விரிவான ஒரு சுற்றுப்பயணம் செய்தார் அவர். இத்தருணத்தில் அவருக்கு ஒரு சமூகமாக இந்தியாவை தொகுக்கவேண்டியதன் அவசியம் புரிந்திருக்கக் கூடும். சாதி இந்தியாவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத தனி அறைகளாக பிரித்துவிடக்கூடும் என்று அவர் உணர்ந்தார் என தோன்றுகிறது. ஆகவே சாதி என்ற பிரிவினைக்கு மேலாக ஒரு பொதுவான சமத்துவத்தை உருவாக்கியாகவேண்டும் என்று அவருக்குப் பட்டிருக்கலாம்

மேலும் தன் இந்தியப் பயணங்களில் 1923ல் காந்தி நாராயணகுருவைச் சந்தித்தார். காந்தி நாராயணகுருவுடனான தன் சந்திப்பைப் பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கிறார். சாதி தேவைதான் என்ற தன் கருத்தை காந்தி நாராயணகுருவிடம் சொல்ல நாராயணகுரு அதை திட்டவட்டமாக மறுத்து பேசியிருக்கிறார். அதன்பின் அவர்கள் நடுவே சற்று அந்தரங்கமான உரையாடல் நடந்திருக்கிறது. நாராயணகுருவின் கருத்தை தான் பரிசீலனைசெய்வதாக காந்தி சொல்லியிருக்கிறார்.

மேலும், நாராயணகுருவிடம் காந்தி தீண்டாமையை நியாயப்படுத்தி இந்து ஞானமரபின் மூலநூல்களில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று கேட்டபோது நீதி நூல்களான ஸ்மிருதிகள் காலம் தோறும் மாறக்கூடியவை, ஞானநூல்களான சுருதிகள் அழியாதவை. சுருதிகளில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை என குரு பதில் சொல்லியிருக்கிறார். ஒரு தீண்டத்தகாத சாதியினனாகிய நாராயணகுருவின் அபாரமான சம்ஸ்கிருத பயிற்சியும் இந்து மெய்யியலில் உள்ள ஞானமும் காந்தியின் மனதை ஆழமாகப் பாதித்திருக்கலாம்.

1931ல் காந்தி அம்பேத்காரைச் சந்திக்கிறார். காந்தியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு ஆராய்ந்த டி.ஆர்.நாகராஜ் காந்தியும் அம்பேத்காரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு வாதிட்டு ஒருவரை ஒருவர் மாற்றியமைத்த இரு சக்திகளாக காண்கிறார். [The Flaming Feet: A Study of the Dalit Movement, D R Nagaraj ] இந்த சிந்தனை இன்றைய ஆய்வாளர் நடுவே மிகவும் வலுப்பெற்று வரக்கூடிய ஒன்றாகும். மார்க் லிண்ட்லேயும் அவ்வாறே எண்ணுகிறார்.

காந்திக்கும் அம்பேத்காருக்கும் நடுவே காந்தியின் இறப்பு வரை 17 வருடம் ஓய்வில்லாமல் விவாதம் நடந்திருக்கிறது. சில சமயம் அம்பேத்கார் சினம் கொண்டு அத்து மீறி பேசியிருக்கிறார். ஆனால் அவ்வாறு சினம் கொள்வதற்கான தார்மீகமான ஒரு உரிமை அம்பேத்காருக்கு இருப்பதாகவே மீண்டும் மீண்டும் காந்தி எண்ணினார். ஆகவே காந்தியின் குரல் பொறுமையுடன் மீள மீள அம்பேத்காருடன் உரையாடுவதாகவே இருக்கிறது.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். காந்தி பிடிவாதம் மிக்கவர் என்ற ஒரு நம்பிக்கை பலரிடம் உண்டு. அது உண்மை. சாதாரணமாக காந்தி தன் கருத்துக்களை மாற்றிக்கொள்பவரல்ல. ஏன் என்றால் மிக விரிவான ஆராய்ச்சிகள் மூலம் தனக்குத்தானே நிரூபித்துக்கொண்டவற்றை உறுதியாக நம்பக்கூடியவர் அவர். அவற்றை ஒரு ராஜதந்திரமாகவோ பிறர் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவோ மாற்றிக்கொள்ளக்கூடியவர் அல்ல. சொல்லப்போனால் பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கவேண்டும் என அவர் எப்போதுமே கவலைப்பட்டதில்லை.

ஆனால் காந்தி அவரது கருத்துக்களுடன் அவரளவுக்கே ஆற்றலுடன் மோதியவர்களை கூர்ந்து கவனித்தார். அவர்களுடன் நுட்பமாக விவாதித்தார். காந்தியைப் போன்ற ஒருவரிடம் விவாதிக்கும் மூளைத்திராணியும் ஆன்மபலமும் அம்பேத்காருக்கு இருந்தது. அது நேருவுக்கு இல்லை. ஆகவேதான் காந்தி நேருவால் கொஞ்சம்கூட மாற்றப்படவில்லை. அம்பேத்காரால் தலைகீழான மாற்றத்தை அடைந்தார்.குறிப்பாக சாதி விஷயத்தில்.

1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் இந்த சமமின்மைக்கு நடுவேதான் அந்த சமத்துவம் உள்ளது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். எந்த ஒரு மனிதனும் சகமனிதனைவிட மேலானவனாக எண்ணிக்கொண்டானென்றால் அது கடவுளுக்கு எதிரான குற்றமாகும். ஆகவே சாதியமைப்பானது மனிதர்களிடையே தரவேற்றுமைகளை சுட்டும்வரை அது ஒரு மாபெரும் தீமையே ஆகும்.

நான் பாரம்பரியமாக தொழில்களைப் பங்கீடு செய்யும் வருண அமைப்பிலும் நம்பிக்கைகொள்ளவில்லை. நான்கு வருணங்கள் என்பவை நான்கு பொதுவான மானுடச்செயல்பாடுகளைச் சுட்டுகின்றன. அறிவை அடைதல், எளியோரைக் காத்தல், தொழிலையும் வணிகத்தையும் செய்தல், உடலால் பிறருக்குச் சேவைசெய்தல். இந்த பணிகள் எல்லா மானுடருக்கும் பொதுவானவை. ஆனால் இந்துஞானம் அவற்றை நம்முடைய இருப்பின் ஆதார விதிகளாக அடையாளம் கண்டுகொண்டு சமூக உறவுகளையும் நடத்தைகளையும் ஒழுங்குபடுத்த பயன்படுத்திக்கொண்டது…

…ஆனால் என்னுடைய வரையறையின்படி இப்போதைய இந்துமரபில் வருணப்பிரிவினை செயல்படவில்லை. பிராமணர்கள் எனபப்டுபவர்கள் அறிவை அடைதலை விட்டுவிட்டார்கள். பிறதொழில்களை அவர்கள் செய்கிறார்கள். எல்லா வர்ணத்துக்கும் கிட்டத்தட்ட இது பொருந்தும்”

1932ல் காந்தி எழுதினார் ”பண்டைய முறை எதுவாக இருந்தாலும் எந்த ஒரு மனிதனும் தன்னை உயர்குலத்தவன் என்று கூறிக்கொண்டு வாழ்ந்துவிடமுடியாது. சமூகம் அத்தகைய உரிமைபாராட்டல்களை இனிமேல் அங்கீகரிக்காது. உலகம் விழிப்புகொண்டுவிட்டது…”

காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையேயான உரையாடலே காந்தியை தொடர்ச்சியாக சாதியையும் வர்ணத்தையும் மறுபரிசீலனைசெய்ய வைத்தது. சாதி என்பது திட்டமிட்டு மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை காந்தி ஏற்கவில்லை. சாதி அமைப்புக்கு அப்போதும் மக்களை சிறிய சமூக அமைப்பாக திரட்டி வலிமைப்படுத்தும் சக்தி உண்டு என்றே அவர் எண்ணினார். ஆனால் அந்த அமைப்பின் பிற தீமைகளை அவர் மேலதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார்.

காந்தியின் இந்த மனமாற்றத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றுண்டு. காந்தி சாதியமைப்பின் சாதக அம்சங்களைக் கண்டபோது அவர் கிட்டத்தட்ட ஒரு சமூக அறிவியலாளனின் ஆய்வுப்பார்வையை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் சாதியின் அடக்குமுறைக் குணத்தை அவர் அடையாளம் கண்டபோது கிட்டத்தட்ட காங்கிரஸ் அவரது கையில் இருந்தது. காங்கிரசுக்குள் இருந்த உயர்சாதிவெறியர்களை அவர் அன்றாடம் சந்தித்துவந்தார். காங்கிரசுக்குள் அவர்களே அவரது முக்கியமான எதிரிகளாக விளங்கினார்கள். சாதி என்பது எத்தனை சாதகமான பங்களிப்பு கொண்டதாக இருந்தாலும் அது ஓர் அடைக்குமுறைச் சாதனம் என்று காந்தி இக்காலத்தில்தான் தெளிவடைந்தார்.

சொல்லபோனால் காந்தி காங்கிரஸின் உயர்சாதிப்பின்புலத்துக்கு எதிராக அம்பேத்காரை நோக்கி நகர்ந்தார். அந்த நகர்வு அவரது முதுமையில் நிகழ்ந்ததை லிண்ட்லே ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறார். பொதுவாக கருத்துக்கள் கெட்டிப்படும் காலம் அந்த வயது. ஆனால் காந்தி அவரது வாழ்நாள் முழுக்க அவர் கொண்டிருந்த கருத்துநிலையை தலைகீழாக மாற்றிக்கொண்டார்.

வருண – சாதி அமைப்பின் வரலாற்றுப்பணி என்னவாக இருந்தாலும், அது இப்போதும் முக்கியமான நிறுவனமாக இருந்தாலும் அது சென்ற காலகட்டத்தைச் சேர்ந்தது என்றும் நவீனகாலத்தில் அது சமத்துவத்துக்கு எதிரான உணர்ச்சிகளையே அதிகம் கொண்டிருகிறது என்றும் மக்களில் கணிசமானபேரை அது பிறருக்கு கீழே வைத்திருக்கிறது என்றும் காந்தி அறிந்தார். தான் உருவாக்க எண்ணிய கிராம சுயராஜ்யத்தில் அகிம்சை தழைக்க சமத்துவம் அவசியம் என்றும் அதற்கு சாதி அழியவேண்டும் என்றும் உணர்ந்தார்.

அவ்வாறு தன் தரப்பை மாற்றிக்கொள்வதென்பது காந்தியைப் பொறுத்தவரை தன் மொத்த வாழ்க்கையையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்வதே. மேடையில் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதர் அல்ல அவர். சற்றும் தயங்காமல் காந்தி தன் கருத்துக்களை எழுதினார். ஆனால் இக்காலத்தில்கூட அம்பேத்கார் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், உயர்தொழில்நுட்பம் போன்ற நவீனத்துவ கருத்துக்கள் கொண்டிருந்ததை காந்தி திட்டவட்டமாக மறுத்தார்.

1935ல் காந்தி எழுதினார் ”சாதி அழிய வேண்டும். நடைமுறையில் சாஸ்திரங்கள் சொல்லும் வருணாசிரம தர்மம் இப்போது எங்குமில்லை. இன்றைய சாதிமுறை என்பது சாஸ்திரங்கள் சொல்லும் இலட்சிய வருணாசிரமதர்மத்துக்கு நேர் எதிரான ஒன்று. எத்தனை வேகமாக பொதுமக்களின் பிரக்ஞையில் இருந்து அதை ஒழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அது நல்லது

சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”

சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். அவரை தன் வழித்தோன்றலாக எண்ணியது மட்டுமல்ல சாதி, வருண அமைப்பை முள்காடு என்று வருணித்த கோராவின் கருத்தை தானும் முழுமையாகவே ஏற்றுக்கொண்டார்

பின்னர் காந்தி அவரது பழைய கருத்தான கிராமசுயராஜ்யத்தின் சாதி அமைப்பை முழுக்க மாற்றிக்கொண்டார். இனிமேல் சாதி இல்லை. அது அடக்குமுறைக்கான கருவி. அது அழிய வேண்டும். வருணத்தைப்பொறுத்தவரை நவீன காலகட்டத்தில் ஒரே வருணம்தான் இருக்க வேண்டும், அது சூத்திர வருணம் மட்டுமே. ஒவ்வொருவரும் உடலால் உழைக்கும் சூத்திரனாக மாறியாக வேண்டும். எந்தவேலை செய்தாலும் ஒருவர் கண்டிப்பாக உடலுழைப்பில் ஈடுபட்டாகவேண்டும் என்றார் காந்தி. அவரது இலட்சிய கிராமசுயராஜ்யம் தங்களை உடலுழைப்பு மூலம் சூத்திரர்களாக ஆக்கிக்கொண்ட மக்களால் மட்டுமே ஆனதாக இருக்கும் என்றார்.

அத்தனைபேரும் உடலால் உழைத்தாகவேண்டும் என்ற காந்தியக் கோட்பாட்டை மேடை சோஷலிசம் பேசிய சொகுசுக்காரரான நேரு முதலியோர் எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று சொல்லவேண்டியதில்லை.

1946 ல் காந்தி ஒரு அமெரிக்க நிருபரிடம் வர்க்கமற்ற சாதியற்ற ஒரு இந்திய சமூகத்தை உருவாகக் முயல்வதாக்ச் சொன்னார். ஒரே சாதிமட்டும் இருக்கும் ஒரு நிலை வரவேண்டும் என்றும் பிராமணர்கள் தலித்துக்களை மணம்முடிக்கவேண்டும் என்றும் சொன்ன காந்தி சமத்துவமின்மை வன்முறையை உருவாக்கும், சமத்துவமே அகிம்சையை உருவாக்கும் என்றார். அந்தக் காலகட்டம் ஐம்பது வருடங்களுக்குள் வந்துவிடும் என்று தன் நம்பிக்கையை அவர் முன்வைத்தார்

ஆரம்பத்தில் கலப்புத்திருமணங்களை ஏற்க மறுத்த காந்தி பின்னர் கலப்புத்திருமணங்களை முழுக்க ஆதரித்தார். கடைசி காலத்தில் கலப்புத்திருமணங்களை மட்டுமே அவர் ஆதரித்தார். தன் ஆதரவாளர்கள் கலப்புத்திருமணம் செய்தாகவேண்டும் என்றும் அதன்மூலம் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக உயர்சாதியினர் தலித் சாதியினரை மணந்துகொள்வதை ஒரு முக்கியமான சமூகச்செயல்பாடாக காந்தி வலியுறுத்தினார்.

1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”

1946ல் காந்தியிடம் பேட்டியாளர் கேட்டார். ”கல்விகற்ற ஹரிஜனப் பெண்கள் விரலால் எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறார்கள். அவர்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொண்டால் கண்டிப்பாக தங்கள் சாதியை விட்டு துண்டிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் சொந்த சாதிக்குச் சேவை செய்யமுடியாமல் ஆகும். அவ்வாறு திருமணம் செய்வதென்றால் அந்த ஜோடி தங்கள் வாழ்க்கையை ஹரிஜன மக்களுக்கான சேவைக்கே அர்ப்பணிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் செய்யலாம்”

அதற்கு காந்தி பதில் அளித்தார். ” ஹரிஜனப்பெண்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் அது சிறப்பானது என்று சொல்ல கொஞ்சம் தயங்குகிறேன். அது ஆண்களை விட பெண்கள் குறைவானவர்கள் என்று காட்டுவது போல ஆகிவிடும். இப்போதெல்லாம் அந்தவகையான தாழ்வுச்சிக்கல் இருப்பதை நான் அறிவேன். ஆகவே ஹரிஜன பெண் உயர்சாதி ஆணை மணம்செய்வதைவிட உயர்சாதி பெண் ஹரிஜன ஆணை மணம்செய்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். என்னால் முடிந்தால் என் பேச்சைக்கேட்கும் எல்லா உயர்சாதிப்பெண்களையும் ஹரிஜன ஆண்களை திருமணம் செய்துகொள்ளும்படிச் சொல்வேன்.”

தன் கொள்கையை திட்டவட்டமாக வெளியிட்டது மட்டுமல்ல அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் செய்தார் காந்தி. காந்தியால் உந்தபப்ட்ட ஹரிஜன- உயர்சாதி மணங்கள் அக்காலகட்டத்தில் ஏராளமாக நடைபெற்றன. தமிழகத்தின் புகழ்பெற்ற காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியினர்கூட அவ்வகையான தம்பதியினர்தான்.

கலப்புத்திருமணத்தை காங்கிரஸ் தன் முதன்மை சமூகத்திட்டமாக கொண்டுவருமா என்று 1946ல் ஒரு நிருபரின் கேள்விக்கு தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி போஜனம், ஹரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் காங்கிரஸ் ஒத்த கருத்து கொண்டிருக்கிறது என்றும் விரைவிலேயே கலப்புமணத்தை நோக்கியும் காங்கிரஸை கொண்டுவந்துவிடலாம் என்றும் காந்தி சொன்னார்.

அது காங்கிரஸை அவர் தவறாகப் புரிந்துகொண்டு சொன்னது. அப்போது இந்திய சுதந்திரம் நெருங்கிவிட்டிருந்தது. அதிகாரக் கனவுகள் ஆரம்பமாகிவிட்டிருந்தன. காந்தியின் சமூகத்திட்டங்கள் நேருவின் காங்கிரஸ¤க்கு உவப்பாக இருக்கவில்லை. காங்கிரஸ் அரசியல் கட்சியாகச் செயல்படக்கூடாது என்றும் கலப்புத்திருமணம் முதலிய சாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் அது ஈடுபடவேண்டும் என்றும் காந்தி வாதிட்டார். கிராம சுயராஜ்யம் அமைக்க வேண்டும் என்று கோரினார். நேரு காந்தியை சந்திப்பதையே தவிர்த்தார். காந்தி கொல்லப்படும் வரை.

ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.

அன்புள்ள ஜெபமாணிக்கம், தயவுசெய்து யோசித்துப்பாருங்கள். இந்த வரலாற்றுப்பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட ஆரம்பகாலகட்டத்து உதிரி மேற்கோள்கள் மூலம் காந்தியை ஒரு சாதி வெறியராக முத்திரை குத்துவதனால் யாருக்கு என்ன லாபம்? அந்தப்பொய்யை நாம் சுமந்துகொண்டு காழ்ப்பை வளர்த்துக் கொள்வதனால் நாம் அடைவது என்ன?

நம்மை இந்த குரூரமான , அநீதியான பொய்யை நம்பச்செய்யும் கும்பல்களுக்கு அதனால் பெரும் லாபம் உள்ளது என உணருங்கள். காந்தி இந்த தேசத்தின் நீதியுணர்வின் அடையாளமாக நம் மனதில் இருக்கிறார். அந்த பிம்பத்தை இவ்வாறு திட்டமிட்டு உடைப்பதன் வழியாக இந்த தேசத்தின் அடித்தளமாக இருக்கும் இலட்சியங்கள் மேல் ஆழமான ஐயம் உருவாக்கப்படுகிறது. அதன் விளைவாக இந்த தேசம் பலவீனப்படுகிறது. சமூக மோதல்கள் உருவாகின்றன. நாம் போரிட்டு அழிய வாய்ப்பிருக்கிறது. அந்த உதிரத்தைக் குடிக்க எப்போதும் எங்கோ பலர் காத்திருக்கிறார்கள்.

நன்றி: ஜெமோ

3 comments:

Anonymous said...

சரி நீங்கள் சொல்லுங்கள்! காந்திக்கு சுவனம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா?

Dr.Anburaj said...

மனுதர்ம சாஸ்திரம் என்ற ஒரு நூல் இருப்பதும் அதுவே இந்து சமூகத்தின் வாழ்கை முறை சட்டமாக இருப்பதும் அனைவரும் அறிந்ததே மற்ற மதத்தவரும் இந்து மதத்தவரும் மத நம்பிக்கையே இல்லாதவரும் அந்த நூலை தான் மிக அதிகமாக விமர்சனம் செய்து திட்டுவார்கள் காரணம் அந்த நூல் பிராமணர்களின் பிறப்பையும் சமூக அந்தஸ்தையும் மிக உயர்வாக காட்டுகிறது மற்ற ஜாதியினரை விட பிராமணர்களுக்கு அதிகமான சலுகைகள் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறது என்று கூறுகிறார்கள். உண்மையாகவே அந்த நூல் பிராமணர்களுக்கு சலுகைகள் கொடுக்கிறதா? அவர்களை உயர்ந்த பிறவிகளாக காட்டுகிறதா என்று மனுதர்ம சாஸ்திரத்தை விமர்சனம் செய்யும் பலர் நேரடியாக அறிய மாட்டார்கள். அதில் அப்படி இருப்பதாக அவர் கூறுகிறார் இவர் கூறுகிறார் என்று பலரை கைகாட்டுவார்களே தவிர அறுதியிட்டு கூற பலரும் முன்வர மாட்டார்கள்.

மனுதர்ம சாஸ்திரத்தில் அப்படி இருக்கிறது நான் அதை படித்திருக்கிறேன் என்று கூறுபவர்கள் கூட ஒருசில வார்த்தைகளை முன்னும் இல்லாமல் பின்னும் இல்லாமல் நடுவில் பிடித்து கொண்டு தங்களது தேவைக்கேற்ப வளைத்து நெளித்து பேசுவார்கள். அவைகளை நம்பி நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் உண்மையாகவே மனுதர்ம சாஸ்திரம் மனிதர்களை பிறவியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து கீழ்மை படுத்துகிறது என்று நம்பிவிடுகிறோம் இது முற்றிலும் தவறுதலான மனபோக்காகும். உள்ளதை உள்ளபடி கூறுகின்ற மனமிருந்தால் மட்டுமே பல விஷயங்களை புரிந்து கொள்ளவும் முடியும் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தவும் முடியும்.


உண்மையில் மனுதர்ம சாஸ்திரம் பிராமணர்களை உயர்ந்த பிறப்பாளர்கள் என்று கூறுகிறதா? என்பதை ஆராய மனுதர்ம சாஸ்திர நூலுக்குள் சென்று பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது எடுத்த எடுப்பிலேயே அந்த நூல் நமக்கு அதிர்ச்சியை தருகிறது இறைவனது படைப்பில் பிராமணன் மிக உயர்ந்தவன் அவனை பின்பற்றி நடக்க வேண்டியது மற்ற மனிதர்களின் தலையாய கடமை என்று அடித்து சொல்கிறது அப்படி சொல்கிற மனுதர்ம சாஸ்திரம் அடுத்தபடியாக பிராமணன் என்பவன் எப்படி இருப்பான்? அவன் யார்? என்பதை தெளிவாக காட்டுகிறது. பிராமணனின் உண்மையான இலக்கணம் தெரிந்தவுடன் நமக்கு கூட கண்டிப்பாக பிராமணன் உயர்ந்தவனே என்ற நம்பிக்கை வருகிறது.

அமைதியாக சகல உயிர்களையும் நேசிக்கின்ற ஜீவகாருண்யன் போன்ற வேடம் அணிந்து ஒரு பூனை தான் வேட்டை ஆட நினைக்கின்ற எலி பொந்திலிருந்து வெளியில் வருகிறவரை காத்திருந்து வந்தவுடன் ஆக்ரோஷமாக பாய்ந்து கதற கதற எலியை கடித்து விழுங்குவது போல தனது சுயநலத்தை மறைத்து மற்றவர்களின் பொருளை பறிக்க நினைத்து பொய்களை பரப்பி கர்வம் கொண்டு பிறர்பால் பொறமை வைத்து வாழ்கின்ற பிராமணன் எவனும் நரகத்தில் வீழ்வான் இவனுக்கு தானம் கொடுப்பவனும் நரக வாழ்வை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்து பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்ற விபரங்களை நமக்கு தருகிறது.


வேதத்தை ஓதுவதும் கற்பிப்பதும் மட்டுமே அவனது தொழில் பொருளை எதிர்பார்த்து இதை அவன் செய்ய கூடாது கொடுத்தவனுக்கு அதிகமாகவும் கொடுக்காதவனுக்கு குறைவாகவும் கற்பிக்க கூடாது எந்த நேரத்திலும் அடுத்த வேளை உணவுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாமல் ஒவ்வொரு வேளையும் தானாம் வாங்கியே அல்லது யாசகம் பெற்றே பசியாற வேண்டும் வியாபாரம் செய்வது லாபம் சம்பாதிப்பது அவனுக்கு கூடாது லேவாதேவி செய்வதோ மற்றவர்களிடத்தில் பணிபுரிந்து சம்பளம் வாங்குவதோ கூடவே கூடாது என்று கட்டளை போடுகிறது அதே நேரம் நாடகம் நடிப்பது இசை முதலிய கலைகளில் ஈடுபடுவது ஜோதிடம் பார்ப்பது போன்றவைகள் பிராமணனால் நடத்த படக்கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது மாறாக இவைகளை செய்பவன் பிராமணனே அல்ல என்றும் அடித்து கூறுகிறது. அதனால் தான்

சூத்ரோ ப்ராமணதாமேதி
ப்ராமணஷ்சைதி சூத்திரதாம்
ஷத்திரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்சியாத் தைதவச

என்கிறது அதாவது சூத்திரன் பிராமணன் ஆகலாம் பிராமணனும் சூத்திரன் ஆகலாம் அதை போலவே சத்திரிய வைசிக குலத்தவர்களும் மாறி கொள்ளலாம் அவனவன் தர்மமும் சுயபுத்தியும் மாறும்போது வர்ணமும் ஜாதியும் தானாக மாறுகிறது. இதை நான் கூறவில்லை ஜாதிகளை உருவாக்குகிறது என்று பலரும் குறை கூறுகிறார்களே அந்த மனுதர்ம சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது.

.

Dr.Anburaj said...

சாதி என்பது மாற்றத்தக்கது

பிராமணன் என்பவன் அடுத்த வேளை சோற்றை பற்றி சிந்திக்காமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பான் தனக்காகவும் தன்னை சுற்றி உள்ள சமூகத்திற்காகவும் அவனால் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும் வழிபாடு நடத்த முடியும் அதனால் பிராமணனே வழிபாடு நடத்துவதற்கு தகுதியானவன் என்பதே நமது மதத்தின் இறுதியான முடிவு. இந்த இலக்கணத்திற்குள் இல்லாத எவனும் பிராமணன் அல்ல அப்படி பிராமண தர்மத்தை கைவிட்டவனை வைத்து கொண்டு வழிபாடு நடத்த வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கட்டளை போடவும் இல்லை.

குறைந்தபட்சம் அதிகபட்சம் என்ற வித்தியாசத்தை தர்மத்தை பொறுத்தவரை சலுகைகாட்ட முடியாது. வேதம் ஒதுவதையே தொழிலாக கொண்டவனை மட்டுமே பூஜாரியாக நமக்காக இறைவனிடம் முறையிடுபவனாக வைக்கலாம் மற்றவர்களை வைத்தால் அது அவனுக்கும் பாவம் நமக்கும் பாவம் இப்போது சொல்லுங்கள் பிராமணன் உயர்ந்தவனா இல்லையா? நிச்சயம் தர்மப்படி வாழுகிற பிராமணன் உயர்ந்தவனே காரணம் அவன் மட்டுமே பிராமணன் அந்தண குலத்தில் பிறந்தேன் அதனால் நானும் பிராமணன் என்று எவனாவது சொன்னால் அப்படி கூறுவது கூட பாவம். அதுபோல் பெண்களுக்கும் துறவிகளுக்கும் சாதி கிடையாது என்று சொல்வதும் மனுதர்மம் தான். ஒரு பெண்ணை ஒத்த மனப்பக்குவம் கொண்ட வரனுக்கு சாதி எல்லையைக் கடந்து திருமணம் செய்யலாம்.சாதி எல்லையைக் கடந்து திருணம் செய்யத் தடையை மக்களாக விதித்துக் கொண்டததால்தான் இன்று திருமணமங்கள் அதிக சங்கடங்கள் கொணடதாக மாறிவிட்டது.நல்ல வரனுக்குப் போட்டி என்பது அதிக வரதட்சணையில் நிற்கிறது. பலகுடும்பங்கள் மாப்பிள்ளை பெண்
தேடி படும்பாட்டை ஏழுதி முடிக்க இயலாது.