Followers

Thursday, November 20, 2014

இன்று திப்பு சுல்தான் நினைவு தினமாம்!





இன்று திப்பு சுல்தானின் நினைவு தினமாம்! இந்தியர்களில் எத்தனை பேருக்கு இந்த தினத்தைப் பற்றி தெரியும்? வஞ்சகர்கள் திப்புவின் வரலாற்றை திட்டமிட்டு மறைத்து விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தோடு பெங்களூர் சுற்றுலா சென்றிருந்தபோது திப்புவின் சமாதியையும் பார்த்தேன். ஒரு கணம் என்னையறியாமல் எனது கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. ஒரு வயது இரண்டு வயது ஐந்து வயது குழந்தைகளின் சமாதியையும் அங்கு அடக்கம் செய்துள்ளதைப் பார்த்து உடல் புல்லரித்தது. பாவிகள் அந்த பிஞ்சு குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. அந்த அளவு வெள்ளையருக்கு திப்புவின் மீது வன்மம் இருந்துள்ளது. இந்த வீரத் திருமகன் நமது நாட்டின் முன்னேற்றத்தில் எந்த அளவு ஆர்வமாக இருந்தார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

திப்பு சுல்தான் - ஒரு பொருளாதார மேதை!

1758 -ல் மராட்டியரிடமிருந்து மைசூரை ஹைதர் அலி கைப்பற்றுகிறார். அந்த நேரத்தில் ஆங்கிலேயரும் இந்தியாவில் கால் ஊன்ற இடம் தேடிக் கொண்டிருந்தனர். 1782-ல் ஆங்கிலேயருடன் நடந்த போரில் ஹைதர் அலி கொல்லப் பட்டுஅவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிக்கு வருகிறார். பதினேழு ஆண்டுகள் திப்புவின் ஆட்சி மைசூரில் நிலை பெற்றிருந்தது. திப்பு ஆங்கிலேயரின் பல சூழ்ச்சிகளையும் மிகவும் திறமையாக கையாண்டு அவர்களை வெற்றி கொண்டு வந்தார்.நீதிபதி கிருஷ்ணய்யர் கூட 'கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டில் ஊடுருவ விடாமல் தடுத்ததில் திப்புவுக்கு அதிக பங்குண்டு' என்று கூறுகிறார்.

ஆங்கிலேயருக்கு பெருத்த தலைவலியாய் திப்பு இருந்ததால் அவரைப் பற்றிய அவதூறுகளை வரலாறுகளில் நிறைய பரப்பினர். அதை முறியடிக்கும் விதமாகத்தான் sword of Tippu Sultan என்ற புத்தகத்தை எழுத நேர்ந்தது என்று அதன் ஆசிரியர் பகவன் எஸ் கித்வாய் கூறுகிறார்.

திப்பு சுல்தான் நீதியை நிலை நாட்டிய நீதிமான். நியாயத்தின்படி நடக்காத ஹைதராபாத் நிஜாம்களான முஸ்லிம்களையும் எதிர்த்தார். வெள்ளையருக்கு உதவிய இந்து மராட்டியர்களையும் எதிர்த்தார். கிறித்தவ வெள்ளையர்களையும் வீழ்த்திட களம் கண்டார்.

மிகச் சிறந்த ஆட்சியாளரான திப்பு பொருளாதார சீர்திருத்த சிற்பி. நம் நாட்டின் அடிப்படையே கிராமம் சார்ந்த விவசாயம் தான் என்பதை நன்கு உணர்ந்திருந்த திப்பு விவசாயம் செழிக்க உழவு மேம்பட அரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார்.

பூரண மது விலக்கில் உறுதியாக நின்றார். வாய்க்கால் வரப்புகள் தகராறுகளைத் தீர்த்திட கிராம பஞ்சாயத்துகளை உருவாக்கினார். இதனால் தேவையற்ற அலைச்சல் விவசாயிகளுக்கு இல்லாமல் போனது. குளங்களை வெட்டி நீர் வளம் காத்தார். புதிய அணைகளை வாய்க்கால்களை உருவாக்கி பசுமை குன்றாமல் செழிப்பான தேசத்தை ஏற்படுத்தினார்.

தரிசு நிலங்களை விளை நிலங்களாக ஆக்குவோருக்கு அவற்றை உரிமை ஆக்கினார். விவசாயிகளின் தேவைகளுக்காக உடனடியாக கடன்கள் வழங்கிட வகை செய்தார். விளை பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரிடையாக அரசே கொள்முதல் செய்யும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடச் செய்தார்.

அமல்தார் எனும் பிரதேச அதிகாரிகளுக்கு 'உங்கள் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குஅபராதம் விதிப்பதற்கு பதிலாக இரண்டு மா மரங்கள், இரண்டு பலா மரங்கள் இவற்றை இரண்டு கிராமங்களில் நட்டு அவை மூன்றடி உயரம் வளரும் வரை நீர் விட்டு பராமரிக்க வேண்டும் என்ற ஒரு விதியை (மைசூர் ஹாஸின் நிதி விதி எண் 126) அறிமுகப் படுத்தினார்.

1788- ல் தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு அவர் தெரிவித்த கருத்துக்கள் திப்புவின் தூர நோக்கான பொருளாதார சிந்தனைகளுக்கு சிறந்த எடுத்துக் காட்டு. 'நமது பொருளாதார மற்றும் தொழில் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நமது பாரம்பரிய பொருள்களின் உற்பத்தியை மட்டும் பெருக்கிப் பயனில்லை. நம்முடைய மண்ணின் தன்மை மக்களின் திறன் இவற்றை முற்றாகப் பயன் படுத்தும் வகையில் புதிய பொரள்களை உற்பத்தி செய்ய வேண்டும்'

திப்புவின் இந்த அறிவிப்பு அன்றைய உலகின் மிகப் பெரும் புரட்சி சிந்தனை என்பதில் ஐயமில்லை.

வெள்ளைக்கார வல்லூருகள் இந்த தேசத்தின் வளங்களைச் சுரண்டிக் கொள்ளையடித்து அள்ளிச் சென்று கொண்டிருந்த போது திப்பு சுல்தான் தன்னுடைய மறுமலர்ச்சி சிந்தனைகளால் வெளி நாடுகளில் தொழிற்சாலைகளை நிறுவி லாபம் ஈட்டி இந்தியாவுக்கு வளம் சேர்த்தார். வெள்ளைக்காரக் கம்பெனியிடம் எந்த உதவிக்காகவும் போய் நிற்கக் கூடாது என்று தன் மானத்துடன் திட்டங்கள் தீட்டினார்.

கட்ச், மஸ்கட், பெகூ, ஒர்மஸ், ஜித்தா போன்ற வெளி நாட்டு துறைமுகங்களின் அருகில் தொழிற்சாலைகளை நிறுவினார். துருக்கி, பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகளிலிருந்து தொழில் வல்லுனர்களையும் கைவினைக் கலைஞர்களையும் மைசூருக்கு வரவழைத்து தொழில் நவீனம் வளர வகை செய்தார். நுண்ணிய கருவிகள் கண்டு பிடிக்கப் படாத அக் காலத்திலேயே திப்புவின் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில் பீரங்கிகள், துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் மட்டுமல்லாது, காகிதம், கடிகாரம், கண்ணாடிப் பாத்திரங்கள் போன்றவை அந்த வெளி நாட்டுக் கலைஞர்கள் மூலம் தயாரிக்கப் பட்டன.

பொருளாதார தன்னிறைவு பெற்ற தேசமாக திப்புவின் ஆட்சி திகழ்ந்தது.

தொழிற்சாலைகளை நிறுவும் போது சுற்றுச் சூழல் மாசுபாட்டை மெத்தக் கவனத்துடன் கருத்தில் கொண்டார். இதனால்
விவசாயமும் நவீனத் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக் கொன்று எதிரானவை என்ற நிலை அங்கே ஏற்படவில்லை. தொழிற் சாலைகளின் பெருக்கத்தால் விவசாயம் பாதிக்கப் படவில்லை.

மஸ்கட்டிலிருந்து முத்துக் குளிப்பவர்களை அழைத்து வந்து மலபாரில் முத்துச் சிப்பிகளை வளர்த்திட ஏற்பாடு செய்தார்.

இந்தியக் குதிரைகள் மற்றும் கோவேறுக் கழுதைகளின் தரத்தினை உயர்த்திட அரபுலகத்திலிருந்து உயர் இனக் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் இறக்குமதி செய்து இன விருத்தி செய்யும் ஆர்வமுள்ளவருக்கு அவற்றை விற்காமல் இலவசமாகவே தந்தார்.

மிளகு, மிளகாய் வற்றல், சந்தன மரம், ஏலக்காய், அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு ஊக்கம் தந்தார். இதனால் பெங்களூர் நகரம் ஒரு முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. பாரம் ஏற்றப் பட்ட சுமார் இருநூறு மாட்டு வண்டிகள் தினந் தோறும் மைசூர் எல்லையிலிருந்து கேரளாவுக்குச் சென்றன.

இந்தியாவின் வளங்களை சூறையாடத் துடிக்கும் ஆங்கிலேயர் மீது அவருக்கு ஆயிரம் வெறுப்பு இருந்தாலும் அவர்களின் ஆட்சி முறையில் உள்ள சிறந்த அம்சங்களை உள் வாங்கி சிறப்பாகச் செயல்பட்டார். முகலாயச் சக்ரவர்த்திகள், பிரெஞ்சுக் காரர்கள் ஆகியோரின் சிறப்பம்சங்களையும் பயன் படுத்தத் தவறவில்லை திப்பு.

திப்புவின் ஆட்சி நடைபெற்ற போது மைசூரைச் சுற்றிப் பார்த்த ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் மூர் கூறுகிறார் 'எங்கும் செழிப்பு, பசுமை, சாகுபடிப் பயிர், தரிசு நிலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆக்கப் பூர்வமான உழைப்பில் கவனம் சிதறாமல் ஈடுபடும் மக்கள். புதிய நகரங்களின் தோற்றம். வர்த்தக வளர்ச்சி. எங்கும் மகிழ்ச்சி சந்தோஷம். இவற்றை தமக்கு முன்னறிமுகம் இல்லாத நாட்டில் ஒருவர் கண்டால் அங்கே மக்கள் விரும்பும் நல்லாட்சி நடக்கிறது என்றே கூறுவார். திப்புவின் பூமியில் நான் கண்டதுவும் இதுவே. திப்புவின் அரசு பற்றி என் கருத்தும் இறுதி முடிவும் அதுவே.'

திப்புவின் மீது வெறுப்பை உமிழும் ஆங்கிலேய வரலாற்றாய்வாளரின் கருத்தே அது. இப்படி எதிரியும் போற்றும் வண்ணம் வாழிந்தவர் மாவீரர் திப்பு சுல்தான்.

இப்படி மண்ணின் வளம் கெடாமல் மக்களை வாழ வைத்து, எதிரிக்கு இடம் கொடாமல் தன் மானம் காத்த வரலாற்று நாயகனை 1799 மே நான்காம் நாள் வஞ்சகப் பேய்களின் இசைவோடு வெள்ளையர் வீழ்த்தினர். தப்பித்து ஓடிட எல்லா வகைகளும் விசாலமாகவே இருந்தன. எனினும் வெட்டுக் காயங்களையும் துப்பாக்கிக் குண்டுகளையும் ஏந்திக் கொண்டு உயிரை விட்டார் திப்பு சுல்தான். அந்தப் பெரு வீரன் தன் இறுதி மூச்சை விட்டு விட்டான் என்று உறுதியான பிறகு ஸ்ரீரங்கப் பட்டினத்தை வேட்டைக் காடாக்கினர் வெள்ளையர்கள்.

வீட்டுக் கதவுகளை உடைத்தனர். அசையும் சொத்துக்களை எடுத்தனர். பெண்களின் மானமும் கொள்ளைப் பொருளாயின.எங்கும் பிணம். மரண ஓலம். 120000 உடல்கள் ஆங்காங்கே கிடந்தன.

வரலாறு வஞ்சம் தீர்க்காமல் விடவில்லை. திப்புவின் வீழ்ச்சியால் குடி மக்களின் எழுச்சி வந்தது. வெள்ளையர் அரசு வீழ்ந்தது. திப்புவின் நோக்கம் அவர் இறந்த பின் நிறைவேறியது இறைவனின் உதவியால். எனவே அவர் இறந்த பின்னரும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திப்புவின் தூர நோக்கின் பலன்களை அனுபவித்துக் கொண்டே அவரின் வரலாற்றை புதைக்க முற்படுவது பெரும் பாவமன்றோ!

இந்தியா என்றொரு தேசம் வாழும் வரை திப்புவும் வாழ்வார். வாழ வேண்டும். வாழ விட வேண்டும். அதுவே திப்புவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

உதவிய நூல்கள்

திப்பு விடுதலைப் போரின் முன்னோடி

மாவீரன் திப்பு சுல்தான்.

No comments: