Followers

Tuesday, November 06, 2012

அமெரிக்க தேர்தலும் நமது எதிர்பார்ப்பும்!




அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதான கட்சிகளின் இரு வேட்பாளர்களான, பராக் ஒபாமாவும், மிட் ரோம்னியும், கடைசி கட்ட பிரசாரங்களை முடித்திருக்கின்றனர். சாண்டி புயல் இடையில் கொஞ்சம் தொய்வை கொடுத்தாலும் தற்போது தேர்தல் ஜூரம் வழக்கம்போல் களை கட்டத் தொடங்கியுள்ளது.

சனிக்கிழமை அதிபர் ஒபாமாவும், முன்னாள் அதிபர் பில் கிளின்டனும் கூட்டாக முதன் முறையாக, கடும் மோதல் நடக்கும் வர்ஜீனியா மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினர்.

போட்டி மிகப் பலமானதாக இருப்பதாகக் கருதப்படும் இந்த மாநிலத்தில், பிரிஸ்டோ என்ற நகரில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஏறக்குறைய 25,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்த அளவு கூட்டம் கூடுகிறது என்றால் அந்த அளவு வேலையில்லாத மக்கள் அங்கும் உள்ளனர் என்று அர்த்தம். :-) டேவ் மேத்யூஸ் என்ற பிரபல இசைக்கலைஞரின் கச்சேரியுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டம் ஜனநாயகக் கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் எனலாம்.
கூட்டத்தின் பிரதான பேச்சாளர், வேட்பாளர் பராக் ஒபாமாதான் என்றாலும், அதிகக் கைதட்டலும் ஆரவாரமும் என்னவோ முன்னாள் அதிபர் பில் கிளின்டன் உரையாற்றிய போதுதான் இருந்தது.

ஒபாமாவுக்கு ஆதரவாக கடுமையாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் கிளின்டன் தொண்டை கட்டியிருந்த கரகரத்த குரலில் பேசினார். " என்னுடைய குரலை அதிபர் ஒபாமாவிற்கு சேவை செய்ய அர்ப்பணித்துவிட்டேன் " என்றார் நகைச்சுவையாக. பின்னே இருக்காதா? இவரது மனைவியின் எதிர்காலமும் ஒபாமாவின் வெற்றியில்தானே அடங்கியிருக்கிறது!

2008ல் பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தபோடு சரிந்திருந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஒபாமா எடுத்த முயற்சிகள் குறித்து கிளின்டன் விவரித்தார்.
இந்தக் கூட்டத்தில் பின்னர் பராக் ஒபாமா பேசும்போது, தான் சொன்னதைச் செய்பவர் என்ற கருத்தை வலியுறுத்தினார். இந்த டயலாக் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடமிருந்து காப்பி அடித்திருக்கிறார். எனவே இது சம்பந்தமாக யாரும் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். :-)

இராக்கில் போரை நிறுத்துவேன் அமெரிக்கப் படைகளை திரும்பக் கொண்டுவருவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றியது, போன்ற நிறைவேற்றப்பட்ட உறுதிமொழிகளை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு இடத்தில் வாபஸ் வாங்கினால் மற்றொரு இடத்தில் பிரச்னையை உண்டு பண்ணி அங்கு கொண்டு செல்லும் தந்திரம் நமக்கு தெரியாதா என்ன?

போட்டி கடுமையாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது. இருந்தாலும் கடைசி நேரத்தில் ஒபாமாவின் செல்வாக்கு அதிகரித்து அவரே வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். ரோம்னி வந்தாலும் ஒபாமா வந்தாலும் அமெரிக்காவின் கொள்கைகளில் இம்மியளவு மாற்றமும் வந்து விடப் போவதில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தால் வளைகுடாவிலோ அல்லது மற்ற இளிச்சவாய நாடுகளிலோ ஏதாவது பிரச்னையை சிஐஏ, அல்லது மொசாதின் உதவியோடு உண்டு பண்ணி பாதுகாப்பு தருகிறேன் என்ற பெயரில் 4 வருடம் ஐந்து வருடம் ஆட்டையை போடும் இந்த தந்திரம் மாறப் போவதில்லை. எந்த ஜனாதிபதியானாலும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக உள்ளனர்.

இவர்கள் இவ்வாறு ஆப்ரிக்கா ஆசியா கண்டங்களில் நடத்தும் ராணுவ நடவடிக்கைகளால் அப்பாவி பொது மக்களே பலியாகின்றனர். இதனாலதானோ என்னவோ அமெரிக்காவுக்கு ஏதாவது இயற்கை பேரிடர் வந்தால் பலர் மகிழ்ச்சியடைகின்றனர. இது போன்ற எண்ணங்கள் தவறுதான் என்றாலும் அமெரிக்கா அந்த அளவு உலக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

வரும் புதிய அரசாவது அந்நிய நாடுகளில் ஆக்கிரமிப்புகளை செய்யாமல் தனது சொந்த நாட்டு பொருளாதாரத்தை சொந்த மண்ணிலேயே சீராக்க முயற்சிக்க வேண்டும். பல பேருடைய வயிற்றெரிச்சலில் அமெரிக்க மக்களை சுகமாக எந்த நாளும் வைத்திருக்க முடியாது. இதை வரும் புதிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டால் அவர்களுக்கும் நல்லது நமக்கும் நல்லது.

-----------------------------------------------

கடைசி நேரத்தில் ஒபாமா முன்னுக்கு வந்து வெற்றி பெற்றதாய் செய்திகள் வந்துள்ளன. அவருக்கு வாழ்த்துக்கள். இந்த முறையாவது மற்ற நாடடு உள் விவகாரங்களில் தலையிடாமல் தனது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வழி வகைகளை தேட வேண்டும். தேடுவாரா...அல்லது பழைய குருடி கதவை திறடியா.....
------------------------------------------------

டெங்கு ஜூரம் தமிழகத்தை விடுவதாக இல்லை. தொடர்ந்து குழந்தைகளின் மரணங்கள் பீதியடையச் செய்கின்றன. இன்று திருப்பூரில் குப்பை கூளங்களால் எழுந்த துர் நாற்றத்தால் பள்ளிக்கு விடுமுறையே அளித்துள்ளது நிர்வாகம். சுத்தத்திற்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் நாம். இந்நோய்க்கு நாட்டு வைத்தியமாக இன்று மெயிலில் வந்த செய்தியை தருகிறேன். யாருக்காவது உபயோகப்படும் அல்லவா




டெங்குவுக்கு சூப்பர் மருந்து கிடைச்சாச்சே!!!

தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.

ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.

எப்படியெனில் பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது.

மேலும் இந்த பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.

பப்பாளி இலையின் சாற்றை எப்படி சாப்பிடலாம்?

* முதலில் பப்பாளியின் இலையை நன்கு சுத்தமான நீரால் அலசிட வேண்டும். பின் அதனை கைகளால் நசுக்கி, அதிலிருந்து சாற்றை எடுக்க வேண்டும்.

* ஒரு பப்பாளி இலையின் சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாறு வரும்.

* இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை பருக வேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருக வேண்டும்.


மருத்துவக் குறிப்புக்கு நன்றி : தட்ஸ்தமிழ்





25 comments:

UNMAIKAL said...

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் எழுதியுள்ள செய்தியில், மேலும் 4 ஆண்டுகள்.. நன்றி. இந்த வெற்றி ஒரு விபத்தல்ல.

அமெரிக்க மக்கள் மற்றும் என் ஆதரவாளர்களின் வெற்றியாகும். இதற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

நேற்று தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்ட்டன. இதில் அதிபர் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னியும் மாறி மாறி மாநிலங்களைக் கைப்பற்றினர்.

போட்டி கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் பெரும்பாலும் ஒபாமாவின் கையே ஓங்கி இருந்தது.

அதிபர் ஒபாமா, இலனாய், கனக்டிகட், மெய்ன், கொலம்பியா, டெலவரே, ரோட் ஐலன்ட், மேரிலான்ட் ஆகியவற்றை வென்றுள்ளார்.

ராம்னி தற்போது ஆளுநராக உள்ள மாசசூசட்ஸையும் ஒபாமாவே வென்றார்.

ஜார்ஜியா, டென்னஸி, ஓக்லஹாமா ஆகிய மாநிலங்களில் ராம்னி வெற்றி பெற்றார்.

தெற்கு கரோலினாவில் ராம்னி வென்றுள்ளார்.

இங்கு ஒபாமா அதிபராக இருந்தபோது ஒருமுறை கூட சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல மேற்கு வர்ஜீனியாவிலும் ராம்னியே வென்றுள்ளார்.

மறுபக்கம் வெர்மான்ட்டில் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். கென்டகியை ராம்னி வென்றுள்ளார். இன்டியானாவையும் அவர் பெற்றுள்ளார்.

கடைசி நேரத்தில் ராம்னி பிரச்சாரம் செய்த பென்சில்வேனியாவை ஒபாமா வென்றுள்ளார்.

இரு வேட்பாளர்களும் மாறி மாறி மாகாணங்களைக் கைப்பற்றி வந்தனர்.

கிட்டத்தட்ட இருவருக்கும் சமமான வாக்குகள் கிடைக்கும் நிலைதான் இருந்தது.

ஆனால் முடிவை நிர்ணயிக்கும் மாநிலங்கள் எனப்பட்ட ப்ளோடா மற்றும் ஒஹோவை ஒபாமா வென்றதால், வெற்றியை ருசித்துவிட்டார் ஒபாமா.

SOURCE:http://tamil.oneindia.in/news/2012/11/07/world-obama-win-re-election-ohio-iowa-wisconsin-prove-pivotal-164294.html

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,
படம் நீங்க அருமையா வரையிறீங்க சகோ.உங்க படத்துக்காக தான் இந்த கமெண்ட் போஸ்டுக்காக அல்ல :-). மத்த படி நீங்க சொல்றது போல அமெரிக்காவிற்கு எவன் ஜனாதிபதி ஆனாலும் உலக அளவிலான அவர்களின் கொள்ளைகளில் சாரி கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை எனபது நிதர்சனமான உண்மை.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//ஆனால் முடிவை நிர்ணயிக்கும் மாநிலங்கள் எனப்பட்ட ப்ளோடா மற்றும் ஒஹோவை ஒபாமா வென்றதால், வெற்றியை ருசித்துவிட்டார் ஒபாமா.//

நாம் எதிர்பார்த்தபடியே கடைசி நேரத்தில் வெற்றியை தட்டிப் பறித்துள்ளார். பார்ப்போம் இந்த முறை ஏதும் இவரிடம் மாற்றங்கள் தெரிகிறதா என்று!

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//படம் நீங்க அருமையா வரையிறீங்க சகோ.உங்க படத்துக்காக தான் இந்த கமெண்ட் போஸ்டுக்காக அல்ல :-).//

படிக்கும் காலங்களிலேயே ஓவியம் வரைவதில் ஒரு அலாதி ஆர்வம். அது இன்றும் அவ்வப்போது தொடர்கிறது.

//மத்த படி நீங்க சொல்றது போல அமெரிக்காவிற்கு எவன் ஜனாதிபதி ஆனாலும் உலக அளவிலான அவர்களின் கொள்ளைகளில் சாரி கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை எனபது நிதர்சனமான உண்மை.//

அதுதான் உண்மை. இனியாவது ஒபாமாவின் நிர்வாகத்தில் ஏதும் மாற்றங்கள் தெரிகிறதா பார்ப்போம்.

T.Thenmathuran said...

//பிரிஸ்டோ என்ற நகரில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஏறக்குறைய 25,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்த அளவு கூட்டம் கூடுகிறது என்றால் அந்த அளவு வேலையில்லாத மக்கள் அங்கும் உள்ளனர் என்று அர்த்தம். :-)//
அப்போ மெக்காவில லட்சக்கணக்கில கூடுற மக்களும் வேலை வெட்டி இல்லாமத்தான் இருக்காங்கன்னு சொல்லுங்க...:)

suvanappiriyan said...

திரு தேன் மதுரன்!

//அப்போ மெக்காவில லட்சக்கணக்கில கூடுற மக்களும் வேலை வெட்டி இல்லாமத்தான் இருக்காங்கன்னு சொல்லுங்க...:)//

மெக்காவில் வருடம் ஒரு முறை கூடுவது உலக சகோதரத்துவத்தை பறை சாற்றுவதற்காக! கருப்பன், வெள்ளையன், ஆப்ரிக்கன், அமெரிக்கன், ஆசியன் என்று அனைத்து மக்களும் ஒன்றாக கூடி ஒருவரை யொருவர் கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனர். 'ஒன்றே குலம்: ஒருவனே தேவன்' என்பதை இந்த உலகுக்கு உரத்துச் சொல்கிறார்கள்.தொழும்போது ஆபரிகனின் காலில் ஐரோப்பியனின் தலை இருக்கும். இதனால்தான் முஸ்லிம்களிடத்தில் இன்று வரை தீண்டாமையை பார்க்க முடிவதில்லை.

அதே நேரம் அரசியல் கட்சிகளுக்காக நம் நாட்டில் கூடும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா? பிரியாணி பார்சலுக்கும், 100 ரூபாய் பணத்துக்காகவும் நாள் புராவும் 'வாழ்க, ஒழிக' என்று கோஷம் போட்டு பிரிந்ததை தவிர வேறு எந்த பலனும் நாம் கண்டதில்லை. இதே காட்சி அமெரிக்காவில் சற்று வித்தியாசமாக அரங்கேறும். நேரடி ஒலி மற்றும் ஒளி பரப்பு இருக்கிறது. வீட்டிலேயே அமர்ந்து பொறுமையாக கேட்கலாம். சில நாட்கள் முன்புதான் சாண்டி புயலால் அமெரிக்கா முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. இன்று வரை அந்த மக்களுக்கு எந்த நிவாரணமும் உரிய முறையில் சென்றடையவில்லை. அனைத்தையும் மறந்து விட்டு நம் நாட்டைப்போல் ஏதோ ஒரு திருவிழாபோல் கூட்டம் கூடுவதைத்தான் சுட்டிக் காட்டினேன்.

ராஜ நடராஜன் said...

//படம் நீங்க அருமையா வரையிறீங்க சகோ.உங்க படத்துக்காக தான் இந்த கமெண்ட் போஸ்டுக்காக அல்ல :-)//

என்னது!கிறுக்கறது பத்தாதுன்னு இந்த கிறுக்கும் வேறயா:)

வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//என்னது!கிறுக்கறது பத்தாதுன்னு இந்த கிறுக்கும் வேறயா:)//

எழுத்தாகவும் படமாகவும்

கிறுக்குவது தவறல்ல....

கத்தியாலும் அறிவாளாலும்

கீருவதுதான் தவறு.....:-)

T.Thenmathuran said...

//கருப்பன், வெள்ளையன், ஆப்ரிக்கன், அமெரிக்கன், ஆசியன் என்று அனைத்து மக்களும் ஒன்றாக கூடி ஒருவரை யொருவர் கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனர்//
எனக்கு ஒரு டவுட்.. நீங்கள் சொன்ன மக்கள்ல பெண்களும் அடங்குவாங்களா...இல்ல ஆண்கள் மட்டும் தான் உங்கள் மொழியில் மக்களா..? ஏன் கேட்கிறேன்னா நீங்கள் தான் பெண்களைத் தொடவே விட மாட்டீர்களே... இந்த லட்சணத்தில் எங்கே கட்டித் தழுவுவது....?

T.Thenmathuran said...

//கருப்பன், வெள்ளையன், ஆப்ரிக்கன், அமெரிக்கன், ஆசியன் என்று அனைத்து மக்களும் ஒன்றாக கூடி ஒருவரை யொருவர் கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனர்//
எனக்கு ஒரு டவுட்.. நீங்கள் சொன்ன மக்கள்ல பெண்களும் அடங்குவாங்களா...இல்ல ஆண்கள் மட்டும் தான் உங்கள் மொழியில் மக்களா..? ஏன் கேட்கிறேன்னா நீங்கள் தான் பெண்களைத் தொடவே விட மாட்டீர்களே... இந்த லட்சணத்தில் எங்கே கட்டித் தழுவுவது....?

suvanappiriyan said...

//எனக்கு ஒரு டவுட்.. நீங்கள் சொன்ன மக்கள்ல பெண்களும் அடங்குவாங்களா...இல்ல ஆண்கள் மட்டும் தான் உங்கள் மொழியில் மக்களா..? ஏன் கேட்கிறேன்னா நீங்கள் தான் பெண்களைத் தொடவே விட மாட்டீர்களே... இந்த லட்சணத்தில் எங்கே கட்டித் தழுவுவது....?//

ஹி..ஹி...ஆண்களை ஆண்கள் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுததுவார்கள். பெண்கள் பெண்களை கட்டித் தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் கட்டித் தழுவினால் சகோதரத்துவம் வெளிப்படுவதற்கு பதில் பாலியல் ரீதியான உணர்வு வெளிப்பட ஆரம்பித்து விட்டால்...:-) எனவே இஸ்லாம் எதிலும் மிக கவனமாக சட்டங்களை கையாளும்.

ராவணன் said...

அண்ணாச்சி அமெரிக்காவின் அடுத்த ஆட்டம் ஈரானில்.

2013 நவம்பருக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பாருங்கள்.

சவுதிக்கு இப்ப எந்தப் பிரச்சனையும் இல்லை. சவுதிக்கு 2018-ல் கண்டம்.

suvanappiriyan said...

//அண்ணாச்சி அமெரிக்காவின் அடுத்த ஆட்டம் ஈரானில்.

2013 நவம்பருக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பாருங்கள்.

சவுதிக்கு இப்ப எந்தப் பிரச்சனையும் இல்லை. சவுதிக்கு 2018-ல் கண்டம். //

நீங்க என்ன ஐ.நா காரியதரிசியா! உலக அரசியலையும் எதிர்காலத்தையும் அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க....

நம்பள்கி said...

படம் நன்றாக வரைகிறீர்கள்...! நீங்க வரைந்த ஒபாமா படத்திற்கு இங்கு வேறு அர்த்தம் கொடுப்பார்கள் அவருடைய பின்னணியினால்.:({

T.Thenmathuran said...

//ஹி..ஹி...ஆண்களை ஆண்கள் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுததுவார்கள். பெண்கள் பெண்களை கட்டித் தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் கட்டித் தழுவினால் சகோதரத்துவம் வெளிப்படுவதற்கு பதில் பாலியல் ரீதியான உணர்வு வெளிப்பட ஆரம்பித்து விட்டால்...:-) எனவே இஸ்லாம் எதிலும் மிக கவனமாக சட்டங்களை கையாளும்.//
பார்த்துங்க... இன்னிக்கு உலகத்துல ஓரினச்சேர்க்கை தான் பெரிய பிரச்சனை.... எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற இஸ்லாம் இதுக்கு ஒரு தீர்வுமே சொல்லலையா...?

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

நானும் படங்களை கவனித்து இருக்கிறேன் ,நன்றாக வரைகிறீர்கள்.

முதலில் வேறு யாரோ வரைவதாக நினைத்திருந்தேன் ,சமீபத்தில் நீங்க சொன்னப்பிறகு தான் தெரிந்தது.

கணினியில் வரைவதா இல்லை ,காகிதத்தில் வரைந்து ஸ்கேன் செய்வதா?
-------

உள்ளூர் தேர்தலிலேயே எதிர்ப்பார்க்கிற வழக்கம் எல்லாம் போச்சு, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் , மக்கள் அவங்க கைய கால வச்சு கரனம் அடிச்சு தான் பொழைக்கணும்னு நிலை ஆகி போனப்பிறகு அரசியல் மீது ஆர்வமே போச்சு.

அப்போ அப்போ பொலம்புறதோட சரி.

ஒபாமா மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால் பெரிதாக எதுவும் மாறிவிடாது. ஏற்கனவே அங்கே வரலாறு காணாத வேலை வாய்ப்பின்மை, பொருளாதார மந்தம், ஒபாமா மீதான நம்பிக்கைனு சொல்வதை விட ரோம்னியை நம்பவில்லை அதான் ஒபாமா வந்திருக்கார்னு சொல்லலாம்.

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//நானும் படங்களை கவனித்து இருக்கிறேன் ,நன்றாக வரைகிறீர்கள்.//

நன்றி!

//கணினியில் வரைவதா இல்லை ,காகிதத்தில் வரைந்து ஸ்கேன் செய்வதா?//

கணிணியில் வரையும் அளவுக்கு தேர்ச்சி பெறவில்லை. காகிதத்தில் வரைந்து பிறகு ஸ்கேன் செய்து விடுவேன்.

//ஒபாமா மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால் பெரிதாக எதுவும் மாறிவிடாது. ஏற்கனவே அங்கே வரலாறு காணாத வேலை வாய்ப்பின்மை, பொருளாதார மந்தம், ஒபாமா மீதான நம்பிக்கைனு சொல்வதை விட ரோம்னியை நம்பவில்லை அதான் ஒபாமா வந்திருக்கார்னு சொல்லலாம்.//

ஒத்துக் கொள்கிறேன். கருணாநிதிக்கு ஜெயலலிதாவே தேவலை என்று வந்தது மாதிரி. :-)

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//படம் நன்றாக வரைகிறீர்கள்...!//

நன்றி!

//நீங்க வரைந்த ஒபாமா படத்திற்கு இங்கு வேறு அர்த்தம் கொடுப்பார்கள் அவருடைய பின்னணியினால்.:({//

விளங்கவில்லை. அவர் ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமியரான தந்தைக்கும் கிறித்தவரான தாய்ககும் பிறந்த கென்ய நாட்வர் என்று கேள்விப்படுகிறேன். மற்றபடி நீங்கள் தான் விளக்க வேண்டும்.

நம்பள்கி said...

ஆதி மனிதன் எதிலிருந்து?

suvanappiriyan said...

//பார்த்துங்க... இன்னிக்கு உலகத்துல ஓரினச்சேர்க்கை தான் பெரிய பிரச்சனை.... எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற இஸ்லாம் இதுக்கு ஒரு தீர்வுமே சொல்லலையா...?//

ஓரினச் சேர்க்கையை இஸ்லாம் முற்றிலுமாக தடை செய்கிறது. 3000 வருடங்களுக்கு முன்பு ஜோர்டானுக்கு பக்கத்தில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஒரு சமுதாயத்தையே இறைவன் அழித்ததாக குர்ஆன் கூறுகிறது. 'செத்த கடல்' என்று கூறப்படும் அந்த கடலை இன்றும் நாம் பர்க்கலாம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை நல்ல மன நல மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.

"நமது கட்டளை வந்த போது, அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம்.

அவை உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை."

குர்ஆன்: ஹுது வசனம் 77 தொடக்கம் 83

Unknown said...

சலாம் சகோஸ் ,

நம்ம இ.செ தளத்தில்(http://www.kodangi.com/2012/11/when-humans-nearly-vanished.html) உண்மை பேசிய ஒரே காரணத்திற்காக கீழ்க்கண்ட பின்னூட்டத்தை நீக்கி விட்டார்..

நாகூர் மீரான் said...
This comment has been removed by a blog administrator.
November 07, 2012 10:19 AM


//சலாம்...

அறிவியல் தகவல் நாம் தருகிறோம்...கீழே உள்ள பதிவில் காணவும்

360 Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )

தகவல் இப்படி இருக்க வேண்டும் ...

நன்றி !!!//

மேற்கூறிய பின்னூட்டத்தில் வசை மொழி எதைக்கண்டார் என்று தெரியவில்லையே..!!!

ஆம் உண்மை பேசிய ஒரே காரணமே..!!!

நன்றி !!!

suvanappiriyan said...

//ஆதி மனிதன் எதிலிருந்து? //

ஆதி மனிதன் மண்ணாலும் தண்ணீராலும் குழைத்து இறைவனால் படை;க்கப்பட்டதாக வேதங்கள் சொல்கின்றன. அறிவியலும் மனிதனின் உடல் தண்ணீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப் பொருள்களாலேயே உருவானதாக தற்போது கண்டு பிடித்துள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பதை டார்வின் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபிக்கவில்லை. அது அவருடைய கற்பனை.

ஒபாமாவின் உருவத்தில் சிறிய ஒற்றுமை இருப்பதால் டார்வின் தியரி உண்மையாகி விடுமா? ஐரோப்பா, ஆசிய நாடுகளில் உள்ள மனிதர்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கிறார்களே! இதற்கு என்ன பதில்? அவர்கள் எதிலிருந்து பரிணமித்தார்கள்? என்ற கேள்வியும் வரும்.

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//ஆம் உண்மை பேசிய ஒரே காரணமே..!!!//

உண்மை சில நேரம் அவர்களுக்கு கசக்கும்.

Nasar said...

அமெரிக்க அதிபராக கழுதை வந்தாலென்னா , யானை வந்தாலென்னா ..??!!
பழைய குருடி கதவ திறடி ..கதைதான் , கொள்கைகளில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை . உண்மையிலேயே அமெரிக்காவை நிர்வாகிப்பது ஆயுத வியாபாரிகளும், சி.ஐ.ஏ வும் தான் இதுல அதிபராக யார் வந்தாலென்ன..!!??
போன முறை ஓபாமா "மாற்றம் வேண்டும்" என்று சொன்னார் ..
இந்த முறை எதை சொல்லி வந்தார் தெரியுமா ?? எனக்கு தெரியாது ....உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்
`ஜென்டில்மேன் வேட்பாளர்கள் + நல்ல தேர்தல் ....அமெரிக்காவில் .
டர்ட்டிமேன் வேட்பாளர்கள் + கோல்மால் தேர்தல் .........
இந்தியாவில் .
தோற்றவரும் தன தோல்வியை ஒத்துக்கொண்டு , ஜெயித்தவருக்கு கண்ணியமாக,நாகரிகமாக வாழ்த்து சொன்ன பாங்கு நம் நாட்டில் எப்போதாவது நாம் பார்த்து இருப்போமா ..!!!

suvanappiriyan said...

சகோ நாசர்!

//தோற்றவரும் தன தோல்வியை ஒத்துக்கொண்டு , ஜெயித்தவருக்கு கண்ணியமாக,நாகரிகமாக வாழ்த்து சொன்ன பாங்கு நம் நாட்டில் எப்போதாவது நாம் பார்த்து இருப்போமா ..!!! //

இது ஒன்றையாவது நம்மவர்கள் அமெரிக்கர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.