Followers

Tuesday, July 22, 2014

மறு பிறவி என்பது சாத்தியமான ஒன்றா?

திரு ஜனவி புத்திரன்!

//ஒரே கேள்வி.. மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை//

மறு பிறவி என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு வாழ்வு முறை நடைமுறை சாத்தியமில்லாதது. அது எப்படி என்று இனி பார்ப்போம்.

மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர். நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?
-------------------------------------------------------------------------------------------------
மறுஉலக வாழ்வைத்தான் இந்து மக்கள் மறு பிறவி என்று தவறாக விளங்கிக் கொண்டனர். அது பற்றி நான் முன்பு எழுதிய இடுகையை மீண்டும் மீள் பதிவு செய்கிறேன்.
எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். நம் அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட ஒன்று. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டா? இல்லையா? இஸ்லாம் மறுமைக்குப் பின் வாழ்வு உண்டு என்று குர்ஆனில் பல இடங்களில் தெளிவாக்குகிறது. இதைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்

ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்

மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

மேலே நான் கொடுத்துள்ள இந்து மத வேத ஆதாரங்களும் இஸ்லாமிய வேத ஆதாரங்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இந்து மதமும் மறு உலக வாழ்க்கையை வலியுறுத்துகிறது. மறு பிறவி என்பது இந்து மத கோட்பாடு அல்ல. அது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒன்று என்று விளங்கிக் கொள்ளலாம்.

12 comments:

Anonymous said...

சுவனப்பிரியரே,

லாஜிக்க பின்னுகிறீர்கள். அதே போல சிலநம்பிக்கைகளுக்கு உங்களுடைய லாஜிக் விளக்கம் தேவை.

1. யூதன் ஒழிந்திருப்பதை கல் காட்டி கொடுப்பது, கர்கார் மரம் மட்டும் காட்டி கொடுக்காது ஏனென்றால் அது யூத மரம்.
2. சப்பாத் செய்யாத யூதர்களை குரங்காக மாற்றுவது.
3. குதிரைமேல் ஏரி வானுக்கு சென்று வருவது ( ஆனால் உலகம் உருண்டையாக இருப்பதை பார்க்காமல் இருப்பது)
4.நைல் மற்றும் இயூட்ரேஸ் நதியின் மூலம் சொர்கத்தில் இருப்பது.
5. ஓவ்வொரு நாளும் சூரியன் தொழுக செல்வது.

suvanappiriyan said...

அனானி!

நீங்கள் காட்டும் நபி மொழிகள் அனைத்தும் யூதர்களால் புனையப்பட்டது. அறிவிப்பாளர் தொடரை படிக்க ஆரம்பித்தால் அந்த ஹதீதுகள் போலியாக பல்லிலுக்கும். :-) எனவே குர்ஆனிலிருந்து உங்கள் சந்தேகங்களை பட்டியலிடவும்.

Anonymous said...

சுவனப்பிரியரே,
மூன்றாவது அதீத் பொய்யென்றால், உங்களது 5 வேளைத் தொழுகை பொய்யாகிவிடும். வானத்தில்தானே இறைவனோடு பேச்சு வார்த்தை நடத்தி 50 வேளை தொழுகை 5 வேளையானது ? குரான்படி பார்த்தால் 3 வேளைதானே ?

ஐந்தாவது அதீத் பொய்யென்றால், உங்களது முக்கிய இறுதி நாள் அடையாளம் இல்லாமல் போய் விடுமே ? அதே அதீத் தில்தானே, இருதி நாளில் சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

suvanappiriyan said...

எந்த ஹதீதை பதிந்தாலும் அறிவித்தவர் யார்? எந்த நுலில் எடுக்கப்பட்டது. அதன் வரிசை எண் போன்றவை கண்டிப்பாக குறிக்கப்பட வேண்டும். மேற்கில் சூரியன் உதிப்பது என்பது உலக முடிவு நாளில் ஏற்படும் என்பதை விஞ்ஞானிகளும் மறுக்கவில்லை. தொழுகையை குறைத்தது மிஃராஜில் என்பதையும் மறுக்கவில்லை. உண்மையையும் பொய்யையும் கலந்து அடித்து விடக் கூடாது. எங்களிடம் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. மேலும் குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் எந்த ஹதீதுமே யூதர்களால் புனையப்பட்டதே.

Anonymous said...

//உண்மையையும் பொய்யையும் கலந்து அடித்து விடக் கூடாது. எங்களிடம் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. //

புராக் குதிரைல பறந்து போய் அல்லாவிடம் பேசி விட்டு வந்ததற்கு என்ன ஆதாரம் சார் வச்சிருக்கிங்க. கொஞ்சம் காட்டுங்களே நாங்களும் பார்க்கிறோம்

Anonymous said...

சுவனப்பிரியரே,
பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. முதலில் சொன்ன அதீஸ்கள் யூதர்களால் புணையப்பட்டது என்றீர்கள். மறுக்க முடியாத விசயத்தை சுட்டி காட்டியதும் நான் பொய் சொல்கிறேன் என்கிறீர்கள்.

சூரியன் தொழுக போகும் என்ற அதீசின் கடைசியில்தானே சூரியன் மேற்கில் உதிக்கும் என்ற வரியும் வருகிறது ? அறிவிப்பாளர் வரிசைப்படி இந்த அதீஸ் பொய்யென்றால், முழு அதீசுமே பொய்யாகத்தானே இருக்க வேண்டும் ? அதெப்படி யூதன் புணைந்த ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள் ?

சூரியன் மேற்கில் உதிக்கும் என்று சொன்னது யார் ? அறிவியல் தளத்தை தரவும் ( நான் சொல்லுவது ஒரிஜினல் அறிவியல் ).

புராக்கில் பறந்து வானம் செல்வது, அங்கே இயுப்ரேஸ் மற்றும் நைல் நதியின் மூலத்தை பார்ப்பது பிறகு இறைவனோடு பேச்சு வார்த்தை நடத்தி 5 வேளை தொழுகை பெறுவது எல்லாம் ஒரே அதீசில்தானே வருகிறது ? மறுபடியும் அதே கேள்வி, அறிவிப்பாளர் வரிசைப்படி இந்த அதீஸ் பொய்யென்றால், முழு அதீசுமே பொய்யாகத்தானே இருக்க வேண்டும் ? அதெப்படி யூதன் புணைந்த ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள் ?

இங்கே அந்த அதீஸ்களை தருகிறேன். இந்த இணைய தளம் யூதனுடையது என்று நீங்கள் சொல்ல வாய்ப்பிருப்பதால், தேடி கண்டு பிடித்து மலேசிய இஸ்லாமிய பல்கலைகழகத்தின் இணைய தளத்திலிருந்து தருகிறேன்.

Volume 4, Book 54, Number 421:

http://www.iium.edu.my/deed/hadith/bukhari/054_sbt.html

http://quran.com/36/38

Volume 4, Book 54, Number 429:

http://www.iium.edu.my/deed/hadith/bukhari/054_sbt.html

ஆனந்த் சாகர் said...

ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களில் கூறப்பட்டுள்ள மடத்தனமான செய்திகளை, முஹம்மது செய்த கொடூர குற்ற செயல்களை காபிர்கள் எடுத்து காட்டினால் உடனே முஸ்லிம்கள் அது யூதர்கள் இட்டு கட்டிய செய்திகள் என்று அளந்து விடுவார்கள். அந்த பித்தலாட்டத்தைதான் சுவனப்பிரியனும் வழக்கமாக கடைபிடிக்கிறார். அவர் கொடுக்கும் விளக்கமெல்லாம் மடத்தனமானது, குழந்தைத்தனமானது, பொய்யை அடிப்படையாகக்கொண்டது.

ஆனந்த் சாகர் said...

மறுபிறவி என்பது 100% உண்மையானது.

ஆனந்த் சாகர் said...

சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

மேற்கண்ட உங்கள் மொழிபெயர்ப்பை விட்டுவிட்டு மூல சமஸ்கிருத சுலோகத்தை கூறி அதன் ஒவ்வொரு வார்த்தையையும் சமஸ்கிருதம்-தமிழ் என்று மொழிபெயர்த்து கூறினால் நாம் அதை பற்றி விவாதிக்கலாம்.

ஆனந்த் சாகர் said...

//நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்//

ஏகப்பட்ட புராணங்கள், கட்டுக்கதைகள் பழங்கால ஹிந்துக்களால் எழுதப்பட்டுள்ளன. அவற்றை பெரும்பாலான தற்கால ஹிந்துக்கள் உண்மை என்று நம்பவில்லை, ஏற்கவில்லை. புதிய அறிவு கிடைக்கும்போது பழைய நம்பிக்கைகளை ஹிந்துக்கள் மிக சாதாரணமாக கைவிட்டுவிடுவர். இதை ஹிந்து மதம் அனுமதிக்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஹிந்து மதத்தின் ஓர் அங்கம். ஹிந்துமதம் குட்டையாக தேங்கி நிற்காது. அது நதிபோல ஓடிக்கொண்டிருக்கும். எனவே பழைய ஹிந்து நம்பிக்கைகளை காட்டி குரானின் பொய்களுக்கு சப்பைக்கட்டு கட்டவேண்டாம்.

ஆனந்த் சாகர் said...

//இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின.//

இது பைபிளில் உள்ள மற்றும் அதை காப்பி அடித்து குர்ஆனில் முஹம்மது கூறிய ஆதாம், ஏவாள் என்ற ஒரு ஜோடி முதலில் படைக்கப்பட்ட குழந்தைத்தனமான கற்பனை கதையை அப்படியே குருட்டுத்தனமாக நம்பி நீங்கள் உளறுவது. எல்லா உயிரினங்களும் ஒரு ஜோடியிலிருந்துதான் பல்கி பெருகின என்பது எந்த ஆதாரமும் அற்ற, அறிவுக்கு பொருந்தாத, உண்மைக்கு புறம்பான மூட நம்பிக்கை.

ஆனந்த் சாகர் said...

//மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.//

உங்களின் மேற்கண்ட வாதம் உங்க அண்ணன் பீ ஜே வின் அறிவுப்பூர்வமான(!?) சிந்தனை.

மனிதர்களின் எண்ணிக்கையைத்தான் கணக்கெடுக்கிறார்கள். சுமார் 700 கோடி மனிதர்கள் தற்போது பூமியில் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் மற்ற உயிரினங்கள் எத்தனை பூமியில் வாழ்கின்றன என்று மனிதனால் கணக்கெடுக்கவே முடியாது. உயிரியல் விஞ்ஞானிகளால் இதுவரை அறியப்படாத உயிரினங்கள்(species), குறிப்பாக பூச்சிகள் பல லட்சம் இருக்கின்றன. பாண்டா கரடி, புலி போன்ற அருகி வரும் சில மிருகங்களின் எண்ணிக்கைதான் கணக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற ஒவ்வொரு உயிரினங்களில்(species) உள்ள உயிர்களின் எண்ணிக்கை எத்தனை என்று எவருக்கும் தெரியாது. அவை ஒவ்வொன்றிலும் பல கோடிகள் இருக்கும். அதுவும் கடலில் வாழும் உயிரினங்களை பற்றி சொல்லவே வேண்டாம். அப்படிப்பட்ட உயிர்களில் ஒரு மிக சிறு பகுதி மனிதர்களாக பிறப்பெடுத்தாலே அந்த எண்ணிக்கை பல ஆயிரம் கோடியை தாண்டும். ஆனால் இன்று மனிதர்கள் வெறும் 700 கோடிதான் உள்ளனர்.

//பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம்.//

வேறு உயிர்கள் மனிதர்களாக பிறப்பெடுத்து உள்ளன, அதனால் மனிதர்களின் எண்ணிக்கை கூடியுள்ளன என்று எடுத்துகொள்ளலாம்.

// நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.//

அப்படியா? உங்களுக்கு தெரிந்தால் எந்தெந்த உயிரினங்களில் எத்தனை கோடி உயிர்கள் அதிகமாகி இருக்கின்றன என்று புள்ளி விவரத்தோடு கூறுங்கள்.

//புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.//

நாம் வாழும் இந்த பௌதீக பிரபஞ்சம் மட்டும் இருக்கவில்லை. இதைபோன்ற எண்ணற்ற பௌதீக பிரபஞ்சங்கள் இந்த முப்பரிமாண உலகத்திலேயே இருக்கின்றன(three dimensional world). ஒவ்வொரு பௌதீக பிரபஞ்சத்திலும்(physical universe) கோடி கோடியான நட்சத்திரங்களும்(சூரியன்கள்) அவற்றை மையமாக வைத்து சுற்றிவருகின்ற பல கோடி கோடி கோடி கோடியான பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. அவைகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கிருந்தும் சில ஆன்மாக்கள் இந்த நமது பூமியில் பிறப்பெடுக்கின்றன. அப்படியே இங்கிருந்தும் சில ஆன்மாக்கள் அந்த கிரகங்களில் பிறப்பெடுக்கின்றன. ஆகையால் கிரகங்களில் உயிர்களின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் ஒன்றும் புதிரல்ல, அது தொடர்ந்து நடந்து வருகிற ஒரு விஷயம்தான்.

மேலும் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருக்க முடியும். அதாவது ஒரே ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருந்து உடல் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது குவாண்டம் அறிவியல்(quantum physics) மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணதிற்கு ஒரே ஆன்மாவானது ஒரே நேரத்தில் இருவேறு நபர்களாக இருவேறு உடல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும். இந்த இரு நபர்களும் இருவேறு நபர்களாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உண்மையிலேயே ஒரே நபர்தான். எனவே உயிர்களின்(உடல்களின்) எண்ணிக்கை கூடுவது என்பது புதிரான விஷயம் அல்ல.

மேலும் இந்த முப்பரிமாண பௌதீக உலகம் ஒரு மாயை(illusion). நாம் உண்மையில் இங்கு இல்லை. நாம் நமது இல்லமான ஆன்ம உலகில்தான்(spiritual world) இருக்கிறோம். அங்கே இருந்துகொண்டு இந்த கற்பனையான பௌதீக உலகத்தை ஒரு காட்சியாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த ஆன்ம உலகில் எண்ணற்ற ஆன்மாக்கள் இருக்கின்றன. அவைகளில் மிக மிக சொற்ப எண்ணிக்கையான ஆன்மாக்களே இந்த பௌதீக உடல்(physical body) எடுத்து இங்கு வருகின்றன. சில கூடுதல் ஆன்மாக்கள் பௌதீக அனுபவத்தை(physical experience) பெற இங்கு பிறப்பெடுத்தால்கூட இங்கு உயிர்களின் எண்ணிக்கை கூடும்.

இன்னும் பல அரிய ஆன்மீக உண்மைகள் இருக்கின்றன.