Followers

Monday, July 14, 2014

நாகூர் ஹனீபா பாடலை விட்டல்தாஸ் பாடினால் எப்படி இருக்கும்?



http://www.youtube.com/watch?v=RE9XTaWr7A8

நாகூர் அனீபாவின் பாடலில் வரும் 'அல்லாஹ்வின் பேரளுளை நம்பி நில்லுங்கள்' என்று வரும் இடத்தில் 'ஆண்டவனின் பேரளுளை நம்பி நில்லுங்கள்' என்று பாடுகிறார். இஸ்லாத்தை பொறுத்த வரையில் அல்லாஹ், இறைவன், கடவுள், தேவன், ஆண்டவன், ரப் என்று எந்த பெயரில் அழைத்தாலும் அது ஏக இறைவனைத்தான் குறிக்கும். குர்ஆன் மற்றும் இந்து மத வேதங்கள் கூறுவதை இனி பார்ப்போம்.

இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'

குர்ஆன் 17 :110

இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :

ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)

- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'

குர்ஆன் 7 : 180

இறைவனுக்கு அழகான பெயர்கள் உண்டு என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் மேற் கண்ட வசனம் கூறுகிறது. இறைவனின் பெயரை திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் இவ் வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.

இன்று முஸ்லிம்களிடம் கூட சிலர் அறியாமையினால் தியானம் என்ற பெயரில் வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரங்களில் அமர்ந்து கோரஸாக ஓதி வருவதை பார்க்கிறோம்.அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஹீ,ஹீ' என்பது. ஹீ என்றால் அரபியில் 'அவன்' என்று அர்த்தம். சாத்தானைக் கூட 'ஹீ' என்று கூறலாம்.

அடுத்து ஒன்று 'ஹக் தூ ஹக்' என்று அரபியும் உருதும் கலந்து புது வார்த்தையை கண்டு பிடித்து திக்ரு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.

இன்னொன்று 'அல்லாஹ்' என்ற பெயரில் முதல் எழத்து அ வையும் கடைசி எழுத்து ஹ் ஹையும் இணைத்து 'அஹ்' என்ற புது பெயரை கண்டு பிடித்துள்ளார்கள்.

அடுத்து 'இல்லல்லாஹ்' என்றும் ஓதுகிறார்கள். இதற்கு பொருள் 'அல்லாஹ்வைத் தவிர'. இதற்கும் எந்த பொருளும் இல்லை.

எனவே இறைவனோ, முகமது நபியோ காட்டித் தராத இது போன்ற நவீன வணக்கங்களை செய்வோரைப் பார்த்துதான் மேற் கண்ட வசனத்தில் எச்சரிக்கப் படுகிறது.

No comments: