Followers

Thursday, July 24, 2014

மறுமை நாளில் இறந்த குழந்தைகள் பேசுமா?

மறுமை நாளில் இறந்த குழந்தைகள் பேசுமா?

ஹானஸ்ட் மேன்!

//இறைவன் ஒரு உருவம் கொடுப்பது குழந்தை பருவத்தில்தான். அப்படியானால் மறுமை நாளில் அதே உருவத்தில் திரும்ப உயிர் கொடுக்கபடுவான் என்றால் குழந்தையை மறுமை நாளில் விசாரிப்பது நியாயமா? பேசமுடியாத அந்த குழந்தை விசாரணையின்போது பதில் சொல்ல இயலுமா?//



எந்த வயதில் இறக்கிறீர்களோ அந்த உருவத்திலேயே எழுப்பப்படுவீர்கள். ஒரு துளி இந்திரியத்தில் தாய் தகப்பனின் முகம், நிறம், குரல், குணம் என்று அனைத்தையும் ஜிப் செய்து அடைத்து வைத்த இறைவனால் ஒரு குழந்தையை பேச வைக்க முடியாதா? ஒரு குழந்தையை எந்த நியாயமும் இன்றி கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க அந்த குழந்தையிடம் விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதாக இறைவன் கூறுகிறான். அன்றைய அரபுகள் நபிகள் காலத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தால் அதனை உயிரோடு புதைத்து விடுவார்களாம். உசிலம் பட்டியிலும், சேலம் போன்ற பகுதிகளிலும் பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப் பால்,அல்லது நெல் மணிகளைக் கொடுத்து கொன்று விடும் பழக்கம் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இப்படிகொல்லப் பட்ட பெண் குழந்தைகள் மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் தன் பெற்றோர்களின் மேல் 'எந்த காரணத்திற்காக ஒரு பாவமும் அறியாத நாங்கள் கொல்லப் பட்டோம்' என்று வழக்கு தொடர்வார்கள் என்று இந்த வசனம் சொல்லிக் காட்டுகிறது.

'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.'

-குர்ஆன் 17 : 31


'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்ட பெண் குழந்தை மறுமை நாளில் விசாரிக்கும் போது'

-குர்ஆன் 81 :8,9


//புதன் கிழமை (அதாவது நேற்று) நைஜீரியாவில் கடுனா என்ற இடத்தில 2 குண்டுகள் வெடித்து 42 பேர் அல்லாவின் அடி சேர்ந்தனர். அது மட்டுமா? பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 23 பேர் இறந்து 40 பேர் காயமுற்றனர். (இவை இரண்டும் இன்று வந்த செய்திதாளின் செய்தி. இப்படி தினசரி வந்த வண்ணம்தான் உள்ளது)//

ஈராக், நைஜீரியா, லிபியா, சிரியா போன்ற நாடுகள் முன்பு அமைதி தவழும் நாடுகளாகவே இருந்தன. அங்குள்ள கனிம வளங்களை சுரண்டுவதற்காக அமெரிக்காவும் அதன் அடிவருடியான இஸ்ரேலும் ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்ற பொய்க் காரணத்தை கூறி அந்த நாடுகளின் மீது பொர் தோடுத்தனர். லிபியாவில் கடாபியை எதிர்க்கும் குழுவுக்கு ஆதரவு நல்கினர். அன்றிருந்து அந்த நாடுகள் நிம்மதி இழந்து தவிக்கிறது. இதற்கு முழு காரணமும் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் ஆகும். நமது நாட்டிலும் குண்டு வெடிப்புகள், பெண் கொடுமை, கொலைகள் தினமும் நடந்தே வருகின்றன. அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் சீரழிந்ததாக காட்ட முடியுமா?

//சரியாக இருந்தால் அவரை பின்பற்றும் முஸ்லிம்கள் இந்த குற்றங்களை செய்ய கூடாதே! ஏனென்றால் மனிதர்களை நேர்வழி படுத்ததானே குரான் அருளப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் திருந்தவில்லையே!//

நபியையும் குர்ஆனையும் அனுப்பி கூடவே ஷைத்தானையும் இறைவன் அனுப்பியுள்ளான். நல் வழியில் செல்லாமல் தடுப்பது இந்த சாத்தானின் வேலை. அதனையும் மீறி இந்த பரீட்சையில் வெற்றி பெறுபவர்களே பாக்கியசாலிகள்.

//அது என்ன பெரியார் மண்? புதுசா ஏதேனும் சந்தையில் வந்திருக்கா?//

பெரியாரை அதிகம் மதிக்கும் அவரது கொள்கைகளை அதிகம் பின் பற்றும் இந்துக்களை கொண்ட நாடு நமது தமிழ்நாடு என்பது அதற்கு அர்த்தம்.

//வன்முறை பெரியார் மண்ணில் ஏற்படாது என்றால் அந்த ராமசாமி ராமரை செருப்பால் அடித்தாரே அதற்கு வன்முறை என்று பெயரில்லையா? உங்களுக்கு அது நன்முறையா?//

பெரியார் ராமர் என்ற மனிதனை அடிக்கவில்லை. ராமர் என்ற சிலையைத்தான் அடித்தார். அந்த அளவு அந்த மதத்தினால் பாதிப்படைந்ததனால் எழுந்த ஒரு வேகம் அது. ஆனால் பலரும் மதிக்கும் ஒருவரின் சிலையை இவ்வாறு பொதுவில் அடித்தது எனக்கு உடன்பாடு இல்லை. அது மேலும் குழப்பங்களையே உண்டு பண்ணும் என்பதே எனது நிலை. கல்வியிலும் சமூக அந்தஸ்திலும் தமிழர்களை தலை நிமிரச் செய்ததில் பெரியாரின் பங்கை அவ்வளவு லேசாக மதிப்பிட முடியாது. ஆனால் அதற்கு பின்னால் வந்த அவரது தம்பிகள் தங்களின் வாரிசுகளை முன்னிறுத்தி பெரியாரின் வழியை புறக்கணித்ததால்தான் இன்று தமிழன் டாஸ்மார்க்கில் க்யூவில் நிற்கிறான். உங்கள் ஆர்எஸ்எஸிடம் சொல்லி குடியால் அழியும் தமிழர்களை காக்க முயற்சி செய்யுங்கள்.


5 comments:

ஆனந்த் சாகர் said...

//எந்த வயதில் இறக்கிறீர்களோ அந்த உருவத்திலேயே எழுப்பப்படுவீர்கள். //

ஆணும் பெண்ணும் எல்லோருமே 30 வயது வாலிபர்களாக எழுப்பப்படுவார்கள் என்றல்லவா ஹதீத் கூறுகிறது?

ஆனந்த் சாகர் said...

//ஒரு துளி இந்திரியத்தில் தாய் தகப்பனின் முகம், நிறம், குரல், குணம் என்று அனைத்தையும் ஜிப் செய்து அடைத்து வைத்த இறைவனால் ஒரு குழந்தையை பேச வைக்க முடியாதா?//

ஆணின் விந்துவில் உள்ள உயிரணுவில் பெண்ணின் முகம், நிறம், குரல், குணம் எதுவும் அடங்கி இருக்கவில்லை. தாய் தகப்பனின் முகம், நிறம், குரல், குணம் ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் சேர்ந்து உருவாகும் கருவில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. பொய்யும் புரட்டும் கலந்தே
நீர் அறிவியல் பேசுகிறீர்.

குழந்தையை பேசவைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது அல்லாஹ்வுக்கு? குழந்தை பேசவில்லை என்றால் அல்லாஹ்வுக்கு தெரியாதா? அப்படியானால் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் என்று குர்ஆனில் வெற்று ஜம்பம் அடித்துகொள்கிறானா?

ஆனந்த் சாகர் said...

/நபியையும் குர்ஆனையும் அனுப்பி கூடவே ஷைத்தானையும் இறைவன் அனுப்பியுள்ளான். நல் வழியில் செல்லாமல் தடுப்பது இந்த சாத்தானின் வேலை./

அல்லாஹ் ஷைத்தானை ஏன் படைத்து மனிதர்களை சீரழிக்க அனுப்ப வேண்டும்? அப்படியானால் ஷைத்தானை படைத்த அல்லாஹ்தான் முதல் குற்றவாளி. குற்றம் செய்தவனைவிட அதை செய்ய சொல்லி ஏவி விடுபவன்தான் முதல் குற்றவாளி என்று நம் சட்டம் சொல்கிறது.

// அதனையும் மீறி இந்த பரீட்சையில் வெற்றி பெறுபவர்களே பாக்கியசாலிகள்.//

அல்லாஹ் ஏன் பரீட்சை வைக்க வேண்டும்? மனிதர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்று பரீட்சை வைக்காமல் அல்லாஹ்வால் தெரிந்துகொள்ள முடியாதா? மனிதர்களின் இயல்பை அறிந்துகொள்ள முடியாத அல்லாஹ் எப்படி இறைவனாக இருக்க முடியும்? அல்லது தெரிந்துகொண்டே பரீட்சை வைத்தால், பிறகு அவன் சாடிஸ்ட் மாபியா தலைவன் போன்றவன்தான்.

ஆனந்த் சாகர் said...

//அன்றைய அரபுகள் நபிகள் காலத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தால் அதனை உயிரோடு புதைத்து விடுவார்களாம்.//

இதுவும் ஒரு இஸ்லாமிய பொய். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் பெண் குழந்தைகளை கொன்றிருக்கலாம். அரபுகள் பெண் சிசுக்களை பெருவாரியாக கொன்றுகொண்டு இருந்திருந்தால் பெண்களே அரபு சமூகத்தில் இருந்திருக்கமாட்டார்கள். ஆனால் ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராக பெண்களும் அரபு சமூகத்தில் இருந்தார்கள். அதனால்தான் பல அரபுகள் பல பெண்களை மணந்துகொள்ள முடிந்தது. பெண்கள் சமூகத்துக்கு தேவை என்பதை அரபுகள் அறியாதவர்களா என்ன? ஏதோ முஹம்மது வந்துதான் பெண் குழந்தை கொலைகளை தடுத்து நிறுத்தி, அதன் பிறகுதான் பெண்கள் அரபு சமூகத்தில் வாழ முடிந்தது என்பதுபோல முஸ்லிம்கள் இட்டுகட்டி பொய் பிரசாரம் செய்கிறார்கள். முகம்மதுவுக்கு முன்வரை பெண்கள் அரபு சமூத்தில் ஆண்களுக்கு நிகராக அந்தஸ்துடன் வாழ்ந்தார்கள். அதற்கு கதீஜாவே சாட்சி. அவர் பெண்ணாக இருந்துகொண்டு வியாபாரம் செய்து சமூகத்தில் அந்தஸ்துடன் இருந்தார். முஹம்மது வந்த பிறகுதான் அரபு சமுதாயம் பெண்ணடிமை சமுதாயமாக மாறியது. அப்படி அந்த சமூகத்தை மாற்றியது முஹம்மதுதான்.

ஆனந்த் சாகர் said...

//பெரியாரை அதிகம் மதிக்கும் அவரது கொள்கைகளை அதிகம் பின் பற்றும் இந்துக்களை கொண்ட நாடு நமது தமிழ்நாடு என்பது அதற்கு அர்த்தம்.//

மிகப்பெரும்பாலான தமிழர்கள் பெரியாரின் கொள்கைகளை ஏற்கவில்லை. ஒரு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெரியார் என்று பேசிக்கொண்டு திரிகிறார்கள். உமது இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கும் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இருப்பினும் நீர் பெரியார்,பெரியார் என்று ஊளையிடுவது நல்ல வேடிக்கையாக இருக்கிறது.