Followers

Sunday, April 11, 2021

சக நண்பன் பட்ட வலியை எண்ணி குமுறும் ஒரு இதயம்!

 

சக நண்பன் பட்ட வலியை எண்ணி குமுறும் ஒரு இதயம்!

 

இந்த #Thread போடணும் நினைக்கல ஆனா #கர்ணன் படம் பார்த்திட்டு ஒவ்வொருத்தரும் பலவிதமா பேசுறதால நான் என் வாழ்க்கையில நடந்த, என்னால மறக்க முடியாத ஒரு சம்பவத்தை இங்க share பண்றேன். நான் பிறந்து வளர்ந்தது ஊட்டியில், ஸ்கூல் படிச்சதும் அங்க தான். கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தேன்.

 

இங்க பல ஊர்ல இருந்து வந்து தங்கி படிக்குற பசங்களோட பழகி நட்பாகுற வாய்ப்பு கிடைச்சது. யாரும் யாரையும் சாதி, மதம் எல்லாம் வச்சி என்னைக்கும் பேசவோ அப்படி யோசிச்சது கூட கிடையாது. இறுதி ஆண்டு படிக்கும் போது நண்பன் ஒருத்தன் அவங்க அக்கா கல்யாணத்துகாக பசங்க எல்லாரையும் அழைச்சிருந்தான்.

 

கல்யாணத்துக்கு எல்லாரும் ஒரு நாள் முன்னாடியே வரணும்னு அவன் கட்டாயப்படுத்துனதால நாங்க ஒரு ஆறு பேர் முன்னாடி நாளே அந்த பையன் வீட்டுக்கு போனோம். அது திண்டுக்கல் பக்கத்துல ஒரு இடம். எல்லாரையும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் முதல்ல குடிக்க ஜூஸ் குடுத்து உபசரிச்சாங்க அவனோட அம்மா அப்பா.

 

எல்லாரும் ஜூஸ் குடிச்சிட்டு பேசிட்டு‌ இருந்தோம். அப்போ அங்க ஒருத்தர் வந்தாரு. அவர் என் நண்பனோட தாய்மாமா.. அவர் எங்களோட பேசிட்டு இருந்தாரு. திடீர்னு அவர் எங்க கூட வந்திருந்த என்னோட இன்னொரு நண்பனை பார்த்து நீ எந்த ஊருன்னு கேட்டாரு. அவன் சிவகங்கை பக்கத்துலனு சொன்னான்‌‌.

 

எங்ககிட்ட பேசிட்டு அவரு உள்ள போயிட்டாரு. கொஞ்ச நேரத்துல எல்லாரையும் சாப்பிட கூப்டாங்க. அப்போ என் நண்பனோட தாய்மாமா வந்து அந்த சிவகங்கை பையனை வீட்டுக்கு வெளியில கூட்டிட்டு போனாரு. நான் ஏதோ அவரு சும்மா பேச கூட்டிட்டு போறாருன்னு நினைச்சேன். நாங்க எல்லாரும் சாப்பிட உட்கார்ந்துட்டோம்.

 

என்ன அவனை காணலயே அவனை கூட்டிட்டு வர்றேன்னு என்னோட இன்னொரு பிரண்ட் வெளியில போனான். அவன் சென்னைகார பையன். (அவன் ட்விட்டர்ல கூட இருக்கான்). கொஞ்ச நேரத்துல வீட்டிக்கு வெளியில ஒரே கூச்சல் சத்தம். உடனே நாங்க எல்லாரும் வெளியில ஓடி போனோம். அங்க அந்த சென்னை பையனும் அந்த தாய் மாமாவும்

 

கட்டி உருண்டு சண்டை போட்டுட்டு இருக்காங்க. அந்த சிவகங்கை நண்பன் குறுக்க விழுந்து தடுத்திட்டு இருக்கான். நாங்க எல்லாரும் பதறிப்போய் சண்டையை நிறுத்தி என்னடா பிரச்சினைன்னு கேட்டதும் அந்த சென்னை பையன் சொன்னான். டேய் இவனுங்க இவனை மட்டும் திண்ணையிலிருந்து சாப்பிட சொல்றாங்கடா அப்படின்னு அப்போ தான் தெரிஞ்சுது அந்த பையனை சாதி பார்த்து கீழ்சாதினு வெளியில உட்கார்ந்து சாப்பிட சொல்லிருக்காங்கனு. கல்யாணத்துக்கு கூப்பிட்ட அந்த வீட்டு நண்பன் சிவகங்கை பையன்கிட்ட சாரி டா மச்சான்னு வீட்டுக்குள்ள இழுத்தான். அப்போ அந்த தாய்மாமா மறுபடியும் கெட்ட வார்த்தையில திட்டுனான்.

 

சரி இனிமே பிரச்சினை வேணாம் நாங்க யாரும் இங்க சாப்டல, இங்க தங்கல.. திண்டுக்கல்ல லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கிக்குறோம். நாளைக்கு கல்யாணத்துக்கு கோவிலுக்கு வர்றோம்னு சொல்லிட்டு நாங்க நண்பர்கள் எல்லாம் திண்டுக்கல்ல ரூமுக்கு வந்தோம்.

 

ரூமுக்கு வந்ததும் என் சிவகங்கை நண்பன் சொன்னான் ஏன்டா இப்படி பிரச்சினை பண்ணீங்க. இதெல்லாம் எனக்கு ஒரு கஷ்டமே இல்ல எனக்கு இதெல்லாம் புதுசும் இல்ல. நான் வெளியில உட்கார்ந்தே சாப்ட்ருப்பேன். இப்போ கல்யாண வீட்டுக்கார நண்பனுக்கு தானே சங்கடமா இருக்கும்னு சொல்லி பீல் பண்னான்.

 

நாங்க அவன்கிட்ட இந்த கல்யாணத்த விட நீ தான்டா எங்களுக்கு முக்கியம்னு சொல்லி அன்னைக்கு நைட் அந்த ரூம்ல தூங்கிட்டு அடுத்த நாள் கல்யாணத்த பார்த்திட்டு எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு கிளம்புனோம். நான் ஊட்டிக்கு பஸ்ல கிளம்புனேன். அந்த பயண நேரம் முழுவதும் எனக்கு மனசுக்கு பாரமா இருந்திச்சு.

 

பிறந்து வளர்ந்ததுல இருந்து நான் யோசிக்காத விஷயங்களை அன்னைக்கு யோசிச்சேன். எப்படி அந்த கல்யாண வீட்டுல அந்த தாய்மாமா என்னோட நண்பனை இந்த சாதி தான்னு தெரிஞ்சிக்கிட்டார்னு எனக்கு இதுவரை தெரியல. எப்படி அந்த வலியை என் நண்பன் தாங்குனானோ நினைக்கும் போது இப்பவும் எனக்கு கண்ணீர் வருது..

 

கர்ணன்‌ படம் பார்த்திட்டு வரும் போது இது தான் மறுபடியும் நியாபகம்‌ வந்திச்சு. என் வாழ்க்கையில நான் எப்படிபட்ட மனுஷனா இருக்க கூடாதுன்னு முடிவு செஞ்சதும், இந்த சமூகத்துல, அரசியல்ல என்னுடைய நிலைபாடு எப்படி இருக்கணும்னு என்னை மாத்துனதுக்கு அந்த சம்பவம் தான் ஆணிவேரா இருந்திருக்கலாம்..

 

இத நான் எழுதனதே என் நண்பனை மாதிரி சமூகத்துல ஒடுக்கபடுறதை, சிறுமைபடத்தபடுறதை சகிச்சிட்டு வாழுற மக்கள் காலம் காலமா இருக்காங்க..இனி வரும் தலைமுறையாவது இதெல்லாம் இல்லாம வாழணும்னா ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இன்னும் சத்தமா கேட்கணும். ஒரு கர்ணனை போல, பரியேறும் பெருமாளை போல.

 

ஆக்கம்

-Jerish




 

1 comment:

Dr.Anburaj said...


”தீண்டாமை” என்பது எல்லா காலங்களிலும் எல்லா சமூக குழுவிலும் காணப்படும் ஒரு ஈனத்தனம்.

உடலால் பணத்தால் மக்கள் ஆதரவு பலத்தால் உறவுகள் பலத்தால் . . .. இப்படி பலம் பெறும் மனிதர்கள் மனித குழுக்கள் தங்கள் திமிரை பிறரிடம் காட்டும் ஒரு குணம்தான் தீண்டாமை.
பிற சமூக மக்களை காபீர்கள் என்று வெறுத்து கொல்லலாம் என்பதும் அரேபிய தீண்டாமைதான்.

சாதி இரண்டொழிய வேறில்லை ...... இட்டாா் பெரியோா் இடாதாா் இழி குலத்தோா் என்று ஔவை பாடி சாதியை சாதி பெருமையை சாதி சிறுமையை கண்டித்து விட்டாா்.
பறைச்சி போகம் வேறா பனத்தி போகம் வேறா” -பறைச்சியிடம் கிடைக்கும் பாலியில் இன்பம் பிறாமண பெண்ணிடமும் கிடைக்கும் - எல்லாம் ஒன்றுதான் என்கிறாா் பாம்பாட்டி சித்தா்.
மனித ஆணவம் இப்படி பல உரு எடுத்துக் கொண்டேயிருக்கிறது.

மாளிகைக்குள் குப்பைகள் விழுகிறது.
துப்புறவு பணிகள் தொய்விலாமல் தொடர வேண்டும்.
.
மனித ஆணவத்தின் மேற்படி அடையாளங்களை அம்பேத்கா் நகரிலும் இன்றும் காணலாம். அகரகாரத்திலும் இன்றும் காணலாம். காரணம் அது சாதி அடிப்படையில் அன்று. மனதில் உள்ள ஆணவம் கன்மம் அகங்காரம் . .மமகாரம் . .. .காரணமாக அமைவது.