Followers

Wednesday, September 03, 2014

'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்பு?



(வட மாநிலங்களில் தலித் பெண்களை கற்பழிப்பதும் அதன் பிறகு அவர்களை தூக்கில் மாட்டி தொங்க விடுவதும் ஆதிக்க சாதிகளுக்குரிய இலக்கணம் என்ற பொது புத்தி அந்த மக்களிடம் வேருன்றி இருப்பதற்கு வட மொழியில் இயற்றப்பட்ட மனு ஸ்ருமிதியே காரணம் எனலாம்)

'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்பு?

செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தினத்தில் “குரு உத்சவ்” கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு மத்திய மனித வள ஆற்றல் துறை அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. இந்த சுற்றறிக்கையானது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டும் அல்ல. கல்கத்தாவில் நிலைமை எப்படி என்பதையும் பார்போம்.

கோல்கட்டா: 'குரு உத்சவ்' எனும் ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மோடியின் உரையை கேட்க எந்தவித ஏற்பாடுகளையும் மேற்கு வங்க அரசு இதுவரை செய்யவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மோடியின் உரையை புறக்கணிக்க உள்ளன. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், மோடியின் உரையை கேட்க தேவையான உள்கட்டமைப்புகள் இங்கு இல்லை. ஆசிரியர் தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மம்தா ஆசிரியர்களை கவுரவிக்க உள்ளார் என கூறினார்.

இந்தியா என்பது தங்களுக்கு என தனியான கலாச்சாரம், மொழி, சமுக அமைப்பு ஆகியவற்றை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைகண்டம். இந்த துணைகண்டம் ஒரே நாடாக உருவானதற்கு மொகலாயர்களும் ஆங்கிலேயர்கள்தான் முக்கிய காரணம். சுதந்திரத்திற்கு பிறகு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் எல்லா தேசிய இனங்களும் வாழ்ந்து வருகின்ற இந்தியாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் இந்தியா என்பது இந்தி அல்லது சமஸ்கிருதம் பேசுகின்றவர்களுக்கு மட்டுமே உரியது போல நினைத்து மற்ற தேசிய இனங்கள் அவர்களை சார்ந்து வாழ வேண்டும் அல்லது அவர்களது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதை மறுப்பவர்கள் தேசிய விரோதிகள் என நினைத்து செயல்படுகிறார்கள். இது பல இனங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நமது இந்தியாவை கூறு போடும் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.

பல மொழிகளை கற்றுக் கொண்டால் நன்மைதானே? இதில் என்ன பிரச்னை என்று கேட்பவர்களுக்கு சில விளக்கத்தை தர முயற்சிக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆங்கில மொழி, அரபு மொழி, உருது மொழி, கன்னட மொழி, தெலுங்கு மொழி போன்ற பல தரப்பட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் பல கல்வி சாலைகள் சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதனை யாரும் எதிர்க்கவில்லை. அந்த மொழி பேசுபவர்களோடு அண்ணன் தம்பிகளாக தமிழர்கள் பழகியே வருகின்றனர். இந்து மதத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படும் வட மொழியான சமஸ்கிரதத்தை மட்டும் ஏன் தமிழர்கள் வெறுக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன?

ஆங்கில மொழியோ, அரபு மொழியோ அல்லது உருது மொழியோ தமிழனின் வாழ்வோடு சம்பந்தப்படாத ஒன்று. வருமானத்திற்காகவும், வேலைக்காகவும் விரும்பியவர் படித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் விட்டு விடலாம். ஆனால் வட மொழியின் வரலாறு அப்படியா?

கண்டிப்பாக இல்லை. ஆரிய படையெடுப்பினால் தமிழன் எழுதிய எத்தனையோ லட்சக்கணக்கான ஓலைச் சுவடிகள் பொக்கிஷங்கள் சூறையாடப்பட்டன: பல நெருப்பில் இட்டு கொளுத்தப்பட்டன: மேலும் பல ஆறுகளில் கொட்டி தண்ணீரோடு தமிழனின் கலாசாரத்தையும் விரட்டியது ஆரியம். அதன் காரணமாக கோவில்களில் இருந்த தமிழ் வழிபாடு துடைக்கப்பட்டு சமஸ்கிரத மந்திரங்கள் வலிந்து புகுத்தப்பட்டன.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றும் பரந்த மனப்பான்யோடு வாழ்ந்த தமிழனின் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட்டு மனிதர்களை பிளவு படுத்தும் வர்ணாசிரம கோட்பாடுகளை இறக்குமதி செய்தது ஆரியம். தலையில் பிறந்தவன் பார்பான்: காலில் பிறந்தவன் சூத்திரன் என்று போதிக்கப்பட்டு தீண்டாமை வலிந்து புகுத்தப்பட்டது. வெற்றி பெற்ற ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தனை விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி அதனை சரியென்று மனு தர்மத்தை கொண்டு போதிக்கவும் செய்தனர். எத்தனையோ பெரியார்கள் முயற்சித்தும் இந்த ஆரிய மாயையை ஒழிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்ததனால் இன்று ஓரளவு பார்பனர் அல்லாதவர்கள் சில முக்கிய பொறுப்புகளில் அரசு வேலைகளில் அமர்த்தப்பட்டனர். இருந்தும் அவர்களையும் இயக்கும் முக்கிய பொறுப்புகளில் பார்பனியம் அமர்ந்து தங்களின் காரியத்தை தயக்கமின்றி நிறைவேற்றி வருகிறது.

அதன் வெளிப்பாடுதான் 'சமஸ்கிரத வாரம்' என்றும் 'குரு உத்ஸவ்' என்றும் அவ்வப்போது தமது அரிப்பைக் காட்டிக் கொண்டு பிறகு குட்டுப்பட்டவுடன் அதற்கு ஏதாவதொரு விளக்கத்தை கொடுத்து சமாளிக்கப் பார்க்கிறது பார்பனியம். எனவேதான் மற்ற மொழிகளை ஆதரிக்கும் தமிழர்கள் சமஸ்கிரதம் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். இஸ்லாமியனான எனக்கு சமஸ்கிரதம் என்பது இறைவன் படைத்த பல மொழிகளில் ஒன்று என்று கருதி அதனையும் மதிக்கிறேன். ஆனால் இந்த சமஸ்கிரதத்தால் பாதிப்படைந்த கோடிக்கணக்கான திராவிடர்கள் நஞ்சாக இந்த மொழியை வெறுப்பது அவர்களை பொறுத்த வரை நியாயமான ஒன்றே. பாதிப்படைந்தவனுக்குத்தானே அதன் வலி தெரியும்.

எனவே மோடி ஆட்சியானது சரிந்து வரும் பொருளாதாரத்தை சரிகட்ட என்ன முயற்சியோ அதை எடுக்கட்டும். அதை விடுத்து கொலைகாரி சாது பிரக்யாசிங், கொலைகாரன் அசீமானந்தா, போன்றவர்களை பிணையில் விடுவிப்பதும் சமஸ்கிரத வாரம் என்றும் 'குரு உத்ஸவ்' என்றும் இந்துத்வா கொள்கைகளை மறைமுகமாக புகுத்த நினைத்தால் அது இந்து மதத்தை மேலும் பலவீனமாக்கும். தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாத்தில் இணைவது அதிகரிக்கும். நமது இந்திய பொருளாதாரம் சாதி, இன, மொழி சண்டைகளால் மேலும் பலவீனமடையும்.

இந்தியாவை ஆண்ட மிக மோசமானவர்களில் ஒருவராக மோடி குஜராத் கலவரத்தின் மூலம் பெயர் எடுத்துள்ளார். அந்த பெயரை தனது சிறந்த ஆட்சியின் மூலம் மாற்ற மோடி முயற்சிக்கட்டும். அதை விடுத்து இது போன்ற முயற்சிகள் தொடருமானால் வரும் ஐந்தாண்டுகளில் திரும்பவும் காங்கிரஸ் அரியணை ஏறும். பிஜேபி என்ற ஒரு கட்சியே சுத்தமாக துடைத்தெறியப்படும். பிஜேபிக்கு சவக் குழி தோண்டும் இது போன்ற காரியங்களை இனியாவது இவர்கள் செய்யாதிருப்பார்களாக!

-------------------------------------------------

கற்பழிப்புகளில் விரைவில் இந்தியா முதலிடத்தை நோக்கி நகரும் அபாயம் – அதிர்ச்சி தகவல் :

தேசிய குற்ற ஆவண காப்பகம் National Crime Record Archive வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 3,425 பெண்கள் கற்பழிக்கப்பட்டு மத்திய பிரதேசம் முதலிட்டதிலும், 2,049 பெண்கள் கற்பழிக்கப்பட்டு உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும், 737 பெண்கள் கற்பழிக்கப்பட்டு தமிழகம் நான்காம் இடத்திலும் உள்ளன.

பெண்கள் தனித்து நடமாடுவதற்கு மிகவும் அச்சத்திற்குள்ளான நகரங்களாக டெல்லியும், பம்பாயும் இருப்பதாக கூறப்படுகிறது. ஏதோ பெரியார் போன்றவர்கள் இந்துத்வாவுக்கு தமிழகத்தில் முடிந்த வரை கடிவாளம் போட்டு வைத்திருந்ததனால் தமிழகம் முதல் இடத்தை பிடிக்காமல் தப்பித்தது.

1 comment:

tamilan said...

நரியைப் பரியாக்கியதாக பித்தலாட்டம்!

பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவிருந்த மாணிக்கவாசகன் என்ற நாயன்மார், அரசன் குதிரை வாங்கக் கொடுத்தனுப்பிய பணத்தைக் கொண்டு, கோவில் கட்டினான்.
அரசன் கோபம் கொண்டு மாணிக்கவாசகனைச் சிறையில் அடைத்தான். மாணிக்கவாசகனுக்கு அந்தக் கோவிலில் குடிகொண்ட சிவன் உதவிக்கரம் நீட்டினானாம். காட்டில் உள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கிக் கொடுத்தானாம்.
மன்னன் மகிழ்ச்சி அடைந்தான்; தலைக்கு வந்த கத்தியின் வீச்சிலிருந்து தப்பினோமே என்று சிவனடியான் மாணிக்கவாசகனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்; ஆனால், குதிரைகள் நரிபோல ஊளையிட மன்னன் அதிர்ச்சி அடைந்தான் என்று புராணத்தில் புளுகுகள் உச்சவரம்பின்றி அவிழ்த்துக் கொட்டப்பட்டுள்ளன.

இப்பொழுது என்ன வந்தது? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு கூத்து நடந்துள்ளது. ஆண்டுதோறும் நரியைப் பரியாக்கும் கோவில் திருவிழா நடக்கிறதாம். திரு விழாவுக்கு உயிருள்ள நரியைக் கொண்டு வரவேண்டும் என்று பக்தர்கள் அடம்பிடிக்கிறார்களாம் (அடம்பிடித்தவர்களின் கணக்கு வைத்துள்ளனரா?).

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்புவரை உயிருள்ள நரியைக் கூண்டில் வைத்துக் கொண்டு வருவது நடந்து கொண்டுதானிருந்தது. திருவிழா முடிந்த பிறகு நரியைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவார்களாம்.
பாதுகாக்கப்படவேண்டிய விலங்குகளின் பட்டியலில் நரி உள்ளதால், அதனைக் கூண்டில் வைத்துக் கொண்டு வரக்கூடாது என்று சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாக உண்மையான நரிக்குப் பதிலாகப் பொம்மையைக் கொண்டு வந்து காட்டி பக்தி விளையாட்டை ஆடினார்கள்.

இவ்வாண்டு உயிருள்ள நரியைக் கொண்டு வருவது என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வனத்துறை அதிகாரி நிகர் ரஞ்சன் கறாராக கோவில் அறங்காவலருக்குக் கடிதம் எழுதிவிட்டார்.


1972 இல் பிறப்பிக்கப்பட்ட வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி நரியை விரட்டிப் பிடிப்பதோ, பிடிக்க முயற்சித்து விஷம் வைப்பதோ, வலை விரிப்பதோ, கொல்லுவதோ பிணையில் வெளியே வர முடியாத தண்டனைக்குரிய குற்றங்களாகும்! குறைந்தபட்சம் ஓராண்டுமுதல் ஆறு ஆண்டுகள்வரை தண்டனை உண்டு என்று தெரிவித்ததோடு காட்டுப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு ஆணை பிறப்பித்துவிட்டார்.

வேறு வழியின்றி கடந்த மூன்று ஆண்டுகளாக அரங்கேற்றிவரும் பொம்மையை வைத்து விளையாடும் பிள்ளை விளையாட்டு நடைபெறவுள்ளது.

பக்தர்களாக இருந்தாலும் சரி, நம்பிக்கையாளர்களாக இருந்தாலும் சரி - அவர்களைப் பார்த்து நாம் எழுப்பக்கூடிய சில வினாக்கள் உண்டு.

1. அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் அரசன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் கடமையைச் செய்யாமல், கோவில் கட்டினானே, அது கடமை தவறிய செயல் அல்லவா? அப்படிக் கடமை தவறிக் கோவில் கட்டிய தம் பக்தனை திருப்பெருந்துறை உறையும் சிவன் தடுத்து நல்ல புத்தியைப் போதித்து இருக்கவேண்டாமா?

2. அரசன் மாணிக்கவாசகனைச் சிறையில் தள்ளிய நிலையில், சிவன் தவறான வழியில், தன் பக்தனைக் காப்பாற்றலாமா? அதுவும் நரியைப் பரியாக்கிய பித்தலாட்டத்தை ஒரு கடவுளே மேற்கொள்ளலாமா? சரி நரியைப் பரியாகத்தான் ஆக்கினாரே, கடைசிவரை அவை குதிரைகளாகவே இருக்கச் செய்யும் சக்தி அந்தக் கடவுளுக்குக் கிடையாது என்பதை நாணயமாக ஒப்புக் கொள்வார்களா?

3. கடவுளுக்குச் சக்தியிருந்தால் ஏன் நரிகளைப் பரியாக்கவேண்டும்? நேரடியாகவே குதிரைகளை தம் சர்வ சக்தியால் உண்டாக்கிக் கொடுத்திருக்கவேண்டாமா?

4. நரியைப் பரியாக்கிப் பக்தனைக் காப்பாற்றியது தற்காலிகமாகத்தானே - நிரந்தரமாக கடவுளால், தன் ஆருயிர் முட்டாள் பக்தனை ஏன் காப்பாற்றவில்லை?

5. சரி... எந்தக் காலத்திலோ எழுதி வைத்த இந்தப் புராணப் புளுகு மூட்டையை, ஒழுக்கக்கேட்டை ஆண்டு தோறும் விழாக் கொண்டாடிப் புதுப்பிக்கவேண்டுமா?

கடவுள் பக்தி என்பது ஒழுக்கக்கேட்டை போதிக்கலாமா?

மாணிக்கவாசகரே குற்றம் செய்து இருக்கிறார்; அந்தக் குற்றத்துக்குக் கடவுளே துணை போயிருக்கிறார் என்கிற போது, நாமும் குற்றம் செய்தால், அது என்ன தவறு என்று பக்திப் போதை தலைக்கேறிக் கிடக்கும் மக்கள் மத்தியில் விதைக்கத்தானே இந்தக் கோவில் திருவிழாவின் நிகர பலாபலன்!

நாட்டில் ஒழுக்கம் வளர வேண்டுமானால், முதலில் இந்து புராணங்களையெல்லாம் மூட்டை மூட்டையாகக் கட்டி பொது இடத்தில் எரித்துச் சாம்பலாக்கவேண்டாமா?

இந்தப் பொய்க்கதைகளை அடித்தளமாகப் போட்டுக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில்களிலிருந்து பொம்மைக் கடவுள்களை அகற்றிவிட்டு, அந்தக் கோவில் கட்டடங்களைக் கல்விக் கூடங்களாகவோ, பொதுநல மன்றங்களாகவோ ஆக்கினால், அதனைத்தான் மக்கள் நல அரசாகக் (Welfare State) கருத முடியும்.

அல்லது குறைந்த பட்சம் இதுபோன்ற ஒழுக்கக்கேடான திருவிழாக்களை யாவது தடை செய்ய வேண்டாமா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page-2/87016.html#ixzz3CJfNUsCl