Followers

Sunday, June 04, 2017

சூரியன் நகர்வது உண்மையா?



'இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் 21:33

ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் ஓடுகிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

அறிஞர் ஹெர்ஷலின் கண்டுபிடிப்பு!

அறிஞர் ஹெர்ஷவின் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவியல் அறிஞர் டூயிக் பின்வருமாறு விளக்குகிறார்.

'ஏனைய நட்சத்திரங்களைப் போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத் தொகுதி ஒன்றில் பிரகாசமான வேகா எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையில் உள்ள தூரம் கூடிக் கொண்டே வருவதைக் கவனித்தார். அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார்.

இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்கு காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார்.

இதை தெளிவாக விளங்குவதற்கு ஹெர்ஷல் ஒரு உதாரணத்தையும் கொடுக்கிறார். ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாக கற்பனை செய்வோம். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வருவதாகவும் உணர்வீர்கள். இந்த தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது. சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்தத் திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சந்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிகிறது. இதே போல் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமேயாகும்.

-அஸ்ட்ரானமி ஃபார் எவ்ரிமேன், பக்கம் 297-98

இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் எத்தனை அறிஞர்கள் இரவு பகல் பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஆய்வுகளையும் மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்லும் குர்ஆனின் வார்த்தைகள் வெறும் மனிதனின் வார்த்தை என்று எண்ண முடியுமா?

'சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
-குர்ஆன் 13:2

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39:5

Posted by சுவனப் பிரியன் at 2:57 PM

1 comment:

Dr.Anburaj said...

observation என்பது விஞ்ஞானம் ஆகாது.குரானில் சொல்லப்படுவது விஞ்ஞானம் அல்ல. குரானின் காணப்படும் பல சங்கதிகள் எகிப்திய காபீா்கள் கண்டுபிடித்ததுதான்.