Followers

Saturday, May 26, 2018

#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..?


#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..?
நமக்கு வாய்த்த தகுதியற்ற அறிவுகெட்ட முட்டாள்கள் அல்லது எல்லாம் தெரிஞ்ச மக்கள் விரோத கொடூர கயவர்களான பணவெறி அரசியல்வாதிகள்... 'ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்தவன் நீதான்... அடிக்கல் நாட்டியவள் நீதான்... திறந்து வச்சவன் நீதான்... ' என்றெல்லாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். இதனால் ஒரு பயனும் மக்களுக்கு இல்லை.
ஆகவே, பிரச்சனையின் ஆணிவேர் பற்றி பேசுவோம். ஸ்டெர்லைட்டில் இரண்டே இரண்டு விஷயங்கள் இல்லை என்றால் மகாராஷ்டிரா மக்கள் ஆதரவே அன்று ஸ்டெர்லைட்டுக்கு கிடைத்திருக்கும். ஆனால்... அந்த 2 விஷயத்தில்தான்... அனைவரையும் ஸ்டெர்லைட் ஏமாற்றியதால்... எதிர்ப்பு வலுவடைகிறது. அவை என்ன..?
அந்த 2 முக்கிய அம்சங்கள்:
1-
சல்ஃபர்-டை-ஆக்ஸைடு (SO2)
2-
அர்செனிக் (As)
SO2 ஓர் ஆபத்தான நச்சுவாயு. காற்றில் 10 லட்சத்தில் 5 பங்குக்கு மேலே என்ற அளவில் இவ்வாயு காற்றில் கலந்து இருந்தால் அக்காற்று மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்த அளவில் இவ்வாயு மூச்சுத்திணறல், நுரையீரல் நோய், குமட்டல், வாந்தி, தோல் எரிச்சல், கண் எரிச்சல் ஆகியனவும் அதிகளவில் எனில் இறப்புக்கும் வழிவகுக்கும்.
As அதிபயங்கரமான நச்சுத்தனிமம். நிலம் & நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு காரணம். 10 கோடியில் 1 பங்குக்கு மேலே என்ற அளவில் இத்தனிமம் நீரில் / நிலத்தில் கலந்து இருந்தால் அந்த நீரும் நிலமும் மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்நிலையில் மாசுபட்ட நிலத்தடி நீரை உட்கொண்டால் சிறுநீரக மண்டலம் உட்பட பல இடங்களில் கேன்சர் வரும். அந்த நிலத்தில் வளரும் தாவங்களிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அந்த தாவரங்களை உட்கொள்ளும் போதும் செரிமான மண்டலத்தில் கேன்சர் வரும்.
ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை உற்பத்தி பொருள் காப்பர்(Cu). தாமிரம்.
காப்பர் உற்பத்தி செய்யும்போது, அதன் தாதுப்பொருளில் உள்ள கந்தகம் எரிந்து நிறைய நிறையை SO2 கழிவாக வெளியாகிறது. இந்த நச்சுவாயுவை அப்படியே வானில் வெளியாக்கினால் மரணம் என்பதால், காப்பர் ஸ்மல்டர் ஆலைகளில் அவற்றுக்கு எவ்விதத்திலும் பயனற்ற சல்பியூரிக் ஆசிட் (கந்தக அமிலம்) உற்பத்தி பிளாண்ட் ஒன்றை ஓட்டியாக வேண்டும். இதில்... அந்த கந்தக ஆக்ஸைடை (SO2) கேட்டலிஸ்ட் மூலம் SO3 ஆக்கி, HSO3 ஆக்கி, H2SO4 என்ற கந்தக அமிலமாக மாற்றப்படுகிறது.
ஸ்டர்லைட்டில் ஒரு நாளைக்கு சுமார் 3300 டன் என்ற மிதமிஞ்சி உற்பத்தியாகும் இந்த அமிலத்தை அதே அளவுக்கு வாங்குவோர் இல்லாததால்... அதை ஸ்டோர் பண்ணி வைக்க டேங்கில் இடம் இயலாதபோது... அப்படியே வாய்க்காலில் எல்லாம் திறந்து விட முடியாதே. அமிலம் ஆயிற்றே. என்ன செய்யலாம்..?பக்கத்தில், உள்ள ஸ்பிக் கந்தகஅமில உற்பத்தியை நிறுத்த சொல்லிவிட்டு... இலவசமாகவே லாரி டேங்கர்கள் மூலம் கொண்டு போயி தரலாம். (நான் அங்கே பணியாற்றிய வருஷங்களில் அப்படித்தான் டேங்கர்களில் ஆசிட் கொண்டு வந்து தந்தார்கள். எங்கள் சல்பியுரிக் ஆசிட் பிலாண்டை ஷட் டவுன் பண்ணி நிறுத்திட்டு அவங்க ஆசிடை வாங்கி எங்களின் டேங்குகளில் சேமித்துக்கொண்டோம்.)
சரி, ஸ்பிக்கிலும் இலவசமாக தந்து அவர்களின் டாங்கிகளும் நிரம்பி விட்டது. இனி என்ன செய்ய..?
ம்ம்ம்... இப்படி ஸ்டெர்லைட் கந்தக அமிலம் சேமிப்பு டாங்கிகள் நிரம்பி விட்டால் வேறு வழியின்றி காப்பர் உற்பத்தியை நிறுத்தவோ குறைக்கவோ வேண்டும். ஆனால், காப்பர் டிமான்ட் மார்க்கெட்டில் இருக்கே. செமை இலாபமாச்சே. காப்பர் உற்பத்தியை குறைக்கவே கூடாதே. வேறு என்ன செய்யலாம்..?
நைசா... ராவோடு ராவாய் தம் ஊழியர்களை மட்டும் பிரீதிங் அபாரடஸ் போட்டுக்கொள்ள சொல்லிட்டு, SO2வை வானில் திறந்துவிட்டு வென்ட் பண்ணிடலாம். சல்பியுரிக் அமிலமாக மாற்ற தேவை இல்லை. அப்படியெனில்... மக்கள் சாவார்களே..? லண்டனில் இருக்கும் ஓனருக்கு தூத்துக்குடி மக்கள் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன..?
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், SO2 எமிஷனுக்கு நிர்ணயித்து இருக்கும் அளவு... 'பெர்மனன்ட் எக்ஸ்பொஷர் லிமிட்'(PEL) நிரந்தர தாக்குப்பிடிப்பு அளவு:5ppm. (காற்றில் 10 லட்சத்தில் 5 பங்கு)
இதுவே, ஸ்டெர்லைட் வென்ட் பண்ணினால், 75ppm அளவுக்கு இந்த நச்சுவாயு அடர்த்தி எனில், அங்கே, 1 மணி நேரம் மட்டுமே மக்கள் தாக்குப்பிடித்து இருக்கலாம் என்பதுதான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கும் PEL.
ஆனால்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் SO2 நச்சுவாயு வெளியாகும் அளவுபற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அரசுத்துறை அறிக்கை யாதெனில்...
1000ppm
க்கும் மேலே..! https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fe/1/16/1f622.png😢
//
The readings of the sulphur di-oxide analyser linked to the PCB’s Care Air Centre at Guindy here suggested that the emission was in the range of 504.5 to 1123.6 ppm (parts per million) during those occasions as against 477.53 ppm prescribed by the Union ministry of environment and forests.
அப்படி எனில்... ஒரு நிமிஷம் கூட மக்கள் வாழத்தகுதியற்ற ஊர்... தூத்துக்குடி..!
ஆகவே, இந்த ரிப்போர்ட் வந்த 2013ம் ஆண்டே... அந்த ஸ்டெர்லைட்டின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு, ஆலையை நிறுத்தி ஊழியர்களை வெளியேற்றி கேட்டைபூட்டி சீலிட்டு... உரிமையாளரை கோர்ட்டுக்கு இழுத்து பல்லாயிரம் கோடி நஷ்ட ஈடு வாங்கி...உயிர் விட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தந்திருக்க வேண்டாமா அரசு..?!
சரி, இப்போது ஆர்செனிக் பற்றி பார்ப்போம். அது இதைவிட மாபெரும் கொடுமை..!
SO2 பிரிந்த பிறகு... மீதமுள்ள காப்பர் தாதுவில் ஆர்செனிக் கலந்து இருக்கும். காப்பரை அதிலிருந்து பிரித்து தனியே எடுத்த பின்னர், ஆர்செனிக் என்ற திண்மப்பொருள் சகதி போல (ஸ்லட்ஜ்) ஆக பிரிந்து தனித்துவிடுகிறது. இதை என்ன செய்வது..? நீரிலும் விட முடியாது. நிலத்திலும் விட முடியாது. திண்மம் என்பதால்... சல்பர் டை ஆக்சைடை காற்றில் திறந்து விட்டது போல... திறந்து விடவும் வாய்ப்பில்லை.
இதை ஸ்டெர்லைட் என்ன செய்ய வேண்டும் எனில்... அதன் ஆலை வளாகத்தின் உள்ளேயே... சூரிய ஒளி, மழை நீர், காற்று ஏதும் படாதவாறு சீலிடப்பட்ட மிகப்பிரம்மாண்ட மெடல் டாங்கிகளில் எவ்வித லீக் ஆவதுக்கும் வாய்ப்பே இன்றி, நிலமட்டத்தில் இருந்து சற்று உயர்த்தி வைத்து அடிக்கடி யாதொரு கசிவும் இருக்கிறாதா என்று பரிசோதித்து பாதுகாத்து பரிசோதித்து பாதுகாத்து பரிசோதித்து பாதுகாத்துவைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
ஆனால்... ஸ்டெர்லைட் என்ன பண்ணுகிறது... தெப்பக்குளம் போல கட்டி தேக்கி வைக்கிறது. அதற்கு... 'Cake Pond' என்று பெயரும் இட்டு..!
அடப்பாவிகளா..!
இங்கே மழை பெய்தால் அந்த தெப்பம் நிறைந்து ஆர்செனிக் வழிந்து ஓடுமாம்... எங்கே...? நிலத்தில்தான்..! இப்படித்தான் தூத்துக்குடி நிலத்தடி நீரில் ஆர்செனிக் கலந்துள்ளது.
மழை விட்டபின்னர்... நீர் பூமியில் உறிஞ்சிய பின்னர்... நிலத்தின் மீது எஞ்சி இருக்கும் அந்த ஆர்செனிக் சகதியை எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி எதோ வயல் சகதியை மம்பட்டியால் வெட்டி எடுத்து போடுவது போல ட்ரக்கில் போட்டு தெப்பத்தில் கொண்டு போய் கொட்டுவார்களாம். அந்த ட்ரக் டயரில் ஒட்டிய ஆர்செனிக் கழிவு, ட்ரக் வேலை முடிந்து ஆலையை விட்டு வெளியே போனவுடன்... சக்தி காய்ந்து... தூத்துக்குடி ஊரெங்கும் தூவிச்செல்லும்தானே..? இப்படித்தான் ஆர்செனிக் ஊர் முழுக்க பரவுகிறது. அப்புறம் அதில் வேலை செய்தவர்களின் உடலில் உடையில் செருப்பில் ஒட்டி இருக்கும் ஆர்செனிக் அவர்களின் வீடுகளுக்கும் செல்லும். வீட்டில் உள்ள குழந்தை கையை கீழே வைத்து வாயில் வைத்தால்... முடிந்தது... குழந்தைக்கும் கேன்சர்..!
(மேற்படி தகவல், ஸ்டெர்லைட்டில் வேலை பார்த்துவிட்டு பின்னர் என்னோடு எனது நிறுவனத்தில் பணியாற்ற வந்த தோழர் சொன்னவை)
இதெல்லாம் விட... படத்தில் உள்ள அந்த 30 வருஷ கால பழைய ஆர்செனிக் குளத்தின் அடியில் போடப்பட்ட தளத்தில் இத்தனை வருஷத்தில் எத்தனை எத்தனையோ விரிசல்கள் விட்டு பூமிக்குள்ளும் ஆர்செனிக் சென்று கொண்டு நிலத்தடி நீரில் கலந்து கொண்டே இருக்குமே..!
நிலத்தடி நீரில் இந்த ஆர்சனிக் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா..? 10 கோடியில் ஒரு பங்குக்கு கீழே இருக்க வேண்டும்.(10ppb)
ஆனால்...
நீரி (NEERI-National Environmental Engineering Research Institute) என்ற நீர்/நிலம் தொடர்பான
அரசு நிறுவனம், ஸ்டெர்லைட் அமைந்துள்ள தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் எடுத்த பல்வேறு சேம்பிள்
மாதிரிகளில் ஆர்செனிக் கலப்பு பற்றி அளித்த ஆய்வுச்சோதனை முடிவுகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.
ஆம்... பத்து லட்சத்தில் 100... 200....300 பங்குகள் என்ற அளவில் ஆர்செனிக் உள்ளன..!
ஆனால்... இந்திய சட்டம் என்ன சொல்கிறது..?
50 க்கும் மேற்பட்ட மில்லிகிராம் / கிலோகிராம் ஆர்செனிக் கொண்ட மண் வகைகளை இந்திய அபாயகரமான கழிவு விதிகள், 2008 இன் கீழ் அபாயகரமான கழிவுகளாக கருதப்பட வேண்டும் என்கிறது. எனில், அம்மண்ணில் மக்கள் வாழவே கூடாது... அந்த அபாயகரமான கழிவை மிதிக்கவே கூடாது, எனில் அப்புறம் எப்படி அதில் வீடுகட்டி வாழ்வது..!
மேற்படி... சுட்டியில் நீங்கள் நீரி ரிப்போர்ட்டை காணலாம். இந்த நீரி ரிப்போர்ட் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்தவை. அது வழக்காகி இறுதியில் உச்ச நீதி மன்றம் போயி... ஜஸ்ட் லைக் தட் 100 கோடி அபராதம் கட்ட சொல்லிட்டு பிலாண்டை ஓட்டிக்க சொல்லிருச்சு உச்ச நீதி மன்றம்..!
ஆக... அது முடிந்து... 13 வருஷம் ஓடியாச்சு. ஏகப்பட்ட மழை பெய்து ஏகப்பட்ட முறை கேக் பான்ட் நிரம்பி ஓடி... ஆர்செனிக் சகதி ஒட்டிய ட்ரக் ஊரு முழுக்க பலமுறை ஓடி... இப்போதெல்லாம்... ஆர்செனிக் அளவை சோதனை போட்டால்... ஆய்வாளருக்கே கேன்சர் வந்துவிடும்..!
இதன்பிறகும்... அரசியல்வாதிகள் அந்த தனியார் கம்பெனியை இயங்க அனுமதித்தால்... அவனுங்கலாம் மனிதகுலவிரோதிகள்..! இந்நாட்டில் வாழவே யோக்யதை இல்லாதவர்கள்... நம்மை ஆளுகிறார்கள்...! ச்சே... நம்மை விட உலகில் இழிந்தநிலையில் வாழும் மக்கள் வேறு யார் இருக்க முடியும்..?!

Thanks to
Mohamed Ashik


1 comment:

Dr.Anburaj said...

நமது நாட்டின் துரதிஷ்டம் யாரும் சரியான தகவலை்களை தொிவிப்பதில்லை. இப்படிப்பட்ட தகவல்களை யாரும் செய்தி சேனல்கள் பத்திாிகைகள் தொிவித்து விவாதம் நடத்துவதில்லை.
இந்த தகவல்கள் முற்றிலும் புதியது. நானும் இதன் அடிப்படையில் விபரம் சோ்க்க முடிவு செய்துள்ளேன். நன்றி