Followers

Thursday, December 26, 2013

என்னை வியக்க வைத்த சவுதிகளின் திருமணம்!

என்னை வியக்க வைத்த சவுதிகளின் திருமணம்!

எனது பாஸின் மூத்த மகளுக்கு சென்ற வியாழக்கிழமை திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன் 'திருமணத்துக்கு அவசியம் நீ வர வேண்டும்' என்று அழைத்தார். நான் இதுவரை சவுதி நாட்டவர் திருமணங்களுக்கு சென்றதில்லையாதலால் கௌரவமாக...

'இல்லை... எல்லோரும் சவுதிகளாக இருப்பார்கள். எனக்கு கூச்சமாக இருக்கும். திருமணம் நல்ல முறையில் முடிய நான் பிரார்த்திக்கிறேன்' என்றேன்.

'உனக்கு கம்பெனி கொடுக்க நம் கம்பெனியிலிருந்து இரண்டு பேர் வருகின்றனர். மேலும் சில எகிப்து நாட்டவரும் வருகின்றனர். எனவே மறக்காமல் திருமணத்துக்கு வரவும்' என்று சொல்லவே போகலாம் என்று தீர்மானித்தேன்.

அலுவலகத்தில் நான் மட்டுமே வேலையில் இருப்பதால் வேறு துறைகளில் வேலை செய்யும் மற்ற இரண்டு ஹைதரபாத்திகளும் வர சம்மதித்தனர். மூவருமாக சேர்ந்து திருமண மண்டபம் நோக்கி வாகனத்தில் சென்றோம். அழைப்பிதழிலேயே திருமண மண்டபம் செல்வதற்கான வரை படம் இருந்ததால் அதன் உதவி கொண்டு சரியாக மண்டபத்தை சென்றடைந்து விட்டோம்.

இரவு நேரம் ஆகையால் சரியான குளிர். அதற்கு தக்கவாறு குளிர் சட்டைகளையும் கொண்டு வந்திருந்தோம். அதனை வாகனத்திலேயே வைத்து விட்டு மண்டபத்தை நோக்கி நடந்தோம். மண்டப வாயிலிலேயே எனது ஓனரும் அவரது அண்ணனும் நின்றிருந்தனர். எங்களை கண்டவுடன் அருகில் வந்து கை கொடுத்து தங்கள் கன்னத்தை எங்கள் கன்னத்தோடு இணைத்து முத்தம் கொடுத்தனர். இது சவுதிகள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் முறை.

உள்ளே மிகப் பெரிய ஹால். அரச சபைகளிலே நாம் படங்களில் பார்ப்போமே அத்தகைய இருக்கைகள். எனது ஓனர் அமரும் இருக்கைக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி எங்களை உட்கார சொன்னார். நாங்களும் உட்கார்ந்தோம். சிறிது நேரத்தில் சீருடை அணிந்த பணியாள் தேயிலை, காப்பி போன்ற மூன்று வகையான தேநீர்களை எங்களிடம் கொண்டு வந்து 'எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். அவரவர்கு விரும்பியதை எடுத்துக் கொண்டோம். அந்த குளிருக்கு பால கலக்காத அந்த தேயிலையும் காப்பியும் சுகமாக இருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் உறவினர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. வந்தவர்கள் அனைவரும் எனது ஓனரிடம் கை கொடுத்து முத்தமும் கொடுத்து விட்டு எங்கள் மூவரிடமும் வர ஆரம்பித்தனர். எங்களுக்கும் கை கொடுத்து விட்டு அதே போன்று கன்னத்தோடு கன்னம் வைத்து முத்த மழை பொழிய ஆரம்பித்தனர். இது எங்கள் மூவருக்கும் புதிய அனுபவம் என்பதால் மெல்ல ஹைதரபாத்தியிடம் 'கொஞ்சம் தள்ளி உள்ளே சென்று உட்காருவோமே!' என்றேன். அவனும் சரி என்று சொல்லவே அங்கிருந்து அகன்று சற்று உள்ளே சென்று உட்கார்ந்து கொணடோம்.

அரை மணி நேரத்திற்கு பிறகு மாப்பிள்ளை வந்தார். பெண் அதே மண்டபத்தில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்களோடு அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை என்று விஷேசமாக எந்த உடைகளோ மாலைகளோ இல்லாததால் சாதாரணமாகவே வந்தார். 'நிக்காஹ்' முன்பே முடிந்து விட்டது. எல்லோரும் சென்று மாப்பிள்ளையிடம் கை கொடுத்தனர். நாங்களும் கை கொடுத்தோம். அதன் பிறகு மாப்பிள்ளையிடம் அவரது நண்பர்கள் கிண்டலும் கேலியுமாக அரை மணி நேரம் சென்றது. சில சவுதிகள் இந்த இடங்களில் இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்வர். எனது ஓனர் அதிக இறை பக்தி உடையவர் என்பதால் ஆடம்பர கேளிக்கைகளை தவிர்த்து விட்டார். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த மண்டபத்துக்கு வாடகை கொடுப்பதும், இங்கு வருபவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் செலவுகள் அனைத்தும் மணமகனையே சாரும். அதே போல் மணமகளுக்கு லட்சக்கணக்கில் மஹர் தொகையும் மணமகனே கொடுக்க வேண்டும். நகை, பெட்ரூம் செட் என்று அந்த செலவுகளையும் மேலும் அன்று மணமகளுக்கான உடைகளையும் மணமகனே தயார் செய்ய வேண்டும். ஆனால் நம் நாட்டில் எல்லாமே தலை கீழ். அனைத்தையும் பெண்ணின் தகப்பனின் தலையில் கட்டி விடுவர். முஸ்லிம்களும் பெண்ணின் தகப்பன் தலையில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம். ஆனால் அது இஸ்லாத்துக்கு முரணானது என்பதை ஏனோ பலரும் உணருவதில்லை.

இடையில் ஒரு பெரிய கண்ணாடி கிளாஸில் அருமையான பழ ரசங்கள் மூன்று வகையானவைகளை கொண்டு வந்து எடுத்துக் கொள்ளச் சொல்லினர். நாங்களும் ஆளுக்கு ஒரு கிளாஸ் பழ ரசங்களை எடுத்துக் கொண்டோம். இன்னொரு அரை மணி நேரம் கழித்து அருகில் உள்ள சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இங்கும் மிகப் பெரிய ஹால்.

ஆறு பேர் அமரக் கூடிய மிகப் பெரிய டைனிங் டேபிள். அவ்வாறு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட டேபிள்கள் போடப்பட்டிருந்தன. உணவு வகைகளும் முன்பே தயாராக டேபிள்களில் வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் மூவரும் சென்று ஒரு டேபிளில் உட்கார்ந்தோம். இரண்டு எகிப்து நாட்டவரும் ஒரு பாலஸ்தீனியும் எங்களோடு ஜோடி சேர்ந்து கொண்டனர். மிகப் பெரிய தாம்பூலத்தில் சவுதி பிரியாணி (மந்தி கப்ஸா) வைக்கப்பட்டு அதன் மேல் ஆட்டுக் கறியும் வைக்கப்பட்டருந்தது. பெப்ஸி, செவன் அப், சலாட், ஹூமூஸ்(சிரிய நாட்டு உணவு) என்று சிறிய பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்தது. எது விருப்பமோ அதை சாப்பிடும் வகையில் அமைத்திருந்தனர். மதறாஸ், ஹைதராபாத், எகிப்து, பாலஸ்தீன் போன்ற வேறு வேறு கலாசாரத்திற்கு சொந்தக்காரர்கள் ஒரே த்ட்டில் அமர்ந்து சாப்பிட்டோம். எனது கை பட்ட உணவை பாலஸ்தீனி எடுப்பதும், எகிப்து நாட்டவன் கை பட்ட உணவை ஹைதராபாத்தி எடுத்து சாப்பிடுவதும் சவுதியில்தான் பார்க்க முடியும்.

அந்த ஹாலிலேயே ஒரு ஓரத்தில் மிகப் பெரிய டேபிளில் 15 வகையான இனிப்புகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் அங்கு சென்று சிறிய தட்டில் நமக்கு வேண்டிய இனிப்புகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. நானும் நண்பர்களும் வேண்டிய மட்டும் இனிப்புகளை தட்டில் எடுத்துக் கொண்டு, சில பழங்களையும் எடுத்துக் கொண்டு திரும்பவும் எங்களின் டேபிளுக்கு வந்தோம். அடுத்த ரவுண்டு ஆம்பம். இதற்கு மேல் வயிற்றிலும் இடமில்லை. செவனப்பை கடைசியாக குடித்து விட்டு எங்களின் உணவை முடித்துக் கொண்டு வெளி ஹாலுக்கு வந்தோம். உண்ட களைப்பு எங்கள் கண்களை சொருக ஆரம்பிக்கவே வெளியில் நின்ற ஓனரிடம் கை கொடுத்து விட்டு எங்கள் வாகனத்தை நோக்கி நடையை கட்டினோம்.

முதன் முதலாக கலந்து கொண்ட இந்த சவுதி வீட்டு திருமணம் எனக்கு புதிய அனுபவமாகவே இருந்தது.

1 comment:

C.Sugumar said...

கேரளத்தில் நாராரணகுரு என்று ஒரு மகான் இருந்தாா். இந்துக்களி் வழிபாட்டு முறைகளில் திருமண முறைகளில் மனித பொருள் விரயம் நிறைய உள்ளதை நினைத்து வருந்தினாா். ஒரு கோவில் ஒரு சிலை ஒரு விளக்கு என்று சீா்திருத்தத்தை துவக்கி சிலைகள் இல்லாத வழிபாட்டுக்குச் மக்களை அழைத்துச் சென்றாா். அழகிய கோலம் போட்டு அதன் மத்தியில் ஒரு விளக்கை ஏற்றி சில மலா்களால் அலங்காித்து மணமக்கள் திருவிளக்கை 3 முறை வலம் வந்து தாலி அணிந்து கொள்ள திருமணம் முடிந்தது. எனோ இத்தகைய் கருத்துக்கள் பத்திாிகைகளிலும் பிற தளங்களிலும் முன்னுாிமைப் பெருவதில்லை. நினைத்தால் வேதனையாக உள்ளது. நல்ல கருத்துக்களைச் சொல்வாாில்லை. மக்கள் திருமணச்சுமையை உணா்ந்தே உள்ளனா்.