Followers

Tuesday, December 17, 2013

ஐயப்ப பக்தர்களும், வாவர் மசூதியும்!



சபரி மலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக் கொண்டு போகும் போதெல்லாம் எனக்கு அங்குள்ள வாவர் மசூதியும் அங்கு இந்த பக்தர்கள் தங்கி வழிபாடு செய்வதையும் கவனிக்க தவறுவதில்லை. இரு துருவங்களான இந்துவும் இஸ்லாமும் இந்த இடத்தில் எப்படி ஒன்றாயின என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் உண்டு. இது பற்றி விபரங்கள் ஆதாரத்தோடு கிடைக்குமா என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன். எல்லாம் அனுமானங்கள் தான் கிடைத்தது. அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்று அவரவருக்கு தோன்றிய கற்பனை கதைகள் தான் இணையம் எங்கும் பரவியுள்ளது. ஆரியர்கள் மிக சாமர்த்தியமாக ஆதாரங்கள் அனைத்தையும் அழித்து விட்டதாகவே எண்ணுகிறேன்.

இனி இணையத்தில் கிடைத்த சில செய்திகளைப் பார்ப்போம்.

மசூதியின் அமைப்பு கொண்ட வாவர் பள்ளியில் உள்ளே விக்கிரகங்கள் எதுவும் கிடையாது. வாவர் சுவாமியின் வாள் வைக்கப் பட்டிருக்கும். காணிக்கை உண்டியல் உண்டு. பக்தர்கள் அங்குள்ள பெரிய உருளியில் வாவர் சாமிக்கு உகந்த நிவேதனமான குறுமிளகை இடுவார்கள். சபரி யாத்திரை பருவத்தின் போது வாவர் பள்ளியைச் சுற்றியும் அந்த வட்டாரம் முழுவதுமே நாள் முழுவதும் விடாது சரண கோஷம் கேட்டுக் கொண்டிருக்கும். பக்தர்கள் ஐயப்ப திந்தகத் தோம் ஆட்டங்கள் ஆடிக் கொண்டிருப்பார்கள்.

மணிகண்டனின் அவதார காலகட்டத்தில் கேரள கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டிலும் இஸ்லாமியர்கள் பல இடங்களில் வசிக்கத் தொடங்கி விட்டனர். இவர்களில் ஒரு பிரிவினரின் தலைவனான வாவர் மணிகண்டனால் ஆட்கொள்ளப் பட்டு அவனது அடியாராகவும், சேனைத் தலைவராகவும் ஆகியிருக்க வேண்டும்.

சாஸ்தாவின் யோக ரூபமும், சரண கோஷங்கள், புலனடக்கத்தை வலியுறுயத்தும் விரதங்கள் போன்ற ஐயப்ப வழிபாட்டு நெறிகளும் பௌத்த சமயக் கூறுகளை இந்து சமயம் தன்னுள் ஈர்த்துக் கொண்டதன் விளைவே என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கால்களை மடித்து யோக பட்டத்துடன் யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கும் ஐயப்பனின் திருவடிவமும், கையில் செண்டு ஏந்தியுள்ள ஐயனார் திருவடிவமும் அவலோகிதேஸ்வரர், பத்மபாணி போன்ற பௌத்த கடவுளரின் திருவுருவங்களில் இருந்தே உருவானவை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

திருநெல்வேலி வேளாளர்களுக்கு ஸாஸ்தா எனும் ஆண்தெய்வம் குலதெய்வமாக இருத்தல் ஆராயத் த்க்கது. வேளாளர்களும் பிராமணர்களும் மட்டுமல்ல, நெல்லை, குமரி மாவட்டங்களில் அனேகமாக எல்லா சமூகங்களுக்கும் சாஸ்தா அல்லது சாஸ்தாவின் பரிவார தெய்வங்களில் ஒருவர் தான் (மாடன், யட்சி, பூதத்தான், பிரமரட்சசி, பட்டராயன்…) குலதெய்வமாக இருக்கிறார். இதில் தென்கலை ஐயங்கார்கள் போன்ற வைணவத்தைப் பின்பற்றும் சமூகங்களும் அடக்கம்.



எனக்குத் தோன்றுவது என்னவென்றால் சபரி மலை முன்பு சமணர்களின் இருப்பிடமாக இருந்திருக்க வேண்டும். அல்லது புத்த மதத்துக்கு சொந்தமான வணக்கத்தலமாக இருந்திருக்க வேண்டும். ஆரியர்கள் இந்நாட்டை ஆட்கொண்ட போது சமணமும் பவுத்தமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. கிட்டத்தட்ட சமணமும் பவுத்தமும் இல்லாத ஒரு நிலையை நமது பாரதம் பெற்றது. சமணர்கள் தேனி மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய ஆதாரங்களை முன்பு நான் பதிவிட்டிருந்தேன். அதைப் போலவே ஆரியர்களின் மூர்க்கத்தனத்திற்கு பயந்து சமணர்களும் பவுத்தர்களும் சபரி மலையில் ஒன்று கூடியிருப்பர். இஸ்லாத்தையும் தழுவியிருப்பர். அதன் பிரகாரமே இவ்வளவு பெரிய பள்ளிவாசலை அவர்களால் இங்கு கட்ட முடிந்தது. அதன் பிறகு சில இந்துக்கள் இந்து மத மற்றும் இஸ்லாமிய மதத்தின் கொள்கைகளை ஒன்றாக்கி அதனை ஐயப்ப சாமியாக மாற்றியிருக்கலாம் என்பது எனது எண்ணம். அல்லது சமணர்களையும் பவுத்தர்களையும் காப்பாற்றியது வாவார் என்ற முஸ்லிமாக இருக்கலாம். அவரை மரியாதை செலுத்தும் வகையில் இஸ்லாமிய சட்டங்களையும் இந்து மத சட்டங்களையும் ஒன்றாக்கி புதிதாக சபரி மலை ஐயப்பன் உருவாக்கப்பட்டிருக்கலாம். உண்மையை இறைவனே அறிந்தவன்.

இஸ்லாத்தில் ஹஜ்ஜூக்கு செல்பவர்கள் நபி ஆப்ரஹாம் நினைவாக மூன்று இடங்களில் சாத்தானுக்கு கல் எறிவார்கள். தங்களின் தவறான கொள்கைகளை இன்று முதல் தூரமாக்கி விடுவதாக ஹாஜிகளும் மனதுக்குள் உறுதி கொள்ள இந்நிகழ்வு ஒரு காரணமாக அமைகிறது. அதே போல் இரண்டு தூய வெள்ளை உடைகளை அணிந்து கொண்டு பல இடங்களுக்கும் கால்நடையாக செல்வதும் சிறந்த காரியங்களாக ஹஜ்ஜூ கிரியைகளில் வகுக்கப்பட்டிருக்கும்.

அது போலவே ஐயப்ப பக்தர்களும் வெள்ளை உடைக்கு பதில் இரண்டு கருப்பு உடைகளை உடுத்துவதும், சபரி மலை வழித் தடத்தில் கல்லிடும் குன்று என்ற இடத்தில் கற்களை வீசுவதும் ஒரு வணக்கமாக செய்யப்படுகிறது. சில ஐயப்ப குருசாமிகள் கருப்பு உடைக்கு பதில் தூய வெள்ளை உடையையும் உடுத்துகின்றனர். வெள்ளை உடையில் செல்லும் ஐயப்ப பக்தர்களை நிறைய இடங்களில் காணலாம். அதே போல் பல வணக்கத தலங்களுக்கும் கால்நடையாகவே செல்கின்றனர். வாவார் மசூதியில் தொழுகின்றனர. இங்கு எந்த சிலைகளும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஒரு ஐயப்ப பக்தர் கூறும் போது "கீழ பம்பாவில் குளியல் வரை காவி வேஷ்டியும் அதன்பின் வெள்ளை வேஷ்டியுடன் மலை மீது ஏறி தரிஷ்ணம் பண்ணியவருடன் நானும் சென்று, பார்த்து இருக்கின்றேன்" என்கிறார். எனவே ஐயப்ப பக்தர்களுக்கும் முஸ்லிம்களைப் போல் வெள்ளை உடையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, திருச்சூர் அருகே உள்ள சூண்டல் பகுதியில் வாழும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மசூதியில் தங்க இடம் கொடுத்து, பணிவிடைகள் செய்து வருவது மத நல்லிணக்கத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம்.

திருச்சூர் அருகே குண்ணங்குளம் ரோட்டில் அமைந்து உள்ளது இந்த சூண்டல் பகுதி. இங்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான ஜூம்மா மசூதி, தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக எந்நேரமும் திறந்திருக்கிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடையாக, வாகனங்களில் வரும் ஐயப்ப பக்தர்களும் இந்த மசூதியில் இளைப்பாறி விட்டுச் செல்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி, குழுவாக வருவோர்களுக்கு சமையல் செய்வதற்கு இடவசதி போன்றவற்றை இந்த மசூதியின் நிர்வாகம் செய்து கொடுக்கிறது.

இரண்டு ஆண் கடவுள்கள் ஒன்றாகி அதிலிருந்து உண்டானவர்தான் இந்த ஐயப்ப சாமி என்ற கதையும் உண்டு. இதற்கும் வேதங்களின் ஆதாரங்கள் எதுவும் இல்லை. எல்லாம் செவி வழிச் செய்திகள்தான்.

இவ்வாறு ஐயப்ப சாமிக்கும் இஸ்லாத்துக்கும் ஏதோ ஒரு வகையில் ஒட்டும் உறவும் உள்ளது. உண்மையை சாமர்த்தியமாக ஆரியர்கள் அழித்து விட்டதனால் ஐயப்ப சாமியைப் பற்றிய கட்டுக் கதைகளே தற்போது விஞ்சியிருக்கிறது. உண்மை வரலாற்றை தொல்லியல் துறைதான் ஆய்வு செய்து இந்திய மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஐயப்ப பக்தர்களுக்காக தங்களின் வழிபாட்டு தலத்தையும் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துள்ளனர் முஸ்லிம்கள். மேலும் அங்கு செல்பவர்களுக்கு சமையல், தங்குதல் போன்ற வசதிகளை வேறொரு மசூதியிலும் முஸ்லிம்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இவ்வளவு அன்யோன்யமாக அன்புடன் பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே பகையை உண்டு பண்ணி அதன் மூலம் ஓட்டு அறுவடை செய்ய சில இந்துத்வ சக்திகள் சமீபகாலமாக முயற்சி செய்கின்றன. இந்த சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடனிருந்து நமது நாட்டை மேலும் முன்னேற்றப் பாடுபடுவார்களாக!

No comments: