Followers

Monday, December 30, 2013

சிறை செல்லும் போராட்டம் - தென் சென்னை கூட்டம்!



முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனங்களை ஈர்க்கும் முஸ்லிம்களின் ஜனவரி 28 மாபெரும் சிறை செல்லும் போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் நேற்றைய (29-12-2013) தென்சென்னை மாவட்ட உரிமை முழக்க பொதுக் கூட்டம் மக்கள் திரளால் மாபெரும் மாநாடாக மாறியது.

அல்ஹம்துலில்லாஹ்! வாழ்வுரிமைப் போரின் தொடக்கமும் தொடர்ச்சியும் எனும் தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ச்சியாக நடத்தி வரும் உரிமைப் போரட்டங்களை சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் விவரித்து உரை நிகழ்த்த தொடர்ந்து உரையாற்றிய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி ஜே அவர்களின் உரை மக்களிடத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

அல்ஹம்துலில்லாஹ்! சிறை செல்லுவோம்...உரிமைகளை வெல்வோம்! எனும் தலைப்பில் உரையாற்றிய அவர், முகலாய மன்னர்கள் இந்த நாட்டை எவ்வாறு ஆட்சி செய்தார்கள் பெரும்பான்மை சமுதாய மக்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் எவ்வாறெல்லாம் மதிப்பளிதார்கள் என்ற வரலாறையும், தொடர்ந்து ஆட்சி செய்த பிரிட்டிஷார் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் தீவிரத்தை பொறுக்கமுடியாமல் முகலாயர் வரலாறுகளை எவ்வாறெல்லாம் திரித்து முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்து (DIVIDE AND RULE) பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் நாட்டை ஆண்டார்கள் என்பதையும், பிரிட்டிஷாரின் சூழ்ச்சிக்கு பலியாகிய இந்திய அரசியல்வாதிகளை கொண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம் என்றும், விடுதலை போரில் முஸ்லிம்கள் ஆற்றிய தியாக வரலாற்றையும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப் பட வேண்டியதன் காரணங்களையும் நியாயங்களையும் தனக்கே உரிய பாணியில் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தார்.

அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ந்து உரையாற்றிய அவர் 1980 இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு கமிஷன் மட்டுமே அமைத்துக் கொண்டு முஸ்லிம்களின் பின் தங்கிய நிலையை கண்டறிந்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தும் கமிஷன் அறிக்கைகளை கிடப்பில் போட்டு இன்று வரை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை தோலுரித்தார். ஜூலை 4 2010 சென்னை தீவுத் திடலில் உரிமை மீட்பு மாநாட்டில் பெரும் எழுச்சியோடு பல லட்சம் முஸ்லிம்கள் குழுமியதன் எதிரொலியாக உடனடியாக பிரதமரையும் சோனியா காந்தியையும் சந்திக்க நேரம் ஒதுக்கியதையும் அவர்களிடம் இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் நியாயத்தையும் வலியுறுத்திய போது பிரதமர் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு நடவடிக்கையில் (PROCESS) இருக்கிறது என்றும் விரைந்து வழங்கிவிடுவோம் என்றும் வாக்குறுதி வழங்கியதையும் சுட்டிக் காட்டிய அவர் 2013 இறுதி ஆகியும் இது வரை இடஒதுக்கீடு வழங்காமல் காங்கிரஸ் இழுத்தடித்து தொடர்ந்து துரோகமிளைப்பதையும் சுட்டிக் காட்டினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அளவை உயர்த்தித் தருவேன் என ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி வழங்கியதையும் கிரைண்டர் மிக்ஸி என்று இன்னும் சொல்லப் படாத வாக்குறுதிகள் நிறைவேற்றப் படுவதையும் சுட்டி காட்டி முஸ்லிம்களுக்கான வாக்குறுதி கண்டுகொள்ளப் படாமல் இருப்பதையும் கடந்த கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் நடைபெறும் துரோகங்களையும் பட்டியலிட்ட அவர் தொடர்ந்து முஸ்லிம்கள் ஏமாற்றப் பட்டால் மக்களை திரட்டி கடுமையான போராட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் எனும் எச்சரிக்கையையும் விடுத்தார்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் இன்ஷாஅல்லாஹ்! ஜனவரி 28 சென்னை கோவை திருச்சி நெல்லையை திணறடித்து உரிமை முழக்கமிடுவோம் எனும் வாக்குறுதியை அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கத்தோடு பெற்றுக் கொள்ள பெரும் எழுச்சியுடன் கூட்டம் நிறைவு பெற்றது. மக்கள் மீண்டும் ஒரு விடுதலை வேட்கை எனும் உணர்வோடும் உரிமையை மீட்டே தீருவோம் எனும் உறுதியோடும் உற்சாகமாய் கலைந்து சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்! ஒவ்வொரு முஸ்லிமும் கேட்க வேண்டிய உரை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் பங்கெடுக்க வேண்டிய மிக முக்கியமான போராட்டம். தூய்மையான எண்ணத்தோடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் இப்போராட்டத்தை பெரும் எழுச்சியடைய செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இனியும் காரணங்களை சொல்லி நாம் போராடாமல் முடங்கிப் போவோமானால் போராட்டத்தை கொச்சைப் படுத்துவோமானால் வரலாறும் நம்மை மன்னிக்காது வருங்கால சந்ததியும் நம்மை மன்னிக்காது.

இன்ஷா அல்லாஹ்!இட ஒதுக்கீடு எனும் உயர்ந்த லட்சியத்தோடு ஜனவரி 28 சிறைகளை நிரப்புவோம்..! உரிமைகளை உறுதியாய் வெல்வோம்!! எந்த தேவைகளுமற்ற இறைவனிடம் நமது பிரார்த்தனைகளை முன் வைப்போம். முயற்சி நம்முடையது முடிவு இறைவனின் உரிமையில் உள்ளது. துணிவோடும் இறைவனின் துணையோடும் போராடுவோம்! உரிமைகளை அடையும் வரை போராடுவோம்!!

நன்றி: அதிரை ஃபாருக்

No comments: