Followers

Friday, January 31, 2014

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?



65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்

யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.

அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.

மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”

அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!

என் உயிர் போகட்டும்!

காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.

மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.

“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.

“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.

காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”

தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.

தனியாள் திட்டமா கொலை?

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.

இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: grcpim@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article5633699.ece?utm_source=vuukle&utm_medium=plugin&utm_campaign=vuukle_referral

7 comments:

ஆனந்த் சாகர் said...

முஸ்லிம்களுக்கு கம்யூனிஸ்ட்கள் உபயோகமான முட்டாள்கள்(useful idiots).

Anonymous said...

//இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!
//
மத சார்பின்மை என்பது ஒரு குறிப்பட்ட மதத்தவர் மட்டுமே பின்பற்ற வேண்டிய செயல் என்ற பிம்பம் இந்த நாட்டில் காலம் காலமாக சில குருவி மண்டைகளால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் இந்து சமயத்தவர் மட்டுமே மத சார்பின்மையை பின்பற்ற வேண்டியவர்கள், மற்றவர்கள் அதை வார்த்தையளவில் மட்டுமே பயன்படுத்தினால் போதும் என்பதே இங்கே மத சார்பின்மையின் இலக்கணம். ஊருக்கு ஊர் தாவா அமைப்புகள் வைத்து மத மாற்றம் செய்பவர்கள் இங்கே மத சார்பின்மை பற்றி பேசுவார்கள், 'உன் இறை வழிபாடுகள் அனைத்தையும் விட்டு விட்டு முகமது கடவுளின் தூதர் என்று ஒப்பந்தத்திற்கு வா' என்று சொல்பவன் இங்கே மத சார்பின்மைவாதி, இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க வேண்டும் இங்கே ஷரியா கொண்டு வா என்று முழங்குபவன் மத சார்பின்மைவாதி, இந்துக்களை திட்டுபவன் மத சார்பின்மைவாதி, அரபு அடிமைகளும் சீன கைகூலிகளும் இணைந்தால் அவர்களின் மத சார்பின்மை இப்படிதான் இருக்கும்

suvanappiriyan said...

//இந்துக்களை திட்டுபவன் மத சார்பின்மைவாதி,//

இந்து மதத்தை விமரிசிப்பது அதிகம் இந்துக்களே! தனது சொந்த மதத்தை ஏன் இப்படி விமரிசிக்க வேண்டும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? பெரும்பான்மை இந்துக்கள் உள்ள நாட்டில், முஸ்லிம்கள் தினம் மோடி போன்ற அரக்கர்களால் சீரழிக்கப்பட்டும் அந்த இஸ்லாத்தை நோக்கி ஏன் ஓடி வர வேண்டும்?

அந்த அளவு தீண்டாமை, பெண் சிசு கொலை, வரதட்சணை, உடன் கட்டை ஏறுதல், இந்து மதத்தில் மலிந்து கிடக்கிறது. இந்துத்வா வெறியர்களின் மிரட்டலுக்குப் பிறகும் இஸ்லாம் வளருகிறது என்றால் தவறு எங்கு இருக்கிறது என்பதை தேடி திருத்தப் பாருங்கள். இன்னொரு பெரியார் உங்கள் மதத்தில் பிறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களின் நடவடிக்கையில்தான் உள்ளது.

அரிசனங்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஆலயத்துக்குள் அனுமதியுங்கள். அவர்களை அர்ச்சகர்கள் ஆக்குங்கள். ஆலயங்களில் நீச மொழி தமிழ் என்று ஒதுக்காமல் உரிய முக்கியத்துவம் கொடுங்கள். பிரச்னைகள் தானாக மறையும்.

Anonymous said...

"மதத்தை விட்டுவிட்டு மனிதராய்
இருங்கள்"
என்று கூறும் இந்துவா நீங்கள்.
இதை படிக்கவும்.
*இந்துக்களில் யாரும் மற்ற
மதத்தினரை இந்து மதத்திற்கு மாற
சொல்வதில்லை.
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின்
பழக்கங்களை "மூடநம்பிக்கை"
என்று இழிவாக பேசுவது இல்லை.
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின்
கடவுளை தீய சக்தியாக பார்ப்பதும்,
அவர்களைவணங்குவத ு பாவம்
என்று இல்லை.
*உலகின் பழமையான மதமாய்
இருந்தாலும், பெரும்பான்மையான மதமாய்
இல்லாது இருக்க காரணம், நாம் எந்த
நாட்டையும் படை எடுத்து சென்று நாம்
மதத்தை பரப்பாமல் இருந்தது.
இப்படி இருந்தவர்களை அடிமை படுத்தி மற்ற
மதத்தினர் அவர்கள் மதத்திற்கு நம்
மக்களை மாற்றினர்.
*மேலும் நம் நாட்டில் நம்மைவிட மற்ற
மதத்தினர்க்கே சலுகைகளும் சட்டங்களும்
அதிகம்.
*ஆர்.எஸ்.எஸ்,இ ந்து முன்னணி போன்ற
அமைப்புகளை "காவி தீவிரவாதிகள்"
என்று அழைப்பதுக்கு முன், அந்த
அமைப்புகளின் தொடங்க
காரணத்தை தெரிந்துகொள்ளுங ்கள்.
இந்துக்களின் ஒருங்கிணைப்புக் காகவும்
தேசிய விடுதலைக்காகவும ்
தொடங்கப்பட்ட அமைப்பு அது. மேலும்
இவ்வமைப்புகள் இல்லா விட்டால்,
இன்று நாம் தலையில்
குல்லா அல்லது கழுத்தில்
சிலுவை அணிந்து இருப்போம்.
*நம் மதம்
இப்பொழுது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற
து.
*இந்து மதம் இந்தியாவின் பூர்வீக
சொத்து. அப்படிபட்ட
இந்து மதத்தை கலங்கப்படுத்த
செய்யப்படும் எந்த ஒரு செயலும் தேச
துரோகம்.
*நாம் ஒன்றும் மற்ற மதத்தினர்
செய்வது போல்
மற்றவர்களை மூளை சலவை செய்து பிழைப்பு நடத்துவது இல்லை.
*நமக்கு மற்ற நாடுகளில் இருந்து,
வேற்று மதத்தினர்களை நம் மத்தினராக
மாற்ற பண உதவியோ பொருள்
உதவியோ கிடைப்பதிலை.
*நமது நாட்டின் பழம்பெருமைக்கான
காரணம் நம் மதமே. நம் மதம் அழிவாதல்
அழிவது நம் நாட்டின் பெருமையும்
தான்.மேலும் இந்துக்கள் மற்ற
மதத்தினரை மனிதனாக பார்தாலும்,
அவர்கள் நம்மை பாவிகளாகதான்
பார்க்கின்றனர். நாம் அவர்களில்
தவறு செய்யும்
ஒருசிலரை சித்தரிப்போம். ஆனால்
அவர்கள், நாம் அனைவரையும் பாவிகளாக
தான் சித்தரிக்கின்றன ர்.
*நாம் யாரையும் கெடுக்காத
போது நம்மை கெடுக்க நினைக்கும்
எவருக்கும் இடம் கொடுக்காதீர்கள் .
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!
அது இயலாவிட்டால்,
பின்நின்று குறைசொல்வதையாவத
ு தயவு செய்து நிறுத்துங்கள்.
வாழ்க பாரதம்!!வளர்க இந்து மதம்!!
இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.!!!

Dr.Anburaj said...

பாரதியாரின் ”சத்ரசிவாஜி தன் படைவீரர்களுக்கு நிகழ்த்திய வீர உரை”என்ற கவிதையை வெளியிட சுவனப்புத்திரனுக்கு தில் உள்ளதா ? வெளியிட்டு விளக்கம் அளிக்கலாமே

Dr.Anburaj said...


இந்து சமய கோவில்கள் உண்டியல் பணம் சொத்துக்களின் வருவாய்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசுதான் மேற்படி பொறுப்பைச் செய்ய வேண்டும்.

ஆனால் இந்துசமய அறநிலையத்துறை ஒரு மதசார்பற்ற அரசின் துறையாகச் செயல்படுகின்றது.இந்துக்களின் துரதிஷ்டம். இந்துசமய அறநிலையத்துறையை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். பிறகு பாருங்கள் நடப்பதை.

Dr.Anburaj said...

பாக்கிஸ்தான் பிரவினைக்கு சம்மதித்தது முதல் காரணம்.
பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவிட எந்த ஒரு காரியத்தையும் செய்யவில்லை.
மேலும் கலவரம் செய்யும் முஸ்லீம்களை மென்மையாக கண்டித்தது.இந்துக்களை மிகவும் கடுமையாக கண்டித்தது இப்படி இந்து விரோத செயல்களில் காந்தி ஈடுபட்டாா் என்பதுதான் குற்றச்சாட்டு.இதில் நியாயம் உள்ளது என்பது எனது முடிவு.காந்திழய கொலை செய்ததை நான் எற்கவில்லை.ஆனாலும் அவரது நடவடிக்கைகளில் நியாயமற்றவைகள் நிறைய இருந்தன.