Followers

Friday, August 01, 2014

சூல் கொண்ட காற்று - அறிவியலை பேசும் குர்ஆன்

ஹானஸ்ட் மேன்!

//இப்படியாக குர் ஆனின் எந்த பக்கத்தை தொட்டாலும் அளப்பரிய அறிவியல் கருத்துக்கள் மிதக்கின்றன(???!!!) . அவற்றை படிக்க படிக்க உடம்பில் உள்ள முடிகள் எல்லாம் குத்திட்டு நிற்கின்றன மேகங்களை கருக்கொள்ள செய்யும் காற்றை நாமே அனுப்புகிறோம். (15: 19-25) மேகங்கள் கருக்கொள்ள இவர் காற்றை அனுப்புகிறாராம். இதற்கு விளக்கம் தர எந்த விஞ்ஞானி கிடைப்பானோ. அந்த விஞ்ஞானி கூறுவதை ஆங்கிலத்தில் தருகிறேன் படியுங்கள் என்று கூறுவார் ஆகவே அறிவியல் அதை மைப்பிக்கறது. குரானும் அதையே கூறுகிறது என்று சொல்லவார். விரைவில் எதிர்பாருங்கள்.//

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(அல்குர்ஆன் 7:57)

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(அல்குர்ஆன் 15:22)


சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் பலதரப்பட்ட உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது.

இவ்வாறு உருவாக்கப்படும் மேகங்கள் காற்றின் உதவியுடன் ஒன்று திரட்டப்பட்டு சில படிமுறைகளுக்குப் பின் மேகங்களிலுள்ள நீர் ஒடுங்கி மழையாக பூமிக்கு வந்து விழுகின்றது. இப்பொறியியல் (Mechanism) மீள் சுழற்சியாக (re cycle) நடைபெற்று வருகின்றது.

இதையே அல்லாஹ் சுருக்கமாக, சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம் என அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான்.

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது

(அல்குர்ஆன் 24:43).



மேலுள்ள படத்திற்கமைய,

முதல் படித்தறம்:
காற்றின் மூலம் மேகங்கள் ஒன்று திரட்டப்படுகின்றன.

இரண்டாம் படித்தறம்:

காற்றானது சிறிய மேகங்களை ஒன்று சேர்த்து பெரிய மேக மூட்டத்தை உருவாக்கும். இவ்விரு படிமுறைகளையும் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? என அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

மூன்றாம் படித்தறம்:

சிறிய மேகங்கள் எல்லாம் ஒன்றாகக் குவிவதன் மூலம் பெரிய மேக மூட்டம் தோன்றி இதன் நடுவில் நீர் ஆவியாகும் விகிதம் இதன் ஓரங்களை விட அதிகளவில் காணப்படும். இதனால் மேகமானது செங்குத்தான நிலையில் வளர்ச்சியடைந்து காணப்படும். இதனால் வளிமண்டலத்திலுள்ள குளிரான பிரதேசத்திற்கு இவ் வளர்ச்சியடைந்த பகுதி ஒடுங்கி பெரியளவில் ஆலங்கட்டியாக உருவெடுக்கும். நீர் ஆவியாகி இவ்வாறு ஆலங்கட்டியாக உருவாகி மேகத்தினூடாக மழையாக நிலத்தில் விழும். இதையே அல்லாஹ், அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான் எனக் குறிப்பிடுகின்றான்.

வானிலை ஆராய்ச்சியாளர்கள் மிக அண்மையில்தான் மேகங்களின் உருவாக்கம், அமைப்பு, மழை உருவாகும் தொழினுட்பம் ஆகிய தகவல்களை நவீன தொழினுட்ப முறைகளின் மூலம் அறிந்துகொண்டனர்.

எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு இவ் அறிவியல் உண்மையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அல்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைவேதம் என்பது இந்த இடத்திலும் எந்த சந்தேகமும் இன்றி நிரூபனமாகின்றது.

-------------------------------------------------------------

உயிரினம் உருவாக்கும் மழை பொழிவு ( Bio Precipitations )

1978 ல் அமெரிக்காவின் மாண்டனோ மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் சாண்ட் என்னும் ஆய்வாளர் சிறு விமானத்தில் மேகங்களுக்கு இடையில் பறந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தார். அம்மேகங்களில் pseudomonas syringae என்னும் பாக்டீரியாக்கள் தங்கி கருக்கொண்டு மழை பொழிவிப்பதாக ( Bio Precipitation ) அறிவித்தார். இப்பாக்டீரியாக்கள் தாவரங்கள் மற்றும் உலகெங்கும் உள்ளன. இவைகள் காற்றுக்களினால் உயரே தூக்கிச் செல்லப்பட்டு மேகங்களில் இணைந்து கருக்கொண்டு மழையை பொழிவிக்கின்றன.

இது சம்பந்தமாக விக்கிபீடியா தரும் தகவலைப் பார்ப்போம்.

உயிரிகளால் பொழிவு ( Bio Precipitation) என்பது மழையை உண்டு பண்ணச் செய்யும் பாக்டீரியாக்களைப் பற்றியதாகும். வானிலையில் மழை பொழிவென்பது வளி மண்டல நீராவி குளிர்ந்து நிலத்தை அடையும் நிகழ்வாகும்.இவ்வாறு விண்ணில் உண்டாகும் மேகங்கள் மழை மற்றும் பனிப்பொழிவிற்குத் தேவையாகும். இதற்கு தூசுகள் இதர வளிகள் உருவாக உதவுகின்றன. ஆயினும் இவை இல்லா, ஒரு உயிர்ப்பொருள் பனிக்கரு உருவாக காரணமாக அமையும் நிகழ்வையே உயிர் மழைப்பொழிவு என்கிறோம்.

தனிமங்களும் உப்புகளும் கார்மேகங்களில் நிறைந்து காணப்படுகின்றன. இவையும் பனிக்கரு உருவாவதில் பெரிதும் துணை புரிகின்றன. ஆயினும் வளி மண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சைகள், மற்றும் சிறு பாசிகளே மேகம் உருவாதலில் கருவாக செயல் படுகின்றன. இவ்வாறு தட்ப வெப்ப சூழல் சம நிலையில் வளியில் உலவும் நுண்ணுயிர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. http://ta.wikipedia.org/s/iao

இம்மாதத்திய நியூ சயின்டிஸ்ட் இதழில் (NEW SCIENTIST-12 Jan-2013. P.14 ) ஒரு ஆய்வு செய்தி வெளியானது.
அமெரிக்கா அட்லாண்டாவில் உள்ள, ஜார்ஜியா அறிவியல் ஆய்வுக்கழகத்தை சேர்ந்த குழுவினர், நியூ மெக்சிக்கோவில் மையம் கொண்டிருந்த புயலை ஆய்வு செய்தனர். புயல் மேகங்களிலிருந்து சேகரித்த சாம்பிள்களில் உயிருள்ள நுண்ணுயிரிகள் (Microbes) இருந்தன. மண்ணிலிருந்து காற்றினால் தூக்கிச் செல்லப்பட்ட உயிரிகள் மேகங்களில் ஒன்று சேர்ந்து சூல் கொண்டு மழையை பொழிவிப்பதாக அறிவித்தனர். தங்களது ஆய்வை American geophysical union கூட்டத்தில் கடந்த டிசம்பரில் சமர்பித்துள்ளனர்.

ஆலங்கட்டி (பனிக்கட்டி) உருவாக்கும் நுண்ணுயிரிகள்.



கடந்த ஜூன் 2010 ல் அமெரிக்கா மாண்டனோ நகரில் பொழிந்த ஆலங்கட்டி மழையில், சுமார் 2 அங்குலம் விட்டமுடைய பனிக்கட்டிகள் விழுந்தன. இவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது, பனிக்கட்டியின் உட்புற கருவில் ( Embryo ) பாக்டீரியாக்கள் தங்கி பனிக்கட்டியை உருவாக்குவதாக அறிந்தனர். இப்பாக்டீரியாக்கள் ( Ice Nucleators ) உருவாக்கும் ஆலங்கட்டி பனிமழை பயிர்த் தாவரங்களில் பட்டு சேதமாக்குகிறது.அமெரிக்காவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் பயிர் இழப்பு ஏற்படுவதாக கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வையும் அல்குர்ஆன் குர்ஆன் விவரிக்கிறது.

“அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டியையும் பொழியச்செய்கின்றான். அதனை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கின்றான். அவன் நாடியவர்களை விட்டும் தடுத்துக்கொள்கிறான்.” -அல்குர்ஆன் .24:43.

“ஒரு காற்றைப்போல் இருக்கிறது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகி) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதனை அழித்து விட்டது.” –அல்குர்ஆன் .3:117.

ஐஸ் நியூக்ளியேட்டர் பாக்டீரியாக்கள், தக்காளி, பீன்ஸ், நெல், சோளம், புகையிலை போன்ற தாவரங்களின் இலைகளில் தங்கி வளரும். பயிர்களுக்கு நேரடியாக எந்த தீங்கும் இவை செய்வதில்லை. இவை வெளியிடும் புரதமானது நீர்த் துளியை பனிக்கட்டியாக மாற்றி தாவரத்தின் செல்களை அழித்துவிடும்.

பொதுவாக எல்லா புரதங்களும் (Protein) நீருடன் வினை புரியும். குறிப்பாக இரண்டு புரதங்கள், நீர் ஐஸ் ஆவதில் தொடர்புடையவை. உறைபனி தடுப்பு புரதம். (AFP-Antifreeze Protein), மற்றொன்று உறைபனி ஆக்கும் புரதம்,(Ice Nucleating Protein-INA) இந்த AFP புரதமானது நீரின் மூலக்கூறுகள் பனிக்கட்டியாகாமல் தடுக்கக்கூடியது. ஆனால் INA புரதம் இதற்கு நேர் மாறாக நீரின் மூலக்கூறுகளை வெப்ப நிலையை உயர்த்தி பனிக்கட்டியாக உறையச் செய்யும்.

நீரில் பொதுவாக காற்றிலுள்ள தூசு, துகள், மற்றும் தாதுக்கள் கலந்திருக்கும் நிலையில் அதன் உறை நிலை பூஜ்யம் டிகிரி செல்சியர்ஸ். ஆனால் தூய்மையான (Super cooled) நீரின் உறைநிலை மைனஸ் – 40 டிகிரி செல்சியர்ஸ் ஆகும். தாவரங்களின் இலையில் படிந்திருக்கும் தூய்மையான நீர்த்துளி பனிக்கட்டியாக உறைவதில்லை.

ஆனால் P.Syringae- Ice Nucleating பாக்டீரியா தனது INA புரதத்தை சுரந்து வெப்ப நிலையை உயர்த்தி மைனஸ் -2 to -5 டிகிரி நிலையில் நீர் மூலக்கூறுகளை பனிக்கட்டியாக உறையச்செய்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்த பாக்டீரியாக்களே காற்றின் மூலம் மேலே எடுத்துச்செல்லப்பட்டு மேகங்களில் தங்கி கருக்கொண்டு மழையாகப் பொழிகிறது.

“மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பி வைக்கின்றோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கின்றோம்.” -அல்குர்ஆன் .15:22.

ஆக, பாக்டீரியா உயிரிகள் மேகத்தில் கருக்கொண்டு மழை பொழியும் நிகழ்ச்சியை அல்குர்ஆன் அன்று கூறியதை இன்று அறிவியல் மெய்ப்பித்துள்ளது. இந்த வசனத்திற்கான விளக்கத்தையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபித்தோழர்கள் சுரக்கும் ஒட்டகப்பாலோடு ஒப்பிட்டு கூறிவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

உயிருள்ள பாக்டீரியாக்கள் மூலம் அல்லாஹ் உயிரற்ற மழையை இறக்குகின்றான். உயிரற்ற மழையிலிருந்து உயிருள்ள தாவர வர்க்கங்களை பூமியில் வெளிப்படுத்துகின்றான்.

“அவனே இறந்தவைகளிளிருந்து உயிருள்ளவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே உயிருள்ளவைகளிலிருந்து மரணித்தவைகளை வெளிப்படுத்துகின்றான். அவனே இறந்த பூமியையும் செழிப்பாக்குகின்றான்.” -அல்குர்ஆன் .30:19.



No comments: