Followers

Monday, April 13, 2015

வளைகுடாவில் இலவசமாக உணவு வழங்கும் உணவகம்!



வளைகுடா நாடுகளில் ஒன்று கத்தார். வெளி நாட்டு தொழிலாளர்களை அதிகம் தன்னகத்தே கொண்டது கத்தார். கூலித் தொழிலாளிகளாக நேபாள், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து லட்சக் கணக்கான மக்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சிக்கனம் கருதி புரோட்டா, ரொட்டி பொன்றவற்றை வெறும் டீயிலோ அல்லது தண்ணீரிலோ நனைத்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவர். பல வளைகுடா நாடுகளில் இதனைப் பார்க்கலாம்.

டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட சுஹைப் மற்றும் சாதாப் சகோதரர்கள் 'ஜெய்கா ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் தோஹாவில் உணவகம் நடத்தி வருகின்றனர். இது பற்றி சுஹைப் கூறும் போது 'வசதியற்றோருக்கு உணவு இலவசமாக வழங்கப்படும்' என்ற அறிவிப்பு பலகையை பார்த்தவுடன் என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. பல தொழிலாளர்கள் ரொட்டியை தண்ணீரில் நனைத்து சாப்பிடுவதைப் பார்த்துள்ளேன். எனது இளைய சகோதரன் முயற்சியால் இந்த திட்டத்தை தொடங்கினோம். ஆரம்ப நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் வந்தனர். சுய மரியாதை காரணமாக இருக்கலாம். அல்லது உணவகத்தில் ஏறி 'இலவசமாக கொடுங்கள்' என்று கேட்க வெட்கப்பட்டிருக்கலாம். எனவே தற்போது உணவகத்துக்கு வெளியே குளிர்சாதன பெட்டியில் பாக்கெட்டுகளாக உணவுப் பொட்டலங்களை வைக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் உணவகத்துக்குள் ஏறாமலேயே தங்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அமைத்துள்ளோம்' என்கிறார்.

சில உணவகங்களில் கொள்ளை லாபம் அடித்து காசு பார்க்கும் இந்த நாளில் வறியவர்களின் தேவையறிந்து இலவசமாக உணவு வழங்கி வரும் இந்த சகோதரர்களை நாமும் வாழ்த்துவோம். உலகமனைத்திலும் உள்ள செல்வந்தர்கள் இது போன்ற நிலையை எடுத்தால் பட்டினி சாவுகள் நடக்குமா?

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் அவர்கள் 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் உங்களில் இறந்த சவத்தை (ஜனாஸாவை)ப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்கர் 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் அவர்கள் 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று கேட்க, அதற்கும் அபூபக்கர் அவர்கள் 'நான்' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா , நூல்: முஸ்லிம் (1865)

தகவல் உதவி
சவுதி கெஜட்
13-04-2015

No comments: