Followers

Monday, January 25, 2016

அஜ்மீர் தர்ஹாவில் நடக்கும் அட்டூழியங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு வட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டேன். டெல்லி, ஆக்ரா சுற்றப்பாரக்க திட்டம். அதன...

Posted by Nazeer Ahamed on Saturday, January 23, 2016

சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு வட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டேன். டெல்லி, ஆக்ரா சுற்றப்பாரக்க திட்டம். அதன்படி க்ரேண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸில் பயணத்தை தொடர்ந்தோம். ஆக்ரா சுற்றிப் பார்த்து விட்டு அஜ்மீருக்கும் போகலாம் என்று எனது தாயார் விருப்பப்பட்டார். சுற்றிப் பார்க்க மட்டுமே அங்கு எந்த வேண்டுதலும் செய்யக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் பேரில் அஜ்மீருக்கும் சென்றோம். உணவகங்களில் நல்ல ருசியான சாப்பாடு. இனிப்பு பதார்த்தங்களும் புதிய புதிய வகைகளாக இருந்தன. அஜ்மீர் தர்ஹாவை பார்வையிட சென்றோம். அன்று வெள்ளிக் கிழமை. வழக்கத்தை விட அதிகமான கூட்டம். கும்பல் கும்பலாக போர்வை போர்த்த ஆட்கள் வந்தவண்ணம் இருந்தனர்.

தர்ஹாவின் உள்ளே நுழைந்தவுடன் தாடியும் ஜிப்பாவும் தலைப்பாகையுடன் ஒருவன் வந்து 'வெளியூரா? நான் சுற்றிக் காண்பிக்கிறேன் வாருங்கள்' என்று அழைத்துச் சென்றார். பெரிய தாடியோடு ஒரு முல்லா அமர்ந்திருந்தார். 'இவரிடம் துவா செய்ய சொல்லுங்கள். எல்லாம் கை கூடும்' என்றார். 'இறைவனிடம் நானே கேட்டுக் கொள்கிறேன்' என்று சொல்லி விட்டு நகர ஆரம்பித்தேன். என்னை ஒரு மாதிரியாக அந்த ஆள் பார்த்துக் கொண்டே உண்டியல் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த உண்டியலின் மேல் பகுதிக்கு ஏணி வைத்துள்ளார்கள். அவ்வளவு பெரியது. எண்ணெய் கொப்பரை என்று சொல்வார்களல்லவா அது போல் ராட்சஸ உண்டியல். மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பணங்களையும் பொருட்களையும் வீசிக் கொண்டிருந்தனர். மக்களின் அறியாமையை நினைத்து வருத்தமுற்றேன். அந்த காணிக்கைகள் எல்லாம் அங்கே உட்கார்ந்து உண்டு கொழுத்து வாழும் முல்லாக்களுக்கே செல்கின்றது. என் தாயாரும் மனைவியும் பய பக்தியோடு அந்த அடக்கஸ்தலத்தை பார்வையிட்டனர். ஒரு முல்லா உட்கார்ந்து கொண்டு ஏதேதோ ஓதிக் கொண்டு மக்களிடமிருந்து காணிக்கைகளை வாங்கிக் கொண்டிருந்தார். 'ரீல் உட்ரான்... ரீல் உட்ரான்' என்று தாயாரிடம் தமிழில் சொன்னேன். 'பேசாம இரு... தமிழ் தெரிஞ்சவங்க யாராவது கேட்டா பிரச்னையாயிடும்' என்று பயந்தார்கள். பிறகு உண்டியலில் பணம் போட சொல்லி அந்த ஆள் கேட்டுக் கொண்டார். மேலே ஏறி வேண்டா வெறுப்பாக இருபதோ, ஐம்பதோ ரூபாயை போட்டேன். 'அவ்வளவுதானா? வெளியூரிலிருந்து வருபவர்கள் 2000, 3000 என்று அள்ளி வீசுவார்கள்' என்றார். நான் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

ஏழைகள் வழி நெடுக உட்கார்ந்து யாசித்துக் கொண்டிருந்தனர். இடையிடையே இசை முழக்கங்களோடு பல க்ரூப்களாக வந்து போர்வை போர்த்திக் கொண்டிருந்தனர். இது போல் போர்வை போர்த்துவது யார் சொல்லிக் கொடுத்ததோ தெரியவில்லை. இஸ்லாமிய நடவடிக்கைகள் எதுவுமே அங்கு இல்லை. உழைக்காமல் உண்டு கொழுக்கும் முல்லாக்களின் மார்க்க முரணான செயல்கள் எங்கும் நிரவி கிடந்தது.

இந்த வீடியோ கிளிப்பையும் பாருங்கள்: அஜ்மீர் தர்ஹாவில் நடக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். இதுதான் இஸ்லாம் காட்டிய வழிமுறையா? அரை குறை உடையோடு இவ்வாறு ஆண்களோடு கலந்து நடனம் ஆடுவதுதான் நபிகள் நாயகம் கற்றுத் தந்த வழிமுறையா? இஸ்லாமிய சட்டங்களை குழி தோண்டி புதைப்பதற்காக எதிரிகளால் நயவஞ்சகமாக புகுத்தப்பட்டதே இந்த தர்ஹா கலாசாரம். இதுவரை இதன் தீங்குகளை விளங்காமல் இருந்தோம். இனி வருங்காலங்களிலாவது தர்ஹா மாயையிலிருந்து விலகி ஏக இறைவனை மட்டுமே வணங்குவோம் என்ற சங்கல்பம் எடுப்போமாக!




1 comment:

Dr.Anburaj said...


1400 வருடங்களுக்கு முன்பு முகம்மது செய்யாதது -செய்தது அடிப்படையில் - தூய

அரேபிய கலாச்சாரம்தான் இஸ்லாம் என்ற தவறான கொள்கையின் அடிப்படையில் -தங்களின் கருத்து அமைக்கப்பட்டுள்ளது.இத்தகைய கொள்கையுடையவா்கள்தான் அரபு அல்லாத உலகை அழிகக வேண்டும் என்ற கொள்கையினைப் பின்பற்றி பயங்கரவாதம் நடத்துகின்றாா்கள்.

தா்காவிற்கு போகின்றவா்கள் யாரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதில்லை.கடும் போக்காளா்கள் அங்கு இல்லை. அரேபிய கலாச்சாரம்தான் ஆண்டவன் காட்டிய ஒரே வழி என்ற நம்பிக்கை இவர்களுக்கு கிடையாது. அதனால் இந்துக்களோடு மிக்க இணக்கமாக வாழ்ந்து வருகின்றாா்கள்.

தா்கா போகின்றவா்களில் நேற்றும் இன்றும் நாளையும் பயங்கரவாதிகள் உருவானதில்லை.