Followers

Saturday, November 24, 2018

மறுபடியும் மதவாதம் பெரும் வாளேந்தி நிற்கின்றது



சில மாதங்களுக்கு முன்பே சொல்லி இருந்தோம், இந்த வருடம் டிசம்பர் 6 சாதாரணமாக இருக்காது, மாபெரும் கலவரங்கள் நடக்கலாம் என சொல்லி இருந்தோம்
நம் கணிப்பு தப்பவில்லை விஷயம் அதை நோக்கியே நகர்கின்றது
விஷயம் யார்? சாட்சாத் ராமரும் அவரின் அயோத்தியும்
வாழும் காலத்தில் கைகேயி, அகலிகை, குகன், சுக்ரீவன், விபீஷ்ணன் என யாருக்கெல்லாமோ வாழ்வு கொடுத்த் ராமர், வாழ்ந்த பின்பும் வால்மிகிக்கும், கம்பனுக்கும் அங்கீகாரம் கொடுத்த ராமர் இப்பொழுது பாஜகவிற்கும் அதன் ரகசிய குழுக்களுக்கும் ஆறுதல் அளிப்பவராகவே இருக்கின்றார்
5 வருடம் மோடி ஆண்டிருக்கின்றார், விரைவில் நாடு தேர்தலை சந்திக்க போகின்றது, ஆனால் அப்பொழுதெல்லாம் மோடிடா, பிரதமர்டா, சவால்டா என முழங்கியவர்களுக்கு ஆட்சி முடியும் பொழுது ராமர் கோவில் நினைவுக்கு வருகின்றது
ஆம் அவர்களுக்கு தேர்தல் வரும்பொழுது ராமர் நினைவுக்கு வருவார், தேர்தல் முடிந்துவிட்டால் அத்தோடு மறந்துவிடுவார்கள்
இப்பொழுது தேர்தல் வரப்போகின்றது அல்லவா? பாஜக கணசிமிட்ட ஆளாளுக்கு கிளம்புகின்றார்கள்
முதல் குரலை மோகன் பகவத் எழுப்பினார், நவம்பர் 26ல் மோடியிடம் நியாயம் கேட்பேன் என கிளம்பினார், அவர் கிளம்பிய பின் ஆளாளுக்கு வந்தாயிற்று
சிவசேனா தலைவர் 17 மணிநேரத்தில் பாபர் மசூதியினை இடித்தோம் என பகிரங்கமாக சொல்கின்றார், இதைவிட என்ன வாக்குமூலம் வேண்டும், உடனே பிடித்து முதல் குற்றவாளி என உள்ளே தள்ள வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்
இப்பொழுது அயோத்தியில் 2 லட்சம் பேர் குவிந்தாகிவிட்டது, பூராவும் காவி தாலிபான்கள்
பாமியான் புத்தர் சிலையினை உலகமே சொல்லியும் இடித்த அக்கும்பலுக்கும் , இவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை உடை மட்டுமே வேறு
அயோத்தி உச்சகட்ட சிக்கலில் இருக்கின்றது, 144 தடை உத்தரவு போட்டிருக்கின்றார்கள், விஷயம் எல்லை மீறி செல்ல நொடி ஆகாது
உடனே துணைராணுவ படையினை அனுப்பி தேவைபட்டால் ராணுவத்தையே அனுப்ப வேண்டிய நேரமிது, தேச அமைதிக்கு அதைத்தான் செய்ய வேண்டும்
ஆனால் மோடி ஒன்றுமே அறியா கன்னிபோல் அமர்ந்திருக்கின்றார் கண்டிக்கதக்கது
சந்தடி சாக்கில் தாஜ்மகாலை விடமாட்டோம் என்றொரு கோஷ்டி கிளம்புகின்றது
ஒரு பாஜக் எம்பி, கவனியுங்கள் எம்பி சிவராஜ் என்பவர் ஜும்மா மசூதியினை இடித்து இந்து சிலைகளை மீட்க வேண்டும், சிலை இல்லாவிட்டால் என்னை தூக்கிலிடுங்கள் என்கின்றார்
எப்படிபட்டது ஜும்மா மசூதி?
உலகின் மிகபெரிய மசூதிகளில் ஒன்று, இந்தியாவின் பெரும் உலக அடையாளங்களில் ஒன்று அதை இடிக்க வேண்டுமாம்
இவரை இப்பொழுதே தூக்கிலிடுவது நல்லது, மசூதியினை இடித்து சிலையினை தேட வேண்டுமாம், சிலை இல்லாவிட்டால் செத்துவிடுவாராம், சரி அதன் பின் மசூதியினை கட்டுவது யார் என்றால் சொல்ல தெரியாது, பூராவும் மாட்டு மூளை
வடக்கே இப்படி என்றால், சபரிமலை விவகாரத்தை வைத்து பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் கால் ஊன்ற கடும் முயற்சியில் அங்கும் கலவர சூழலை அணையாமல் காக்கின்றார்கள், பொன்னார் சென்றதெல்லாம் அந்த திட்டம்
ஆக நாடு முழுக்க தேர்தலுக்கு முன் பெரும் கலவரங்களை நிகழ்த்தி அதை வைத்து தேர்தலை சந்திக்கவும் இல்லை அவசர காலம் அறிவித்து இந்திரா பாணியில் ஆட்சியினை தேர்தல் இன்றி நீட்டிக்கும் திட்டம் இவர்களிடம் இருக்கலாம்
அயோத்தியில் அடிக்கட்டும், சாகட்டும் ஆனால் விஷயம் அயோத்தியோடு நிற்காது, நாடு முழுக்க பரவும்
1992 சம்பவங்களை ஒரு காலமும் மறக்க முடியாது, அத்வாணி கோஷ்டி இத்தேசத்திற்கு செய்த பெரும் தலைகுனிவு அது
அந்த வலியினை பயன்படுத்தி அந்நிய சக்திகள் ஊடுருவி செய்த குண்டுவெடிப்பும் கலவரமும் நாடு இன்னொரு முறை தாங்க கூடிய விஷயம் அல்ல‌
ஒவ்வொரு இந்தியனும் அதை மறக்க விரும்புகின்றான், ஹிட்லர் காலம் தங்கள் குழந்தைகளுக்கு தெரிய கூடாது எனும் ஜெர்மானிய பெற்றோரை போல நல்ல தலைமுறையினை வளர்க்க விரும்புகின்றான்
மதம், இனம் கடந்து நாடு எனும் நோக்கிற்கு செல்ல வேண்டிய தலைமுறை அது
ஆனால் இந்த காவி பாவிகள் அதை மறக்கவிடுவதில்லை மறுபடியும் இத்தேசம் பற்றி எரியவேண்டும் என விரும்பி நிற்கின்றார்கள்
மறுபடியும் மதவாதம் பெரும் வாளேந்தி நிற்கின்றது
ஒரு விஷயம் நினைத்தால் அச்சம் மேலோங்குகின்றது, ஆம் மனதை மிரட்டும் விஷயம் அது
முன்பெல்லாம் இந்த சக்திகள் ஆட்டம் போடும்பொழுது அதை தட்டிவைக்க நல்ல அரசுகள் இருந்தன‌
நேரு காலம் முதல் மன்மோகன் காலம் வரை ஒரு பாதுகாப்பு இருந்தது, மத்திய அரசு கைவிடாது எனும் நம்பிக்கை இருந்தது
வாஜ்பாய் பிரதமராக இருந்தாலும் திமுக போன்ற கட்சிகளிடம் அவர்களின் லகான் இருந்தது
இப்பொழுது அப்படி அல்ல, மத்தியில் அசுர பலம், அயோத்தி இருக்கும் உபியில் மிருக பலத்தோடு இருக்கின்றார்கள்
பெரிய மோடிக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல உபியின் சின்ன மோடி
இவர்கள் கலவரங்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதற்கு குஜராத் வீதிகளே சாட்சி
இந்த லட்சணத்தில் தமிழகத்திலும் அவர்கள் கண்ணசைவு ஆட்சியே, தூத்துகுடி சம்பங்களே சாட்சி
இந்நிலையில் அயோத்தி சிக்கலால் நாடு கலவர சூழலை எதிர்கொண்டால் என்னாகும்?
அதுதான் நம் கவலையினை அதிகரிகின்றது
எனினும் இந்த மதவாத வோட்டு பொறுக்கிகளை நல்ல இந்துக்கள் ஆதரிப்பதில்லை, மதவாதத்திற்கு அவர்கள் துணை போகமாட்டார்கள்
நல்ல இந்துக்களும், இந்தியர்களும் இவர்களின் வாக்குவங்கி மதவாதத்திற்கு துணைபோகாமல் அமைதிகாத்து , நாட்டில் அமைதியும் வளமும் சகோதரத்துவமும் நிலைக்க பாடுபடுவார்கள் என மனமார நம்புகின்றோம்
அந்த நம்பிக்கையினை தவிர வேறு ஒரு நம்பிக்கையும் இப்போது இல்லை
ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, ஓய்வு நேரத்தில் தன் அம்பினை தரையில் குத்துகின்றான் ராமன், அதில் ஒரு தவளை சிக்கிகொள்கின்றது
அந்த அம்பினை அவன் எடுக்கும்பொழுது அம்பு முனையில் தவளை இருக்கின்றது, அவனோ பதறி ஏன் கத்தவில்லை என கேட்டான்
ரத்தம் வழிய சொன்னது தவளை "ராமா, இன்னொருவர் குத்தவந்தால் உன்பெயரை அழைக்கலாம், நீயே குத்தினால் நான் யாரை அழைப்பது ராமா"
அந்த தவளை நிலையில்தான் நல்ல இந்துக்களும் இந்தியாவும் இருக்கின்றது, ஆபத்து யார் பெயரில் வந்தாலும் ராமா என கத்தலாம்
ஆனால் ராமன் பெயரிலே மிரட்டல் வந்தால் யாரிடம் கத்துவது?
பிறரின் நலனுக்காக, நாட்டின் அமைதிக்காக தன் அரசையே துறந்து அரண்மனை துறந்து கானகம் சென்றவன் ராமன்
அந்த மாபெரும் அவதாரத்தின் பெயரை சொல்லி இங்கே கலவரம், நிச்சயம் அந்த ராமன் அதை அனுமதிக்கவே மாட்டான்
எத்தனையோ அரக்கர்களை அழித்த ராமபிரான், தன் பெயரினை சொல்லி நாட்டு அமைதியினை கெடுக்கும் இந்த
அயோக்கிய காவி அரக்கர்களையும் பார்த்து கொள்ளட்டும்
தேசம் மிக விழிப்பாகவும், எந்த சூழலையும் எதிர்கொள்ளும் விதமாகவும் இருக்க வேண்டிய நேரமிது

1 comment:

Dr.Anburaj said...

அயோத்தி மதுரா காசி போன்ற நாட்டில்சில இடங்கள் இந்துக்களுக்கு சமூக ரீதியிலும் சமய ரீதியிலும் முக்கியமான இடங்கள் அரேபிய காடையா்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. விடுவிக்க வேண்டியது நியாயமானது.இந்துக்களின் லட்சியம்.
நியாயமானது.இந்துக்களின் லட்சியம்.நியாயமானது.இந்துக்களின் லட்சியம்.நியாயமானது.இந்துக்களின் லட்சியம்.நியாயமானது.இந்துக்களின் லட்சியம்.நியாயமானது.இந்துக்களின் லட்சியம்.