Followers

Sunday, May 21, 2017

இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா?

இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா?

மதுரை பேரையூர் அருகில் உள்ள வீராளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவும், ஈரோடு அருகே சித்தோட்டைச் சேர்ந்த பூபதி என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஈரோட்டில் வசித்து வந்திருக்கின்றார்கள். இதில் சுகன்யா அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர், பூபதி நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவருமே ஆதிக்க சாதிகள்தான். அப்படி இருந்தும் சுகன்யாவின் பெற்றோர்கள் சுகன்யாவை அடித்துக்கொன்று உடலை எரித்திருக்கின்றார்கள்.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு காவல்துறையின் மெத்தனப்போக்கும் ஒரு காரணமாக இருந்துள்ளது. மனைவியை மீட்டுத்தர சொல்லி, புகார்கொடுத்து 25 நாட்கள் ஆகியும் அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அடித்துக் கொன்று எரிக்கும்வரைக்கும் பொறுமை காத்திருக்கின்றார்கள் சாதிவெறி பிடித்த காவல்துறையினர். தமிழ்நாட்டில் நடந்த பல சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு முக்கிய காரணமாக காவல்துறையே இருந்திருக்கின்றது. பெண்களை வலுக்கட்டாயமாகப் பிரித்து பெற்றோர் உடன் அனுப்பி வைப்பது, உள்ளூர் சாதி வெறியர்களிடம் காசு வாங்கிக்கொண்டு ஆதிக்கசாதி வெறியர்களை நக்கிப் பிழைப்பது என தனது மானங்கெட்ட செயலை அது தொடர்ந்து செய்துவருகின்றது.

பூபதி புகார் கொடுத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் நிச்சயம் சுகன்யாவை உயிருடன் சாதிவெறி பிடித்த அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டிருக்கலாம். பூபதிக்கு மனைவி முக்கியம், ஆனால் காவல்துறைக்கு எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் காசுதான் முக்கியம்.


செ.கார்கி


No comments: