Followers

Tuesday, May 16, 2017

பிஜெ இந்த பெயர் எனக்கு அறிமுகமான .........

#பிஜெ இந்த பெயர் எனக்கு அறிமுகமான பொது நான் மிக சிறுவனாக இருந்தேன். அந்த பெயரை கேட்ட போது மிக கசப்பான செய்தியும் கூடவே செவியேற்றேன்.

பிஜெ மீது சுமத்தப்பட்ட முதல் குற்றசாட்டு அது, முகம் கூட பார்த்திராத அவர் மீது விஷமத்தனமான ஒரு கோபம் உள்ளூர பரவியது.

"பிஜெ பன்றி கறி சாப்பிட சொல்லி விட்டார்" என ஊரே கொந்தளித்து கொண்டு இருந்தது.

ஒரு கூட்டம் பள்ளிவாசலில் வைத்து அவரை அடித்துக்கொண்டு இருந்தது.

யார் பிஜெ என எட்டி எட்டி தேடி பார்த்தேன் அவரை பார்க்க முடியவில்லை.

பன்றி கறி ஹராம் அதை சாப்பிட சொல்லியுள்ளாரே இந்த குழப்பவாதி என அன்றே அவர் மீது வெறுப்பு உண்டாகி விட்டது.

இல்லை, இல்லை, அதை சொல்லி சொல்லி உண்டாக்கி விட்டார்கள்.

அப்படியே ஒரு வருடம் பிறகு ஒரு தவ்ஹீத் பள்ளிவாசல் எங்க ஊரில் திறக்கப்பட்டது.

அதன் பிறகு அடுத்த கட்ட அவதூறு பரப்பினார்கள்.

குரானில் ஒரு பக்கத்தை கிழித்தும் பேனாவால் சில வரிகளை அழித்துள்ளார்கள் என்ற வதந்தி அதி தீவிரமாக எங்க ஊரில் பரவியது.

கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான பெரியவர்கள் சிறியவர்கள் என பள்ளிவாசல் முன்பு திரண்டு ஒவ்வொரு தவ்ஹீத்வாதிகளையும் அடித்து உதைத்தும் கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டதில் நானும் இருந்தேன் ஏதோ ஒன்று நெருடலாக இருந்தது.

அந்த கூட்டம் அப்படியே திரும்பி பக்கத்து தெருவிற்குள் குறிப்பிட்ட ஒரு வீட்டை குறி வைத்து தாக்குதல் தொடுத்து, ஒரு முதியவரை கொடூரமாக தாக்கினார்கள். பெண்களின் அலறல் சத்தம் இன்னும் என் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது.

பிறகு யோசித்தேன், அடிக்கிறவன் ஆபாச வார்த்தைகளை கொண்டு திட்டி தீர்க்கிறான் அடி வாங்குகிறவர்கள் அல்லாஹ் அல்லாஹ் என கதறுகிறார்கள்.

அடிப்பவர்கள் பலர் தொழுகைக்கும் வராதவர்கள், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துக்கொள்கிறவர்கள் இவர்களிடத்தில் என்ன நியாயம் இருக்க முடியும் நான் ஏன் இவர்களுடன் இருக்கிறேன் என் கேள்வி மனதை துளைத்துக்கொண்டு இருந்தது.

#ஷஃபி என்கிற ஒரு நண்பன் அறிமுகமானான் மிக சாந்தமானவன், அவன் ஏகத்துவத்தை எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக எத்தி வைத்தான் தவ்ஹீத் என்றால் என்ன என்பதை விளக்கினான்.

பிஜெ ஏன் பன்றி கறி சாப்பிட சொன்னார் என கேட்ட போது, குரானை எடுத்து வந்து ஏதும் கிடைக்காத தவிர்க்க முடியாத நிலையில் பன்றி கறி சாப்பிடலாம் என அல்லாஹ் கூறியுள்ளான் தவிர, அது பிஜெவின் கருத்து அல்ல, அவர் சொன்னதை முன் பின் வார்த்தைகளை விட்டு வதந்தி பரப்புகிறார்கள் என ஆதாரத்துடன் விளக்கமளித்தான்.

தவ்ஹீத் பள்ளியில் ஏன் குரானின் கடைசி பக்கத்தை கிழித்தீர்கள் என்றும் பேனாவால் அழித்தும் உள்ளீர்கள் என்றும் கேட்டேன்.

அது குரானை ஓதி முடித்தால் அதை ஓத வேண்டும் என கூறி "கதமல் குரான்" என்ற தலைப்பில் நபி நாயகம் சொல்லாத ஒரு பிராத்தனையை ஓத வேண்டும் என குரானில் அவர்கள் தான் தினித்து வைத்து இருக்கிறார்கள். நபிகள் நாயகம் சொன்னதை தான் பின்பற்ற சொல்லி அல்லாஹ் கூறுகிறான் என அடுத்த வசனத்தை எடுத்து காட்டினான்.

அதன் பிறகு ஒவ்வொன்றாக தவ்ஹீத் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தேன். எந்த கேள்வி கேட்டாலும் ஹதீஸ் புத்தங்களை கொண்டு வந்து படித்து காண்பிப்பார்கள் ஆதரத்துடன் விளக்குவார்கள் சிறுவன் என்று பாராமல் கணிவாக நடந்துக்கொண்டார்கள்.

அன்றே உணர்ந்து கொண்டேன் சத்தியம் இவர்களிடத்தில் இருக்கிறது என,

மிக தீவிரமாக தவ்ஹீத் சகோதரர்களுடன் தமுமுகவில் இணைந்து மார்கத்திற்காகவும் சமூகத்திற்காகவும் இரவு பகல் பாராமல் களமிறங்கினேன்.

பல முறை மார்க்க பிரச்சாரத்திற்காக பிட் நோட்டீஸ் கொடுத்து பல பள்ளிவாசலில் இருந்து விரட்டப்பட்டேன்.

ஆனால் மனம் தளரவில்லை அது மேலும் அழகாய் நேர்த்தியாய் மாறுவதை உள்ளூர உணர முடிந்தது.

எங்கேனும் ஆம்புலன்ஸோ தீயணைப்பு சைரன் சத்ததை கேட்டால் நண்பர்களுடன் பைக்கில் பின் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவையாற்ற பழக்கப்படுத்திக்கொண்டோம்.

மார்க்க பணியில் எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் சமூக பணியில் ஒரு சாரர் அரவனைத்தார்கள்.

சமூகம் சார்ந்த போராட்டங்களுக்கு மக்கள் சாரை சாரையாக அணி வகுத்தார்கள்.

வெறும் ஒன்று இரண்டு பேரா இருந்த ஏகத்துவவாதிகள் இன்று லட்சோப லட்சம் மக்களின் இதயங்களை வென்று இருக்கிறது.

விருட்சமாக வளர்ந்து அசைக்க முடியாத சக்தியாக அல்லாஹ்வின் உதவியுடன் இன்று கம்பீரமாக நிற்கிறது.

அந்த சத்திய கூட்டத்தை சிறுமைப்படுத்தி காட்டத்தான் அன்று முளைத்த பெருத்த கூட்டங்களின் எச்சங்கள் இன்று கதறி கொண்டு இருக்கிறது.
அன்று நான் தவ்ஹீத் என்றால் என்னவென்று ஆய்வு செய்து தூய மார்க்கத்தின் பக்கம் நின்றேன்.

எதிர்த்தவர்கள் பலரும் அதை ஆய்வு செய்து தான் ஏற்றார்கள்.

ஆய்வு செய்யாதவர்கள் இன்று வரை எதிர்கிறார்கள்.

கண்மூடித்தனமாக இருந்தால் தவ்ஹீத் என்றால் எரிச்சலாகத்தான் இருக்கும்.

அதை ஆய்வு செய்ய வாருங்கள், இறைவம் அருள் புரிவான் இன்ஷா அல்லாஹ்.




No comments: