Followers

Tuesday, July 04, 2017

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' தில் உள்ள அரசியல் பின்னணி!

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' தில் உள்ள அரசியல் பின்னணி!


சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் அணியும் கடந்த ஜூன் 18, 2017 அன்று மோதின. அப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியதும் இந்திய ரசிகர்கள் கொதித்தெழுந்தார்கள். வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொலைக்காட்சிப் பெட்டியை உடைப்பதும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதுமாகவும் தமது தேசபக்தியைவெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.


அதே நேரத்தில் மத்தியப்பிரதேசம், புர்கான்பூர் மாவட்டத்தின் சாப்பூர் காவல் நிலையத்தின் போலீசு கும்பலின் மூளை மட்டும் வேறு விதமாகச் சிந்தித்தது. போட்டியில் இந்தியா தோற்றதும், ஜீப்பை எடுத்துக் கொண்டு மொஹத் என்னும் கிராமத்திற்குள் நுழைந்த போலீசு அனிஸ் ஷேக் பாபு மன்சூரியின் வீட்டின் முன் நிறுத்தியது. அனிஸ் பி.எஸ்.சி, டி.எட் முடித்த பட்டதாரி இளைஞர். அங்கே, தையல் தொழில் செய்து வருகிறார். அவரை போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்றது, போலீசு. அடுத்த ஒரு மணிநேரத்தில் அக்கிராமத்திலிருந்து மேலும் 8 இளைஞர்களை போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

அனிஸ் மன்சூரி கைது செய்யப்படுவதைப் பார்த்த அவரது நண்பர் சுபாஷ் லக்ஷ்மன் கோலி அவரை மீட்க உடனடியாக போலீசு நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த இன்ஸ்பெக்ட சஞ்சய் பதாக், “ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு முசுலீமுக்கு நண்பனாக இருக்கிறாயா?” எனக் கேட்டு லக்ஷ்மன் கோலியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதில் கோலியின் வலது காது செவித்திறனை இழந்துவிட்டது. அதன் பின்னர் கோலியின் செல்போனைப் பிடுங்கிய இன்ஸ்பெக்டர், அவசர எண் 100-க்கு அழைத்து அக்கிராமத்தில் இரண்டு தரப்பினர் கடுமையான சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், போலீசு உடனடியாக வரவேண்டும் எனவும் சாதாரணக் குடிமகன் போல புகார் தெரிவித்துள்ளார்.

மறுநாள் அக்கிராமத்தைச் சேர்ந்த வேறு சிலரையும் கைது செய்து விட்டு, கோலியை அழைத்துத் தாமே தயாரித்த ஒரு புகார் மனு ஒன்றில் கையெழுத்திடக் கூறியிருக்கிறது போலீசு. போலீசின் தாக்குதலுக்குப் பயந்து அப்புகார் மனுவை முழுமையாகப் படித்துப் பார்க்காமலேயே கையெழுத்துப் போட்டுள்ளார் கோலி. அம்மனுவில், அக்கிராமத்தைச் சேர்ந்த அனிஸ் மன்சூரி உள்ளிட்ட 15 பேர், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்ற பின்னர், அனைவருக்கும் இனிப்பு, காரம் வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் என்றும், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்என முழக்கமிட்டார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது.

பின்னர் கைது செய்யப்பட்ட 15 பேர் மீதும் தேசதுரோகப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், இச்செய்தி டைம்ஸ் நௌவ் போன்ற தேசிய ஊடகங்களின் தேசப் பற்றைநிரூபிக்கும் முக்கியத் தலைப்புச் செய்தியான பின்னர், தேசதுரோக வழக்கு செல்லுபடியாகாது எனப் பல்வேறு தரப்பினரும் பேசத்தொடங்கிய பின்னர், மதக் கலவரத்தை தூண்டுதல், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற பிரிவின் கீழ் வழக்கை மாற்றியது.

இச்சம்பவம் குறித்து போலீசு இன்ஸ்பெக்டர் சஞ்சய் பதக் கூறுகையில் இந்தியாவின் மோசமான தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தேசமே ஆழ்ந்த துக்கத்தில் இருந்த போது, இவர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்என்றார்.

ஆனால் அப்பகுதி மக்களோ, தங்கள் கிராமத்தில் பெரும்பான்மையோர் கிரிக்கெட்டை பார்ப்பதில்லை என்றும், இரம்ஜான் நோன்பு என்றால் யாரும் டிவி பார்க்கமாட்டார்கள் என்றும் கூறியிருக்கின்றனர். மொகாத் கிராமத்தில் முசுலீம்களும், இந்துக்களும் சம அளவிலேயே இருந்து வருகின்றனர். அங்கிருக்கும் முசுலீம்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தான் பில்ஸ்பழங்குடி இனத்திலிருந்து இசுலாமிய மதத்தைத் தழுவியுள்ளனர். 1992-ம் ஆண்டு இந்து மத வெறியர்களின் பாபர் மசூதி இடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், நாடே கலவரக்காடாய் மாறிய சூழலிலும், இங்கு இந்துக்களும் முசுலீம்களும் அமைதி காத்திருக்கின்றனர். மத ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழும் இப்பகுதியில்தான் இப்படி ஒரு சம்பவத்தை ஜோடித்திருக்கிறது காவி வெறி பிடித்த போலீசு.

போலீசின் கிரிமினல்தனம் இப்படி வெளிப்படையாக அம்பலப்பட்ட பின்னரும் இது குறித்து வாய் திறக்காமல் கமுக்கமாக இருக்கின்றன, மாநில பாஜக அரசும், இச்சம்பவத்தைப் பரபரப்புச் சம்பவமாக்கிய ஊடகங்களும். காஷ்மீரில் இந்திய அரசின் ஒடுக்குமுறை காரணமாக அங்கே பாகிஸ்தான் வெற்றியை இந்திய அரசை எதிர்க்கும் முகமாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அதைத் தவிர வேறு எங்கேயும் இத்தகைய செய்திகள் இல்லை.

ஆனால் கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி அடைந்தால் இங்குள்ள முஸ்லீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள் என்று இந்து முன்னணி முதலான கும்பல்கள் நெடுங்காலமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இச்சம்பவங்கள் பொய்யென நிரூபிக்கப்பட்ட பிறகும் ஊடகங்கள் பொதுப்புத்தியில் அதே அவதூறுகளை தொடர்ந்து பரப்புகின்றன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலே அதிகார வர்க்கமே இதை முன்னின்று செய்கிறது.

இந்தியாவில் உள்ள எவரும் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவதற்கு எந்த தடையும் அரசியல் சட்டம் சார்ந்து இல்லை. அது ஒருபுறமிருக்க, இங்கே ம.பி போலீசு அப்பட்டமாக ஒரு கதையை ஜோடித்து சில பல அப்பாவிகளை கைது செய்து கொடுமைப்படுத்துகிறது. பாகிஸ்தான் வெற்றிக்காக கொண்டாடுவதை விட இதுதான் அபாயகரமானது.

மொழி பெயர்ப்பு
வினவு தளம்


 சாப்பூர் காவல் நிலைய போலீசால் கைது செய்யப்பட்ட மொஹத் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்


பர்ஹன்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சுபாஷ் கோலி (நடுவில் இருப்பவர்)
https://scroll.in/article/841647/i-was-scared-police-made-me-sign-false-report-against-15-muslims-for-celebrating-pakistani-win



3 comments:

vara vijay said...

Write about pm visit to is real.

vara vijay said...

Write about pm visit to is real.

Dr.Anburaj said...


பாக்கிஸ்தானின் வெற்றியை சிலா் கொண்டாடடியது உண்மை. உண்மை.