Followers

Monday, May 18, 2015

இஸ்லாமியருக்கு இவ்வாறு பேச யார் கற்றுக் கொடுத்தது?

இஸ்லாமியருக்கு இவ்வாறு பேச யார் கற்றுக் கொடுத்தது?

கணேச பிள்ளை அவர்களே!

//எனது இஸ்லாமிய நண்பர்களை யார் இப்படி பேச சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் பிறந்த அனைவரும் பிறப்பால் இந்துக்களே இந்துக்களே.........இந்திய இஸ்லாமியர்கள் இஸ்லாமை பற்றி இப்போதுதான் தெரிய ஆரம்பித்து இருக்கிறார்கள். அதனுடைய தாக்கம் தான் இவைகள்.......மாற்றம் ஒன்றே மாறாதது....... காலம் மாறும்....// - Ganesh Pillai..

சில விஷயங்களை தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்களே... ஆனால் நீங்கள் சொல்வது போல் இந்துக்கள் அல்ல. மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் மக்கள் கணக்கெடுப்புக்காக 'இந்துக்கள்' என்ற பொதுப் பெயரை இஸ்லாம் கிருத்தவர் அல்லாதவருக்கு வைத்தார்கள். அது தற்போது இந்துத்வாவாதிகளால் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

2000 வருடங்களுக்கு முன்பு தமிழனின் வாழ்வு முறையை ஆராய்ந்தீர்கள் என்றால் இந்து என்ற சொல்லாடலே உங்களால் பார்க்க முடியாது. இறை தியானத்திலும், இறைவனை அறிந்து கொள்வதிலும் தமிழர்கள் மிகச் சிறந்த இடத்தையே பெற்றிருந்தனர். திருக்குறள், திரு மந்த்ரம், திருப் புகழ் போன்ற காலத்தால் அழியாத பல ஆக்கங்களை நமது தமிழகம் கண்டுள்ளது. என்று ஆரியர்கள் படையெடுத்து நம்மை அடிமைபடுத்தி தனது கலாசாரத்தை திணிக்க ஆரம்பித்தார்களோ அன்று தமிழன் தனது அடையாளத்தை இழந்தான். அது இன்று வரை தொடர்கிறது.

இஸ்லாமியருக்கு இவ்வாறு யார் பேசக் கற்றுக் கொடுத்தது என்ற கேள்விக்கு வருகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக இஸ்லாமியர்கள் தர்ஹா வணக்கம், தட்டு, தாயத்து, மாந்த்ரீகம், செய்வினை என்று தங்களின் அடையாளத்தை தொலைத்து விட்டிருந்தார்கள். இஸ்லாம் தமிழகத்துக்கு வந்து 1400 ஆண்டுகளாகியும் குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக நூர் மசலா, மவுலூது, விறகு வெட்டியார் கிசா, சலாத்துந் நாரியா என்று சில அரபு தெரிந்த புரோகிதர்களால் பல கற்பனை கதைகள் இஸ்லாம் என்ற பெயரில் தமிழக இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டன. சிறு வயதில் நூர் மசலாவை மெய் மறந்து கேட்டுள்ளேன். பள்ளி வாசல்களில் அமர்ந்து மவுலூதை சினிமா பாட்டு ராகங்களில் மெய் மறந்து ஓதியுள்ளேன். இதுதான் தமிழக இஸ்லாமியரின் மார்க்கமாக 30 வருடங்களுக்கு முன்புஇருந்தது.

இந்த நேரத்தில் ஏகத்துவ கொள்கையை மக்கள் மத்தியில் கொண்ட செல்ல சில மார்க்க அறிஞர்கள் முன் வந்தனர். பொது மேடைகளில் விவாத அழைப்பு விடுக்கப்பட்டது. 10 க்கு மேற்பட்ட நேரடி விவாதங்கள் மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்டன. மக்களுக்கு உண்மை விளங்கியது. குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புகள் லட்சக் கணக்கில் விற்றுத் தீர்ந்தன. குர்ஆனை தமிழில் ஆய்வு செய்த இஸ்லாமியர் சாரை சாரையாக ஏகத்துவ கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டனர். சாமான்யனும் குர்ஆனை விளங்க ஆரம்பித்தான். புரோகிதர்கள் மட்டுமே மார்க்க உபன்யாசம் பண்ணிய நிலை போய் குர்ஆனை விளங்கிய 15 வயது 20 வயது இளைஞர்களெல்லாம் மார்க்க சொற்பொழிவு ஆற்றினர். கல்லூரியில் படித்துக் கொண்டே குர்ஆன் ஆராய்ச்சியிலும் இறங்கினர். தர்ஹா மவ்லூதை வைத்து பிழைப்பு நடத்திய புரோகிதர்கள் கடுமையாக எதிர்த்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் ஏகத்துவ வாதிகள் இறைவனின் துணை கொண்டு வென்றார்கள்.

மாற்றுமத கருத்தரங்கு, ரத்ததானம், போன்ற தொடர் பிரசாரங்களினால் மாற்று மதத்தவரும் இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமூட்டப்பட்டனர். முன்பு இந்துக்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது என்று விளங்காத புரோகிதர்கள் தடுத்தனர். அது தவறான வாதம் என்று விளக்கி தமிழ் மொழி பெயர்ப்புகளை இலவசமாக அனைத்து இந்து கிருத்தவ சகோதரர்களுக்கும் கொடுத்தனர். லட்சக் கணக்கான மாற்று மதத்தினர் இதனால் பலன் அடைந்தனர். முஸ்லிம்களும் தெளிவடைந்தனர்.

இஸ்லாமியருக்கு இந்த அளவு விழிப்புணர்வு கிடைக்க முழு காரணமே குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புதான் என்றால் மிகையில்லை. இதற்காக அல்லும் பகலும் உழைத்த தவ்ஹீத் ஆலிம்களுக்கும் இளைஞர்களுக்கும், தாய்மார்களுக்கும் இறைவன் மேலும் மேலும் நன்மையை வாரி வழங்குவானாக!

'இந்த குர்ஆனை நம்புங்கள்! அல்லது இதை நம்பாமல் இருங்கள்(அதனால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை).' என்று கூறுவீராக! இதற்கு முன் வேத அறிவு கொடுக்கப்பட்டோரிடம் குர்ஆனின் வசனங்கள் கூறப்பட்டால் உண்மையை உணர்ந்து அவர்கள் முகம் குப்புற இறைவனின் காலடியில் விழுவார்கள்'

-குர்ஆன் 17:107


No comments: