Followers

Friday, March 13, 2015

நெல்லையில் 10 மாதத்தில் சாதி வெறியால் 25 பேர் பலி!



தாமிரவருணியின் பாசன பூமியான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், ஜாதிய மோதல் களால் ரத்தக் கறை தோய்ந்திருக் கின்றன.

கடந்த 10 மாதங்களில் சுமார் 100 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதும், அதில் 25 பேர் வரை ஜாதி வெறிக்குப் பலியாகி இருப் பதும் தென்பாண்டி சீமைக்கு தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் எங்கு கொலை நிகழ்ந்தாலும் அதில் ஈடுபட்டவர்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவரும் இருக்கிறார் என்ற அவப்பெயர் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழக காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலின்படி 16,502 ரவுடிகள் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில், முதலிடம் சென்னைக்கு (3,175 ரவுடிகள்), 2-வது இடம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு. திருநெல்வேலி மாநகரில் மட்டும் 334 ரவுடிகளும், புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் 90 கொலைகள், 2008-ல் 89, 2009-ல் 95, 2010-ல் 83, 2011-ல் 97, 2012-ல் 93, 2013-ல் 98 கொலைகள் நடைபெற்றதாக காவல் துறை தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கூலிப் படையினராலும், 25 சதவீத கொலைகள் ஜாதிய மோதல் பின்னணியிலும் நிகழ்ந்தவை.

கடந்த 10 மாதங்களில் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 100 கொலைகள் நடைபெற்றுள்ளன. சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 70 சதவீத கொலைகள் நடை பெற்றுள்ளன. மீதமுள்ளவை இந்த மாவட்டங்களில் புரையோடி யிருக்கும் ஜாதி மோதலின் வெளிப்பாடுகள். அந்த வகையில் 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன.

தயங்கும் போலீஸார்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை குறிவைக்கும் சமூகவிரோத கும்பல், அவர்களை கூலிப்படையாக பயன்படுத்துகிறது. அந்த கூலிப் படையினரை ஏவும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய போலீஸார் தயங்குவதாலேயே பிரச்சினை முடிவுறாமல் தொடர்கிறது. ஜாதி மோதல்களை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு இந்த மாவட்டங்களில் உளவுப் பிரிவு போலீஸார் செயல்படவில்லை.

`ஜாதி மோதல்களை தூண்டி விடும் அளவுக்கு முக்கிய ஜாதிகளை சேர்ந்த சாதாரண போலீஸார் முதல் உயர் அதிகாரிகள் வரை செயல்படுவதும் பிரச்சினைக்கு தூபம்போடுவதாக இருக்கிறது’ என்று இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே தெற்கு கரந்தானேரியில் ஆயுதங்களை தாங்கிய கும்பலால் இரு அப்பாவிகள் கொலை செய்யப் பட்டனர். அந்தக் கொலை யாளிகளுக்கு முக்கிய ஜாதி தலைவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்திருந்தார். இதனால், கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். கடைசியில் அந்த ஜாதி தலைவரிடம் போலீஸார் கெஞ்சி- கூத்தாடி ஒரு சிலரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

`குற்றவாளிகளையும், அதற்கு தூண்டுகோலாக இருப்பவர் களையும், அவர்களுக்கு அடைக்கலம் தருவோரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு போலீஸாருக்கு இருக்கிறது.

ஆனால், அதிலிருந்து அவர்கள் விலகிச் சென்றுவிட்டதால் ஜாதி மோதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன’ என்றார் ஓய்வு பெற்ற அந்த போலீஸ் அதிகாரி.

ஜாதிய பின்னணி போலீஸார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவின் உறுப்பினருமான ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, ‘திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் துறை அதிகாரிகள் நியமனத்தில் குறிப்பிட்ட பெரிய ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமிக்கக் கூடாது. நேர்மையான இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்களை நியமிக்க வேண்டும்’ என்றார் அவர்.

‘குண்டர் சட்டத்தை அதிகளவில் பிரயோகம் செய்வதன்மூலம் போலீஸார் தங்கள் தரப்பு இயலாமையை மறைக்கிறார்கள். சந்தேகப்படும் வகையில் கைது செய்யப்படுவோர் முழுநேர குற்றவாளிகளாக மாறுவது போலீஸாரின் நடவடிக்கை களால்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயுத வன்முறையாளர்கள் குறித்த கணக்கெடுப்பும், குற்றவாளிகளின் ஜாதி சார்ந்த கணக்கெடுப்பும், இளங்குற்றவாளிகள் குறித்த ஆய்வும் அவசியம். அதன் தொடர்ச்சியாக ரவுடிகள் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
12-03-2015

மற்ற நாடுகளில் இல்லாத சாதி வெறி நமது நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு குரூரமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். ஒரே மதமான இந்து மதத்தில் இத்தனை வன்மம் ஏன்? நமது நாட்டை ஆண்ட நமது முன்னால் அரசர்களும் ஒரு வகையில் இதற்கு காரணமாகிறார்கள்.

உதாரணத்துக்கு தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் ராஜராஜனைச் சொல்லலாம். காஷ்மீரம் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலில் இருந்தெல்லாம் பார்பனர்களை அழைத்து வந்து அவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினான். 'ராஜ குரு' என்ற புது பதவியை அவர்களுக்காக உருவாக்கினான். இன்று மோடி அரசாங்கம் நில அபகரிப்பு திட்டம் கொண்டு வரத் துடிக்கிறதே அதற்கு மூல காரணம் ராஜ ராஜனின் ஆட்சி என்றால் மிகையாகாது..

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.

இவ்வாறாக படிப்படியாக நிலத்தை இழந்த உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் நில உடமையாளர்கள் ஆதிக்க சாதியினராகவும் மாற்றப்பட்டனர். அதற்கு தோதாக தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத மனுஸ்ருமிதி மக்களின் மனதில் ஏற்றப்பட்டது. அது இன்று வாழையடி வாழையடி ஜீன்கள் மூலம் பரம்பரையாக கடத்தப்படுகிறது. எனவே தான் படித்து பட்டம் பெற்ற அரசு உத்தியோகத்தில் வேலை பார்க்கும் இந்துக்களில் பலர் தங்களின் சாதி வெறியை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்வதில்லை. அதற்காக வெட்கப்படுவதும் இல்லை.

No comments: