Followers

Saturday, March 14, 2015

உலக படைப்பு - அழிவு பற்றி குர்ஆனின் சில சூத்திரங்கள்!

உலக படைப்பு அழிவு பற்றி குர்ஆனின் சில சூத்திரங்கள்!

மனிதன் அன்று முதல் இன்று வரை இந்த உலகத்தைப் பற்றியும் அது எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றியும் சிந்தித்த வண்ணமே உள்ளான். இதற்கே இன்னும் விடை காண முடியாத போது இந்த உலகம் எப்பொழுது அழியும் என்பதை பற்றி சிந்திக்காத நபர்களே இல்லை எனலாம்.

"முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பின் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்த தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்"
-A BRIEF HISTORY OF TIME( PAGE 9)

அறிவியல் அறிஞர் ஹாக்கிங் சொல்ல வருவது பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெரு வெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதை தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார். குர்ஆனில் உலகம் படைக்கப்பட்டதைப் பற்றியும் உலக முடிவு நாள் பற்றியும் சில வசனங்கள் வருகிறது. பேரண்டம் படைக்கப்பட்டக் காலத்தில் ஒரு நாள் என்பது என்னவென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் ஒரு தெளிவை அடைய முடியாது.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்"
-குர்ஆன் 16:77


பேரண்டத்தின் அழிவைப் பற்றியே மேற்கண்ட வசனம் நம்மிடம் பேசுகிறது. இதில் பேரண்டம் எப்போது அழிக்கப்படும் என்ற செய்தியை இறைவன் அறிவிக்கிறான். கண் சிமிட்டும் நேரத்தை விட குறைவான நேரத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்டு விடும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த வசனம் இறங்கி 1433 வருடங்களாகி விட்டது. அந்த நேரம் இன்னும் வந்தபாடில்லை. ஏன் வரவில்லை?

காலம் சார்பற்றது. அது சுயம் பூரணமானது என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை நம்பியிருந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது. எனவே அதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர்.

உலக முடிவு நாளின் நிலைமையைப் பற்றி குர்ஆன் கூறும் போது:

'சூரியன் சுருட்டப்படும்போது! நட்சத்திரங்கள் உதிரும் போது: மலைகள் பெயர்க்கப்படும் போது: கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது: விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது'
-குர்ஆன் 81:1-5

வானம் பிளந்து விடும் போது: நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது: கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது.
-குர்ஆன் 82:1-3


மேற் கண்ட வசனங்களை நாம் மேலோட்டமாக பார்த்தாலே இவை அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நடந்து முடிய சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருவோம். எனவே இறைவன் கூறக் கூடிய கால அளவு என்பது நம்மிடம் உள்ள கால அளவு படி இல்லாமல் இறைவன் புறத்தில் உள்ள காலஅளவின்படியே ஆகும் என்ற முடிவுக்கு வரலாம்.

பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் அந்த கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். அக்காலத்தில் மனிதப் படைப்பே இருந்திருக்கவில்லை. பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக் கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படி அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம்.

பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும்.

இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்...

0.2 வினாடி > 1433 வருடங்கள்

இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5

=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)

=5 * 60 * 60 * 24

=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)

=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்)

=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்

=3237147000

உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம்.

இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார்.

பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

----------------------------------------------------------

பூமி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அந்த நாள் முதலாக பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்றும் நாம் அறிகிறோம். பூமியின் மிக்க முதுமையான பாறை மூலகத்தின் கதிரியக்கத் தேய்வை ஆராயும் போது, (Radioactive Decay of Elemets) புவியின் வயது 3.8 பில்லியன் என்று விஞ்ஞானிகள் கணிக்கிட்டிருக்கிறார்கள். மேலும் பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலகக் கதிரியக்கத் தேய்வை ஆய்ந்த போது, சூரிய குடும்பத்தில் பூமியின் வயது 4.6 பில்லியன் என்று இப்போது தெளிவாக முடிவு செய்யப் பட்டிருக்கிறது.



பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் வயதைக் கணக்கிடப் பல்வேறு முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். புதிய நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயும் விஞ்ஞானிகள் இன்னும் உறுதியாக அதன் வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 2003 பிப்ரவரியில் ஏவிய “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி” [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்புவதற்கு முன்பு பிரபஞ்ச உப்புதலை அளக்கும் “ஹப்பிள் நிலையிலக்கம்” (Hubble Constant) பயன்படுத்தப்பட்டுப் பலரது தர்க்கத்துக்கு உட்பட்டது. விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும். அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும். அவ்விதம் கண்டுபிடித்ததில் பிரபஞ்சத்தின் வயது 10-16 பில்லியன் ஆண்டுகள் என்று அறிய வந்தது. இம்முறையில் ஒரு விஞ்ஞானி பல்வேறு அனுமானங்களைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால், அம்முறை உறுதியுடன் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.



அடுத்த முறை பூதளத்தின் மிகப் புராதனப் பாறைகளில் உள்ள மூலகங்களின் கதிரியக்கத் தேய்வைக் (Radioactive Decay of Elements in Oldest Rocks) கணக்கிட்டு பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் கணிக்கப் பட்டது. பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் மூலக கதிரியக்கத் தேய்வைக் கணக்கிட்டுப் பூகோளத்தின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

அதே திடப்பொருள் விதிகளைப் பயன்படுத்தி காலாக்ஸி அல்லது புராதன விண்மீன்களில் எழும் வாயுக்களின் கதிரியக்கத் தேய்வுகளை ஆராய்ந்தனர். அவ்விதம் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 12-15 [plus or minus 3 to 4 billion] பில்லியன் ஆண்டுகள் என்று தீர்மானிக்கப்பட்டது ! ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் [Brightness versus Temperature] பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டுப் பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிட்டார்கள். ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை அனுப்பிய ஹிப்பார்கஸ் துணைக்கோள் (Hipparcos Satellite) விண்மீன் தூரத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்விதம் கணக்கிட்டதில் மிகப் புராதன விண்மீனின் வயது சுமார் 12 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

டாக்டர் கார்ல் போப்பர், ஆஸ்டிரியன் பிரிட்டீஷ் வேதாந்தி, பேராசிரியர் (Dr. Karl Popper)
“பிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத பிரச்சனை என்ன வென்றால், அதை நாம் அறிந்து கொள்ள இயலும் என்னும் திறன்பாடு.”
டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)
-சி.ஜெயபாரதன்

---------------------------------------------------------------




கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.

Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.

ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.

இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.

இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.

அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.

இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

-இணையதள பத்திரிக்கையில் வெளியான செய்தி

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள

1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)
2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)
3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.
4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)
5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)
6. திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்:
7. A Brief History Of Time.
8. ஜெயபாரதன் அறிவியல் கட்டுரைகள்



No comments: