Followers

Monday, March 16, 2015

காலை தொழுகைக்கு தனது பிள்ளைகளை எழுப்பும் சவுதி தகப்பன்


'ஃபைசல்.... யா ஃபைசல்... தொழுகைக்கு எழுந்திரு. யா... முஹம்மத்! காலை(பஜர்) தொழுகைக்கு எழுந்திரு'

தனது இரண்டு மகன்களும் அசந்து தூங்குவதை பார்த்து சிறுவர்களை எழுப்புகிறார் அவர்களின் தந்தை. இரவு வெகு நேரம் இணையத்தில் செலவழித்ததால் அசதியில் அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. தந்தையை சட்டை செய்யாமல் திரும்பவும் தூங்குகின்றனர். சிறிது நேரம் கழித்து தந்தை திரும்பி வந்து பார்த்தால் பிள்ளைகள் எழும்பாமல் தூங்குகின்றனர்.

'அப்போ.... தொழுகைக்கு எழுந்திருக்க மாட்டீர்கள்.. அப்படித்தானே... இரு இரு இப்போ வருகிறேன்'

கோபத்தோடு உள்ளே சென்று கையில் சிறிது நீரை எடுத்து வந்து அவர்கள் முகத்தில் தெளிக்கிறார். பாதி தூக்கம் கலைந்த நிலையில் அவர்கள் திரும்பவும் தூங்குகின்றனர்.

'யா... ஃபைசல்.... யா முஹம்மத்.... தொழுகை தொடங்கப் போகிறது? கூட்டுத் தொழுகைக்கு வரவில்லையா? ம்...ம்... எழுந்திருங்கள்.'

ம்ம்ஹூம். அவர்கள் எழுந்திருப்பது போல் தெரியவில்லை....

'பாபா (அப்பா)! எனக்கு தூக்கமாக வருகிறது.... உடலும் அசதியாக உள்ளது'

'அப்போ இதற்கும் எழுந்திருக்க மாட்டீங்க.... இரு இரு சரியான சாதனத்தை எடுத்து வருகிறேன்'

உள்ளே வேகமாக சென்றவர் ஒரு எலக்ட்ரானிக் கருவி ஒன்றை எடுத்து வருகிறார். அது போட்ட சத்தத்தை கேட்டவுடன் பேயை பார்த்தது போல் அலறி அடித்துக் கொண்டு அந்த இருவரும் ஓடுகிறார்கள். இவர்களுக்கு ஏற்ற சரியான தந்தைதான் இவர். :-)

சவுதியில் கடுமையான குளிர் காலங்களில் கூட சிறுவர்கள் காலை தொழுகைக்கு அதிகாலை 4 மணிக்கு பள்ளியில் வரிசையில் நிற்பதை நான் ஆச்சரியத்தோடு பார்பேன். சிறு வயது முதலே அவர்களை காலையில் எழும்புவதற்கு தயாராக்குகிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்களை பெற்ற குடும்பங்களில் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஆனால் நாமோ பிள்ளை கேட்டால் 60000 க்கு டூ வீலர் வாங்கிக் கொடுக்கிறோம். 20000 ல் புதிய செல் போன் வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால் தொழுகைக்கு மட்டும் அவர்களை எழுப்புவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இந்த தந்தையைப் பொல் ஒவ்வொரு இஸ்லாமிய வீட்டுத் தலைமையும் மாற வேண்டும். இஸ்லாமியரின் வெற்றி இந்த தொழுகையில் தான் உள்ளது.

“நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.”
23;1.2

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.
23:9


No comments: