Followers

Friday, March 06, 2015

இந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத்ரா

இந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத்ரா

தற்போது பசு மாடுகளை உணவுக்காக வெட்டக் கூடாது என்று மத சட்டங்களைக் காட்டி ஏழைகளின் உணவான பசு மாமிசத்தை மகாராஷ்ட்ராவில் தடை செய்துள்ளனர். நாடு முழுக்க மிகுந்த எதிர்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. பண்டைய காலத்தில் பசு மாமிசம் எவ்வாறு கையாளப்பட்டு வந்தது என்பதை இந்து மதத்தை ஆசாரமாக பின்பற்றும் ஒருவரின் ஆராய்ச்சியை இனி பார்போம்.

இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி., சி.ஐ.இ., வங்காள வைஷ்ணவர். இவரால் எழுதப்பட்ட "இந்து ஆரியன்" என்ற புத்தகத்தில் 6வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தின் ஒரு பகுதியை நாம் இனி கீழே பார்போம்:

“பசு மாமிசத்தை உணவாக புசிக்கலாம் என்று நினைத்தவுடனேயே இந்துக்களின் மனம் புண்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் தானென்ன? லட்சக்கணக்கான இந்துமதப் பற்றுடைய இந்துமத நிபுணர்களும் கூட பசு மாமிசம் என்ற பெயரையுங் கூட வாயால் சொல்ல அருவறுக் கிறார்கள். நம் நாட்டில் பசு வதை செய்யும் விஷயத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உயிர்ப் பிராணிகளை அறுப்பதால் சில ஆத்மாக்கள் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு அறுக்கப்படுவது விருந்தினர்களுக்கெனக் கருதப்பட்டும் வந்தது. மேலும், இறந்து போன இந்துவுடன் ஓர் பசுவையும் சேர்த்து மயானக் கரையில் வைத்து எரிக்கப்பட்டு வந்தது. இவ்வந்தரங்கமான விஷயத்தை வெளியிடுவதன் நிமித்தம் இந்துக்களின் தற்போதைய கிளர்ச்சிகளை யுணர்ந்த இந்தியர்களுள் பெரும் ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணும். இவ்விஷயங்களை நான் எந்த கிதாப் (புத்தகம்) பிலிருந்து எடுத்திருக்கின்றேனோ அக்கிரந்தங்களில் எத்தகைய சந்தேகமும் அதிருப்தியும் கொள்ள முடியாது.

மனுஸ்மிருதியில் பசு மாமிசம்

எக்காலத்திலுமே பசு மாமிசம் சாப்பிடலாமென மனுஸ்மிருதி அனுமதிக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடுவதற்கு முன் ஒரு துண்டைத் தேவதைகளுக் கென்றாவது, பெரியோர்களின் ஆத்மாக்களுக்கென்றாவது, விருந்தாளிக்கென்றாவது மனதில் ஞாபகம் செய்து கூப்பிட வேண்டும். மேலும் மனுஸ்மிருதியில் வரையப்பட்டிருப்பதாவது: யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)

ஆனால் மனுஸ்மிருதி பசு மாமிசத்தை ஓர் உணவாகக் கூறவில்லை யாயினும், மனிதன் சாப்பிடக்கூடிய உயிர்ப் பிராணிகளின் நாமங்களைக் கூறப்பட்டிருக்கும் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)

மேலே கூறப்பட்ட நிபந்தனைப்படி பசுவும் அதில் சேர்ந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் பசுவுக்கு ஒரே பக்கத்தில்தான் பற்களுண்டு என்பது மனு ஸ்மிருதியில் மறைவானதன்று, மனு பசுவைச் சாப்பிடக் கூடாதென்று விலக்கியிருந்தால் ஒட்டகத்தோடு சேர்த்துப் பசுவையும் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாதென விலக்கியிருப்பார்கள். ஆனால் முன்பின் வாசகங்களைக் கவனிப்பது கொண்டு பசுவைச் சாப்பிடக் கூடாதென விலக்கவில்லை யென்று நாம் அர்த்தம் செய்து கொள்வது சரியான அத்தாட்சியாகமாட்டாது. ஆதலின் பிரமச்சாரியானவர் தம் வீட்டிற்கு திரும்பி வருவதற்காக குருவுக்கு சில காணிக்கைகள் கொடுக்கின்றார்கள். இவ் விஷயம் மனு ஸமிருதியில் தக்க ஆதாரமாக இருக்கிறது. அதில் எழுதியிருப்பதாவது:

பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும். (மனு 6 3)

அதன் பின்வரும் ஒரு வாசகத்தில் காணப்படுவது: இராஜாக்கள் பிரபல விருந்தினர்களுக்காக இன்பமான சாதமும் பசு மாமிசமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றது.

குர்ஹீயா சூத்திரத்தில் பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள்.

அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்!

அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு வந்த சம்பீதா ரிஷியானவர் அவ்வாறு நெருப்பில் போடப்படும் வஸ்துக்களில் பொது ஜனங்களுக்குப் பிரயோஜனம் தரக்கூடியதான தோலை நெருப்பில் போடுவதற்கு பதிலாக செருப்பாக தைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாமென பொதுவாக உத்தரவு செய்து விட்டார். அவ்வாறு ரூராவுக்கு பூஜை செய்ததன் பிறகு பிராமண பூசாரியானவர் இடது பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நேராக எழுந்து நின்று ஏதோ சில மந்திரங்களைப் படித்துக்கொண்டே அறுக்கப்பட்ட பசுவின் இரத்தத்தை அவ்விடங்களிலிருக்கும் சாப்பங்களுக்கு சேர்க்கை செய்து விடுகிறார். இவ்வெல்லாக் கிரியைகளும் செய்து முடித்த பிறகு கடைசியாக (சுவிஸ்த்தாக்கிர்த்) என்ற ஒரு பூஜையும் செய்யப்படுகிறது. பிறகு அப்பசுவுடைய நெஞ்சு மாமிசத்தினின்றும் சுடுவதற்காகக் கொஞ்சம் மாமிசத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதன் பிறகு மீதியாயிருக்கும் அப்பசுவின் மாமிசத்தைப் பொதுவாக எல்லோரும் சாப்பிடலாமென்று சில சூத்திரங்கள் கூறுகின்றன. சில சூத்திரங்கள் அப்பசுவை குர்பானி செய்தவர்கள் மட்டும் சாப்பிடலாமெனக் கூறுகின்றன.

இவ்வாறு ஒரு மனிதன் குர்பானி செய்து விட்டால் அவனுக்கு வயது அதிகமாகிறதென்றும், செல்வந்தனாவானென்றும், நல்ல நிலைமையிலே இருப்பானென்றும், தன் மதத்தில் கௌரவமுடையவனாக இருப்பானென்றும், சந்ததிகள் அதிகமாகுமென்றும், கால் நடை மிருகங்கள் அவனுக்கு அதிகமாகு மென்றும், அவ் வேதத்தில் ஆசை காண்பிக்கப்பட்டிருக்கிறது. சகல தனவந்தர் களும் அவர்கள் வயதில் ஓர் விடுத்தமாவது இவ்வாறு குர்பானி செய்ய வேண்டியது முக்கியமென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசு மாமிசம் எவ்வாறு சமைக்கப்பட்டதென்ற விஷயம் விரிவாகக் கூறப்படாதது மிகவும் வருந்தத்தக்கதே. சமைக்கப்படும் முறை விவரமாக கூறப்படாவிடினும் அறுக்கப்பட்ட பசுவின் நெஞ்சு மாமிசத்திலிருந்து சுடுவதற்காக மாமிசம் எடுப்பதே அவர்கள் சமைக்கும் முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மார்ச்சு 1936
-குடியரசு

எங்கள் கிராமத்தில் மாட்டுக் கறியில் உப்புக் கண்டம் போடும் பழக்கம் இன்றும் இருக்கிறது. தமிழக முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் ஆதலால் பழைய பாரம்பரிய பழக்கம் தொடர்ந்து வருகிறதோ என்று நினைக்கிறேன். :-)

மாட்டுக் கறியை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தலித்களும், பிற்படுத்தப்பட்ட இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்தவர்களும் தங்கள் புராதன இந்து மதத்தின் ஒரு கொள்கையை வழி வழியாக பின்பற்றி வருகிறார்கள் என்றே இதனை பார்க்க வேண்டியாதாயிருக்கிறது.

எனவே இந்து மதத்தின் பழைய கொள்கையான மாட்டுக் கறி படையலை மீண்டும் கொண்டு வந்து இந்து மதத்தின் பெருமையை நரேந்திர மோடி நிலை நாட்ட வேண்டும் என்பதே பெரும்பானமை இந்திய மக்களின் விருப்பமாக உள்ளது.

தலித் தலைவர் திருமா வளவனும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸூம் மாட்டுக் கறிக்கான தடையை வன்மையாக கண்டித்திருப்பதையும் இங்கு நாம் நினைவு கூறுகிறோம்.

No comments: