Followers

Wednesday, January 21, 2015

ஐஎஸ்ஐஎஸ்ஸை நம்பி ஏமாந்த தரீனா ஷகீல்!



தரீனா ஷகீல் - 25 வயது பிரிட்டிஷ் பிரஜை. கணவனோடு சில பிரச்னைகளால் சில காலம் தாய் வீட்டில் வாழ்ந்துள்ளார். கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன அமைதியிழந்துள்ளார். அந்த நேரத்தில் சில கிறுக்கர்கள் ஜிஹாத்துக்கு தவறான விளக்கம் கொடுத்து மூளை சலவை செய்து இவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர தூண்டியுள்ளனர். உலகம் அறியாத இந்த பெண் கள்ள முல்லாக்களின் சூழ்ச்சியில் வீழ்ந்து சுற்றுலா செல்கிறேன் என்று வீட்டில் பொய் சொல்லி விட்டு சிரியா சென்றுள்ளார்.

அங்கு சென்றவுடன்தான் போர்களம் எப்படி இருக்கும் என்று தரினாவுக்கு தெரிய வருகிறது. தண்ணீருக்கு ரேஷன், உணவுக்கு ரேஷன், மின்சாரம் கிடையாது: குளிருக்கு சரியான போர்வையும் கிடையாது: திடீர் திடீரென்று துப்பாக்கி தோட்டாக்களின் சப்தம்: வெளியில் எங்கும் பிணக் குவியல்: ரத்த வாடை: கை கால்கள் போன மனிதர்கள் என்று இவரது வாழ்க்கையே மாறிப் போனது. சில காலம் சென்றவுடன் இந்த வாழ்க்கை இவருக்கு கசக்க ஆரம்பித்தது.

இனி இங்கிருந்தால் சரிப்பட்டு வராது என்று எண்ணி பல தடைகளையும் தாண்டி எப்படியோ இந்த கும்பலிடமிருந்து தப்பி துருக்கி வந்து சேர்ந்து விட்டார். அங்கிருந்து அவரது தந்தையை தொடர்பு கொண்டு அழுது கொண்டே 'என்னை எப்படியாவது திரும்பவும் பிரிட்டன் கொண்டு சென்று விடுங்கள்' என்று சொல்லியுள்ளார். தற்போது தந்தையின் வரவுக்காக துருக்கி அகதி முகாமல் தங்கியுள்ளார். தந்தையோடும் கணவனோடும் ஒன்றாகி குழந்தையை சிறந்த முறையில் வளர்த்து சிறந்த இஸ்லாமிய பெண்ணாக இந்த சகோதரி வாழ நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015

இஸ்லாம் இந்த பெண்ணுக்கு ஜிஹாதை கடமையாக்கவில்லை. முதலில் இந்த பெண் தனது கணவனோ அல்லது தந்தையோ, சகோதரனோ இல்லாமல் கைக்குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறியதே முதலில் இஸ்லாமிய நடைமுறை கிடையாது. அடுத்து போரில் சென்று போரிட ஆண்களுக்குத்தான் கடமையுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் அனைத்து செயல்களும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களே. இவர்கள் அமெரிக்காவாலோ அல்லது இஸ்ரேலின் யூதர்களின் கைப்பாவையாகவோ செயல்படுவதாகத்தான் உலக முஸ்லிம்கள் நம்புகின்றனர். அப்பாவி மக்களை கழுத்தை அறுத்து அதனை வீடியோவாக்குவதும், தோல்வியடைந்த பகுதிகளில் உள்ள பெண்களை கொடுமைபடுத்துவதும் இஸ்லாம் காட்டித் தந்த வழியா? எங்கிருந்து இதனை படித்தார்கள்? அநியாயத்துக்காக போரிட ஒரு அரசுக்குத்தான் உரிமையுள்ளதே தவிர தனி மனிதன் ஆயுதம் தூக்குவதை எங்கிருந்து கற்றார்கள்? தமிழகத்திலும் யாராவது உங்களிடம் வந்து ஜிஹாதுக்கு ஆள் சேர்ப்பதாக சொன்னால் உடன் காவல் துறை வசம் ஒப்படையுங்கள். ஏனெனில் இது போன்ற நபர்கள்தான் இஸ்லாத்தின் முதல் எதிரிகள். இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க மேற்குலகமும், யூதர்களும் இணைந்து ஏற்படுத்திய அமைப்புகளே ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம். எனவே இந்த தீவிரவாத கும்பல்களிடமிருந்து இஸ்லாமிய இளைஞர்களை மீட்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இதனை தீவிர பிரசாரத்தின் மூலமே நம்மால் சாதிக்க முடியும்.

No comments: