Followers

Wednesday, January 21, 2015

கடல் மட்டம் உயர்ந்து வருவதை மெய்ப்பிக்கும் ஆய்வறிக்கைகள்!



"பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா?"

குர்ஆன் 13:41

”பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்” என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா?"

குர்ஆன் 21:44



(தென் கிழக்கு அமெரிக்காவில் கடல் மட்டம் உயர்ந்துள்ளதைக் காட்டும் கூகுள் மேப்.)

கடல் மட்டம் கூடுவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. 1. முதல் காரணம்

பல ஐஸ் மலைகள் உருகி கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு செல்கிறது. கிளிமஞ்சாரோ (அதாங்க.... எந்திரன் படத்தில் வரும் அதே மலைதான் :-)) மலை கடந்த 20 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அந்த மலையின் பல இடங்களை தற்போது காணவில்லையாம். உருகி கடலில் கலந்து விட்டது. இது போன்று ஆர்டிக் அண்டார்டிக் பிரதேசங்களில் பனி மலைகள் உருகுவதால் கடல் மட்டம் தற்காலங்களில் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்னும் 10 வருடங்களில் பங்களாதேஷின் பல பகுதிகள் கடலில் மூழ்கி விடுமாம்.

2. கடல் மட்டம் உயர இரண்டாவது காரணம்

கடல் மட்டம் மேலும் உயர மற்றொரு காரணம் கடல் தண்ணீரில் ஏற்படும் வெப்ப விரிவாக்கம் ஆகும். கடல் தண்ணீரில் வெப்ப நிலை உயரும் போது அதன் அடர்த்தி குறைந்து விடுகின்றது. இதனால் கடல் தண்ணீர் பெருக்கெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது.

கடந்த 18000 வருடங்களில் தோராயமாகக் கணக்கெடுக்கும் போது 120 மீட்டர் கடல் மட்டமானது உயர்ந்துள்ளதாக நாசாவின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஓசோன் குறைபாடுகளால் நமது பூமி மிகப் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. நமது பூமியை சூரியனின் கதிர்கள் அளவுக்கதிகமாக தாக்கி விடாமல் தடுப்பவை இந்த ஓசோன் படலங்களே! இந்த பிரதேசத்தில் இயற்கையாக உள்ள வாயுக்களைத் தவிர்த்து பூமியிலிருந்து மனிதர்களால் கரியமில வாயுவும் அளவுக்கதிகமாக இந்த பகுதியை அடைவதால் வாயுக்களின் அடர்த்தியானது மிகைக்கிறது.. இதனால் சூரியனின் தாக்கம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகத் தொடங்குகின்றன. ஆகவே கடலின் மட்டம் உயர்ந்து கடல் நீர் நிலப்பகுதிக்குள் வருகிறது. இந்த உப்பு நீரானது பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களையும் கபளீகரம் செய்து விடுகின்றன. நமது பக்கத்து நாடான பங்களாதேசின் பல பகுதிகள் இன்னும் 50 ஆண்டுகளில் கடலுக்குள் அமிழ்ந்து விடும் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். இந்த ஓசோன் பிரச்னையை தீர்க்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. வழக்கம்போல் அமெரிக்கா எந்த பிடியும் கொடுக்காமல் இந்த விஷயத்தில் நழுவிச் செல்கிறது. :-(

--------------------------------------------------

1. பூமியின் வெப்பம் 1900 ஆம் ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூமியின் வெப்பம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி வெப்பம் ஏறியுள்ளது.

2. 20 ஆம் நூற்றாண்டின் ஏழு ஆண்டுகள் வெப்பம் மிகையான காலங்களாக பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் மிகுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு மிகையாகி யிருக்கிறது! கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்..

4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

6. WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வறட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் இறந்து விடுவர் என்று எச்சரிக்கிறது.

டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]

இனி குர்ஆன் வசனத்துக்கு வருவோம். கடலையே தனது வாழ்நாளில் பார்த்திராத நபிகள் நாயகம் இப்படி ஒரு ஆய்வறிக்கையை குர்ஆனில் தனது கற்பனையால் சமர்ப்பிக்க முடியுமா? பிற் காலங்களில் இவ்வாறான மாற்றங்களெல்லாம் உலகில் ஏற்படும் என்பதை உணர்ந்தவராலேயே இந்த வார்த்தைகளை சொல்ல முடியும். முக்காலத்தையும் உணர்ந்த இறைவனிடம் இருந்து இந்த குர்ஆன் வந்திருந்தால் மாத்திரமே இத்தகைய அதிசயங்களை நிகழ்த்த முடியும். இந்த குர்ஆன் உங்களையும் என்னையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் இனியும் நமக்கு சந்தேகம் வருமா?

No comments: