Followers

Sunday, February 08, 2015

உயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன? -1



'ஆன்மாக்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் இறைவன் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளது'
குர்ஆன் 39: 42


இந்த வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மைகளை மனிதர்களுக்கு கூறிக் கொண்டுள்ளது. பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். உயிர் என்பது என்ன? ஆன்மா என்பது என்ன? இந்த குழப்பம் நீண்ட நாட்களாக எனக்கும் இருந்தது. மேலே உள்ள வசனத்தை வாசித்து உள் வாங்கிக் கொண்டவுடன் எனக்கு ஓரளவு உயிருக்கும் ஆன்மாவுக்குமுள்ள வித்தியாசம் புரிய ஆரம்பித்தது.

நாம் பழக்கத்தில் உபயோகிக்கும் உயிர் என்றால் என்ன?

சுவாசத்தை சீராக்குதல், உணவு செரிக்கப்படுதல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படுதல், இரத்தம் சுத்தமாக்கப்படுதல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படுதல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படுதல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படுதல் ஆகிய இந்த செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் ஊட்டிக் கொண்டு இருப்பதையே உயிர் என்கிறோம்..

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன.... உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிறுத்தப் பட்டு உடலும் அழியத் துவங்குகின்றது.

மனிதன் தூங்கும் போதும் மரணிக்கும் போதும் ஆன்மாக்களை கைப்பற்றுவதாக இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் கூறுகிறான். நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது உடலின் மற்ற அங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை இறைவன் கைப்பற்றினால் நாம் இறந்து விடுவோம். ஆனால் இங்கு இறைவன் தூக்கத்தில் கைப்பற்றி திரும்பவும் விட்டு விடுவதாக குறிப்பிடுகிறான். எனவே இறைவன் கைப்பற்றுவது நமது உயிரை அல்ல. நமது ஆன்மாவை என்ற முடிவுக்கு வருகிறோம். குழப்புகிறதா? :-) இதனை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளங்க முயற்சிப்போம். அன்றாடம் நாம் பயன் படுத்தும் வாகனத்தை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

உடல் = வாகனம்
ஓட்டுனர் = ஆன்மா
என்ஜின் = மனம்
பெட்ரோல் = உயிர்

வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போது எரிபொருள் (பெட்ரோல்) காலி ஆகிவிட்டால் வண்டி நின்றுவிடும். மனிதன் இறந்து விடுகிறான். எரி பொருள் தீர்ந்ததால் ஓட்டுனர் (ஆன்மா) வண்டியை விட்டு இறங்கி விடுகிறார். இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும் ஆன்மாவும் உடலை விட்டு வெளியேறி விடுகிறது.. ஆன்மா, மனம், உயிர் இதில் எது, அதிக சக்தி வாய்ந்தது? என்றால் ஆன்மா தான். ஆன்மாவிற்கு அழிவில்லை. இந்த ஆன்மாவைத்தான் இறைவன் உறங்கும் போது தன் கைவசம் எடுத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் நமது உடலுக்கு திரும்பவும் அனுப்புகிறான். இப்போது உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா?

இனி ஆதாரபூர்வமான நபி மொழி ஒன்றை பார்போம்.

நபியவர்கள் கூறினார்கள். “ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்.” (முஸ்லிம்)

இந்த நபி மொழியின் படி குழந்தையின் 40 வது நாளில் ஒரு வானவர் இறை கட்டளைபடி ஊதுகிறார் அல்லவா? அதுதான் இறைவன் அனுப்பும் ரூஹ். அதாவது ஆன்மா. அதற்கு முன்னால் விந்தணுவும் கரு முட்டையும் சேர்ந்து சதைக் கட்டியாக 40 நாள் வரை வளருகிறதே அதுதான் உயிர். ஒரு பொருளுக்கு உயிர் இல்லை என்றால் அது நாற்பது நாள் தாயின் வயிற்றில் வாழ முடியாது. வளர்சியும் இருக்காது. ஆன்மாவுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசங்களை இப்போது நாம் புரிந்து கொண்டோம்.

இந்த ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே சிறப்புத் தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. நன்மை எது தீமை எது என்பதை பகுத்தறியும் பகுத்தறிவை இறைவன் மனிதனுக்கு மட்டுமே விஷேசமாக வழங்கியுள்ளான். விலங்குகளுக்கும் பகுத்தறிவு இருக்கிறதே. அவனது முதலாளியின் வீட்டை தேடி சரியாக வந்து விடுகிறதே என்று கேட்கலாம்.

ஒரு மாட்டை நீங்கள் வாங்கி வீட்டில் கட்டிப் போடுகிறீர்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு அதனை அவிழ்த்து விட்டால் தானாகவே உங்கள் வீட்டுக்கு வந்து விடுவதைப் பார்க்கிறோம். இந்த வரையில் ஓகே. ஆனால் வரும் வழியில் யார் வீட்டு திண்ணையிலாவது ஒரு புல் கட்டு இருந்தால் யாரையும் கேட்காது. பொறுமையாக அசை போட்டு நிதானமாக எந்த குற்ற உணர்சியும் இல்லாமல் சாப்பிட ஆரம்பிக்கும். :-) நமது முதலாளியின் புல் கட்டு இது அல்லவே என்று பகுத்தறியும் சிறப்பு ஆற்றல் விலங்குகளுக்கு இல்லாததே காரணம்.

அதே போல் ஒரு யானையை பார்கிறோம். மனிதனை விட 10 மடங்குக்கு மேல் சக்தி வாய்ந்தது. ஆனால் அவனது சிறிய அங்குசத்துக்கு பயந்து அவன் முட்டி போட சொன்னாலும், பிச்சை எடுக்க சொன்னாலும், சைக்கிள் ஓட்ட சொன்னாலும் எந்த எதிர்பும் காட்டாமல் பாகனுக்கு கட்டுப்படுவதைப் பார்கிறோம். தன்னை வேலை வாங்கும் வலுவில் குறைந்த இந்த அற்ப மனிதனை தனது தும்பிக்கையால் வாரி தனது காலில் போட்டு மிதிக்க அதனால் முடியும். ஆனால் அந்த அளவு சிந்தித்து செயல்பட அதன் அறிவு இடம் கொடுக்கவில்லை.

மேலும் 10000 வருடங்களுக்கு முன் எப்படி விலங்குகள் காட்டில் சுற்றித் திரிந்ததோ அதே போல் தான் இன்றும் காட்டில் சுற்றித் திரிகின்றன. ஆனால் மனிதன் ஆரம்ப காலங்களில் இலை தழைகளை சுற்றிக் கொண்டு வாழ்வை இந்த பூமியில் ஆரம்பித்தான். ஆனால் இன்று விண்ணை முட்டும் கோபுரங்களை கட்டி தான் வாழ்வதற்கு விதவிதமான வசதிகளை பெருக்கிக் கொண்டான். விமானத்தில் பறக்கிறான். இந்த உலகையே தனது ஆளுமைக்குள் கொண்டு வந்துள்ளானே இந்த ஆளுமைத் திறனை மனிதனுக்கு மட்டுமே தந்துள்ளான் இறைவன்.

இறைவன் இத்தனை வசதிகளையும் கொடுத்து விட்டு சில கட்டுப்பாடுகளையும் விதித்து, நன்றிக் கடனாக அந்த மனிதன் தன்னை வணங்க வேண்டும் என்றும் எதிர்பார்கிறான். இவை எல்லாம் மிருகங்களுக்கு கிடையாது. மனிதனுக்கும் மிருகத்துக்குமுள்ள அறிவு வித்தியாசங்களை தற்போது புரிந்து கொண்டிருப்போம்.

''முஹம்மதே!ஆன்மாவைப் (உயிரை) பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'ஆன்மா(உயிர்) என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'' (குர்ஆன் 17:85)

மனிதன் இன்று வரை ஆன்மா எங்கிருந்து வருகிறது. இறந்தவுடன் எங்கு போகிறது என்ற கேள்விக்கு பதிலை கண்டு பிடிக்கவில்லை. உலக முடிவு நாள் வரையில் அதற்கு விடை காண முடியாது என்று குர்ஆன் கூறுகிறது.

"Frankly, scientists do not know enough about biology to create life," - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.

"வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருக்கவில்லை" - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.

குர்ஆன் என்ன சொன்னதோ அதனைத்தான் நேச்சர் பத்திரிக்கையும் சொல்கிறது. ஆன்மாவுக்கு இது வரை அறிவியலால் வரைவிலக்கணம் கொடுக்க முடியவில்லை.

--------------------------------------------------------

ஆன்மாவைப் பற்றி கிருத்தவர்களின் பைபிளும் நமது தமிழ் பழம் நூற்களும் என்ன வாதத்தை வைக்கின்றன என்பதை இனி பார்போம்.

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம்

பொருள்: உடலை முன்பு இழுக்கு என்று நினைத்திருந்தேன். உடம்பிற்குள் ஒரு பொருள் உள்ளதை உணர்ந்து கொண்டேன். அது இறைவனால் தரப்பட்ட பகுத்தறியும் ஆன்மா என்பதை விளங்கி இந்த உடலை அவனுக்கே தந்து விட்டேன் என்கிறார் திருமூலர்.

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

சிவ வாக்கியர் கூட இந்த ஆன்மாவின் (உயிர்) சூட்சுமத்தை விளங்காமல் அதனையே பாடலாக எழுதி வைத்து விட்டு நம்மை விட்டு சென்றும் விட்டார்.

இனி இதன் மூலம் அறிவியல் உலகில் ஒரு ஆய்வாளர் உண்மையை கண்டறிந்து இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வை அடுத்த பதிவில் பார்போம்.

3 comments:

Saleem said...

Assalamualaikum Bhai,

As per the hadith, the 'rooh' is given in 4 months or 40 days?

suvanappiriyan said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...


Wa alikkum salam bro….

//As per the hadith, the 'rooh' is given in 4 months or 40 days?//

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விந்துத் துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத் துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, "இறைவா! இவன் நற்பேறற்றவனா? அல்லது நற்பேறு பெற்றவனா?'' என்று கேட்கிறார். பிறகு இறைக்கட்டளைக்கேற்ப அதைக் குறித்து எழுதப்படுகிறது. பிறகு "இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா?'' என்று கேட்டு அதற்கேற்ப எழுதப்படுகிறது.

அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன. பிறகு அதில் கூட்டப்படுவதுமில்லை; குறைக்கப்படுவது மில்லை.

இதை ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஆதார நூல் முஸ்லிம்: 5146