Followers

Monday, February 23, 2015

எங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?



திரு குமரன்!

//கடவுளை அடைய கூடிய மார்க்கம் எல்லார் மதத்திலும் பிரச்சனை உள்ளது அந்த பிரச்சனையை அந்த மதத்தில் உள்ளவர் தான் தீர்க்க வேன்டும் மற்றவர்கள் தலையிட கூடாது//

உங்களோடு முடிந்து விட்டால் இதில் முஸ்லிம்கள் தலையிட ஒன்றுமே இல்லை. ஆனால் முன்பு ராம கோபாலன் நபிகளின் மனைவியைப் பற்றி தரக் குறைவாக பேசினார். அன்றைய கலைஞர் ஆட்சி அதனை கண்டித்தது. ராம கோபாலனிடம் பல பத்திரிக்கையாளர்கள் இது பற்றி கேள்விக் கணைகளை எழுப்பினர். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

'கி.வீரமணி ராமனை பற்றியும், மற்ற கடவுள்களைப் பற்றியும் தரக் குறைவாக பேசும் போது இந்த கேள்வியை ஏன் கேட்கவில்லை? எனவேதான் நான் இஸ்லாத்தை விமரிசிக்கிறேன்' என்று சொன்னார். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்து முண்ணனியின் தலைவர் ராம கோபாலனின் பதில்தான் இது.

ராம கோபாலனை எந்த முஸ்லிமும் வம்பிக்கிழுக்கவில்லை. இந்து கடவுள்கள் எவரையும் எந்த இஸ்லாமியரும் இது வரை விமரிசித்தது இல்லை. அதனை இஸ்லாம் எங்களுக்கு போதிக்கவும் இல்லை.

ராம கோபாலன் முறையாக என்ன செய்திருக்க வேண்டும்? கி. வீரமணி அவர்களை சந்தித்து 'உங்களுக்கு என்ன பிரச்னை? சூத்திரன் போன்ற வார்த்தைகள்தான் பிரச்னை என்றால் அதனை நீக்கி விடுகிறோம். சாதி வேற்றுமைகளை களைகிறோம். சாதி பார்காமல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்குகிறோம். மூடப் பழக்கங்களை ஒழிக்க உங்களோடு நாங்களும் கை கோர்க்கிறோம்' என்று சொல்லியிருப்பாரேயானால் வீரமணி ஏன் விமரிசிக்கப் போகிறார். அதைத்தானே ராம கோபாலன் செய்திருக்க வேண்டும்?

இதோடு விட்டாரா? தலித் மக்களை துணைக்கழைத்துக் கொண்டு தமிழகமெங்கும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பள்ளி வாசலுக்கு முன்னால் நின்று கொண்டு 'பத்து காசு முறுக்கு! பள்ளி வாசலை நொறுக்கு' என்று குத்தாட்டம் போட வைக்கிறார். அவர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து அழைத்து வருகிறார். இதற்கு பெயர் பக்தியா? பகல் வேசமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதோடு விட்டாரா? முஸ்லிம் பெண்களையாக பார்த்து காதலித்து அவர்களை இந்துக்களாக மாற்றுங்கள் என்று பொது மேடைகளில் பேசுகிறார். இது பல சமூகம் வாழும் நாட்டில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாதவரல்ல நீங்கள். எனவே தான் இந்து முண்ணனி, ராம கோபாலன், பிஜேபி, ஆர்எஸ்எஸ், நரேந்திரமோடி, அமீத்ஷா போன்ற தனி நபர்களும் இயக்கங்களும் இந்த சமூகத்தை எங்கு கொண்டு செல்கின்றன என்பதை விளக்க வேண்டியதாக உள்ளது. தேசத் தந்தையை கொன்ற மாபாதகனை தேச பக்தன் என்று கூறி நாடு முழுக்க அவனுக்கு சிலை வைக்கப் போகிறோம் என்று சொல்பவர்களிடம் நாம் எதனை எதிர் பார்க்க முடியும்?

சூத்திரன் சூத்திரனாகவே இழிவை சுமந்து கொண்டு இருக்க வேண்டும். பார்பனனான நான் உயர்ந்த குலமாகவே இருந்து அனைத்து வசதிகளையும் அனுபவித்து வருவேன். இதனை பொருக்காது இஸ்லாத்துக்கு யாராவது மாறினால் இஸ்லாமியர்களை கலவரம் உண்டாக்கி அழித்தொழிப்பேன் என்று பொது மேடைகளில் இந்தியாவெங்கும் கூறி மதக் கலவரத்தை உண்டு பண்ணினால் அதனை இஸ்லாமியர் எந்த எதிர்பும் காட்டாது அமைதி காக்கச் சொல்கிறீர்களா? இன்று வரை இத்தனை கொடுமைகள் நடந்தும் எந்த முஸ்லிமும் எதிர் தாக்குதல் நடத்துவதில்லை. இந்திய சட்டத்தை மதித்து கோர்ட்டு வழக்கு என்றும் அமைதியான போராட்டங்கள் என்றும் தான் சென்று கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இஸ்லாத்துக்கு எதிராக ஒட்டு மொத்த இந்துக்களும் அணி திரளவில்லை. 3 சதவீதமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினரும் இந்துத்வாவும்தான் இஸ்லாத்துக்கு எதிராக காய் நகர்த்துகின்றனர். தங்களின் மேட்டிமைத் தனத்தை காத்துக் கொள்வதற்காக இந்து மதத்தை காக்கிறேன் என்ற போர்வையில் வலம் வருகின்றனர். அது காலப் போக்கில் மாறும் என்ற நம்பிக்கையில்தான் இஸ்லாமியரும் அமைதியோடு இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். அந்த அமைதி நிலைக்க வேண்டும் என்பதே என் பொன்றோர் அவா. அதனால்தான் தவறுகளை சுட்டிக் காட்டி மற்ற இந்துக்கள் இந்துத்வாவில் வீழ்ந்து விடாமல் எச்சரித்து வருகிறோம்.


No comments: