Followers

Thursday, February 19, 2015

காலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டுகள்! - 2

காலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டுகள்! - 2





மேற்கு வங்க மாநிலத்தின் முன்னால் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவை நாம் அறிந்திருப்போம். தனது மாநிலத்தில் தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை கவர்ந்திழுக்கும் நோக்கில் மலேஷியா, இந்தோனேஷியா சென்றார். வெளியுலக பயணத்தைப் பார்த்தவுடன் தான் கம்யூனிஸ்டுகள்" குண்டி சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருப்பது" முதல்வருக்கு விளங்கியது. இந்தோனேஷிய பத்திரிக்கையான 'ஜகார்தா போஸ்ட்' என்ற இதழுக்கு அவர் அளித்த பேட்டியைப் பார்போம்.

'பழைய கொள்கைகளையே பேசி பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் வழமையை கம்யூனிஸ்டுகள் கை விட வேண்டும். கொள்கையில் சீர் திருத்தம் கொண்டு வர வேண்டும். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் கம்யூனிஸ்டுகள் அழிந்து போவார்கள்.

மாற்றத்தை விரும்பிதான் எனது மாநிலத்துக்கு அன்னிய முதலீட்டை வெகுவாக அனுமதித்துள்ளேன். சீனாவைப் பாருங்கள். பழைய கம்யுனிஸ கொள்கைகளை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்திருந்தால் இத்தகைய புரட்சிகரமான மாற்றத்தை அவர்களால் கொண்டு வந்திருக்க முடியாது. எனவே கம்யூனிஸ்டுகள் தங்கள் கொள்கைகளில் மாற்றங்களை புகுத்த வேண்டியது அவசியத்திலும் அவசியம்'

ஆதாரம்:
தினமணி
28-08-2005

மேலே உள்ள கருத்துகள் கருத்து முதல்வாதத்தை வைக்கும் சுவனப்பிரியனின் கருத்தல்ல. பொருள் முதல் வாதத்தை அடிப்படையாக கொண்ட பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான புத்ததேவ் பட்டாச்சாரியாவின் கருத்துக்களே இவை. ஜோதிபாசுவின் ஓய்வுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப இந்தியாவில் சரியான காம்ரேடு இவர்தான் என்று செங்கொடியின் தலைவர்களால் இனம் காட்டப்பட்டவர். இவரது கருத்துக்கு ஜோதிபாசுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

"புதிய உலகின் சிற்பி நாங்களே! இனி உலகை ஆளப் போவது கம்யூனிஸமே" என்று இறுமாப்புடன் பதிவுகள் எழுதி வரும் செங்கொடிகள் சற்று இந்த தலைவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. வறட்டுப் பிடிவாதத்தினால்தான் சீனாவில் செங்கொடியை இழந்தீர்கள். ரஷ்யாவிலும் செங்கொடியை இழந்தீர்கள். அதன் தொடர்சியாக ரஷ்யா பல நாடுகளாக பிளவுண்டது. இன்று அந்த நாடுகளில் லெனினின் பெயரையும், ஸ்டாலினின் பெயரையும் உச்சரிக்கக் கூட ஆட்களில்லை. முன்பு உச்சரித்த வாய்களெல்லாம் இன்று நபிகள் நாயகத்தை உச்சரித்து முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டிருக்கின்றன. ஆப்பானிஸ்தான் முஜாஹித்களிடம் வாங்கிய அடியில் கோமாவில் தள்ளப்பட்டீர்கள். கடைசியில் இந்தியாவில் பொய்யான வாக்குறுதிகளை ஏழைகளிடம் கொடுத்துக் கொண்டு காலத்தை கடத்திக் கொண்டுள்ளீர்கள். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் ஆண்டி" என்பது போல் எங்கெங்கோ சுற்றி விட்டு தனது இறுதி மூச்சை இந்தியாவில் இழுத்துக் கொண்டிருக்கிறது கம்யூனிஸம். கோமாவுக்கு சென்றவர்கள் திரும்ப வருவது அரிது என்பதால் செங்கொடியின் முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீரே! :-)

பொருள் இருப்பவனையும் பொருள் இல்லாதவனையும் பரம்பரை விரோதிகளாக மாற்றி தொழிற் கூடங்களை இழுத்து பூட்ட வைத்து இரண்டு பேரையும் நடுத் தெருவில் விட்டதுதான் நீங்கள் இந்த சமூகத்துக்கு செய்த தொண்டு. இதனை மறுக்க முடியுமா உங்களால்? இந்த உலகம் இயங்க பணக்காரனும் ஏழையும் இருந்தே ஆக வேண்டும். இந்த சாதாரண யதார்த்தத்தைக் கூட சரிவர புரிந்து கொள்ளாத உங்களால் சமூகத்துக்கு விடிவை எப்படி கொடுக்க முடியும்?

கருத்து முதல்வாதத்தை வைத்த இஸ்லாம் கம்யூனிஸ்டுகளுக்கே பாடம் எடுக்கும் நிலையில் இன்று உள்ளது. உழைக்கும் ஏழைக்கு உரிய பங்கை அளித்து வருகிறது. பொருள் உள்ளவனும் பொருள் இல்லாதவனும் எந்த நட்டத்தையும் அடையாமல் சிறந்த வழிமுறையை இஸ்லாம் கட்டாய கடமையாக முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. பயிரிடும் நிலம், வசிக்கும் வீடு, அணிந்திருக்கும் நகை, இருப்பில் உள்ள பணம், என்று அனைத்தையும் கணக்கிட்டு அதனை தொழிலாளிக்கு மற்றும் இல்லாதவர்களுக்கு உலக முஸ்லிம்கள் கணக்கிட்டு கொடுத்து வருகின்றனர். சத்தமில்லாத ஆர்பாட்டமில்லாத ஒரு புரட்சி உலகமெங்கும் நடந்து வருகிறது. எனது ஓனரான சவுதியும் அவரது சகோதரரும் வருடா வருடம் கணக்கிட்டு லட்சக் கணக்கான ரியால்களை ஏழைகளுக்கு கொடுத்து வருவதை நான் நேரிடையாக பார்த்துள்ளேன். தற்போது தமிழகத்திலும் இந்த செயலானது தொடங்கப்பட்டு பல ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளது நபிகள் நாயகம் கொண்டு வந்த வழிமுறை. ஏனெனில் இந்த இஸ்லாமிய சட்டங்களானது படைத்த இறைவன் கொடுத்த சட்டங்கள் என்று நம்பியதாலேயே அந்த சவுதிகள் லட்சக்கணக்கான ரியால்களை தானமாக தர முன் வருகின்றனர். மறு உலக வாழ்வில் இதனால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே இது சாத்தியப்பட்டது.

அதே நேரம் பொருள் முதல் வாதத்தை முன்வைத்த நாத்திக சித்தாந்தமான கம்யுனிஸம் மனிதனால் உருவாக்கப்பட்டடதால் பல திருத்தங்களை காலத்துக்கு தக்கவாறு மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றங்களை கொண்டு வந்தும் உழைப்பாளியின் ஏக்கத்தை உங்கள் கொள்கையால் ஈடு செய்ய முடியவில்லை. இஸ்லாத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் உள்ள வேறுபாடே இதுதான்.

எனது கேரள நண்பன் ஜார்ஜ் மாத்யூ சில வருடங்கள் முன்பு என்னிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க எந்த மாவட்டம் சிறந்தது என்று கேட்டான்.

'நீ மலையாளிதானே! ஏன் கேரளாவில் தொழில் தொடங்கக் கூடாது?' என்று நான் கேட்டேன்.

'அங்கே சாதாரண மனிதர்கள் தொழில் தொடங்க முடியாது. நிறைய பணம் வேண்டும். தொழில் தொடங்கி லாபமாக நடந்தால் உடன் கம்யூனிஸ்டுகள் லாபத்தில் பங்கு கேட்டு கொடி பிடிப்பர். கம்யுனிஸ்ட் தலைவர்களுக்கு லஞ்சமாக லட்சக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும். தவறினால் ஸ்ட்ரைக். எங்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் அதிகமாக உள்ளனரோ அங்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே தான் தமிழகத்தில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்'

என்ன ஒரு சத்தியமான வார்த்தை. ஆச்சரியத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். ஐந்து நாள் மாநாடு போட்டு விளக்கினாலும் இந்த அளவு தெளிவாக கம்யுனிஸத்தை விளக்கியிருக்க முடியாது. கம்யூனிஸம் வளர்வதால் அந்த சமூகம் எவ்வாறு மாறிப் போகும் என்பதற்கு ஜார்ஜ் மேத்யூ சொன்ன இந்த வரிகளே சிறந்த உதாரணம்.

இன்றைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். இனிவரும் நாட்களிலும் செங்கொடியின் உளரல்களை அடித்து, துவைத்து காயப் போடும் பணி அவ்வப்போது தொடரும். :-)

No comments: