Followers

Friday, January 30, 2015

'எங்கும் இருட்டு! எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது!"



இரவு எட்டு மணி இருக்கும். பனிக் காலம் ஆனதால் அதிக நடமாட்டமும் ஊரில் இல்லை. நான் வெளியூர் செல்வதற்காக பஸ்ஸூக்காக காத்திருந்தேன்.. வேப்ப மர இலைகளின் சுகந்தமான காற்று தென்றலாக என் மேல் தவழ்ந்து சென்றது. எங்கோ ஓர் மூலையில் நாய் 'ஊ.............' என்ற ஊளையிடும் சப்தமும் கேட்டது. என்னைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

அப்போது நான் நிற்கும் இடத்துக்கு சற்று தூரத்தில் இரண்டு உருவங்கள் மெல்ல வந்து வேப்ப மரத்தினடியில் ஒதுங்கியது. அவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியிருந்தார்கள். கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தது. பனியினால் முகத்தை மூடியுள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நான் ஏற வேண்டிய பேரூந்தும் வந்தது. நான் ஏறிக் கொண்டேன். ஆச்சரியமாக என்னைத் தொடர்ந்து அந்த இருவரும் அதே பேரூந்தில் ஏறிக் கொண்டனர். பேரூந்தில் கூட்டமும் அதிகம் இல்லை. குளிர் காலம் ஆனதால் குளிருக்கு பயந்து பலரும் வெளிக் கிளம்பவில்லை போலும். :-) மெலிதாக இளையராஜாவின் 'பூங்காற்று திரும்புமா' பேரூந்தில் ஓடிக் கொண்டிருந்தது. அரை மணி நேர பயணத்துக்குப் பின் நான் இறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது. நான் இறங்கிக் கொண்டேன்.

என்னைத் தொடர்ந்து அந்த இரண்டு இளைஞர்களும் அதே நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். அதிக முன்னனேற்றமடையாத ஒரு கிராமம். நான் செல்லும் இடத்தை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினேன். என்னைத் தொடர்ந்து அந்த இருவரும் எனது பின்னே வந்தனர். நான் திரும்பி பார்த்தால் உடன் ஒதுங்கி மறைந்து கொள்கின்றனர். முகத்தில் இருந்த துணியையும் இதுவரை விலக்கவில்லை. எங்கோ தூரத்தில் ஒலி பெருக்கியில் சிலர் பேசும் சத்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது. இந்த இருவரும் என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்து எனக்கு பயம் கொஞ்சம் தொற்றிக் கொண்டது. சவுதியிலிருந்து தமிழகம் சென்ற பத்தாவது நாள் இது. விலையுயர்ந்த கைக்கடிகாரம். சில ஆயிரம் பணங்கள் என்னிடம் இருந்தது. விலையுயர்ந்த செல்போனும் என்னிடம் இருந்தது. இதனை நோட்டமிட்டு பணத்தை அபகரிக்கும் கும்பலோ என்று பயந்தேன். நடையை சற்று வேகப்படுத்தினேன். அதே வேகத்தில் அவர்களும் என்னை பின் தொடர்ந்தனர். எனக்கு சந்தேகம் இன்னும் அதிகமானது. காய்ந்த சருகுகளின் சப்தம் வேறு சர....சர... என்று கேட்டது. கூடவே கோட்டான்களின் சப்தமும் சேர்ந்து கொள்ளவே 'அவ்வ்வ்வ்....................' என்று வடிவேல் பாணியில் பயமும் எனக்குள் தொற்றிக் கொண்டது. அதற்குள் வேறொரு ரோட்டில் இருந்து இரண்டு பேர் எனது வழியில் வந்து சேர்ந்து கொண்டனர்.. இப்போதுதான் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. இனி பயமில்லை என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்த அந்த இருவரை நோக்கி நகர்ந்தேன். என்னைப் பார்த்தவுடன் ரோட்டின் மறுபுறம் போக எத்தனித்தனர் அந்த இருவரும்.

'ஏய்... நில்லு! உங்களுக்கு என்ன வேணும்?'

உடன் பயந்தவர்களாக அந்த இருவரும் 'பாய்... நாங்கதான்' என்று முகத்தின் துணியை எடுத்தனர். அட... இது நம்ம ஊர் அரபி மதரஸா பிள்ளைகளாச்சே.... என்று வியந்தவனாக...

'எங்கேப்பா ரெண்டு பேரும் போறீங்க?'

'நீங்க எங்கே போறீங்களோ அங்கதான் நாங்களும் போறோம் பாய்'

'ஓ.... மீட்டிங் கேட்க வர்றீங்களா? அதுக்கு ஏன்பா முகத்தை மூடிக்கிட்டு என்னையும் பயமுறுத்திக்கிட்டு'

'நாங்க இந்த மீட்டிங் கேட்க வந்தது தெரிஞ்சா எங்களை மதரஸாவுலேருந்து நீக்கிடுவாங்க பாய்! அதனால தான் உங்க கண்ணுல படாம போகலாம் என்று நினைத்தோம். ஆனால் மாட்டிக் கொண்டோம்'

'ஹா... ஹா....' பலமாக சிரித்தேன்.

'தயவு செய்து இந்த விஷயத்தை வெளியில சொல்லிடாதீங்க பாய்'

'கவலைபடாதீங்க... நான் சொல்ல மாட்டேன்'

இப்படி பேசிக் கொண்டு வரும் போதே மீட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். நல்ல கூட்டம். தவ்ஹீத் ஜமாத்தின் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடந்து கொண்டிருந்தது. பிஜே அப்போதுதான் பேச ஆரம்பித்தார். அந்த இரு இளைஞர்களையும் பக்கத்திலேயே உட்காரச் சொன்னேன். சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு சென்று இரவு உணவும் சாப்பிட்டோம். 11 மணிக்கு பிஜே தனது அருமையான உரையை முடித்தார். கூட்டம் களைய ஆரம்பித்தது. அந்த இரு இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு பஸ் ஏறினோம். வழியில் அவர்களிடம் பேசிக் கொண்டே வந்தேன்.

'மதரஸாவில் ஓதக் கூடிய மாணவர்களான உங்களுக்கு பிஜே மீட்டிங் கேட்கும் ஆர்வம் எப்படிப்பா?'

'எங்க வீட்டுல வறுமையினால மதரஸாவில் சேர்த்து விட்டார்கள் பாய். எனக்கு பிரியம் இல்ல. முன்பெல்லாம் பிஜே மீட்டிங் எங்க நடந்தாலும் போயிடுவேன்' ஒரு மாணவன்.

'இதற்கு முன்னால் ஒரு மாணவன் இவ்வாறு போனது தெரிந்து அவனை மதரஸாவிலிருந்தே நீக்கி விட்டார் எங்கள் முதல்வர்' மற்றொரு மாணவன்.

'தவ்ஹீத் ஜமாத் நடத்தும் மதரஸாவில் சேர வேண்டியதுதானே' என்று நான் கேட்டேன்.

'அதற்கு தான் முயற்சி செய்துகிட்டு இருக்கோம் பாய். துவாச் செய்யுங்க'

'கவலைப் படாதீங்க... உங்களை இறைவன் கைவிட மாட்டான்'

அதற்குள் ஊர் வரவே இறங்கிக் கொண்டோம்.

இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். அந்த இளைஞர்களை அதன் பின் அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களை முழு ஏகத்துவவாதிகளாக மாற்றி விட்டோம். தற்போது அவர்கள் நல்ல வேலையில் வளை குடாவில் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

சினிமா பார்த்தால் கண்டிக்கலாம்: சூது விளையாடினால் கண்டிக்கலாம்: விபசாரம் பண்ணினால் தண்டிக்கலாம்: திருடினால் தண்டிக்கலாம். குர்ஆனையும் ஹதீஸையும் கேட்க போனால் அந்த மாணவர்களை தண்டிக்கலாமா நியாயமாரே!

சொல்லுங்க நியாயமாரே!

டிஸ்கி: மதரஸா மாணவர்கள் முதல்வரிடம் சொல்லாமல் பிஜே கூட்டத்துக்கு வந்து என்னிடம் மாட்டிக் கொண்டது எங்கள் கிராமத்தில் முன்பு நடந்த ஒன்று. அதோடு சேர்த்து 'மானே... தேனே...' என்று போட்டு அதனை ஒரு சிறுகதையாகவே சொல்லி விட்டேன். இது போன்ற சம்பவங்கள் பல மதரஸாக்களில் நடந்து மாணவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

3 comments:

Anonymous said...

pj da pechai kekradhukku thookkula thongalam

Anonymous said...

pj da pechai keppadharku badhila thookkula thongalam, pj oru wali kedan

Anonymous said...

pj da pechai keppadharku badhila thookkula thongalam, pj oru wali kedan