Followers

Saturday, November 09, 2019

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு:

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு:
பஞ்சாயத்தாருக்கிடையில் ஒருமித்த கருத்து நிலவாத பஞ்சாயத் தீர்ப்பு
மூத்த வழக்குறைஞர் ராஜீவ் தவான் பேட்டி
(பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழின் செய்தியாளர் வி. வெங்கடேசனுக்கு மூத்த வழக்குறைஞர் ராஜீவ் தவான் அளித்த பேட்டியின் தமிழாக்கத்தை நன்றியுடன் இங்கே அளிக்கிறோம்)
கேள்வி:உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பஞ்சாயத் நீதி என்று வர்ணித்துள்ளீர்கள். இதை விளக்கி சொல்லுங்களேன்;
ராஜீவ் தவான்: இது சொத்துடமை தொடர்பான வழக்கு. இதனை நீதிமன்றம் பாகப்பிரிவினை வழக்காக மாற்றியுள்ளது. சொத்துடமை யாருக்கு என்பதை கவனிக்கும் போது சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு அதில் நேரிய உடமை உள்ளது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பள்ளிவாசலை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தார்கள். அவர்கள் அதன் உடமையை இழக்கவே இல்லை. தொழுகை நடைபெறவில்லை என்று வாதத்திற்காக சொன்னாலும் கூட அவர்கள் இடைவெளி இல்லாமல் அதன் உரிமையாளர்களாக இருந்துள்ளார்கள். டிசம்பர் 22, 1949ல் சில சிலைகள் அங்கே வைக்கப்பட்டன. அற்புத தெய்வீகச் செயலின் காரணமாக அவை அங்கே வந்தன என்று கூறுவது அபத்தமானது. நல்லவேளை நீதிமன்றம் அந்த அளவிற்கு செல்லவில்லை. எனவே 12 ஆண்டு கால வரம்பிற்குள் சுன்னத் வக்பு வாரியம் வழக்கு தாக்கல் செய்ததா என்ற சாதாரண கேள்வி தான் எழுந்தது. டிசம்பர் 18, 1961ல் வக்பு வாரியம் வழக்கைத் தொடுத்தது. இது கால வரம்பிற்குள் தாக்கல் செய்யப்பட்டதால் சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களின் சொத்துடமை பாதிக்கப்படவில்லை.
இந்த தீர்ப்பு சுன்னத் முஸ்லிம்களின் சொத்துடமையை பறித்திருப்பது போல் தோன்றுகிறது. சுன்னத் முஸ்லிம்களின் சொத்தாக அது ஒரு போதும் இருந்ததில்லை என்றோ அல்லது அச்சொத்தின் ஒரு பகுதி மீது மட்டுமே அவர்களுக்கு உரிமை உண்டு என்றோ இந்த வழக்கில் யாரும் வாதம் செய்யவில்லை அல்லது இப்படியான கோரிக்கையும் வைக்கப்படவில்லை. ஆனால் இப்படிப்பட்ட முடிவு நீதித்துறையின் கற்பனையின் விளைவாக வந்துள்ளது.
கேள்வி: 1992ல் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை 1949ல் சட்டவிரோதமாக சிலைகள் வைக்கப்பட்டதையும் இந்த தீர்ப்பு நியாயப்படுத்தியுள்ளதா? பள்ளிவாசல் இருந்துள்ளதின் சட்டரீதியான அடித்தளம் பலவீனமானது என்று இத்தீர்ப்பில் உணர்த்தப்பட்டுள்ளதா?
ராஜீவ் தவான்: இந்த முடிவு சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. டிசம்பர் 6, 1992ல் ஒரு பள்ளிவாசல் தகர்க்கப்பட்டது. அது சுன்னத் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்தது. ஆனால் இந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும் போது இடிக்கப்பட்ட பள்ளிவாசலின் நிலை சட்டபூர்வமானது அல்ல என்ற கற்பனை எண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் அங்கு பள்ளிவாசல் இருந்ததற்கு சட்டரீதியான ஆதாரம் இல்லை என்றும் இதே போல் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட எவ்வித கொடூரச் செயலும் நடைபெறவில்லை என்றும் இத்தீர்ப்பு உணர்த்துகின்றது. நாம் வாழும் தற்கால உலகில் நடைபெற்ற மிக மோசமான சம்பவமான பள்ளிவாசல் இடிப்பை சட்டரீதியாக புறந்தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது ஒரு மிக குறுகிய சட்டப்பிரச்னை அல்ல. இது முஸ்லிம்களின் உரிமை தொடர்பான முக்கியத்துவமிக்க பிரச்னை ஆகும்.
கேள்வி: இச்சொத்தை மூன்று பங்காக பிரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது சொத்துடமை தொடர்பான இந்த வழக்கு குறித்து முடிவெடுக்க முடியாத நீதிமன்றத்தின் இயலாமையை வெளிப்படுத்துகின்றதா? சொத்தை மூன்றாக பிரிக்கும் இந்த திட்டத்தின் காரணமாக முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்கள் ஆகிய இருத்தரப்பினருக்கும் சர்ச்சைக்குரிய நிலத்தை மேல்முறையீட்டின் மூலம் முழுமையாக உரிமை கோரும் வாய்ப்பை மேல்முறையீட்டில் அளிக்குமா?
ராஜீவ் தவான்: பஞ்சாயத்தார் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் பஞ்சாயத் நீதி அளிக்கப்பட்டதற்கு எடுத்துக் காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது. மாறுபட்ட நீதிபதி (நீதிபதி தர்ம வீர் சர்மா) தனது தார்மீக மற்றும் வரலாற்று ரீதியான உணர்வுகளின் காரணமாக ஹிந்துக்களுக்கு சாதகம் செய்துள்ளார். மற்றொரு நீதிபதியான நீதியரசர் சுதீர் அகர்வால் ஹிந்துக்களின் உணர்வுப்பூர்வமான உரிமைக்கு முன்னுரிமை அளித்துள்ளார். நீதியரசர் எஸ்.யூ. கானுக்கு உண்மைகள் மற்றும் எதார்த்தமான நிலவரங்களை கையாள்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் மூவரில் இருவருக்கு எதிர்காலத்திற்கு உகந்தது என்று சொல்லப்படுகின்ற செயல்படுத்ததக்கது என்று கருதப்படுகின்ற தீர்வினை தந்துள்ளார்கள். இது யாருக்கு செயல்படத்தகுந்தது? முக்கியமான பகுதி ஹிந்துக்களுக்கு செல்கிறது. இன்னும் அடையாளம் காணப்படாத மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு செல்கிறது. இன்னொரு மூன்றில் ஒரு பங்கு இந்த வழக்கை தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் எவ்வித சொத்துரிமையும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாத நிர்மோகி அகாராவிற்கு செல்கிறது. ஆக முஸ்லிம்களுக்குச் சொந்தமான இந்த இடத்தில் அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கும் ஹிந்துக்களுக்கு மூன்றில் இரு பங்கும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத் தீர்வு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லாமல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தார்மீக அடிப்படையும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை ஏளனப்படுத்தாமலும் இது வழங்கப்படவில்லை.
கேள்வி: இந்த தீர்ப்பு சட்ட ரீதியான சான்றுகளை விட மத விசுவாசத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று கருதுகிறீர்களா? ஹிந்துக்களின் பூஜை செய்யும் தார்மீக உரிமையை சொத்து மீதான சட்டபூர்வமான உரிமையாக மாற்றப்பட முடியாதா?
தவான்: இது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல என்பதை நான் விளக்குகிறேன். இந்த தீவிர பஞ்சாயத் தீர்வின் விளைவுகள் சட்ட நுணுக்கங்கள் தொடர்புடையது மட்டுமில்லை. எந்தவொரு சொத்துரிமை தொடர்பான வழக்கும் நுட்பங்கள் நிறைந்தது இல்லை. ஆனால் இந்த தீர்ப்பு எதிர்காலத்திற்கு ஒரு பாதுகாப்பான அடித்தளத்தை அமைத்து தருகின்றதா? முஸ்லிம்களின் உரிமைகளை ஒத்துமொத்தமாக கரைந்துப் போக வைக்கும் இந்த தீர்ப்பின் அடிப்படையில் உண்மையை நிலைநிறுத்த இயலுமா? சமாதானத்தை ஏற்படுத்த இயலுமா? தென் ஆப்ரிக்காவை நெல்சன் மண்டேலா மீட்டப்போது ஒரு உண்மை மற்றும் சமதான ஆணையம் அமைக்கப்பட்டது. குற்றம் செய்தவர்களுக்கு தங்கள் குற்றத்தை ஓப்புக் கொள்ளுவதற்கும், அது குறித்து வருந்துவதற்கும், உண்மையை அங்கீகரிப்பதற்கும், பிறகு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கும் அந்த ஆணையத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இங்கே பள்ளிவாசலை இடிக்கும் குற்றத்தை புரிந்தவர்கள் விஷயத்தில் இது போன்று நடைபெறவில்லை. இந்த நிலையில் இப்போது முஸ்லிம்கள் எந்த அடிப்படையில் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார்கள். அவர்கள் வெறும்கையுடன் விடப்பட்டுள்ளார்கள். இதில் சரியான அணுகுமுறை முஸ்லிம்களின் சொத்து உரிமையை அங்கீகரிப்பதாக தான் இருந்திருக்க வேண்டும். வழிப்பாட்டு உரிமை உண்டு என்ற ஹிந்துக்களின் உணர்வு எவ்வாறு பிரதிபலித்திருக்க வேண்டுமெனில் முதலில் முஸ்லிம்களின் உரிமையை அங்கீகரித்து விட்டு பிறகு அவர்களிடம் தன்மையாக தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கோரியிருக்க வேண்டும்.
கேள்வி: பள்ளிவாசலை கட்டுவதற்காக பாபர் கோயில் ஒன்றை இடித்தார் என்பதற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளனவா? ஒரு கோயிலின் இடிப்பாடுகளின் மீது தான் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன என்ற நீதிமன்றத்தின் முடிவு சரியானது தானா?
ராஜீவ் தவான்: இந்த தீர்ப்பில் ஒரு மிகப்பெரும் வரலாற்று குறும்பு இழையோடியுள்ளது. செயல்பாட்டில் இருந்த கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசலைக் கட்டினாரா என்பது எழுப்பபட்ட விவகாரங்களில் ஒன்று. இந்த கூற்று உண்மையாக இருப்பின் அந்த நிலம் தொழுகை நடத்துவதற்கு ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகும். இது முஸ்லிம் தரப்பை மிகவும் பலவீனப்படுத்திவிடும். இந்த குறும்பை முதலில் சங்பரிவார் சார்பில் தொடங்கியவர் பி.பி. லால். அங்கு தூண்கள் கண்டெடுக்கப்பட்டதை காரணம் காட்டி அங்கு செயல்பாட்டில் ஒரு கோயில் இருந்தது என்ற முடிவிற்கு நீதிமனறம் வந்துள்ளது. இந்த முடிவிற்கு வருவதற்கு பெரிய அளவில் கற்பனை வேண்டும். அத்தகைய கற்பனை தான் இந்த வரலாற்று முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. அகழ்வாராய்ச்சி சான்றுகளை எடுத்துக் கொள்வதில் நீதிபதி எஸ்.யூ. கானுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஏனைய நீதிபதிகள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். உண்மையில் அகழ்வாராய்ச்சி சரியான அகழ் வெட்டும் முறையை பின்பற்றாமல் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளது. சரியான முடிவுகளை பி.பி. மண்டலும், சிரீன் ரத்னாக்கரும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். இந்த கோயில்கள் மிக பழம்பெரும் காலத்திற்குரியவை. இந்த சந்தேகத்துடன் தொடங்கி முஸ்லிம் தரப்பை பலமிழக்கச் செய்யும் வகையில் பலமில்லாத அடிப்படையில் வழக்குச் சென்றுள்ளது.
கேள்வி: அமைதியையும் கண்ணியத்தையும் நிலைப்படுத்த இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு என்ற பிரிவினைத் தான் நடைமுறைக்கு உகந்த தீர்வா? முஸ்லிம்கள் தங்கள் உரிமை கரைவதை ஏற்றுக் கொள்வார்களா? தனது முழுiயான உரிமைகளையும் அங்கீகரிக்காத சட்ட தீர்வை சிறுபான்மை சமுதாயத்தின் மீது திணிக்க இயலூமா?
தவான்: இது ஒரு சரியான தீர்ப்பு அல்ல. வாதம் என்ற போர்வையில் நீதிமன்றத்தில் நடந்தவற்றை அது முதலில் பதிவுச் செய்துள்ளது. இதன் பிறகு எந்தவொரு நீதிமன்றத்தினாலும் பதில் அளிக்க முடியாத விவகாரங்களில் ஹிந்துக்களின் தரப்பு வாதத்தை அங்கீகரித்துள்ளார்கள். இதன் மூலம் முஸ்லிம்களின் சட்ட மறறும் தார்மீக அடிப்படைகள் தகர்க்கப்பட்டுள்ளன. வழிப்பாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991ல் பாபரி மஸ்ஜித் அல்லாத ஏனைய வழிப்பாட்டுத்தலங்கள் ஆகஸ்ட் 15. 1947ல் எவ்வாறு இருந்ததோ அதனை மதித்துத் நடக்க வேண்டும் என்று கூறுகின்றது. இந்த சட்டத்தின் அடிப்படையில் சங்பரிவார் அடிப்படைவாதிகள் இன்று அயோத்தி நாளை மாதுரா நாளை மறுநாள் பனாராஸ் என்று இனி சொல்வதை நிறுத்துவார்களா?
இந்த தீர்ப்பில் மிக மோசமான தவறுகள் நிறைந்துள்ளன. இந்த தவறுகளை சரி செய்யாவிட்டால் வரலாறுக்கு மிகப் பெரும் பங்கம் ஏற்பட்டு விடும். இந்தியாவிற்கு வெளியில் வாழும் மக்கள் பாபரி மஸ்ஜித் இடிப்பை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளை அழித்ததுடன் ஒப்பிடுகிறார்கள். பள்ளிவாசல் இடிப்பு என்ற மிகப்பெரும் அநியாயத்திற்கு பரிகாரம் காண மதசார்பற்ற ஆட்சி நிர்வாகத்தினரால் இயலவில்லை. அந்த பள்ளிவாசல் மற்றும் அதன் இடத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்களுக்கு ஒரு துளி அளவு கூட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் கண்ணியத்துடனும் கவுரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதைத் தான் இந்திய ஜனநாயகம் விரும்புகிறது.
தமிழில்: சுவனத்தின் செல்வன்
நன்றி: பிரண்ட்லைன் மாதமிருமுறை அக்டோபர் 22 / 2010
Vijayasankar Ramachandran முகநூல் பக்கத்திலிருந்து..


No comments: