Followers

Saturday, November 16, 2019

பண்டைய கால தமிழர்களின் உணவு முறை!



பண்டைய கால தமிழர்களின் உணவு முறை!

முஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் பலரைப் பார்த்துள்ளோம். ஆதி கால தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவே இருந்துள்ளனர். பின்னால் வந்த ஆரிய படையெடுப்பினால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாசாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது. நமது முன்னோர்கள் எந்த அளவு அசைவப் பிரியர்களாக இருந்துள்ளனர் என்பதனை சங்க கால தமிழர்களின் வரலாற்று நூல்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.
குறிஞ்சி நிலத்தவர் உணவு:
சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)
திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)
குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)
மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).
பாலை நிலத்தார் உணவு:
ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).
முல்லை நிலத்தார் உணவு;
பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).
மருத நிலத்தார் உணவு;
மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. ( 216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).
நெய்தல் நிலத்தார் உணவு;
நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).
இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு. இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?


1 comment:

Dr.Anburaj said...

ஆதாமும் ஏவாளும் அம்மணமாக இருந்தார்கள். எனவே பரிணாமம் ஏதும் தேவையில்லை. நாமும் அப்படி அம்மணமாக வாழ தயாராக இருக்கோமா ? மாற்றம் வளா்ச்சி தான் உயிர் தத்துவத்தின் அடையாளம்.அசைவம் சாப்பிட்டவர்கள் சைவம் சாப்பிடுபவர்களாக மாறினதல்.என்ன தவறு ? ஏன் சைவ உணவு உண்பவனை சாடுகின்றீர் ? அனைவரும் 3 வேளையும் இறைச்சி தின்று தின்று தின்று சாப்பிடுங்கள்.யாா் தடுத்தாா்கள்.
-----------------------------------------------------
நான் இரண்டாம் ஆண்டு பட்டபடிப்பு படித்தபோது உடன்குடியைச் சோ்ந்த பத்ருதீன் என்ற புகுமுக வகுப்பு மாணவர் படித்து வந்தாா். இயற்பியல் பாடத்தின் என்னிடம் சந்தேகங்கள் கேட்டு பாடம் படிப்பார். ஒரு நாள் என்னிடம் ” எனக்கு அசைவ உணவு பிடிக்கவி்ல்லை.ஆனால் எங்கள் ஊர் பெரியவர்கள் என்னை அழைத்து முஸ்லீம் என்றால் இறைச்சி தின்றுதான் ஆக வேண்டும். இறைச்சி தின்ன வில்லையெனில் நீ முஹம்மது நபியை அவமதிப்பதாக நாங்கள் கருதுவோம் ” என்று என்னை பயங்காட்டுகின்றாா் என்று வேதனையுடன் தெரிவித்தாா்.அரேபிய மத வாதிகளின் முட்டாள்தனங்களை வியந்து. நான் என்ன செய்ய முடியும்.சைவ உணவு பழக்கம் மிக நன்மையானது. யானை சைவம்தான். தாங்கள் உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூனினேன். அவர் அசைவ உணவு சாப்பிடவும் இல்லை. தொந்தரவுகளும் குறையவில்லை.இறுதியாக என்ன ஆனது என்று எனக்கு தெரியாது.

பிற்காலத்தில் அவர் பிஎஸ்சி விவசாயம் படித்து விட்டு ஏதோ ஒரு அரபு நாட்டில் பணியாற்றியதாக கேள்விப்பட்டேன்.