Followers

Thursday, July 02, 2020

மங்கோலியர்களிடமிருந்து இந்தியாவைக் காத்த அலாவுதீன் கில்ஜி

#மங்கோலியர்களிடமிருந்து_இந்தியாவைக்_காத்த
#அலாவுதீன்_கில்ஜி

‘பத்மாவத்’ என்ற படம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் அலாவுதீன் கில்ஜியை மிகப் பயங்கரமான வில்லனாகக் காட்டியிருப்பார்கள். அவரது முகத் தோற்றமும் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மிருகத்தனமாக இருக்கும்.

இப்படித்தான் முஸ்லிம் மன்னர்களை ‘மாஸ் மீடியா’ எனப்படும் சினிமா முதல் அனைத்து ஊடகங்களிலும் காட்டி, சாதாரண பொதுமக்களின் புத்தியில் அவர்களைப் பயங்கர வில்லன்களாகப் பதிய வைக்கிறார்கள்.

அலாவுதீன் கில்ஜி மதவெறியர், ஹிந்து மக்களை ஒடுக்கியவர், ஹிந்துக்கள் மீது ஜிஸ்யா வரி விதித்தவர் - இப்படி பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் உள்ளன. அவையெல்லாம் உண்மையா, இல்லையா என்பதைப் பின்னர் பார்ப்போம்.

ஒட்டுமொத்த உலகையும் தங்கள் காலுக்குக் கீழே போட்டு மிதித்திடக் கிளம்பினார்கள் மங்கோலியர்கள். அன்றைய காலக்கட்டத்தில் உலகிலேயே அதிகப் பலமுள்ள படையைக் கொண்டிருந்த மங்கோலியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தபொழுது அலாவுதீன் கில்ஜியும் அவர்தம் படையினரும் மிகத் தீரமாகப் போராடி மங்கோலியர்களைத் தோற்கடித்தனர்.

இப்படி ஒருமுறை இருமுறையல்ல, ஆறு முறை மங்கோலியர்களைத் தோற்கடித்தார் அலாவுதீன் கில்ஜி!

இரண்டு படைகள் போரில் மோதின, அதில் அலாவுதீன் கில்ஜியின் படை வென்றது என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அன்றைய காலக்கட்டத்தில் மங்கோலியப் படையை வெல்வது என்பது எண்ணிப்பார்த்திட இயலாத ஒன்று.

மங்கோலியர்கள் பாரசீகம், பக்தாத், ரஷ்யா, சீனா, ஈராக், சிரியா, ஐரோப்பா என்று பல பகுதிகளை வெற்றிகொண்டபொழுது என்னென்ன அழிச்சாட்டியம் புரிந்தார்கள் என்பது வரலாற்றில் நன்கு பதியப்பட்டிருக்கிறது.

அவர்கள் மற்ற படையினர் போன்று வெறுமனே மக்களைக் கொன்றுவிட்டு செல்பவர்களல்லர். மக்கள் அனைவரையும் கொல்வார்கள். அது எத்தனை இலட்சமாக இருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. நகரங்களின் உட்கட்டமைப்புகளைத் தகர்த்துவிடுவார்கள். அந்த மண்ணின் சொந்தக் கலாச்சாரத்தை அழித்துவிடுவார்கள். இலக்கியங்களைத் தடம் தெரியாமல் எரித்துவிடுவார்கள். மத வழிபாட்டுத்தலங்களைத் தரைமட்டமாக்கிவிடுவார்கள்.

முழங்கால் வரை பக்தாதில் இரத்த ஆறு ஓடியது. இலட்சக்கணக்காக நூல்களை டைக்ரிஸ் நதியில் கொட்டி அழித்தார்கள் மங்கோலியர்கள். டைக்ரிஸ் நதி நூல்களின் கறுப்பு மையும் மனிதர்களின் சிவப்பு இரத்தமும் கலந்து கறுஞ்சிவப்பாக ஓடியது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வரலாற்றாசிரியர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்றால் மங்கோலியர்கள் தாங்கள் ஆக்கிரமித்த நகரங்களை வெறும் குப்பைமேடுகளாக மாற்றிவிட்டுப் போய்விடுவார்கள். குறைந்தது அடுத்த 100 வருடங்களுக்கு அந்நகரங்களைத் தலைதூக்கவே முடியாத அளவுக்கு ஆக்கிவிடுவார்கள்.

இப்பேற்பட்ட கொடும் படையினரை எதிர்த்துத்தான் அலாவுதீன் கில்ஜி மிகத் தீரத்துடன் போராடினார். அவரது வீரமும் போர்த் தந்திரமும் படையினர் மேல் அவர் வைத்திருந்த கட்டுப்பாடும் மிக்க ஒழுங்கும் நேர்த்தியும் கொண்ட படையும் அவர் தேர்ந்தெடுத்து அனுப்பிய மிகச் சிறந்த படைத்தளபதிகளும்தான் வெற்றிக்கான காரணிகள்.

ஆக, அலாவுதீன் கில்ஜி வெறும் இந்தியாவை மட்டும் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றிடவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தின் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றினார். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், புத்தர்கள், ஜைனர்கள் என்று இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும்தான் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றினார்.

எப்படிக் காப்பாற்றினார் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இன் ஷா அல்லாஹ் வரும்…

#MSAH_வரலாற்றுத்_துளிகள்


1 comment:

Dr.Anburaj said...

அரேபிய மத வெறியில் பைத்தியம் பிடித்த சிறுத்தையை விட ஆபத்தானவன். இந்தியர்களை பெரும் கொடுமைக்கு ஆளாக்கினான். சு..ன இப்படி அண்ட புளுகை பதிவேற்றி முஸ்லிம்களை முட்டாள் ஆக்காதிர்கள்.