
சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த உறுப்பினர்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, பெப்சி தலைவர் சிவா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1000 மூட்டை அரிசியும், ஃபிலிம் சேம்பர் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும், ஏ.ஆர்.ரஹ்மான் 2000 மூட்டை அரிசியும், இளையராஜா 5000 போர்வைகளும், நடிகர் சங்கம் சார்பில் 4,500 லிட்டர் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.
இதில் இளையராஜா பேசியதாவது:
இங்கே கொடுப்பதும் வாங்குவதும் சினிமா கலைஞர்கள்தான். இங்கு விளம்பரம் கிடையாது.சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும்.
மனிதன் எங்கேயோ எதுவோ தவறு செய்திருக்கிறான். இறைவன் நினைத்திருந்தால் சுனாமி போன்ற பேரழிவைக் கொடுத்திருக்கலாம். ஆனால், ஐம்பூதங்களில் ஒன்றான நீர் மூலம் கஷ்டப்படுத்தி இருக்கிறான். ஆனால், இந்த மழைதான் மனிதநேயத்தை வளர்த்திருக்கிறது.
பெரிய பணக்காரர்கள் எல்லாம் பிரெட் வாங்க கஷ்டப்படும்போது, பக்கத்து வீட்டுக்காரர்களும் பசியோடு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கும் சேர்த்து பிரெட் வாங்கியிருக்கிறார்கள். பிறருக்கு கொடுத்து உதவும் எண்ணத்தை இந்த மழை வளர்த்திருக்கிறது.
இவ்வாறு இளையராஜா பேசினார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
16-12-2015
1 comment:
இவர் இப்படி பேசியிருப்பது சந்தா்ப்பத்திற்கு பொருத்தமானதாக இல்லை. திரு இளையராஜாவின் கருத்து ?????
Post a Comment