Followers

Monday, December 28, 2015

'ரொட்டி வங்கி' தொடங்கி சேவையாற்றி வரும் யூசுப் முகாட்டி!



மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கா பாத்தில் யூசுப் முகாட்டி என்பவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கி ஏழை களின் பசியை போக்கி வருகிறார். இந்த உன்னத சேவைக்கு அவருடைய மனைவி, சகோதரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் உதவி வருகின்றனர்.

இந்தியாவில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பசியை போக்க உத்தரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் என்ற பகுதியில் ஒருவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கினார். அதேபோல் இப்போது மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் யூசுப் முகாட்டி என்பவர் கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கி தொடங்கி உள்ளார். ‘ஹாரூண் முகாட்டி இஸ்லாமிக் சென்டர்’ என்ற அமைப்பையும் நிறுவி ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். தவிர துணிக்கடையும் சிறிதாக நடத்திவருகிறார். இந்த ரொட்டி வங்கி ஜின்சி - பைஜிபுரா சாலையில் இயங்கி வருகிறது.

அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற அவுரங்காபாத்தில், யூசுப்பின் சேவைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து 38 வயதாகும் யூசுப் கூறியதாவது:

ஏழைகள் குறிப்பாக முஸ்லிம்கள் பலர் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுவதை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். பல குடும்பங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவராக இருக்கிறார். அவர்களால் வயிறார உணவு உண்ண கூட வருவாய் கிடையாது. இது மிகவும் பரிதாபமான விஷயம்.

என் மனைவி கவுசர் மற்றும் திருமணமான 4 சகோதரிகள் சீமா ஷாலிமார், மும்தாஜ் மேமன், ஷாநாஸ் ஷபானி, ஹூமா பரியானி ஆகியோருடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் எல்லோரும் மனதார ஒப்புக் கொண்டு உதவ முன்வந்தனர். கடைசியில் நினைத்தபடி கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கியை திறந்து விட்டோம். முதலில் 250 பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

ரொட்டி வங்கியை திறந்த பிறகு, இந்த பக்கம் போவோர் வருவோர் எல்லாம் விசாரிக்க தொடங்கினர். மிக உன்னதமான சேவை என்று அவர்கள் பேசி சென்றனர். ரொட்டி வங்கியில் உறுப்பினராக சேர ஒரு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் தனி கோட் நம்பர் தருவோம். மேலும் கோட் நம்பருடன் தனி பை ஒன்றும் தருகிறோம்.

உறுப்பினர்கள் தினமும் குறைந்தபட்சம் புதிதாக செய்யப்பட்ட 2 ரொட்டிகள் மற்றும் சைவ, அசைவ உணவு குழம்புகளை வங்கியில் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுடைய வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதை கொடுத்தால் போதும். அவ்வளவுதான். இதை நாங்கள் சொன்ன பிறகு, 15 நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து விட்டது. மேலும் மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கி பெருகும் வாய்ப்பு உள்ளது.

காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை ரொட்டி வங்கி செயல்படும். பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இங்கு ரொட்டிகளையும், சைவ, அசைவ உணவுகளையும் வழங்கி விட்டு செல்கின்றனர். சில வேளைகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவு உணவு கிடைத்து விடுகிறது. சுமார் 500 பேருக்கு ரொட்டி வங்கி மூலம் தினமும் உணவு வழங்கி வருகிறோம்.

ரொட்டி வங்கி உணவு வழங்கும் உறுப்பினர்கள் மற்றும் உணவு பெற்று செல்லும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம் அல்லாதவர்கள். எங்கள் ரொட்டி வங்கி பற்றி கேள்விப்பட்ட திருமண ஏற்பாட்டாளர்களும், கூடுதலாக உள்ள உணவு வகைகளை அனுப்பி தொடங்கி உள்ளனர். இதுபோல் 6 இந்து திருமண ஏற்பாட்டாளர்கள், 12 முஸ்லிம் திருமண ஏற்பாட்டா ளர்கள் மிகச்சிறந்த சைவ, அசைவ உணவுகளை அனுப்பி வைத்தனர்.

உணவு அதிகமாக வருவதால் அவை கெட்டு போகாமல் இருக்க மிகப்பெரிய பிரீஸரில் வைத்து பயன்படுத்துகிறோம். இதேபோல் பெரிய ரெஸ்டாரன்டுகள், டிலக்ஸ் ஓட்டல்கள், கார்ப்பரேட், தொழிற் சாலை கேன்டீன்கள், பயணிகள் விமான கிச்சன், மெகா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மிச்சமாகும் உணவு பொருட்களை அனுப்பி வைத்தால் ஏழைகளுக்கு வழங்க முடியும். மேலும், உணவு பொருட்களும் வீணாகாது.

வங்கிக்கு வரும் உணவு தரமான தாக, புதிதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தே வாங்குகிறோம். ஏழை மக்கள், வயதானவர்கள், நோயுற்றவர்கள், வேலை இல்லாதவர்கள் போன்றோர் எந்த நேரத்திலும் வந்து அவர்களுக்கு தேவையான, விருப்பமான சைவ அல்லது அசைவ உணவுகளை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பட்டினி கிடக்கும் அவல நிலை ஏற்படாது. இவ்வாறு யூசப் கூறினார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-12-2015

இந்த சேவையை இஸ்லாமிய இயக்கங்கள் இந்தியா முழுக்க செயல்படுத்தினால் பல ஏழைகள் ஒரு வேளை உணவாவது வயிறார உண்ண வழி ஏற்படும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்கர் (ரலி) 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

''இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள். அறிவிப்பவர்:

அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1865)

No comments: