Followers

Sunday, December 06, 2015

அடாத மழையிலும் விடாது செயல்பட்ட டாஸ்மாக்:



தலைநகரில் பெய்த அதிகனமழையால் இன்றுவரை மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த அடாத மழையிலும் விடாது செயல்பட்ட டாஸ்மாக்கால் உதவிக்கரம் நீட்டிய தன்னார்வலர்கள் அடைந்த இன்னல்கள் சொல்லில் அடங்காதது.

ஆம், அவ்வாறு 'குடி' மகன்களால் தொந்தரவுக்குள்ளான பெண்கள் சிலர் தங்களது துயர அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். வைரலாக பரவி வரும் இந்த செய்தி டாஸ்மாக்க்குக்கு கடும் கண்டனைத்தை குவித்து வருகிறது.

வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்க மேற்கு மாம்பலம் பகுதிக்குச் சென்ற விஷேஷ் உன்னி கூறும்போது, "நிவாரணப் பொருட்களை வாங்க வந்தவர்களில் பலரும் போதையில் இருந்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது" என்றார்.

இதேபோல், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் கூறும்போது, "தி.நகர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதற்காக சென்றிருந்தோம். அப்போது ஒருவர் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்றார். நடந்து செல்லும் அளவிலேயே தண்ணீர் இருந்தது. ஆனாலும், குடிபோதையில் இருந்ததால் அவர் அவ்வாறு செய்தார். அச்சம்பவம் வேதனையளித்தது. பேரிடர் சூழலிலும் எப்படி போதையில் இருக்கிறார்கள் என்று வருந்தினோம்" என்றார்.

இவ்வாறாக சென்னை முழுவதுமே பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இடைவிடாமல் இயங்கிவந்ததாக நகர மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மின் விநியோகம் இல்லாத நிலையிலும்கூட மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடந்துள்ளது.

இது குறித்து சேஞ்ச் இந்தியா தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நாராயணன் கூறும்போது, "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குறைந்தது இரண்டு மாதங்களாவது டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். அவ்வாறாக டாஸ்மாக்கை மூடாமல் எவ்வளவு நிவாரணப் பொருட்கள் வழங்கினாலும் அவற்றால் எப்பயனும் இல்லை" என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-12-2015

No comments: