Followers

Thursday, June 30, 2016

சுவாதி கன்னத்தில் அறைந்தது கொலையாளியா?



சுவாதி கொலை நடந்த சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ரயிலுக்காகக் காத்திருந்த பயணி தமிழ்ச் செல்வன், கொலையாளியை நேரில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.இவர் சென்னை சூளைமேடு ஏரியாவை சேர்ந்தவர். தனியார் நிறுவன ஊழியர்.

அவர் மீடியாக்களிடம் கூறும்போது, ''வழக்கமாக நான் தினமும் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போய், அங்கிருந்து ரயிலைப் பிடித்து வேலைக்குச் செல்வேன். என்னைப் போலவே, இளம் வயதுப் பெண் ஒருவர் அதே நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். பத்து நாட்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில்அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பெண்ணுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணின் கன்னத்தில் அவர் மாறி மாறி அறைந்தார். அதற்கு அந்தப்பெண் ஏனோ, எதிர்ப்புக் காட்டவில்லை. கொலை நடந்த நாளன்று அதே வாலிபர், நான் நின்று கொண்டிருந்த நடை மேடையில் வேகமாக ஒடியதை பார்த்தேன். அவரை சிலர் விரட்டிக் கொண்டு ஒடினர். அந்த வாலிபர்தான் அன்று அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து கன்னத்தில் அறைந்த வாலிபர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. நானும் அந்த வாலிபரை விரட்ட முயற்சி செய்தேன். ஆனால், அதற்குள் அவன் ஓடிவிட்டான்.

பிளாட்பாரத்தில் கும்பல் கூடியிருந்த இடத்திற்கு ஒடிவந்து பார்த்தபோது, அங்கே அந்தப் பெண் கழுத்திலும், முகத்திலும் ரத்தம் வழிந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அந்தப்பெண்தான், அந்த வாலிபரிடம் ஏற்கனவே கன்னத்தில் அறை வாங்கிய அதே பெண் என்பதைப் புரிந்துகொண்டேன். பிறகு, பத்திரிகை செய்திகளில் அந்த பெண்ணின் பெயர் சுவாதி என்று அறிந்தேன். நான் வசிக்கும் சூளைமேடு ஏரியாவில்தான் குடியிருந்தவர் என்பதைக் கேள்விப்பட்ட போது, அதிர்ச்சியாக இருந்தது'' என்றார்.

சுவாதி கொலை சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு சாட்சியாகக் கருதப்படும் எண்பது வயது முதியவர், அதே இடத்தில் நெஞ்சுவலியில் இறந்து போய் விட்ட நிலையில், கொலைச் சம்பவத்தை நேரில் பார்க்கா விட்டாலும், அந்த சமயத்தில் அங்கிருந்த முக்கிய ஆதாரமாக சூளைமேடு தமிழ்ச்செல்வன், சாட்சியாகப் பேசத் தொடங்கியிருப்பது இந்த வழக்குக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/crime/65700-did-nungambakkam-murder-verdict-beat-swathi.art

No comments: