வேதங்களும் கீதையும் இறைவேதங்களாக இருக்க முடியுமா?
கேள்வி: இந்தியாவில் உள்ள இந்துமத வேதக் கிரந்தங்களை இறைவேதங்கள் என்று அங்கீகரிக்க முடியுமா?
மறுமொழி: வேதம் என்பதன் மொழிக் கருத்து விஞ்ஞானம், அறிவு என்பதாகும். ஆயினும், ஆன்மிக அறிவு என்பதே அதன் பிரதான கருத்தாகும். வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்றே நம்பப்படுகின்றது. மாறாக, அவை இறைவனால் உருவாக்கப்பட்டன என்று சில மத அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும், வேதங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவை என்பதற்கு எந்த அறிகுறியும் இந்த வேதங்களில் காணப்படவில்லை. இவ்வாறு எந்த இந்துவேதக் கிரந்தங்களும் கூறவுமில்லை.
வரலாற்றில் வாழ்ந்து சென்ற எல்லா மனித சமூகங்களுக்கும் இறைதூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்றும் அவர்கள் இறைதூதை அந்த மக்களிடத்தில் எடுத்துக் கூறினார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. எனவே, ஆரியர்களிடத்திலும் இறைதூதர்கள் அனுப்பப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் இறைதூதை அந்த மக்களிடத்தில் சமர்ப்பித்திருப்பார்கள். எனவே, இந்து வேதக் கிரந்தங்களில் உள்ளவை இறைதூதின் செய்திகளாக இருக்கக் கூடும் என்ற சாத்தியப்பாட்டை முற்றாக நிராகரிப்பதோ புறக்கணிப்பதோ நியாயமல்ல. அவற்றின் மூல ஊற்றுக்கள் இறைதூதர்களின் செய்திகளாக இருந்திருக்க முடியும்.
ஆயினும், இன்று கிடைக்கப்பெறும் ரிக், யஜுர், சாமம், அதர்வம் ஆகிய நான்கு இந்து வேதங்களை இறைவேதங்களாகக் கருத முடியாது. இவை மனிதர்களின் இடைச்செருகல்களுக்கு உட்பட்டு இவற்றின் மூல போதனைகள் திரிபடைந்து போயுள்ளன. இதனால் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்ற நிலையை அவை இழந்து விட்டன.
இந்து மதத்தைச் சேர்ந்த இந்து வேதங்களை விசுவாசிக்கின்ற இந்துமத அறிஞர்கள் இந்த விடயத்தை தமது நூற்களில் தெளிவாக்கியுள்ளனர். கலாநிதி ராதா கிருஷ்ணன் எழுதுகிறார்:
‘‘ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தபோது தமது பூர்வீக பூமியிலிருந்து தாம் மிகவும் பெறுமதிமிக் கவையாகக் கருதிய தெய்வீக கானங்களைத் தம்மோடு எடுத்து வந்தனர். தாம் வந்து சேர்ந்த புதிய தேசத்தின் அதிகமான மக்கள் பல்வேறு தெய்வங்களை வழிப்படுவதை அவர்கள் கண்டனர். எனவே, தமது மதக் கோட்பாடுகளைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற உணர்வினால் இவற்றைச் சேகரித்து வைத்தனர். இக்கருத்தே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதர்வ வேதத்திற்கு நீண்ட காலமாக வேதம் என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை. ரிக் வேதத்திற்கு அடுத்ததாகவே இதன் அந்தஸ்து இருக்கிறது. ரிக் வேதத்தைப் போலவே வெவ்வேறு தனியான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இது இருக்கிறது. இந்த வேதம், பின்னர் உள்ள காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் சிந்தனை மனோபாவத்தைப் பிரதிபலிக்கின்றது. புதிய தேசத்தின் புதிய கடவுள்களையும் தேவதைகளையும் உள்ளடக்கி அவற்றோடு சமரசம் செய்து தாம் அடக்கியாள முற்பட்டவர்களின் நம்பிக்கைகளையும் தம்மோடு சேர்த்துக் கொண்டனர்.’’
(பாரதிய தர்ஷணம்: மாத்ரூபூமி பப்ளிசிங் ஹவுஸ், கோழிக்கோடு, பக்கம்: 44-45)
கடவுள் பற்றிய கோட்பாடு வேதங்களில் பலமான மாற்றங்களுக்கு உட்பட்டது என்று கலாநிதி ராதா கிருஷ்ணன் கூறுகிறார்:
‘‘ரிக் வேதத்தில் 10,472 பாடல்களும் 1,017 சூக்தங்களும் 8 அஷ்டங்களும் 10 மண்டிலங்களும் உள்ளன. பத்தாம் மண்டிலம் பிற்காலத்தில் சேர்க்கப் பட்டதாகத் தெரிகிறது. வேதப் பாடல்கள் உருவானபோது அந்தக் காலப் பகுதியில் இருந்த சிந்தனையின் தாக்கம் அதில் பிரதிபலிப்பதைக் காண முடியும். ஆதியில் இருந்த பக்திபூர்வமான இயல்பு மாறி பிற்காலத்தில் ஏற்பட்ட நோய் கலந்த சிந்தனைகள் இவற்றில் ஊடுருவி விட்டன என்று தோன்றுகிறது. படைப்புக்களின் ஆரம்பம் பற்றிய விடயங்களில் இத்தன்மை தெளிவாகப் புலப்படுகிறது. இந்தத் தத்துவ விவாதங்களுடன் அதர்வ வேத காலத்தில் உள்வாங்கப் பட்ட மூட மந்திரங்களும் இதில் சேர்ந்துள்ளன. வேத கால ஆரியர்களின் ஊகங்களின் பாற்பட்டு புனையப் பட்ட பாடல்களில் பிற்காலத்தில் நுழைந்த மூட நம்பிக்கைகள் இந்த பத்தாவது மண்டிலத்தில் சேர்ந்திருப்பது தமது சமகால மக்களின் சமய நம்பிக்கைகளினால் ஆரியர்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதையே காட்டுகிறது.’’ (மேற்படி நூல் பக்கம்: 47)
இறைவேதமொன்றிற்குப் பொருத்தமில்லாத சாதி வேறுபாடு என்னும் கோட்பாடு ரிக் வேதத்தில்கூட நுழைந்து விட்டிருப்பதைக் காண முடியும்.
‘‘ப்ராஹ்மனோஷ்ய முஹமாஸீத்
பாஹு ராஜ்ன்யூ க்ரூதஹ்
ஊரு ததஸ்ய்ய யதைவஷ்யஹ்
பத்பியாம் ஸுரூத்ரோ அஜாயத’’ (ரிக் வேதம் 10:90:12)
பொருள்: கடவுளின் முகத்திலிருந்து பிராமணர்களும் அவனின் கரங்களிலிருந்து சத்திரியர்களும் முதுகிலிருந்து வைஷ்யர்களும் பாதங்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்தனர்.
ரிக் வேதத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிமுகத்தில் என்.வீ. கிருஷ்ணவாரியார் கூறுகிறார்:
‘‘வேதங்களின் பூரணமான பகுதிகள் இன்று கிடைக்கக் கூடியதாக இல்லை. கிடைக்கக்கூடியவற்றில் பல பிற்கால சேர்க்கைகளாக உள்ளன. மேலும் அபத்தமான கருத்துக்களும் சிக்கலான கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளன.’’
கலாநிதி எஸ். ராதா கிருஷ்ணன் தனது Indian Religions என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
‘‘வேதங்கள் தவறுக்குட்படாதவையாகவோ எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவோ இல்லை.’’ (பக்கம்: 22)
ஆச்சார்யர் நரேந்திர பூஷான் எழுதுகிறார்:
‘‘படிப்படியாக பல்வேறுபட்ட நூற்களும் கிளைகளும் உருவாகி பின்னர் அவை ஒன்றாகச் சுருங்கின. சில பிராமணர்களை வேதத்தில் உட்படுத்தின. பிராமணியம் வேத சூத்திரங்களுடன் ஒன்றாகக் கலந்தபோது வியாசர் பின்னர் அவற்றை மீள வரையறுக்க வேண்டி வந்தது. வியாசர் வேதத்தைப் பிரித்தெழுதியதாகக் கூறப்படுவது இக்காரணத்தினாலாகும். வேத சூத்திரங்களுடன் பிராமணியக் கொள்கைகள் கலந்திருப்பதனால் தூய வேத வசனங்களை அடையாளம் காண்பது கடினமான ஒன்றாக மாறிய ஒரு காலம் இருந்தது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்கின்றோம்.
(வேத இலக்கிய வரலாறு பக்கம்: 51-53)
ரிக் வேதம் பத்தாம் மண்டிலத்தின் பத்தாவது சூத்திரத்தில் வருகின்ற ஒரு சம்பவம் தெய்வீக வேதம் ஒன்றுக்கு முற்றிலும் பொருத்தமற்றதாகும். இந்த சூத்திரத்தில் ஒரு பெண் தனது சகோதரனைத் தன்னோடு தவறாக நடந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறாள். அவளின் மொழியும் ஆசை வார்த்தைகளும் ஒரு தெய்வீக நூலுக்கு முற்றிலும் ஒவ்வாதவையாக உள்ளன.
இதேபோல் சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்து ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் வந்துள்ளவை முற்றிலும் பிழையானவையாகவும் அதீத கற்பனைகளாகவும் உள்ளன. எனவேதான் பிரசித்திபெற்ற தலைசிறந்த இந்து மத அறிஞர்கள் பலர் இத்தகைய அபத்தமான விடயங்கள் வேதத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
சுவாமி நித்தியான சத்தன்யா யாதி எழுதுகிறார்:
‘‘குரூரமான படுகொலைகளை வேத மந்திரங்கள் அனுமதிப்பதுடன் அவை மிகவும் விரும்பப்படுபவை என்றும் குறிப்பிடுகின்றன. வேதத்தில் இவை கண்டு கொள்ளப்படாதவை என்று மூடி மறைக்க முடியாது. ஓர் இந்துமத அறிஞரைப் பொறுத்தவரை இத்தகைய அபத்தமான மந்திரங்களும் இந்துக்களின் புனித வேதத்தில் இருக்கின்றன எனச் சொல்வது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாகும். ஆயினும், சிலர் வரலாற்று உண்மைகளைப் புறக்கணித்து இந்து மந்திரங்கள் நியாயமானவை என்று வாதிக்கிறார்கள். உண்மையில் இவை வேதங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியவையாகும். இவர்களின் இச்செயல் மன்னிக்கப்பட முடியாதது.’’
(குருகுலம் மாசிகை, இந்திய மறுமலர்ச்சியின் வரையறைகள் பக்கம்: 212, மலையாளம்)
சுருங்கச் சொன்னால், இன்று வேதங்களை நம்புகின்ற இந்து பக்தர்கள்கூட இவ்வேத நூற்கள் முற்றிலும் தெய்வீகமானவை என்று வாதிக்கவில்லை. பல விடயங்கள் இவற்றோடு சேர்க்கப்பட்டுள்ளன. பல விடயங்கள் இவற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பல தலையீடுகளுக்கு வேதங்கள் உட்பட்டுள்ளன. இதில் வியப்படைய எதுவுமில்லை. ஏனெனில், இந்து வேதங்களின் வரலாறு யாருக்கும் தெரியாது! அவை எந்தக் காலங்களில் அறிமுகமாகின என்பதில் பலத்த கருத்து வேறுபாடு உண்டு. கி.மு. 6000, கி.மு. 4500, கி.மு. 3000, கி.மு. 1500 என்று பல்வேறு அபிப்பிராயங்கள் உண்டு. ஆயினும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னரே அவை நூலுருவாக்கப்பட்டன என்ற கருத்தில் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள். வேதங்கள் அருளப்பட்டதற்கும் அவை தொகுக்கப்பட்டதற்கும் இடையே உள்ள இந்த நீண்ட இடைவெளி காரணமாக அவற்றில் பல்வேறு புதிய விடயங்கள் சேர்வதற்கும் அவற்றின் கருத்துக்கள் மாற்றமடைவதற்கும் இடமுண்டாகியது.
கலாநிதி ராதா கிருஷ்ணன் எழுதுகிறார்:
‘‘ஆசிரியர்கள் தம்மோடு எடுத்து வந்த நம்பிக்கைகளும் கிரியைகளும் இந்திய மண்ணில் வளர்ந்து நிலை நின்றன. இந்தப் பாடல்கள் உருவாகி நூலுருப் பெறுவதற்கு ஒரு நீண்ட காலம் எடுத்திருக்க வேண்டும்.’’
(இந்தியத் தத்துவம் பாகம்: 1 பக்கம்: 66)
வேதம் அருளப்பட்ட பண்டைய மொழி இன்று வழக்கில் இல்லை. வேதகால மொழியிலிருந்து இன்றைய சமஸ்கிருதம் வேறுபட்டதாகும். இந்த விடயத்தைப் பல்வேறு அறிஞர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆசாரியர் நரேந்திர பூஷானும் இதில் உடன்படுகிறார்.
உலகில் வேறு எந்தக் கலப்புக்களில் இருந்தும் முற்றிலும் தூய்மையான ஒரு நூல் இருக்குமென்றால் அது புனித அல்குர்ஆன் ஒன்று மாத்திரமே ஆகும். மனிதத் தலையீட்டிலிருந்து அது முற்றிலும் பாதுகாக்கப்பட்டது. அருளப்பட்ட காலம் முதல் இன்றுவரை அதன் வரலாறு தெட்டத் தெளிவானதாகும். இந்தக் காரணத்தால் இன்று கிடைக்கக் கூடிய ஒரே ஒரு தெய்வீக நூல் அல்குர்ஆன் மாத்திரமே ஆகும். அது முன்னைய எல்லா தெய்வீக நூற்களையும் உண்மைப்படுத்துகிறது.
கேள்வி: பகவத் கீதையும் தெய்வீக நூலாக இல்லை என்பதுதான் தங்களது அபிப்பிராயமா?
பதில்: இன்றுள்ள இந்து வேதங்கள் மனிதத் தலையீட்டுக்கு உட்பட்டுள்ளன என்ற விடயத்தை கலாநிதி ராதா கிருஷ்ணன், என்.வீ. கிருஷ்ணவாரியார், நரேந்திர பூஷான், சத்தியரக்த படேல் போன்ற இந்து மத அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மகாபாரதத்தில் குருஷேத்திர மைதானத்தில் கௌரவர்களுடன் யுத்தம் செய்ய வரும் பாண்டவ வீரன் அர்ஜுணனுக்கு யுத்த களத்தில் தனது சகோதரர்களான உறவினர்களைக் கொல்ல வேண்டி வருகிறதே என்று கடும் துக்கம் தோன்றுகிறது. அப்போது அர்ஜுணனின் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்கு உபதேசித்தவையே கீதை என்றும் நம்பப்படுகிறது. கீதை உட்படவுள்ள மகாபாரத காவியத்தை உருவாக்கியவர் வியாச முனிவர் ஆவார். ஸ்ரீ கிருஷ்ணன் கடவுளின் அவதாரம் என்றும் அதனால் கீதை, பகவத் கீதை என்றும் கூறப்படுகிறது. எனினும், கடவுள் ஒருபோதும் மனித உருவில் அவதாரம் எடுப்பதில்லை என்ற விடயத்தை தலைசிறந்த இந்து மத அறிஞர்களும் மறுசீரமைப்பாளர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.
ஸ்ரீ வாக்படா நந்த குரு, கடவுள் அவதாரம் எடுப்பதில்லை என்ற விடயத்தை ஆணித்தரமாகத் தெளிவு படுத்தியிருக்கிறார்.
(வாக்படா நந்தனின் பூரண விளக்கவுரை, பக்கம் 357-359, 751-752 மாத்ருபூமி பிரசுராலயம், கோழிக்கோடு)
கடவுள் அவதாரம் எடுப்பதில்லை என்பதை கீதை கூட எடுத்துக் கூறுகிறது.
‘‘அவஜானந்தி மாம் மூடா
மானுஷம் தனு மா சரிதம்
பரம் பாவமஜானந்தோ
மம பூத்த மகேஷ்வரம்
மோகாஷா மோக கர்மான்னோ
மோகஞானா விசேத்தஸஹ்
ராக்ஸி மாஸுரிசைவ
ப்ரக்ரூதீம் மோகினீம் சிரிதாஹ்’’
பொருள்: என்னுடைய மகத்துவத்தையும் எல்லாவற்றினதும் எஜமானத்துவத்தையும் அறியாத மூடர்கள், மனித உருவில் நான் வருவதாகக் கூறி என்னை இழிவுபடுத்துகிறார்கள். ராட்சகர்களினதும் அசுரர்களினதும் தன்மைகளைப் பெற்ற இவர்கள் தங்களது செயல்களையும் அறிவுகளையும் பயனற்றதாக ஆக்கிக் கொள்கின்றனர். (பகவத் கீதை 9: 1112)
ஸ்ரீ கிருஷ்ணனை கடவுள் என நம்புவது முற்றிலும் பிழையானதாகும் என்று இச்சூத்திரம் எடுத்துக் கூறுகிறது. கடவுள் மனித உருவில் அவதாரம் எடுப்பதில்லை என்பது இங்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணன் சிலவேளை ஓர் இறைத் தூதராக இருந்திருக்க முடியும். ஆயினும் அவர் ஓர் இறைத்தூதர் என்பதற்குரிய தெளிவான சான்றுகள் இதுவரை கிடைக்க வில்லை. கீதையின் தெளிவான, உறுதியான வரலாறு கிடைக்கக் கூடியதாக இல்லை. அது மகாபாரத யுத்த சமயத்தில் எழுதப்பட்டது என்றும் அதற்கு முன்னர் என்றும் பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. கி.மு. 5 முதல் கி.பி 4 வரையான காலத்தைப் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. கலாநிதி ராதா கிருஷ்ணன் இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்:
‘‘பகவத் கீதையை மகாபாரதத்துடன் அதன் ஒரு பகுதியாக இணைக்கும்போது எந்தக் காலத்தில் அது உருவாகியது என்பதைக் குறித்து எம்மால் உறுதியாகக் கூற முடியாதுள்ளது. பல்வேறுபட்ட காலப்பகுதியின் உருவாக்கங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.’’
(இந்தியத் தத்துவம் பாகம்: 1 பக்கம்: 524)
தொடர்ந்து எழுதுகிறார்:
‘‘கீதையின் ஆசிரியர் அக்காலத்தில் நிலவிய பல்வேறு சிந்தனைகளை சேகரித்துத் தொகுத்திருப்பது தெரிகிறது. இதனை ஒரு தெய்வீக நூலாக அவர் கருதவில்லை. இது தத்துவத்தின் மூலம் மதத்தின் பாடங்களையும் ஒழுக்கத்தின் பாடங்களையும் உள்ளடக்கியுள் ளது. எனவே, இது ஒரு தெய்வீக நூலன்று. ஆயினும், அது பழக்கவழக்கங்களின் தொகுப்பாக உள்ளது.’’ (மேற்படி நூல்: 519)
சுருக்கமாகச் சொன்னால், கீதை தெய்வீகத் தூதின் பல சிந்தனைகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கக் கூடும். எனினும், அது ஒரு தெய்வீக நூலல்ல. கீதை தன்னை ஒரு தெய்வீக நூலாக எங்கும் குறிப்பிடவுமில்லை.
மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத் காரகுன்னு
தமிழில்: ஜே. இஸ்ஹாக்