Followers

Friday, October 04, 2019

சகோதரர் ஷர்புதீனின் தாயார் (04-10-2019) வெள்ளி அன்று மரணித்து விட்டார்கள்!

தஞ்சை மாவட்டம் ராஜகிரி கிராமத்தைச் சேர்ந்த (ரியாத்தில் பணி புரிந்து வரும்) சகோதரர் ஷர்புதீனின் தாயார் (04-10-2019) வெள்ளி அன்று மரணித்து விட்டார்கள்!
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் நாம்.
நேற்று அஸர்(மாலை நேர) தொழுகை தொழுது விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஷர்புதீன் கம்பெனியைச் சேர்ந்தவரும் எனது ரூம் பார்ட்டருமான சகோ அலி மூலமாக இந்த இறப்பு செய்தி எங்களை வந்தடைந்தது. சகோ ராஜா ரூமிலிருந்து நானும் சகோ ராஜாவும், சகோ மஸ்தானும் ஷர்புதீனை சந்திக்க அவரது ரூம் நோக்கி புறப்பட்டோம். அவரது ரூமிலிருந்து போன் பண்ணினால் 'தான் பத்ஹாவில் இருக்கிறேன்' என்று சொன்னார். அங்கிருந்து பத்ஹா நோக்கி பயணமானோம். அவரை சந்தித்து இறப்பு சம்பந்தமாக விசாரித்தோம். "இறப்புக்கு ஊருக்கு அவசியம் போக வேண்டும். ஆனால் பாஸ்போர்ட் தம்மாமில் இருப்பதாக" சொன்னார்.
வெள்ளிக் கிழமை விடுமுறை நாள். இருந்தாலும் அவரது கம்பெனி மேனேஜர் ரீ என்டரி அடிக்க சொன்னார். அதன்படி சகோ மஸ்தான் அக்கவுண்டில் ரீஎண்ட்ரி அடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் நான் ஐடிஎல் ஏஜென்சியிடம் நிலைமையை விளக்கி விமான டிக்கெட் உடனடியாக புக் பண்ண அமர்ந்தேன். 10 நிமிட தேடலுக்குப் பிறகு ஓமான் ஏர்வேஸ் தம்மாமிலிருந்து இருப்பதாக சொன்னார். அதையே புக் செய்து விட்டு ஷர்புதீனை ரெடியாக சொன்னோம். தம்மாம் ஏர்போர்ட்டுக்கு இரண்டு மணிக்கு பாஸ்போர்ட் கொண்டு வர ஷர்புதீன் அவரது கம்பெனி நண்பரிடம் போன் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டார்.
அடுத்து ரியாத்திலிருந்து தம்மாம் 4 மணி நேரத்தில் செல்ல வேண்டும். பலரிடம் தொடர்பு கொண்டு கடைசியாக சகோ ராஜா மூலமாக ஒரு கார் ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லாம் முடித்துக் கொண்டு இரவு 10 மணிக்கு ரியாத்திலிருந்து ஷர்புதீன் புறப்பட்டார். தம்மாம் சரியான நேரத்துக்கு சென்று இமிக்ரேஷனும் முடிந்து விமானத்துக்காக காத்திருப்பதாக எனக்கு வாட்ஸ்அப் செய்திருந்தார். ஒரு வழியாக நேரத்துக்கு அவரை அனுப்பிய திருப்தியில் வீட்டுக்கு திரும்பினோம்.
வெளி நாட்டு வாழ்க்கை என்பது இதுதான். பெற்ற தாய் இறக்கும் போது கூட அருகில் இருக்க பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. கடைசியாக அவரது முகத்தையாவது பிள்ளை பார்க்கட்டும். அன்னாரின் பாவங்களை மன்னித்து இறைவன் அவரது மறுமை வாழ்வை இன்பகரமாக ஆக்கி வைப்பானாக!
----------------------------------------------
“இறைவா! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம் மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன். முஸ்லிமாக உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுவாயாக!” (ஸூரா யூஸுப்: 101)


No comments: