Followers

Sunday, May 17, 2020

"பொருளாதார நிபுணர்" உமா மகேஸ்வரன் கூறுகிறார்...

"பொருளாதார நிபுணர்"
உமா மகேஸ்வரன் கூறுகிறார்...
மே 17 -க்கு பிறகும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது...
ஏனெனில் இனி இயல்பு நிலை என்று நாம் வைத்திருந்த அளவுகோல்கள் மொத்தமாக மாறும்.
கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி அழுத்தி நம்மை தரையோடு சாய்க்க காத்திருக்கிறது.
இதுவரை உங்களுக்கு ஆதரவாக, சம்பளம் கொடுத்து வருவதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி பணி நீக்கம் எனும் அத்தியாயங்களை தொடங்குவார்கள்.
ஆட்குறைப்பு (Downsizing) விளையாட்டில் காவு வாங்கப்படவிருக்கும் உயிர்களின் எண்ணிக்கையை ஊகிக்கவே முடியவில்லை.
இதில் பெருத்த அடி வாங்கப் போவது IT நிறுவனங்கள், எரிசக்தி பெட்ரோலிய நிறுவனங்கள், சுற்றுலா துறையும் அதை சார்ந்த பல துறைகள் (ஹோட்டல்கள்) போன்றவை. மறுசுழற்சி துறைகள் நொண்டுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
கடைசியாக, இந்த மொத்த களேபரத்தின் முதல் பலி 30 - 45 வயதுடைய மிடில் கிளாஸ் காமன் மேன் தான். கையில் காசு, வாயில் தோசை, சேமிப்பு என்பது கானல் நீர். வேலை பாதுகாப்பு என்பது இனி பகல் கனவு. எந்நேரமும் முடிக்கப்படலாம் என திவாலாக காத்திருக்கும் நிறுவனங்கள். இப்படி நடு தட்டு ஏழைகள் (middle class paupers) உருவாகுவார்கள்.
இதர நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கொரோனா தான் மிகப்பெரிய பேரிடர்.
2008 - 09 காலக் கட்டத்தை கடந்தப் பின்னர் அவர்களது பொருளாதாரம் சீரானது. இங்கே நாம் சூ அடி வாங்கும் நிலையில் தான் உள்ளோம். இங்கே நிலைமை இது தான்.
கொரோனாவுக்கு முன்பாகவே, நமது பொருளாதாரத்தை சூறையாடிய, "மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பேரழிவு" (Man made crisis) என்றால் அது பண மதிப்பிழப்பு நடவடிக்கை (demonization) மட்டுமே.
பண மதிப்பிழப்பு... தொழில் துறையில் சிறு குறு தொழில்கள், குடிசை தொழில்கள், தொடக்க நிறுவனங்கள், சுய தொழில்கள், மைக்ரோ வணிகம் ஆகியவற்றை (small players, startups, cottage Industries, self reliant micro business) கொத்தாக கபளீகரம் செய்து முடித்தது.
குத்துயிரும் கொலை உயிருமாக இயங்கிய மீதி தொழில்களை GST சோலி முடித்துவிட்டது. இப்பொழுது இருப்பதாக காட்டப்படும் பொருளாதாரம் (economy) ஒரு திரிசங்கு சொர்க்கம் (quasi steady state) என்றால் அது மிகையே இல்லை...
பிரதமர் சொன்ன "Trillion dollar economy" என்றால் என்ன ? அது சாத்தியமா? என்று மெத்தப் படித்த பொருளாதார நிபுணர்களிடம் (social economist) கேட்டுப் பாருங்கள். சிரித்தே செத்து விடுவார்கள்...்
இப்படி இந்தியா என்ற கட்டமைப்பையே மொத்தமாக காலி செய்ய, வைரசை விட ஒன்று காத்திருகிறது. அது தான் சீர்கெட்ட பொருளாதாரம்.
1920 களில் ஹெர்பட் ஹூவரின் அமெரிக்கா வாங்கிய பொருளாதார அடியை விட, இந்திய பொருளாதாரம் வாங்கப் போகும் அடி ராஜ நொண்டலாக இருக்கும்.
இதையும் முதலில் கண்டு கொண்டவர்கள் சங்கிகள் தான். சொன்னால் நம்ம மாட்டீர்கள். ஆனால் அவர்களது திட்டமிட்ட செயல்பாடுகள் (modus operandi) அப்படித் தான் இருக்கிறது. இதுவரை அதிக கடன் வாங்கி நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எதேச்சையாக வெளியேறவில்லை. பக்காவாக திட்டமிட்ட செயல் அது.
இங்கே இருப்பதை வாரி சுருட்டிக் கொண்டு திடமான பொருளாதாரம் கொண்ட ஊரில் அடைக்கலமாகுதல். எளிமையாக சொல்வதென்றால் பிரிட்டிஷ் காரர்கள் இங்குள்ள வளங்கள் எல்லாவற்றையும் அங்கே எடுத்து சென்று தங்களை வளமாக்கிக் கொண்டார்களே அந்த மாதிரி.
வங்கிகளில் கடன் வாங்கி வெளிநாடுகளில் இவர்கள் முதலீடு செய்வார்கள், அவர்கள் பெற்ற கடனை மட்டும் வாராக் கடனாக்கி தள்ளுபடி செய்து விட்டு என் போன்ற உங்களைப் போன்ற குப்பன் சுப்பனிடம் அய்யா! கொரோனா மருத்துவம் பார்க்க பிச்ச போடுங்கைய்யா என்று நம்மிடம் பிச்சை கேட்கிறார்கள். அவர்களுக்கு பிச்சையிட நம்மை பிச்சையெடுக்கவும் விட்டிருக்கிறார்கள்.
அடுத்த பஞ்சாயத்து 20 - 30 வயதுடையோர். அவர்கள் படிப்புக்கேற்ற வேலையில் (professional job) சேர இயலாத சூழல். படித்த இளைஞர்கள் "ஊபர் - ஓலா, சுவிக்கி - சொமாட்டோ டெலிவரி பாய் தலைமுறை" ஒன்று (DSLR/ Ola driver/ Swiggy delivery boy generation) உருவாகியிருப்பதை நாம் கண் கூடாகவே காண முடிகிற உண்மை நிலை.
10 வருடம் முன்பு நான் UPSC aspirant என்று சொன்ன கூட்டத்தில் கணிசமான அளவில் இன்று நான் ஒரு Swiggy டெலிவரி செய்யும் இஞ்சினியர் என்று சொல்லத்தக்க ஒரு கூட்டமாக ஆகியிருக்கிறது.
இவர்களால் கொரோனாவுக்கு பின்னர் ஏற்படப்போகும் அந்த இடைவெளியை நிரப்ப முடியாது. தாங்க மாட்டார்கள்.
அந்த 30 - 45 வயதினர் வீட்டுக்கு அனுப்பப்படும் போது அவர்களுக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ள திறமையான தொழிலாளர்கள் (skilled workforce) இங்கே இல்லை. மேலும் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் ஆட்களுக்கு இங்கே வந்தாலும் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. மேலும் இத்தனை காலம் அன்னிய செலாவணி அள்ளி கொடுத்த அவர்கள் இனிமேல் நமக்கு பாரம் தான்.
இந்த சூழலைத் தான் கடந்த 6 வருட ஆட்சி நமக்கு கொடுத்திருக்கிறது. "அச்சே தின்" (Ache dhin) என்பது எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டம் இது.
மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி ஓடும் எலிகளை போல (Rats fleeing the sinking ship) என்பதுபோல், இவர்கள் மூழ்கடித்த இந்திய பொருளாதாரத்தை நரி பேர்லே எழுது, ஓட்டேரி நரி பேர்லே எழுது என்பதுபோல் கொரோனா மேல் எழுதி விட்டு பதமாக நகர்வார்கள். நகர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
கொரோனாவுக்குப் பின் பீடு நடை போடப்போகும் தொழில் என்று எதையுமே சொல்ல முடியாது. ஆகவே சங்கிகள் இன்னும் அதிகமாக தேசபக்தி பாடல்கள் பாடுவார்கள்.
விளக்கேற்றுவார்கள், பாத்திரம் தட்டுவார்கள், பெரிய ராமர் கோயில், வானுயர அனுமார் சிலை, ஜடாயு, ஜாம்பவான் கோயில் கட்டுவார்கள். ஆனால் மறந்தும் பொருளாதார மீட்சி குறித்து பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது தெரியாது.
அச்சே தின், பொச்சே தின் என்று கதைவிடலாம். ஆனால் அதை கொண்டு வருவது என்பது குதிரைக் கொம்பு என்று அவர்களுக்குத் தெரியும்.
எரியும் வீட்டில் ஒரு டம்பளர் கொண்டு உங்களை தீயணைக்க சொல்லி விட்டு, அவர்கள் அடுத்த வீட்டுக்கு தங்கள் பெட்டிப் படுக்கையை தயார் செய்வார்கள்.
இரண்டாம் உலகப்போர் காலக்கட்டதில் ஹிட்லர் ரஷியாவை ஆக்கிரமிப்பு செய்தபோது, பின்வாங்கி வெளியேறிய ரஷ்யப்படை ஒரு காரியம் செய்தது. அவர்கள் வெளியேறும் நகரங்களின் வயல்வெளிகள், வணிக நிலையங்கள், வருவாய் தரும் எல்லாவற்றையும் கொளுத்தி விட்டு கிளம்பினார்கள்.
ஹிட்லரின் படைகளுக்கு காய்ந்து கருவாடாகிப் போன சுடுகாட்டு ஊர்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அதிலிருந்து அவர்களுக்கு எதுவும் கிடைக்காமல் உணவுக்கு வழியின்றி வாடி வதங்கி ஹிட்லரின் போர் படையினர் மடிந்தார்கள்.
அதே போன்றே இந்தியாவை சூறையாடி விட்டு நமக்கு சுடுகாட்டை மட்டும் விட்டு விட்டு கிளம்புவார்கள் சங்கிகள். நமக்கு ஒரு பெரிய சைஸ் திருவோடும், தம்தூண்டு உடைந்த அகல் விளக்கும் மட்டுமே கிடைக்கும்.
அதை வைத்து கம் எகானமி கம், கம் எகானமி, கம் பாசிடிவ் எகானமியே வா வா வா, ஜெய் எகானமி என்று ஒரு 110 வருடம் கத்தினால் போதும். நமக்கு எகானமி கிடைத்துவிடும்.
நாம் வல்லரசாகி விடுவோம்!.
கொடூரமான காலம் காத்திருக்கிறது. மிக மிக அண்மையில்...

1 comment:

Dr.Anburaj said...


வடி கட்டிய பொய்.பாரதிய அரசின் மீது மத காழ்புணா்ச்சி காரணமாக பொய்யாக புனையப்பட்ட கட்டுரை.
வடி கட்டிய பொய்.பாரதிய அரசின் மீது மத காழ்புணா்ச்சி காரணமாக பொய்யாக புனையப்பட்ட கட்டுரை.