Followers

Friday, March 04, 2016

விடுதலைக்குப் பின்னர் கன்ஹயா குமார் ஆற்றிய எழுச்சி உரை!





இன்றைய தேதியில் அனைவரையும் கவர்ந்த உரையாக அமைந்து விட்டது டில்லி நேரு பல்கலைக்கழக மாணவர் கன்ஹையா விடுதலைக்குப் பின்னர் ஆற்றிய உரை.அரசியல் ரீதியாக தன்னை ஒருவர் எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும். என்பதை இந்த உரை நமக்கு உணர்த்துகிறது. மாணவர் கன்ஹையாவின் உரையை முழுமையாக தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம்!

தோழர்களே,

எல்லாவற்றுக்கும் முதலாக,

ஜேஎன்யு-வின் மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிலாளர்கள், கடைக்காரர், கடையில் வேலைபார்க்கும் தொழிலாளி, வாயிற் காவலாளி என ஜேஎன்யு-வின் அனைத்து அங்கத்தினருக்கும் எனது புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஜேஎன்யு-வோட போராட்டத்தில் துணை நின்ற உலகளவிலான பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், மற்றும் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஊடகம், சிவில் சமூகம், அரசியல், அரசியலற்ற என ஜேஎன்யு-வை காப்பதற்கான போராட்டத்திலும், ரோஹித் வெமுலாவுக்கு நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்தில் துணை நிற்பவர்களுக்கும் எனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் அமர்ந்துகொண்டு நாட்டுக்கு எது சரி, எது தவறு என்று பாடமெடுக்கும் மகான்களுக்கும், அவர்களது காவல்துறைக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

ஜேஎன்யு அவமானப்படுத்துவதற்காகவேனும், பிரைம் டைமில் இடம் கொடுத்தார்கள். அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

யார் மீதும் எங்களுக்கு வெறுப்பில்லை. குறிப்பாக, ஏபிவிபி-யை சொல்லவேண்டுமென்றால், கிஞ்சித்தும் வெறுப்பில்லை. ஏன் தெரியுமா? நம் வளாகத்தின் ஏபிவிபி வெளியே இருக்கும் ஏபிவிபி-யைவிட முற்போக்கானது. மேலும், யாரெல்லாம் தங்களை அரசியல் பண்டிதர்களாக கருதிக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் கடந்த ஜேஎன்யு-வின் மாணவர் சங்கத் தலைவருக்கான தேர்தல் விவாதத்தின்போது, ஏபிவிபி தலைவருக்கு நேர்ந்ததை காணொளியில் பார்த்துவிடுங்கள். ஏபிவிபி-யில் இருப்பதிலேயே கூடுதல் அறிவாளியான, ஜேஎன்யு-வின் ஏபிவிபி-யை தண்ணீர் குடிக்கவைத்தோம் எனும்போது, நாட்டின் பிற பகுதிகளில் ஏபிவிபி-யின் நிலையை சிந்தித்துப் பாருங்கள். ஆகையால், ஏபிவிபி-க்கு எதிராக எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லை. ஏனென்றால், நாங்கள் உண்மையிலேயே ஜனநாயக சக்திகள். நாங்கள் அரசியல் சாசனத்தின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆகையால், ஏபிவிபி-யை எதிரியாக அல்ல. மாறாக, எதிர்க்கட்சியாக மட்டுமே பார்க்கிறோம். நாங்கள் உங்களை துர்தேவதைகளைப்போல நடத்தமாட்டோம். ஏனென்றால், வேட்டையும் கூட வேட்டைக்கு தகுதியானதையே செய்யப்படும். நடந்தவை எல்லாமே, காணாததைக் கண்டு திக்கித்துச் சொல்வதாக நினைக்கவேண்டாம். உண்மையாகச் சொல்கிறேன், உண்மையை உண்மை என்றும், பொய்யை பொய் என்றும் சொல்ல துணிச்சலாக நின்ற ஜேஎன்யு-வை வணங்க விரும்புகிறேன்.

வேடிக்கையான விசயம் என்னவென்றால், இது உடனடி நிகழ்வாகும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அவர்களுடைய செயல்கள் எல்லாம் திட்டமிட்டதாக இருக்க, நம்முடையவை எல்லாமே அனிச்சையாக நிகழ்ந்தன. இந்த தேசத்தின் அரசியல்சாசனத்தின்மீதும், சட்டத்தின்மீதும், நீதி வழங்கல் முறையின்மீதும் கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. மாற்றம்தான் உண்மையானது. நாங்கள் மாற்றத்தின் பக்கம் நிற்கிறோம். எங்களுக்கு இந்த சாசனத்தின்மீது முழு நம்பிக்கை இருக்கிறது. சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல சோசலிசம், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய சாசனத்தினுடைய லட்சியங்களின் பக்கம் நிற்கிறோம்.

நான் இங்கே உரையாற்ற வரவில்லை, என் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். முன்னர் அதிகம் படிப்பேன்.

ஜேஎன்யு-வில் நிறைய ஆய்வு செய்கிறார்கள். முதற்கட்ட நேரடித் தகவல்களைத்தான் நானும் கூற இருக்கிறேன். நீதிமன்றத் தீர்ப்பின்மீது எனக்கு இப்போதைக்குச் சொல்ல ஒன்றுமில்லை. அரசியல் சாசனத்தின்மீது யாரெல்லாம் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ, அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை யாரெல்லாம் மெய்ப்பிக்க விரும்புகிறார்களோ, அவர்கள் அனைவரும் நான் சொல்லவிரும்புவதை ஜாடைகளிலேயே புரிந்து கொள்வார்கள். நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் பேச இல்லை.

பிரதமர் அவர்கள் ட்வீட் செய்திருக்கிறார். ‘சத்யமேவ ஜெயதே’ என்று ட்வீட் செய்திருக்கிறார். உங்களோடு ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், சத்யமேவ ஜெயதே என்பது உங்களுடையது அல்ல. இந்த நாட்டினுடையது, சாசனத்தினுடையது, நானும் கூறுகிறேன் சத்யமேவ ஜெயதே. வாய்மையே வெல்லும். வாய்மையே வெல்லும். இந்தப் போரில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொண்டு எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அந்த ஒரு விசயம் என்னவென்றால், சில மாணவர்கள்மீது அரசியல் கருவிபோல தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், எங்களைப் போன்றவர்கள் கிராமங்களிலிருந்து வருகிறோம். என்னுடைய குடும்பத்தைப் பற்றி இப்போது நீங்களும் அறிந்திருப்பீர்கள். எங்கள் ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் அங்கே கண்கட்டி வித்தைகள் காண்பிப்பார்கள். மந்திர வித்தை காண்பித்து மோதிரம் விற்பார்கள். மனதுக்கு விருப்பமான மோதிரம். யாருக்கு என்ன விருப்பமோ, அதைப் பூர்த்திசெய்யும் வல்லமை பெற்றது அந்த மோதிரம் என்று, அந்த மந்திரவாதி சொல்வான்.

இந்த தேசத்திலும், சில கண்கட்டி வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கறுப்புப் பணம் வந்துவிடும் என்றார்கள். ஹர் ஹர் மோதி. விலைவாசி கடுமையாக ஏறிவிட்டது, இனியும் சகித்துக்கொண்டிராதீர்கள். எல்லோருடன் சேர்ந்து, எல்லோருடைய முன்னேற்றம். இந்த அனைத்து மந்திரங்களும் மக்களின் மனங்களில் இன்றும் இருக்கிறது. இந்தியர்கள் விரைவாக மறந்துவிடக் கூடியவர்கள் என்றாலும், அபாரமான கோமாளித்தனங்களால் அந்த மந்திரங்கள் மறக்க முடியாததாகியிருக்கிறது. நமது முயற்சி என்னவென்றால், அந்த மந்திரங்களை மறக்கச் செய்ய வேண்டும். எப்படி மறக்கச் செய்வது? இந்த நாட்டின் ஆய்வு மாணவர்களின் உதவித் தொகையை ரத்து செய்துவிடுங்கள். மாணவர்கள் என்ன செய்வார்கள்? உதவித் தொகையை வழங்கிடுங்கள், வழங்கிடுங்கள் என்று கோரிக்கை எழும். சரி, ஏற்கனவே தந்துகொண்டிருந்த 5000, 8000 ரூபாயை தருகிறோம், அதுவே தொடரும் என்று கூறிவிடுவார்கள். அதாவது, உதவித் தொகையை அதிகரித்துத் தாருங்கள் என்ற கோரிக்கை காணாமல் போய்விடும். யார் கூறுவார்கள்? ஜேஎன்யு. உங்கள்மேல் வசவுகள் பொழியப்படும்போது, கவலை கொள்ளாதீர்கள்!. எதை ஈட்டினீர்களோ, அதையே நீங்கள் உண்கிறீர்கள்?

இந்த நாட்டில் தேசவிரோதி அரசு அமைந்திருக்கிறது. அந்த மக்கள் விரோதி அரசுக்கு எதிராகப் பேசுவீர்கள் என்றால், அவர்களுடைய சைபர் செல் என்ன செய்யும்? போலி வீடியோக்களை வெளியிடும், அவர்கள் உங்களுக்கு வசவுகளை அனுப்பிவைப்பார்கள். உங்கள் குப்பைத் தொட்டியில் எத்தனை காண்டம் இருந்தது என்பதையும் கணக்கெடுப்பார்கள். இது, மிகவும் கடினமான சூழல். அதனாலேயே, இந்தச் சூழலில் நாமும் தீவிரமாகச் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஜேஎன்யு மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகும். நீங்கள் நடத்திய Occupy UGC என்று நடத்திய போராட்டத்தைக் காலிசெய்துவிடத் திட்டமிட்டார்கள். எதற்காக இந்தத் தாக்குதல் என்றால், நீங்கள் ரோஹித் வெமுலாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், அவனுக்குக் கிடைக்கவேண்டிய நீதிக்காகவும் போராடினீர்கள். அதை, அவர்கள் முறியடிக்க விரும்பினார்கள். ஜேஎன்யு-வைப் பற்றிய விவாதங்களுக்கு மதிப்புக்குரிய முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஏன், பிரைம் டைமில் நேரம் ஒதுக்குகிறார் என்றால், நீங்கள் இந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.15 லட்சம் வந்துசேரும் என்று இன்றைய பிரதமர் வாக்குறுதி கொடுத்திருந்தார் என்பதை மறக்கடிக்க வேண்டும். ஆனால், ஒரு விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், ஜேஎன்யு-வில் அட்மிஷன் கிடைப்பது கஷ்டமானது. ஆனால், ஜேஎன்யு-க்காரர்களுக்கு மறக்கச்செய்வது என்பதோ அதைவிடக் கடினமானது.

நீங்கள் மறக்கடித்துவிட முடியும் என்று நினைத்தால் நாங்கள் உங்களுக்கு மீண்டும், மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த தேசத்தை ஆள்பவர்கள் எப்போதெல்லாம் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்களோ, அப்போதெல்லாம், ஜேஎன்யு மிகத் துணிச்சலாக தன்னுடைய குரலை வெளிப்படுத்தியிருக்கிறது. நாங்கள் அதை மீண்டும், மீண்டும் செய்வோம். நாங்கள் மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்போம். உங்களால், எங்கள் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முடியாது.

ஒருபக்கம் இராணுவ வீரர்கள் எல்லையில் மடிகிறார்கள். எல்லையில் உயிர் துறக்கும் வீரர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சிறையில் நான் ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன். அது என்னவென்றால், போராட்டம் கருத்தியலுக்கானதாக இருக்கும்போது தனி நபர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. எல்லையில் இராணுவ வீரர்கள் உயிரிழப்பது குறித்து பாஜக தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.

யார் அவர்கள், உங்கள் சகோதரர்களா?

இராணுவ வீரர்களுக்காகவும், நமக்காகவும் உணவை உற்பத்திசெய்யும் விவசாயிகள் இந்த நாட்டில் தற்கொலை செய்துகொள்கிறார்களே!...அந்த இராணுவ வீரர்களின் தந்தைகளான அந்த விவசாயிகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

என் அப்பன்தான் சேற்றில் உழைக்கிறான், என் சகோதரன்தான் இராணுவத்தில் இணைந்து எல்லையிலும் உழைக்கிறான், உயிர் துறக்கிறான். எங்கள் உறவுகள்தான் நாட்டிற்குள்ளேயும், எல்லையிலும் இறக்கிறார்கள். சூழ்ச்சிசெய்து நாட்டிற்குள் போலியான விவாதத்தை உண்டுபண்ணாதீர்கள். என்னுடைய கேள்வி இதுதான்! நாடாளுமன்றத்தில் நின்றுகொண்டு, நீங்கள் யாருக்கெதிராக அரசியல் செய்கிறீர்கள்?

இறக்கும் எங்கள் உறவுகளின் உயிர்களுக்கு யார் பொறுப்பு? இறப்பவர்களா? சண்டையிட வைப்பவர்கள்தானே பொறுப்பு.

(ஷாந்தி நஹி தப்தக், ஜப்தக்

சுக்பாக் ந சப்கா ஷுக்பாக் ந சப்கா ஸம் ஹோகா

நஹி கிஷி கோ பகூத் அதிக், நஹி கிஷி கோ கம் ஹோகா- ஹிந்தி)

வளம் எல்லோருக்கும் எதுவரை சமமாகாதோ

அமைதி அப்போது வரை வாராது

சிலருக்கு வளம் பெருக, சிலருக்கு வயிறு காய

என நிலை இருக்க

அமைதி என்பது வாராது

போருக்கு யார் காரணம்? யார் மக்களை சண்டையிட வைப்பது? என் அப்பா எப்படி இறக்கிறார்? என் சகோதரன் எப்படி இறக்கிறான்? என்று, இந்த பிரைம்டைம் ஸ்பீக்கர்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

நாட்டிலிருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை வேண்டுவது பிழையா? எதிலிருந்து விடுதலை வேண்டும் உங்களுக்கு. இவர்கள் என்ன கேட்கிறார்கள்? நீங்களே கூறிவிடுங்கள். இந்தியா யாரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். சரி, எங்களுக்கு பாரதத்திலிருந்து விடுதலை வேண்டாம். இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை, இந்தியாவில் விடுதலை கேட்கிறோம். ’இருந்து’ என்பதற்கும் ’இல்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. அந்த விடுதலையை இந்த நாட்டின் மக்கள் போராடிப் பெற்றிருக்கிறார்கள்.

நான் இப்போது என் அனுபவத்துக்கு வருகிறேன். காவல்துறையினர் என்னிடம் விசாரித்தனர். ‘அது என்ன செவ்வணக்கம், செவ்வணக்கம் என்று கூறுகிறீர்கள்?’. இந்தக் கேள்வி விசாரணையின் அங்கம் கிடையாது. உணவு கொடுக்க, மருத்துவ உதவி செய்ய என காவல்துறையினர் அழைத்துச்செல்லும் போது, ஜேஎன்யு ஆட்களில் நான் பிரம்மபுத்திரன் இல்லையா! பேசாமல் எப்படி இருப்பது? நான் அவர்களோடு பேசத் தொடங்கினேன். அவரும் என்னைப் போன்றவராகவே இருந்தார். இந்த நாட்டில் காவல்துறையில் பணிபுரிவது யார்? யாருடைய தந்தை விவசாயியோ, யாருடைய தந்தை கூலியோ, யாருடைய தந்தை விளிம்புநிலை வர்க்கத்தைச் சேர்ந்தவரோ அவர்கள்தானே காவல்துறையில் பணிபுரிகிறார்கள்.

நானும், இந்த நாட்டின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரிலிருந்துதான் வருகிறேன். நானும் ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்துதான் வருகிறேன். நானும் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்துதான் வருகிறேன். காவல்துறையிலும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் வேலை பார்க்கிறார்கள். நான் கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களைக் குறித்துதான் பேசுகிறேன். ஐபிஎஸ் அதிகாரிக்கும் எனக்கும் இடையே அதிக உரையாடல் ஏதும் நிகழவில்லை. அந்தக் காவலரோடு நான் உரையாடினேன்.

அவர் கேட்டார் “லால் சலாம், லால் சலாம் (செவ்வணக்கம்) என்றால் என்ன?”

நான் சொன்னேன் “சிவப்பு என்றால் புரட்சி, ஆக, செவ்வணக்கம் என்றால் புரட்சிக்கு வணக்கம்” என்றேன்.

”புரியவில்லை” என்றார்.

”இன்குலாப் ஜிந்தாபாத்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றேன்.

“ம் தெரியும்” என்றார்.

“புரட்சிக்கு உருதுவில் ‘இன்குலாப்’ என்று கூறுவார்கள்’’ என்றேன்.

”இன்குலாப் ஜிந்தாபாத் என்று, ஏபிவிபி-காரர்களும் கூறுகிறார்களே” என்றார் ஆச்சரியத்தோடு.

”இப்போது புரிகிறதா? அவர்கள் போலிப் புரட்சிக்காரர்கள், நாங்கள் அசல் புரட்சிக்காரர்கள்” என்றேன்.

அந்த மனிதன் 18 மணி நேரம் வேலை செய்கிறார். அவரிடம் ”நீங்கள் ஓவர் டைம் பார்ப்பதற்கு பணம் கிடைப்பதில்லையா? என்றேன்.“லஞ்சம் என்று நீங்கள் கூறுகிறீர்களே, அதிலிருந்து எடுத்துக் கொள்கிறோம்.” என்றார்.

”சீருடைக்கு அவர்களுக்கு 110 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் உள்ளாடைகள்கூட கிடைக்காது எனும்போது சீருடை எங்கிருந்துவரும்?. இதை, அந்த கான்ஸ்டபிள்தான் கூறுகிறார். நான் சொன்னேன், இதிலிருந்துதானே விடுதலையைக் கோருகிறோம். பட்டினிச் சாவிலிருந்து, ஊழலிலிருந்து” என்றேன்.

இதற்கிடையில் அரியானாவில் ஒரு போராட்டம் தொடங்கிவிட்டது. உங்கள் எல்லோருக்கும் தெரியும், தில்லி காவல்துறையில் பெரும்பாலும் மக்கள் ஹரியானாவில் இருந்துதான் வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் கடின உழைப்புக்காரர்கள். ஆகவே, அவர்களை நான் பாராட்டுகிறேன்.

”இட ஒதுக்கீடு” என்றேன்....”அது சாதியவாதம் மிகவும் கொடுமையானது.” என்றார் அந்த கான்ஸ்டபிள்.

“இந்த சாதியவாதத்திலிருந்துதானே விடுதலை வேண்டும் என்கிறோம்” என்றேன்.

”இதில் ஏதும் தேசத்துரோகம் இல்லையே” என்றார் அவர்.

நான் அவரிடம் “ சிஸ்டத்தில் அதிக பலம் யாருக்கு இருக்கிறது” என்றேன்.

”அவர், என் தடிக்குத்தான் அதிகம் சக்தி உள்ளது“ என்றார்.

”உங்களால் இந்தத் தடியை உங்கள் விருப்பத்தின்படி சுழற்ற முடியுமா?” என்று மறுபடியும் கேட்டேன்.

“இல்லை” என்று சோகமாகத் தலையாட்டினார்.

”எல்லா சக்தியும் யாரிடம் போனது?” என்றேன்.

“தினமும் போலி ட்வீட் செய்கிறவரிடம் போய்விட்டது” என்றார்.

‘இப்படி போலி ட்வீட் செய்யும் சங் பரிவாரக் கும்பலிடமிருந்துதான். நாங்கள் விடுதலையைக் கோருகிறோம்” என்றேன்.

“உண்மையைச் சொன்னால், நாம் இருவரும் ஒன்றாக நிற்பது போன்ற உணர்வு வருகிறது” என்றார்.

இதில் ஒரு இக்கட்டு இருக்கிறது. அனைத்து ஊடகங்களையும் பார்த்துக் கூறவில்லை. தாழ்மையாகச் சொல்கிறேன். எல்லோரும் அங்கிருந்து சம்பளம் வாங்குவதில்லை. சிலருக்கு அங்கிருந்துதான் ஊதியம் வருகிறது, ஊடகங்களில் வேலை பார்த்துக்கொண்டெ, நாடாளுமன்றத்தில் ரிப்போர்ட் செய்துகொண்டே, உள்ளே செல்ல முயன்று கொண்டிருப்பவர்கள்தான் பதட்டமான சூழலை உருவாக்கிவைத்திருக்கிறார்கள். தனித்தனியாக நாம் பேசிக் கொண்டாலும் ’பரபரப்பு” செய்தியைப் பாருங்கள் என்று பீதியூட்டுகிறார்கள்.

அந்த காவல்துறை ஊழியர் மேலும் சொன்னார், “நண்பா, உண்மையைச் சொன்னால், எப்.ஐ.ஆரில் உங்கள் பெயர் வந்துவிட்டதால் நீ வருவாய் என்று தெரியும்.” நான் குறுக்கிட்டு, “எப்.ஐ.ஆரில் பெயர் வருவதற்குமுன், ஏபிவிபி-யின் பட்டியலில் வந்துவிட்டோம். ஏபிவிபி-யின் பட்டியலில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரது பெயரும் முதலில் வந்துவிட்டது, பின்னர்தான், எப்.ஐ.ஆரில் பெயர் வந்தது.” என்றேன். அவர் தொடர்ந்தார், “நீ வந்தால் உன்னை நன்றாக உதைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உன்னோடு பேசிக் கொண்டிருந்ததில், அவர்களை நான்கு சாத்து, சாத்தலாம்போல இருக்கிறது” என்றார்.

மிகவும் முக்கியமான விஷயத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஊடகங்களின் வழியாக பொதுமக்களின் கவனத்துக்கு இதைக் கொண்டுவர விரும்புகிறேன். என்னைப்போல, சாதாரண குடும்பத்து இளைஞன் அவன், அவனும் ஆய்வு மாணவனாக விரும்பினான். ஆனால், அவனுக்கு ஜேஎன்யு கிடைக்கவில்லை. அவனும் என்னைப்போலவே, இந்த நாட்டின் நிலையைப் புரிந்துகொண்டு போராட விரும்பினான். படித்தவனுக்கும், கற்றவனுக்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள விரும்பினான். அவன், இன்று காவல்துறையில் பணிபுரிகிறான். இங்கேதான் ஜேஎன்யு தனித்து நிற்கிறது. அதனால்தான், நீங்கள் ஜேஎன்யு-வின் குரல்வளையை நெறிக்க விரும்புகிறீர்கள்.

அப்போதுதான், சாதாரண இளைஞன் ஆய்வு மாணவனாக வர முடியாது. ஏனென்றால், வெளியே கல்வி லட்சக்கணக்கில் விற்பனையாகிறது. அவனால் கல்வியை விலைகொடுத்து வாங்கிட இயலாது. எல்லையில் நின்றாலும், விவசாயத்தில் தன் உயிரை இழந்தாலும் அல்லது ஜேஎன்யு-வில் விடுதலைக்காகப் போராடினாலும் நீங்கள் அந்தக் குரல்களை நசுக்க விரும்புகிறீர்கள், அந்தக் குரல்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அரசியல் ஜனநாயகத்தால் பலனில்லை என்று அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கிறார். ஆகவே, நாங்கள் சமூக ஜனநாயகத்தை நிறுவுவோம். அடிக்கடி அரசியல் சாசனத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஜனநாயகம் என்பது சோசலிசத்தின் பாதையில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும் என்று லெனின் கூறுகிறார். இதனால்தான் நாங்கள் ஜனநாயத்தைப் பற்றி பேசுகிறோம். இதனால்தான், நாங்கள் பேச்சுரிமையைப் பற்றி பேசுகிறோம். இதனால்தான், நாங்கள் சமத்துவத்தைப் பற்றி முழங்குகிறொம், இதனால்தான் நாங்கள் சோசலிசத்தைப் பற்றி பேசுகிறோம். ஒரு செருப்புத் தைக்கிறவனின் மகனும், ஜனாதிபதியின் மகனும் ஒரே பள்ளியில் படிக்கும் சமத்துவநிலைக்காக நாங்கள் பேசுகிறோம். ஆனால், நீங்கள் இந்தக் குரலை நசுக்க விரும்புகிறீர்கள்.

எவ்வளவு அழுத்தம் கொடுப்பீர்களோ, அவ்வளவு மேலெழும் என்று அறிவியலில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இவர்களுக்கும் அறிவியலுக்கும் தொடர்பேயில்லை. ஏனென்றால், அறிவியலைப் படிப்பது ஒரு துருவம் என்றால், விஞ்ஞானி மறு துருவம். அறிவியல் மனப்பான்மை நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களோடு உரையாடல் நிகழ்த்தினால் இந்த நாட்டில் பட்டினிச் சாவிலிருந்தும், வறுமையிலிருந்தும், சுரண்டல் மற்றும் ஊழலிலிருந்தும் தலித், பழங்குடி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் அதிகாரத்துக்காக என நாங்கள் கோரும் விடுதலையை சாதித்தே தீருவோம். இதே சாசனத்தின்கீழ், இதே நாடாளுமன்றத்தின்கீழ், இதே நீதி வழங்கும் முறையின்கீழ் நின்றே சாத்தியமாக்குவோம்.

அது எங்கள் கனவு. இதுதான் அண்ணல் அம்பேத்கரின் கனவாக இருந்தது. இதுதான் தோழன் ரோஹித்தின் கனவும்கூட.. ஒரு ரோஹித்தைக் கொன்றுவிட துணிந்தீர்கள். அவனுக்கான நியாயத்திற்கான போராட்டத்தை நசுக்கிவிட நினைத்தீர்கள். ஆனால், பாருங்கள், எவ்வளவு பெரிதாக கூட்டம் பரவிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு விசயம் இருக்கிறது, என்னுடைய சிறை அனுபவத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன். இது, என்னுடைய சுய விமர்சனம். உங்களுக்கான சுயவிமர்சனமாக உங்களுக்குத் தோன்றினால், இதை நீங்களும் பரிசீலியுங்கள். நாம் ஜேஎன்யு-வைச் சார்ந்தவர்கள் அறிவுபூர்வமாகத்தான் பேசுகிறோம். ஆனால், சாதாரண மொழியில் பேசுவதில்லை. கடினமான மொழியையே கையாள்கிறோம். அது, சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை. அது, அவர்களுடைய குற்றம் இல்லை. அவர்கள் புரிந்துகொள்ளும்தன்மை கொண்ட நேர்மையான மக்கள்தான். நீங்கள்தான் அவர்களுடைய தளத்திற்குச் சென்று அவர்களோடு உரையாடுவதில்லை.

அவர்களிடம் சென்றடைவதுதான் என்ன? அதிகத்துக்கு அதிகமான க்ரூப்புகளுக்கு அனுப்புங்கள். ஓ.எல்.எக்ஸில் உங்கள் பொருட்களை விற்பனை செய்யுங்கள் என்று விற்பனை செய்யும் மனநிலை பரவலாக நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து நாம் உரையாட வேண்டும். சிறைச்சாலையின் அனுபவத்திலிருந்து இங்கே கூற விரும்புகிறேன். அது என்னவென்றால், எனக்கு சிறையில் இரண்டு குவளைகள் கிடைத்தன, ஒன்று நீல வண்ணத்தில் இருந்தது, மற்றது சிவப்பு வண்ணத்தில் இருந்தது, அதைப் பார்த்து நான் மீண்டும், மீண்டும் சிந்தித்தேன். எனக்கு விதியின்மீது நம்பிக்கை கிடையாது. கடவுளையும் தெரியாது. ஆனால், இந்த நாட்டில் ஏதோ நல்லது நடக்க இருக்கிறது. நீலம் மற்றும் சிவப்பு வண்ணக் குவளை வைக்கப்பட்டிருந்த தட்டு இந்தியாபோல தெரிந்தது. நீல வண்ணக் குவளை அம்பேத்கரிய இயக்கமாக எனக்குத் தோன்றியது, சிவப்பு வண்ணம் பொதுவுடமை இயக்கமாகத் தோன்றிற்று. இவற்றின் ஒற்றுமை இந்த நாட்டில் உருவாக்கப்பட்டால், உண்மையைக் கூறுகிறேன், விற்பது என்பது, விற்கும் கும்பலை துரத்துவதுதான் நடக்கும் என்று அவற்றைப் பார்த்து எனக்குத் தோன்றியது.

விற்கும் கும்பல் நமக்குத் தேவையில்லை. எல்லோருக்குமான நீதியை உறுதிப்படுத்துபவர்களின் அரசை நாம் நிறுவுவோம். அனைவரோடும் இணைந்து, அனைவருக்குமான மேம்பாடு என்பதை எதார்த்தத்தில் உறுதிசெய்வோம்.

மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேஎன்யு மாணவர்களை சிறையிலடைத்திருக்கிறார்கள். ஏனென்றால், நீண்ட நாட்களுக்குப் பிறகு....

அதற்குமுன் இதனோடு தொடர்புடையது, ஒரு சுவாரஸ்யமான செய்தியைச் சொல்லிவிடுகிறேன்.

மதிப்புக்குரிய பிரதமர் அவர்களின் பெருமதிப்புகொண்ட...(சொல்ல வேண்டியிருக்கிறதல்லவா?) யாருக்குத் தெரியும். இதையும் திரித்து ஒரு வீடியோ வெளியிட்டாலும் வெளியிட்டுவிடுவார்கள். ஆகையால், மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்கள், ஸ்டாலின் மற்றும் குருசேவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட மாத்திரத்தில் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் நுழைந்துவிடும் ஆர்வம்தான் மேலிட்டது. அவருடைய சூட்டை பிடித்துக்கொண்டு “மோடிஜி கொஞ்சம் ஹிட்லரைப் பற்றியும் பேசிவிடுங்களேன். ஹிட்லர் இல்லையென்றால், கறுப்புத் தொப்பு அணியும் முசோலினியைப் பற்றியாவது பேசிவிடுங்களேன். அவரைத்தானே உங்கள் குருஜி கோல்வால்கள் சந்திக்கச் சென்றிருந்தார். பாரதிய உணர்வைப் புரிந்துகொள்ள ஜெர்மனியிலிருந்து தத்துவ தரவிறக்கம் செய்ய கூறியிருந்தார்” என்று சொல்லத் தோன்றியது.

ஆனால், அவர் மன் கி பாத்(மனதின் செய்தி) கேட்பதில்லை, அவர்கள் மனதில் தோன்றியதைச் செய்கிறார்கள்.

இது ரொம்பவும் தனிப்பட்ட விசயம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று என் தாயோடு பேசினேன். ஜேஎன்யு-வில் இருந்த தருணங்களில் அவரோடு அதிகம் பேசியதில்லை. சிறைக்குச் சென்று வந்ததற்குப் பிறகு, சீரான இடைவெளியில் பேச வேண்டும் என்று தோன்றியது. நீங்களும் உங்கள் வீட்டாரோடும் அவ்வப்போது பேசிக் கொண்டிருங்கள். நான் என் தாயிடம் ”நீ மோடியை பயங்கரமாகக் கேலி செய்துவிட்டாயே” என்றேன். அதற்கு அவர் “கேலி செய்வது, வேடிக்கை காண்பிப்பது எல்லாம் அவர்கள் வேலை. நான் என் வலியை மட்டும்தான் சொன்னேன். யாருக்கு இந்த வலி புரிகிறதோ அவர்கள் அழுவார்கள், புரியாதவர்கள் மட்டுமே சிரிப்பார்கள்.” மேலும் அவர் “எனக்கு வலித்தது, அதற்காகத்தான் மோடியும் ஒரு தாயின் பிள்ளைதானே, என் பிள்ளையையும் தேசத்துரோக வழக்கில் சிக்கவைத்துவிட்டார்கள். எப்பொழுதும் மன் கி பாத் செய்ற அவர், எப்போதாவது தாயின் பேச்சையும் எப்பொழுதாவது கேட்கட்டும்.”

(குரல் தளுதளுத்துவிட்டது)

என்னிடம் அவருக்குச் சொல்ல சொற்களே இல்லை. ஏனென்றால், இந்த நாட்டில் என்ன நடக்கிறதோ, அதில் ரொம்பவும் பயங்கரமான விசயம் உட்பொதிந்து இருக்கிறது. அதனால்தான், நான் ஏதேனும் ஒரு கட்சியைப் பற்றி பேசவில்லை. குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் பற்றி பேசவில்லை. அதனால்தான், இராணுவ வீரர்களைக் குறித்து மட்டும் பேசவில்லை. உண்மையில், நான் முழு நாட்டைக் குறித்து பேசுகிறேன். நாட்டின் மக்களே இல்லாத நாடு, எப்படிப்பட்ட நாடாக இருக்கும்!

சிந்தியுங்கள்!

ஜேஎன்யு சார்பாக மக்கள் எழுந்து நின்றார்கள் என்றால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களால் வலியைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஜேஎன்யு-வில் எப்படியான இளைஞர்கள் படிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இங்கே 60 விழுக்காடு பெண்கள் படிக்கும் நாட்டின் ஒரே பல்கலைக்கழகம் இதுதான். ஏராளமான அயோக்கியர்களையும் தாண்டி, இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தும் பல்கலைக்கழகம் ஜேஎன்யு-தான். வளாகத்தின் எந்தப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவில்லையோ, அங்கே நடைமுறைப்படுத்த நாங்கள் போராடுகிறோம்.

நான் இதுவரை உங்களிடம் கூறியதில்லை. என் குடும்பம் 3000 ரூபாயில்தான் இயங்கி வருகிறது. நான் ஏதாகிலும் பெரிய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இணைந்திருக்க முடியுமா?

எனக்கு எந்த அரசியல் கட்சியின்மீதும் அனுதாபம் கிடையாது, எனக்கென்று நான் நம்பும் சித்தாந்தம் இருக்கிறது. இதுபோன்று, ஜேஎன்யு-வில் தாக்குதல் தொடுக்கப்படும்போது, ஆனால், பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும் தேசத்துரோகி முத்திரை குத்தப்படுகிறதே? சீத்தாராம் யெச்சூரியையும் என்னோடு இணைத்து தேசத்துரோக முத்திரை குத்திவிட்டிருக்கிறார்கள். ராகுல் காந்தி, டி..ராஜா, கெஜ்ரிவால் எனப் பலர்மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருக்கிறது.

ஊடகங்களின் வழியாக ஜேஎன்யு-வின் சார்பாக, இன்னும் சொல்லப்போனால் ஜேஎன்யு சார்பாக அல்ல, உண்மையை உண்மையென்றும், பொய்யை பொய்யென்றும் கூறுகின்றனர். அவர்களுக்கு வசவுகள் அனுப்பப்படுகின்றன. அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

உண்மையில் முழக்கங்கள் எழுப்பினீர்களா? என்று சில காவல்துறை ஊழியர்கள் கேட்டார்கள். நான் மீண்டும் சென்று எழுப்புவேன்’’ என்றேன்.

பகுத்தறிவென்பது மொத்தமாக முடிந்து போய்விட்டதென்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த அரசு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகள் சகித்துக்கொள்ள வேண்டும். இரண்டே ஆண்டுகளில் மக்கள் தங்கள் பகுத்தறிவை இழந்துவிட மாட்டார்கள். ஏனென்றால், 69 விழுக்காடு மக்கள் அந்த இந்து மனோநிலைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். வெறும், 31 விழுக்காட்டை மட்டும்தான் இவர்களுக்கு ஆதரவு. அதில் சிலரை ஹர், ஹர் என்று பேசி ஏமாற்றிவிட்டார்கள். இன்று அனைத்திலும் (ஹர் என்றால் அனைத்தும் என்று பொருளுண்டு) மக்கள் பிரச்சினையை சந்திக்கிறார்கள். இது உங்களுடைய நிரந்தர வெற்றி என்று கருதாதீர்கள். ஆயிரம்முறை பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதன்மூலம் அதை மெய்யாக்கிவிடலாம்தான். ஆனால், அது பொய்யோடு மட்டுமே நிகழும், உண்மையோடு இல்லை.

சூரியனை நூறுமுறை நிலா என்று அழைப்பதால், அது நிலவாகுமா? நீங்கள் ஆயிரம்முறை கூறினாலும் அது சூரியனாகத்தான் இருக்கும். நீங்கள் பொய்யைத்தான் உண்மையைப் போல திரிக்க முடியும். ஆனால், உண்மையை பொய்யாக்க முடியாது. இவர்களுடைய செயல்கள் என்பது மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில்தான் இருக்கிறது. மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புகிற வேலை அது.

மக்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் புதுப்புது திட்டம் வைத்திருக்கிறார்கள். இங்கே பல்கலைக்கழகத்தில் உதவித் தொகைக்கான போராட்டம் நடந்தால், அங்கே ரோஹித் கொலை செய்யப்பட்டான். ரோஹித்துக்காக போராடத் தொடங்கினோம், தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பரவத் தொடங்கின. ஜேஎன்யு-வை தேசத்துரோகிகளின் கூடாரம்போல சித்தரித்தார்கள். இதுவும் நீண்ட நாள் நடக்காது. அடுத்த தயாரிப்பில் இறங்கியிருப்பார்கள். ராமனுக்கு கோவில் கட்டுவதற்குக் கிளம்பியிருக்கிறார்கள். இன்றைய செய்தியை குறிப்பிடுகிறேன். இன்று சிறையிலிருந்து மீண்டு வரும்போது நிகழ்ந்தது.

மதம் தெரியுமா? என்றார் ஒரு காவலர். ”மதம் என்றால் என்னவென்றே தெரியாது” என்றேன் நான்.

“முதலில் என்னவென்று கற்றுக் கொள், பின்னர் ஒத்துக்கொள்வாய்” என்றார்.

”எந்தக் குடும்பத்திலாவது பிறந்திருப்பாய்தானே?” என்றார்.

”கெடுவாய்ப்பாய், இந்து குடும்பத்தில் பிறந்துவிட்டேன்” என்றேன்.

”அதைப்பற்றி எதாவது தெரியுமா?” என்று மீண்டும் கேட்டார்.

”எனக்குத் தெரிந்தவரையில், கடவுள் அண்டத்தைப் படைத்தார். ஆனால், கடவுளுக்காக ஏதோ ஒன்றைப் படைக்க விரும்புகிறார்கள், அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றேன்.

“சிறந்த ஐடியாதானே” என்றார்

இன்னும் எவ்வளவு உயரம், வாயில் ராமனும், கக்கத்தில் அரிவாளையும் வைத்துக்கொண்டு ஏற்கனவே 80லிருந்து 180ஆக ஆக்கிக் கொண்டீர்கள். ஆனால், இனி நடக்காது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.

நாட்டின் முக்கியமான பிரச்சினைகளின்மீது முக்கியமான கேள்விகள் ஏதும் எழும்பிவிடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நான் இங்கே நிற்கிறேன், நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள்மீது ஏதோ தாக்குதல் நடந்ததாக உணர்கிறீர்கள். உண்மையில், இது பெரிய தாக்குதல்தான். ஆனால், இந்தத் தாக்குதல் இன்று தொடங்கியதில்லை.

உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆர்.எஸ்.எஸின் பத்திரிகை ஆர்கனைசரில் ஜேஎன்யு-வைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள். சுப்பிரமணிய சுவாமி ஜேஎன்யு-வைப் பற்றி பேசியிருந்தார். ஒருவேளை, ஏபிவிபி-யின் எனது நண்பர்கள் கேட்பீர்களேயானால், அவர்களிடம் எனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கிறது. ஒருமுறை சுப்பிரமணிய சுவாமியை இங்கே அழைத்து வாருங்கள். நேருக்குநேர் விவாதிக்கலாம். தர்க்கமுறையில், குதர்க்க வழிமுறையில் அல்ல, ஜேஎன்யு-வை நான்கு மாதங்களுக்கு மூடிவிட வேண்டும் என்று நிருபிப்பாரேயானால், நான் அவரது கருத்தை ஆமோதிக்கத் தயார். இல்லையென்றால், முன்னர் எப்படி நாட்டைவிட்டு வெளியே இருந்தீர்களோ, அப்படியே நாட்டைவிட்டு வெளியே போய்விடுங்கள் என்று, தாழ்மையான வேண்டுகோள் வைப்பேன்.

சுவாரஸ்யமான செய்தி ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் வளாகத்திற்குள் இருப்பதால் உங்களுக்கு இந்த விசயங்கள் தெரிந்திருக்காது. எவ்வளவு திட்டமிடல், முதல் நாளிலிருந்து திட்டமிடல். இங்கிருக்கிற ஏபிவிபி-காரர்களைக் குறிப்பிடவில்லை, வெளியே இருக்கிற ஏபிவிபி-காரர்களைக் குறிப்பிடுகிறேன்.

எந்தப் பதாகையோடு ஹிந்து கிராந்தி சேனா போராடுகிறதோ, அதே பதாகையோடுதான் ஏபிவிபி-காரர்களும் போராடுகிறார்கள். முன்னாள் இராணுவ வீரர்களும் அதே பதாகையோடுதான் போராடுகிறார்கள். இதன் பொருள், எல்லோருடைய நிகழ்ச்சி நிரலும் நாக்பூரில்தான் திட்டமிடப்படுகிறது. இவர்களுடைய போராட்டங்கள் எதுவும் தன்னிச்சையாக நடப்பவை அல்ல. அரசியல்ரீதியாக ஊக்கம் பெற்றது அது. அதன் நோக்கம், இந்த நாட்டில் இருக்கும் போராட்டக் குரலை முற்றும், முழுதாக நசுக்குவது.

மக்களின் அடிப்படை விசயங்களிலிருந்து கவனத்தை திசைதிருப்பி, இந்த வளாகத்தில் போராடக்கூடிய அநிர்பான் ஆகட்டும், உமர் ஆகட்டும், அசுதோஷ் ஆகட்டும், கண்ணையாவாகட்டும், உங்கள் அனைவரிலும் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களுக்கு தேசத்துரோக முத்திரை குத்தி, ஜேஎன்யு-வின் குரலை நசுக்கி , ஜேஎன்யு-வை நீர்த்துப்போகச் செய்து, இந்தப் போராட்டத்தை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். எவ்வளவு அழுத்தினாலும், நாங்கள் முன்னிலும் வேகமாக எழுவோம். இதுவொரு நீண்ட போராட்டம்.

நிற்காமல், மூச்சுவிடாமல் ஒரு தொடர்ச்சியோடு இந்தப் போராட்டத்தை நாம் முன்னகர்த்த வேண்டும். இந்த வளாகத்திற்குள், நாட்டை பிளவுப்படுத்தநினைக்கும் சக்திகள், அது ஏபிவிபி-யாகட்டும், இந்த வளாகத்திற்கு வெளியே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலாகட்டும். நாம் ஒருங்கிணைந்து எழுந்து நிற்போம். ஜேஎன்யு எழுந்து நிற்கும், வரலாறு படைக்கும்.

எந்தப் போராட்டம் பல்கலைக்கழக ஊக்கத்தொகைக்காக, ரோஹித்துக்கான போராட்டத்தில், நாட்டின் விளிம்புநிலை மக்களின் போராட்டத்தில் தொடர்ந்து நின்ற உங்களுக்கு நன்றி. தொடர்ந்து போராடுங்கள்.

மாணவர்கள் ஒற்றுமை ஓங்குக! சமூக ஒற்றுமை ஓங்குக!

இன்குலாப் ஜிந்தாபாத்!

தமிழில் மொழி பெயர்த்த நண்பர் மின்னம்பலத்துக்கு நன்றி!

https://minnambalam.com/k/1457049699

3 comments:

Dr.Anburaj said...

அரசு மக்கள் வாிப்பணம் ஆயிரம் ஆயிரம் கோடி கொட்டி
ஜவஹா்லால்பல்கலைக்கழகத்தை நடத்துகின்றது.

மாணவர்கள் படிக்க வேண்டும்.தங்களது கல்வி மற்றும் பிற தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு முதுகலை மற்றும் பிஎட் படித்தவா் பள்ளி நிா்வாகம் அளிக்கமுன்வந்த சம்பளம் போதாது எனவே லையில் சேரவில்லை என்பதற்கு I do not have enough of your salary.So I dismiss your job என்று பதில் எழுதியிருக்கின்றாா். மாணவர்களின் கல்விப்புலமையின் லட்சணம். மாணவரகள் படிப்பதைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் நடக்கின்றது.
அரசு பணத்தைப் பாழாக்கி நாட்டை பாழாக்கும் கன்னையாகுமாா்ஒரு கசடன்.

Dr.Anburaj said...

இந்துஸ்தானத்தை - இந்தியாவை பலஹீனப்படுத்துபவா்களை முன்னிலை படுத்தி இந்த நாட்டை பாழாக்க வேண்டும்என்பதுதான் அரேபிய மத காடையா்களின் நயவஞ்சக திட்டம்.அதன்படி தாங்களும் கன்னயைா குமாாின் முட்டாள்தனமாக பேச்சை முன்னிலைப்படுத்தியிருப்பது அருவருப்பாக உள்ளது. இளம் கிடை ஒன்றை வெட்டி கறி சமைத்து வயிறு முட்டச் சாப்பிடும். மனதிற்கு ரொம்பதான் சந்தோசம்.

Yousuf said...

இப்பேச்சு ஒட்டு மொத்த இந்தியாவின் "மனசாட்சி"