Followers

Sunday, March 13, 2016

உடுமலையில் சாதி வெறியில் மற்றொரு கொலை!



காதலித்து திருமணம் செய்தவர்களை உடுமலையில் பட்டப்பகலில் கூலிப்படையினர் வெட்டியதில் பொறியியல் மாணவரான காதலன் இறந்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(21). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர், பழநியைச் சேர்ந்த சின்னராஜின் மகளை காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் குமரலிங்கத்தில் வசித்து வருகின்றனர். சின்னராஜின் மகள் தனியார் கடையில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் இருவரும் உடுமலைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பொதுஇடத்தில் சரமாரியாக வெட்டியது.

இதில் மாணவருக்கு கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற பெண்ணுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. இதற்கிடையே பொதுமக்கள் கூடியதால் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் இருவரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக்கு எடுத்து செல்லும் வழியில் சங்கர் இறந்தார்.

இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

’பெண்ணின் உறவினரே திட்டம்’

கொலைக்கு பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரே திட்டம் தீட்டியது போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். வாகனத்தில் தப்பிச் சென்ற மூவரையும் விரைவில் பிடிப்போம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-03-2016

எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பட்ட பகலில் பொது மக்கள் முன்னிலையில் சராமாரியாக வெட்டி விட்டு போகின்றனர். பொது மக்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் சாதி வெறியை இந்த மக்களிடம் இருந்து அகற்ற முடியாது. எனவே சாதி மாறி திருமணம் புரிவதை தடை செய்ய சட்டம் இயற்றி இந்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அல்லது மதம் விருப்பமுடைய மதத்துக்கு மாறி திருமணம் புரிய வேண்டும். அல்லது சொந்த பந்தங்கள் இல்லாத வெளி மபநிலத்துக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட வேண்டும். இதை செய்யாத பட்சத்தில் இந்த கவுர கொலைகள் நமது தமிழகத்தில் குறைய வாய்ப்பில்லை.

இந்த கொலை கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் அதனையும் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=k8KQDbdK_6o

No comments: